கதை.
கற்சுறா
மூலம்.
செங்கமலம் இன்று வீட்டிற்கு வருகிறான்.
மிக நீண்ட நாட்களான காத்திருப்பு அது.
இருபத்தியெட்டு வருசத்துப் பகைக்குப் பின் அவனை நேரில் பார்க்கப்போகிறேன்.
அவனுக்கும் எனக்குமான முதல் உரையாடல் என்னவாக இருக்கும்? அப்பொழுது எனக்குச் சரியாக பதினேழு வயது. அவனுக்கும் இருபதைத் தாண்டியிராத வயது. இப்ப எப்படி இருக்கிறானோ எனத் தெரியாது. இப்ப எனக்கு
முன்மண்டையில் வழக்கை விழுந்து எனது முழு அடையாளமும் மாறிவிட்டிருக்கிறது. அவனும் கிழவனாகியிருக்கலாம்.
அவனை வேலை முடிய வந்து கூட்டிவருவதாகச் சொல்லியிருந்தேன். அவனை அவனது வேலையிடத்தில் போய்க் கூட்டிவரவேண்டும். அவனுக்கும் வேலை முடிய எப்படியும் ஏழுமணியாகும். அவன் ஒரு தமிழ்க்கடையில் வேலை செய்கிறான். தமிழ்க்கடை என்று சொன்னதும் ஏதோ ரொரண்டோவில் அதுமட்டுந்தான் தமிழ்ககடை என்று நினைக்கக்கூடாது. ரொரண்டோவில் அது ஒரு வித்தியாசமான சாப்பாட்டுக்கடை. கனடாவுக்கு புதுசா வாறவர்களுக்கு அதுவும் தமிழர்களுக்கு மட்டும் அவர்கள் உடனே வேலை கொடுப்பார்கள். கனடாவுக்கு வந்தவுடன் வேலை கிடைக்கக் கூடிய ஒரே இடமாயும் தமிழர்களுக்குரிய சட்டதிட்டங்களோடு இருப்பதும் அந்தக்கடைதான். அதற்காகத்தான் அதனை நாம் பாசத்தோடு தமிழ்க் கடை என்போம். எடுக்கிற வெல்பயரைக் கழித்துக் கொண்டுதான் சம்பளக் கணக்குப் பார்ப்பார்கள். அதிலும் கொடுக்கிற சாப்பாடு பிடிக்கிற சீட்டு கிழமைக்குக் கிழமை வெட்டுற லொத்தர் வாகனத்தில் ஏற்றி இறக்கிறது என்று மொத்தச் செலவும் வெட்டி மிச்சக்காசை வேண்டி எடுப்பதற்கு தலையைச் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும். இதை விட சிறிலங்கா ஜெயிலில இருக்கேக்க வேலை செய்து தான் கூடக்காசு உழைத்ததாக ஒருமுறை இன்னொரு நண்பன் சொல்லியிருந்தான்.
நான் ஏழுமணிக்கு தமிழ்க் கடையடிக்குப் போய்விட்டேன். சமோசாவுக்கும் இடியப்பத்திற்காகவும் சனம் அடிபட்டு இடிபட்டுக் கொண்டு உள்ளேயும் வெளியேயும் எனப் போய்வருகிறார்கள். ஒரு டொலருக்கு 10 சமோசாவும் 4டொலர் 50 சதத்திற்கு 50 இடியப்பமும் சம்பலும் வைத்து சொதி இலவசமாவும் கொடுக்கிறார்கள். அந்த இலவசச் சொதிக்குத்தான் இவ்வளவு அடிபாடு. லைன்ல நின்ற சனத்தை விலத்திக் கொண்டு செங்கமலம்; ஓடிவந்தான் வெளியே ஓடிவந்த செங்கமலத்தை இழுத்துப்பிடித்து அண்ணை இடியப்பம் முடியேல்லத்தானே என ஒருவர் கேட்டுவைத்தார். இல்லயப்பா... எனக் கத்திவிட்டு ஓடிவந்து காரில் ஏறினாhன். ஆள் நல்லாக் காய்ந்து மெலிந்து போயிருந்தான். இருபத்தியெட்டு வருசத்துக்கு முன் பார்த்த செங்கமலமல்ல அவன். சரியான சின்னவனாகியிருந்தான்.
என்ன எப்படித் தமிழ்க்கடை வேலை என்று பேச்சைத் தொடங்கினேன்.
