வேலிகளாய் நிமிர்ந்தெழுந்தது
ஆமணக்கு.
வெட்ட, பால் வடியும்.
மீளத்துளிர்த்து பெருத்த காடாகும்
வெட்டிய அடிக்கட்டை.
ஊரின் தரை முட்ட
ஆமணக்கங் குஞ்சுகள்.
ஊருக்குத் தாய்த்திமிர்.
எல்லாம் பொய்யாக்கி,
புழுக்களை விதைத்தது,
இரவொன்றில் நுழைந்த
மரநாய்.
ராட்சதக் கவலை.
அரிப்பெடுத்த புழுக்கள்.
பிய்த்துக் கொடுத்த கம்புகளால்
எங்கள் தசைகளை சிதைத்து
எச்சரித்தது மரநாய்;.
கற்சுவர் எழுப்பிய புழுக்கள்
ஆமணக்கு
அழிந்து கருகிய
இருப்பை மறைக்க
மகிழ்ச்சி- மரநாய்க்கு.
மரநாயின் ஆர்ப்பரிப்பில்
ஆமணக்கின் நினைவைக்கூட
வைத்திருக்க முடியவில்லை
எம்மால்.
காய்ந்து,
போன சாக்கில் அள்ளிக் கொட்டும்
மண் தூவிய காற்று.
நாட்சரிவில் ஒரு முறை
வழி தவறியதாய்த்; திரும்பும் பஸ்.
நாட்டிலா? எங்கே?
எனக் கேட்கும் பெயருடன்
இன்னும் என்
பன்னாடை ஊர்.
இருள்வெளி
1998
No comments:
Post a Comment