கனடாவுக்கு வந்து இந்தக் கடையின்ர பெயரைப் பார்த்தவுடன் நான் திகைச்சுப் போனன். கனடாவில ஒரு கடைக்குத் தமிழில மாவீரன் எண்டு பெயரும் வைச்சு கடையின்ர பெயருக்கு முன் மாண்டவீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக்கடலில் மாவீரம் குளிக்கும் என்று போடுறதுக்கு ஒரு தவம் வேண்டும். வேலை செய்தால் இஞ்சதான் வேலை செய்யிறது என நினைச்சுப் போய்ச் சேர்ந்தனான். இப்ப இஞ்ச இருந்து எப்படித் தப்புறது என்று தெரியாமல் கிடக்கு என்றான் செங்கமலம்.
மட்டக்களப்பு ஜெயில் உடைப்பையும் களுத்துதுறை ஜெயில் சமரையும் பார்த்த எங்கட பெடியளுக்கு ரொரன்ரோ மாவீரன்ர தமிழ்க்கடையை உடைச்சு வெளியேறமுடியாமல் இருக்கிறது புதினம்தான். உடைத்துக்கொண்டு வெளியேறேலாம சீட்டாலையும் வட்டியாலையும் சுற்றி சென்றியை வளைச்சுப் போட்டிருக்கிறார் வீரத்தமிழ்மகன் என்றான்.
வீட்டு வாசலைத் திறக்கவே இன்று யாரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று ஜெபா எட்டிப்பார்த்தாள். ஜெபாவுக்கு செங்கமலத்தைக் கண்டதும் திகைப்பு வந்தவிட்டது. ஒன்றும் சொல்ல முடியவில்லை. செங்கமலம் பாவம் என்பது அவளுக்கும் தெரியும்.
செங்கமலத்திற்கு என்னைப் பிடிக்காது. என்னை எந்த ஒரு சந்தர்ப்பத்திலையும் அவன் நம்ப மாட்டான். நானும் அவனை நம்பத்தயாரில்லை. மற்றவனை எப்பவும் சந்தேகித்துக் கொண்டே இருக்கும் மனம் எனக்கு. அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கிறனான். அதிக நேரம் திரும்பிப் பார்க்காமல் இருந்தால் ஒரு துப்பாக்கி எனது தலைக்குப் பின்னுக்கு குறிபார்த்துக் கொண்டிருப்பதாகவே யோசிக்கத் தோன்றும். பயம் எல்லோருக்கும் இருக்கிறது. பயத்தில கொஞ்சப் பயம் கூடப்பயம் எண்டு ஒன்று இல்லைத்தானே பயம் பயம் தான். அதால செங்கமலம் என்னட்ட எவ்வளவு நெருங்கினாலும் என்னால முடியுதில்லை. எல்லாத்தையும் தாண்டி ஒன்றே ஒன்று, அவனுக்குத் தெரிஞ்சதென்றோ அல்லது சொந்தக்காரங்கள் என்றோ இங்கு யாருமில்லை. அவன் பாவம்.
செங்கமலம் அப்ப எங்கட ஏரியாப் பொறுப்பாளர். ஒரு ஹொண்டா 200 மோட்டசைக்கிள்ள திரிஞ்சு ஏரியா வேலை செய்தவன். ஊருக்கு ஹொண்டாவை முதலில கொண்டு வந்தவன் இவன்தான். அதுவரைக்கும் சீ90 தான் ஆகப்பெரிய மோட்டசைக்கிள். அப்ப எங்கட ஊரில செங்கமலத்தோடு சேர்த்து மொத்தம் 7 ஏரியாப் பொறுப்பாளர்கள் இருந்தவை. மற்றவர்கள் எல்லாரிட்டையும் சைக்கிளும் சீ90யும் இருக்கேக்க இவனிட்ட மட்டும் தான் ஹொண்டா 200 இருந்தது.
சரியா கணக்குப் பண்ணிப் பார்த்தால் அந்த நேரம் எங்கட ஊரில் 4 முழுக் காம்ப். 7 ஏரியாப் பொறுப்பாளர்கள். 11ஒவ்பீஸ் என்று ஊரே இயக்கமயப்பட்டுப் போயிருந்தது. பெரிய இயக்கத்திற்கு மட்டும்தான் காம்பும் ஒவ்பீசும் இருந்தது. மற்றயவற்றிற்கு எல்லாம் தனிய ஒவ்பீஸ் மட்டும்தான்.
அந்தக்காலத்தில் மாங்குளத்துக்காம்பில இருந்தும் பூனகரிக்காம்பில இருந்தும் அல்லது தள்ளாடிக் காம்பில இருந்தும் ஆமிக்காரன் செல்லடித்தாலும் எங்கட ஊருக்கு செல் வராது. ஒரு காட்டு ஊர். இதுக்குத்தான் 7 ஏரியாப் பொறுப்பாளர்கள். இயக்கத்தை வளக்கிறதுக்கு ஊர் ஊரா வேலை செய்ய வேண்டும் தானே. ஆனால் ஏரியாப் பொறுப்பாளர்களுக்கும் அவர்களின்ர சென்றிப் பொயின்றுக்களுக்கும் இருந்த முக்கிய வேலையே ஊரில இருக்கிற மற்ற இயக்கங்களை வேவு பார்க்கிறதுதான்.
ஒருத்தன்ர காம்புக்கு முன்னால மற்ற இயக்கம் போக முடியாது. போனோலே ஒன்றையொன்று தீப்பற்றும் நிலை. நினைத்தாலே இப்பபோது சிரிப்பு வருகிறது. அக்கினி நட்சத்திரத்தில வருகின்ற பிரபுவும் கார்த்திக்கும் வாயுக்குள்ள தேவடியாப் பய என்று திட்டுற மாதிரி திட்டிக்கொண்டு ஒண்டையொண்டு விலத்திச் செல்லுவார்கள். ஏதோ இது எல்லாத்தையும் நாளைக்கு மலரப்போற தமிழீழத்திற்கு என்று சொல்லிவிட்டு ஊர்மக்கள் பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
செங்கமலம் இயக்கத்திற்கு ஏரியாவேலை செய்ய வந்த நாளில இருந்து அவன் ஒவ்பிசில பெரிசா இருக்கிறதில்லை. எல்லோரும் ஊர்மனைக்குள் ஒவ்பீஸ் வைச்சிருக்கும்போது செங்கமலத்தின்ர இயக்கம் மட்டும் ஒரு காட்டுரோட்டில தமது ஒவ்பீசை வைத்திருந்தது. அது ஒரு ஒவ்பீஸ் மாதிரியே இருக்கிறதில்லை. எப்பவும் அச்சம் தருகிற அளவுக்கு இருட்டடிச்சமாதிரி இருக்கும். அங்கு எப்பவாவது யாரையாவது விசாரணை என விசாரிக்கக் கூட்டிக் கொண்டு போனால்தான் செங்கமலமே போவான். மற்றப்படி ராசாத்தியக்கா வீட்டிலதான் படுகிடை. வைப்புச்செப்பெல்லாம் அவனுக்கு அங்குதான். அது இயக்கத்திற்கும் ஒரு பெரிய பிரச்சனையாய் ஒருபோதும் இருககவில்லை.
ஏனென்றால் ராசாத்தியக்காவுக்கும் பாலசிங்கண்ணையிற்கும் இயக்கமெண்டால் போதும். தமிழீழத்திற்கு தாம் செய்யுற தொண்டு அதுதான் என்று அவர்கள் நினைத்தார்கள்.. பாலசிங்கண்ணையும் வீட்டில பெரிதாக நிக்கிறதில்லை. இயக்கத்திற்கு லொறி ஓடுறவர். றெயினிங் எடுக்கவில்லை என்பதுதானேயொழிய மற்றப்படி இயக்கத்திற்குரிய எல்லா உரிமையும் கொண்டவர். பொடியள் சிலருக்கு ராசாத்தியக்கா வீடும் இயக்கத்தின்ர காம்ப் மாதிரித்தான். சாப்பாடு சமையல் குளிப்பு முழுக்கு எல்லாம் அங்குதான். ஆனால் மற்ற இயக்கமெல்லாம் “செங்கமலம் சிரிக்குது ராசாத்திய நினைக்குது” என்றும் “ராசாத்தி நினைப்பில செங்கமலம் நினைப்புத்தான்” என்றும் பாட்டுப்பாடிக்கொண்டு திரிந்தார்கள்.
ஒருமுறை என்னை வேவு பார்த்த ஒரு நாய் நான் இந்தப் பாட்டுகளப் பாடினதைக் கேட்டு செங்கமலத்திற்குச் சொல்ல செங்கமலம் என்னை விளக்கத்திற்கு கூட்டிக்கொண்டு போனான். அன்றைக்குத்தான் செங்கமலத்தை பக்கத்தில பார்க்கிறன். ஒரு பற்றிக் சறம். கோடன் சேட்டு இறுகின மூஞ்சி என்று எப்பவும் எட்டத்தில பார்த்த உருவத்தை அனறைக்குத்தான் மிக நெருக்கமாய்ப் பார்க்கிறன். ஊருக்கிள்ள ரெண்டு வருசமாத் திரிஞ்சாலும் என்னோட அவன் ஒரு கதை கதைக்கிறேல்ல. இப்பவும் விளக்கத்திற்கு வரச் சொல்லிட்டான் ஆனால் விளங்கயில்ல.
கையை நீட்டி அறைந்தால் கைவிரல் பதியும் தூரம் தான் எனக்கும் அவனுக்கும். நான் எதுவும் பேசவில்லை. அப்பவும் ஒன்றரை மணித்தியால விளக்கம். ஆனால் ஒன்றரை மணித்தியாலத்திற்குள் மூன்றே மூன்று கேள்விகள் தான் செங்கமலம் என்னைக் கேட்டான். “உனக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்.?” “உன்ர கொப்பற்ற மரியாதையை ஏன் கெடுக்கிறாய்.?” “ஏன் அவங்களுக்குப் பின்னால திரியிறாய்?” என்று விட்டுவிட்டு அரை மணித்தியாலத்திற்கு ஒரு கேள்வியாய் மூன்று கேள்விகளையும் கேட்டான்.
ஆனால் ஒன்றுக்கும் பதில் எதிர்பார்க்கவில்லை. அப்பாவித்தனமாக என்னைப் போ என்று சொல்லி விட்டுவிட்டான். ஏன் பாட்டுப் பாடினனீ என்றோ அல்லது ராசாத்தி அக்கா பற்றியோ அவன் கேட்கவில்லை. ஆனால் அப்படியொரு செங்கமலத்தை நான் அன்றுவரைக்கும் பார்த்ததே இல்லை. ராசாத்தி அக்காவுக்கும் செங்கமலத்திற்கும் உறவு இருந்ததோ என்று இன்று வரைக்கும் நான் யோசிக்கிறனான்.
கொஞ்சக்காலத்தில செங்கமலத்தின்ர இயக்கம் தடை செய்யப்பட்டு ஆயுதம் எல்லாம் புடுங்கி ஒன்றும் இல்லை என்று ஆன பிறகு செங்கமலம் மட்டும் ஓடுறதுக்கு வழியில்லாமல் இருந்தபோது ஆஸ்பத்திரியில் இருந்த சைக்கிள் பார்க்கில் வேலை செய்து கொண்டிருந்தான்.
ஆனால் அந்த வேலையால் ஒரு நேரச் சாப்பாட்டுக் காசு கூட அவனுக்கு வராது. ஆனால் தான் ஒரு அப்பாவி, நேர்மையான மனிசன் எண்டு காட்டுறதுக்கும் உயிரோட இருக்கிறதற்கும் தான் அந்த வேலை உதவியது. ஆனாலும் எப்பவும் செங்கமலத்தில ஒரு கண் வைச்சுக் கொண்டுதானிருந்தனாங்கள்.
அந்த நேரத்தில் வத்தளையில இருந்து இடம்பெயர்ந்து வந்த பெட்டை ஒன்றைக் கூட்டிக்கொண்டு செங்கமலம் ஓடிற்றான். அதுக்குப் பிறகு நான் செங்கமலத்தை இங்குதான் சந்திக்கிறன்.
இப்ப செங்கமலமும் நானும் அரைப் போத்தல் பக்காடியை முடித்திருந்தோம்.
மவுனம் பேச்சு மவுனம் என்று நேரம் போய்க் கொண்டிருந்தது. நான் செங்கமலத்தின்அருகில் மூன்றாவது தடவையாக இன்று இருந்தேன்.
ஒன்றரை வருசத்திற்கு முதல் சன்சீ கப்பலில வன்கூவரில வந்திறங்கினவன். மனிசி செத்துப்போய்விட்டது. தான்தான் புதைத்துவிட்டு வந்தவனாம். பெடியனும் சின்னவயசிலேயே இயக்கத்தில சேர்ந்திட்டான்.
மகனோ இப்ப இவன கொஞ்சமும்; மதிக்கிறேல்ல. இரண்டாவது மகள். யாழ்ப்பாணத்தில ஒரு வாத்தியார் வீட்டில விட்டுவிட்டு வந்திருக்கிறான். கந்தர் மடத்தில வீடு.
யூனிவெர்சிற்றியில படிப்பிக்கிற வாத்தியார். மனிசியும் ரீச்சர். அதுகளுக்கு ஒத்தாசையா வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவளைப்பற்றித்தான் அவனுக்குக் கவலை. மாறி மாறி அவளப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தான்.
படிக்கிற வயசில வேலை செய்யுறாள். இப்ப நினைக்கச் சரியான பயமாக் கிடக்கு. நடக்கிறதுகளைக் கேள்விப்படுறதைப் பார்த்தால் வாத்தின்ர வீட்டில விட்டதிலையும் பார்க்க சவுதிக்கு அனுப்பிற்று வந்திருக்கலாம்.
பதின்மூன்று வயது.... தாயில்லாமல்.......
கன நேரமா யோசிச்சுக் கொண்டிருந்தான்.
என்ன மகனோட கிட்டடியில கதைச்சனியோ எண்டு கேட்டன்.
அவன் கற்சிலைமடுவில இருக்கிறான். போன் அடித்து சுகம் விசாரிச்சாலே காசுதான் கேட்கிறான். வந்த காசே நான் இன்னும் குடுத்து முடியேல்ல அதுக்குள்ள கனடாவுக்குப் போய் ரண்டு வருசம் என்ன மயிரைப் புடுங்கிறாய் என்று கேட்கிறான். அவனோட கதைக்கேலாது. வயசுக்கு மீறின கதை என்றான்.
சின்னவயசிலேயே கொலை செய்து பழகினவங்கள். வாழ்க்கை எண்டால் என்னெண்டு தெரியாது. இப்ப அங்குள்ள பொடியளோடு கதைக்கேலாது. இப்ப அவன் எடுத்தாலும் நான் எடுக்கிறேல்ல. என்றான்.
பிள்ளையளைக் குறை சொல்லி என்னசெய்யிறது. அவனுக்கும் காசு வேணும்தானே என்றேன்.
கேஸ் அக்ஸப் பண்ணினாலும் எதையாவது பார்க்கலாம். இரண்டு வருசமாகப்போகுது இவங்கள்; விசாரிக்கிறாங்கள் விசாரிக்கிறாங்கள் இன்னும் என்னை விசாரித்து முடியுதில்லை. கப்பல்ல வந்தவங்களைத் திருப்பி ஆனுப்புறாங்கள் எண்டு கதைக்கிறாங்கள். ஏன் வந்தனெற்று கிடக்கு. மகளோட நின்று இருக்கலாம். அல்லது மனிசி சாகேக்க நானும் செத்திருக்கலாம்.
வாழோணும் என்ற ஆசையில் தானே சயனைட்டை எறிஞ்சனாங்கள்...
.... யோசியாதே. என்றேன்.
நானும் என்ர குடும்பமும் ஒரு நாளும் சயினைட்டை எறியேல்ல....
என்றான் செங்கமலம்.
மூலவர்ணம்.
தேசபிதாக்களால் மாவீரர்களால் மாமனிதர்களால்
கட்டப்பட்ட இந்தப் பூமியில்
எப்போதும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.
அழகிய நறுமணம் கொண்ட பூக்களின் அடியில்
நமது குழந்தைகள் புதைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அறியாத தவறுகளும்
அவர்களே சொல்லாத பொய்களும்
வரலாறு நீளவும் அவர்கள் மீது கவிந்து கிடக்கிறது.
எனது குழந்தைகளைத் தோண்டியெடுத்து
கொஞ்சிக் கொண்டிருக்க மனம் விருப்பியும்
வெறும் நறுமணம் வீசும் பூக்களைப்
புடுங்கி எறிய யாரும் விடுவதில்லை.
தேசத்தின் பெயரிலும் மாவீரர்களின் பெயரிலும்
வெறும் பூக்கள்
பூத்துக் கொண்டிருக்கிறது.
வாக்கு ஒன்று:
அவர்களை மீண்டும் மீண்டும் வழியனுப்பிக் கொண்டிருந்தேன்.
கொல்லைப்புறத்திலிருந்து விளையாடிய குழந்தைக்குத்
தெரியாமல் ஒளிவதுதான் அது.
வளரும் ஒருகட்டு வார்த்தைகளில் இருந்தது அவளது பருவம்.
சிரிப்பொலியைத் தாண்டி ஓடும் குழந்தைக்குத் தெரிந்திருந்தது நீள் பயணம்.
மெல்லிய நீர்த்தரிப்பும் இளஞ்சூட்டுத்தாகமும் எடுத்து
எனது குறி விரைக்கத் தொடங்கியது.
கடைசி மனிதனின் மறைவுக்காய் காத்திருந்தன கண்கள்.
பயணத்தின் இடைமடிப்பில் விழுந்தது குழந்தை.
எல்லாக் குழந்தைகளையும் போலவே அவளும் என்னிடம் மன்றாடினாள்.
அல்லாவையையோ யேசுவையையோ அல்லது ஏதோ ஒரு
சைவக்கடவுளையோ பெயர் சொல்லி அழைக்கவில்லை
கணேசலிங்கம் என்னைக் கொல்லாதே என்றாள்.
நான் யாரையும் கொல்வதில்லையே.
எனது பெயரையே அவள் மெல்லிதாய் உச்சரித்தாள்.
நான் அவளைச் சீண்டினேன்.
அவள் சிலிர்த்தாள்.
ஆம் அவள் சிலிர்க்கிறாள் என்றே நான் சொல்கிறேன்.
நான் பரவசத்தில் திளைத்தேன்.
அவளது சிலிர்ப்பு பயம் கவ்வியது.
நான் அதையே விரும்பினேன்.
குழந்தையின் தொட்டிலில் அவளைக் கிடத்தி பேசத் தொடங்கினேன்
அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு என்ன வேலை நான் சொல்வதையெல்லாம் மறுக்காமல் கேட்பதுதானே.
அதற்காவே எனது பெற்றோர் அவளை நன்றாகப் பழக்கப்படுத்தியிருந்தார்கள்.
எங்கிருந்துதான் பழகுகிறார்களோ தெரியாது
தங்களது பிள்ளைகளுக்காகவே வாழக் கற்றுக் கொண்டுவிடுகிறார்கள் எல்லோரது பெற்றோரும்.
வீட்டிற்கு வெளியில் யுத்தம் கோரமாய் மெல்ல நடந்து நகர்ந்து கொண்டிருந்தது.
யுத்தத்திற்குள் வாழவும் யுத்தத்திற்குள் பேசவும் நாங்கள் கற்றிருந்தோம்.
யுத்தம் பற்றி முன்பிருந்த பயத்திற்கும்
தற்போதுள்ள பயத்திற்கும் உள்ள இடைவெளியே அது.
அவளை முதல் முதலில் தொட்டபோது இருந்த பயம்
எனக்கு இப்பொழுது இல்லை.
ஆனால் அவளிடம் அதே பயம் தொடர்ந்தது.
அவள் ஒவ்வொரு தடவையும் முதல் யுத்தப் பயத்தினுள் இருந்து கொண்டிருந்தாள்.
அது ஒரு குழந்தையின் பயத்தை ஒத்திருந்தது.
அவளிடம் முதல் யுத்தம் பற்றிய அச்சம் எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது.
வெளியில் குழந்தைகள் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
இப்போது நான் பல்கலைக் கழகத்திலிருந்து திரும்பும் ஒவ்வொரு தருணமும்
அவள் ஏதோ ஒரு மூலையில் ஒழியத் தொடங்கினாள்.
நான் தேடத் தொடங்கினேன்.
அந்த ஒழித்துப்பிடித்து விளையாடும் விளையாட்டை நான் விரும்பினேன்.
அவள் என்னிடமிருந்து தப்புவதற்காகத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.
என்னிடமிருந்து அவள் தப்ப முடியாது.
அவள் ஒருபோதும் தப்பமுடியாது.
அதனால் அவளது உடலை எனக்குள் மறைப்பதற்கு முன்
அவளின் மொழியை மழித்தேன்.
அது செயல் இழந்தது.
ஒரு கராத்தே வீராங்களை போல் என்னுடன் தர்க்கம் செய்யும்
அத்தனை மொழிகளையும் அவளிடமிருந்து அழித்தேன்.
இப்பொழுது அவள் ஒரு குறுகிப் படுத்திருக்கும் புனைக்குட்டி போல ஆனாள்.
நான் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல ஆயத்தமானேன்.
பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் போரின் வீயூகம் அமைக்கும் படைத் தலைவர்களாக விசர் பிடித்து அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.
பொங்கலுக்குத் தமிழீழம் தீபாவளிக்கு தமிழீழம் என்று
நாங்கள் ஆரம்பத்தில் சொன்ன அதே வேகத்துடன்
இப்போதும் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னை வளாகத்திற்குள் கண்டதும் ஒரு மாவீரனைக் கண்டதுபோல் அவர்களின் தேசபிதாவைக் கண்டதுபோல் ஆரவாரப்பட்டார்கள்.
எனக்குள் கர்வம் எகிறியது.
அவர்களின் ஆவேசம் என்னை வேறு உலகத்தில் இறக்கியது.
அவர்களின் கண்களை உற்று நோக்கிய நான் எனது அச்சம் தெளிவுற மெதுவாகப் பேசத் தொடங்கினேன்.
"நாம் எமது தேசிய விடுதலைக்கான போராட்டத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். சிங்கள இனவெறி அரசிற்கெதிரான யுத்தம் நம்முடையது. இந்த அரசு இனவாத அரசு. இதற்கெதிரான யுத்தத்தில் நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். தமிழ்த் தேசியத்தின் ஒரு விளைவு தான் நாங்கள். நமது முன்னோர்கள் அகிம்சைப்போராட்டம் நடாத்தினார்கள். தற்போது மக்களே எம்மை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்துள்ளார்கள். இது எமது விடுதலை. நமது சிறிய சிறிய பிரச்சனைகள் முரண்பாடுகள் எல்லாவற்றை யும் புறந்தள்ளிவிட்டு பொது எதிரிக் எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் "
என்ற சிறிய வழமையான உரையாடல் ஒன்றை அவர்களுக்கு நிகழ்த்தினேன்.
அவர்கள் மிக ஆக்கிரோசமானார்கள்.
எதையும் இலகுவாக உள்ளிளுக்கக் கூடிய தோல்களால் ஆனவர்கள் தானே அவர்கள்.
மயிர்க்கூச்செறியும் வார்த்தைகளை அர்த்தமற்றுப் பேசக்கூடியவர்களாக அப்போது எப்படி நாமிருந்தோமோ அப்படியே இப்போதும் பேசுகிறார்கள்.
சுழிபுரத்தில் ஆறு மாணவர்களுக்குக் குஞ்சாமணி அறுத்து வாயிற்குள் வைத்து மணலில் புதைத்தவர்கள் நாங்கள் இல்லை என்பதையும் விஜிதரனைக் கடத்தி சுட்டவர்கள் நாங்கள் இல்லை என்பதையும் எவ்வளவு உணர்வுகரமாக நம்பினோமோ ...
அதேபோல் நம்புகிறார்கள் இவர்கள்.
எந்தக் கஸ்டமும் இல்லாமல் நான் சொன்ன எல்லாவற்றையும் சீக்கிரத்தில் உள்ளிளுத்தார்கள்.
அவர்கள் உட்கொள்ள உட்கொள்ள எனக்குத் தொண்டை வற்றியது.
நமது சிறிய சிறிய முரண்பாடுகள் என்பதை திருப்பித் திருப்பி அழுத்தமாகச் சொன்னேன்.
மிகமுக்கியமாக நமது போராட்டத்தி;ற்கு இடையூறாக இருக்கும் சில பேராசிரியர்களை நாம் இனங்காணவேண்டும் எனவும்
அவர்கள் தமிழ்த்தேசியத்தின் துரோகிகள். அவர்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரைத்தேன்.
நான் பெயர்களைச் சொல்ல முதலே மாணவர்கள் பட்டியலிட்டார்கள்.
அவர்கள் பட்டியலிட்ட அத்தனையும் நான் நினைத்ததும் சரியாக இருந்தது.
ஆனால் அது என்னுடைய அளவை விட மிகஅதிகமாகவேயிருந்தது.
மாணவர்களும் எனது பெற்றறோர்களைப் போலவே. எப்போதும் அவர்கள் ஆசிரியர்களுக்காகவே வாழ்கிறார்கள்.
நான் மிகவும் களைப்புற்றிருந்தேன். சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று ஒரு தேநீர் அருந்தினால் களைப்புக் குறையும்.
மாணவர்களை விலத்திக்கொண்டு சென்று சிற்றுண்டிச்சாலையின் மேசையில் அமர்ந்தேன்.
அது சிவரமணி இருந்த மேசை.
மறக்கப்பட்ட பாடலக்குத் தாளந் தட்டிய நண்பனும் விரல்களும் சிதறிக் கிடந்த தேனீர்த் துளிகளுமாய் அந்த நடுமேசை எனக்குப் பெரும் பீதியைத் தந்தது.
அங்கிருக்கவோ அல்லது தேநீர் அருந்தவோ என்னால் முடியவில்லை.
எழுந்து நடந்தேன்.
வரிசையில் நீண்டு நின்ற அசோகா மரங்களின் மறைவில் என்னை மறைத்தேன்.
பல்கலைக்கழகத்தின் மதிற்சுவர்கள் வெறும் கண்ணறைகளாயின.
முடியவில்லை.
உடலெங்கும் தீசூழ பல்கலைக் கழகத்தை விட்டு வெளியில் ஓடிவந்தேன்.
வீட்டின் அறையில் முடங்கிக் கிடந்த அவள் வெளியில் வரவேயில்லை. தன்னுடலை முடிந்தவரை கீறிக் காயப்படுத்தியிருந்தாள். அவை பூனையின் நகக் கீறல்கள். அவளின் அசைவு ஒவ்வொன்றும் என்னைப் பயப்படுத்தியது. ஒரு பூனைக்குட்டியின் மிரட்சி கலந்த அசைவு அது.
வாக்கு இரண்டு:
மவுனத்தின் மொழிக் கதவைத் திறந்து
வெளியில் பேசினேன்.
நான் பேசக் கூடியவளானேன்.
எனது உதடுகள் திணிக்கப்பட்ட அழுகிய ஆண்குறியை சூப்புவதைத் தவிர்த்து முதன் முறையாக சொற்களை உச்சரித்தது.
நான் விரும்பிய சொற்களையெல்லாம் பேசினேன்.
குறிக்கப்பட்ட நேரத்திற்குள் இத்தனை சொற்களை பேச நான் ஒருபோதும் எத்தனித்ததில்லை.
பேசப் பேச நான் எனது மொழிக்குள் இருந்து மெல்ல விடுபட்டேன்.
பேசாதிருந்தபோது எனக்குள் மொழி அடங்கிக் கிடந்தது.
மொழிக்குள் நான் அடங்கியிருந்தேன்.
மெல்ல மெல்ல மொழியிலிருந்து நான் விடுபட்டேன்.
ஆம் நான் மவுனத்தின் மொழிக் கதவைத் திறந்தேன்.
கணேசலிங்கம் எனது கதவைத் திறந்து கொண்டு வந்தார்.
அவர் வழமைக்கு மாறாகக் களைத்திருந்தார்.
அவரது முகம் அச்சத்தை எதிர் கொண்டிருந்தது.
அவர் வழமையற்ற வேறு ஒரு மொழியில் என்னுடன் பேச முற்பட்டார்.
எனக்கு எதுவுமே விளங்கவில்லை.
அது என்னுடன் இவ்வளவு நாளும் அவர் பேசிய மொழியல்ல.
அவரது வீட்டு வேலைக்காரியாய் வந்த நாட்களில் இருந்து இன்றுவரை நான் பேசாத மொழியை அவருடன் பேசினேன்.
முதல் முறையாக நான் மிகப்பெரிய நீண்ட சொற்களை அவர் முன்னால் பேசினேன்.
அவர் ஆச்சரியப்படவில்லை.
அவர் அச்சப்பட்டார்.
மொட்டந்தலையில் வேர்த்தது.
மிகத் தடுமாறியபடி தன்னுடைய மானத்தைக் காப்பாற்றும்படி மண்டியிட்டார்.
ஒரு பேராசிரியர் பதின்மூன்றாவது தடவையும் என்னிடம் மானமிழந்து கிடந்தார்.
இப்போது பேராசிரியருக்கு நன்றாக விளங்கிவிட்டது. தனது மானம் குறித்து தானே சிந்திக்கத் தொடங்கியருந்தார்.
தன்னை அவமானப்படுததலிலிருந்து மீட்டெடுக்க எதையும் செய்யத் தயாரானார்.
வீட்டிற்கு வெளியில் இருந்தது பொதுவெளி.
அதற்கும் எனக்கும் இடையில் இருந்தது மிகப்பெரிய இடைவெளி.
இடையில் கணேசலிங்கம் நடந்து திரிந்தார்.
பொதுவெளியில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தை விடவும் மிகப்பெரிய யுத்தம் எனக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நான் மிகப் பெரிய யுத்தம் ஒன்றின் ஒற்றைப் போராளி.
எனக்குரிய நேரத்தை மிச்சப்படுத்தவும் சுத்தமாய் இருக்கவும் முக்கியமாக தலையில் பேன் பிடிக்காமல் இருக்கவும் என கணேசலிங்கத்தின் பெற்றோர் என்னுடைய தலைமயிரை ஒட்ட வெட்டியிருந்தார்கள்.
இப்போது வெளியில் உள்ள போராளிகளின் சாயலை நான் ஒத்திருந்தேன்.
யாழ்ப்பாணத்திலிருந்த வேலைக்காரிகள் அனைவரது சாயலும் போரளிகளின் சாயலையே ஒத்திருந்தனர்.
வெளியில் குழந்தைப் போராளிகள் உள்ளே குழந்தை வேலைக்காரிகள்.
மானமிழந்த யாழ்ப்பாணம்.
இறுதி வாக்கு.
எப்பொழுதும் இடைஞ்சலான வார்த்தைகளுடனும் அபாண்டமான பழிகளுடனும் வாழப்பழகிவிட்ட என்னிடம் இருக்கும் ஒரேயொரு கேள்வி என்னவெனில் மேற்கூறிய இரண்டு வாக்கு மூலங்களையும் வாசித்த பின் பேராசிரியராகிய கணேசலிங்கம் தப்பிச் சென்ற வழி எது என்பதுதான். பேராசிரியரின் வழக்கை விசாரித்த அந்தக்காலத்து நீதவானின் துணையுடனோ அல்லது பல்கலைக் கழகத்தின் வாசல் வழியாகவோ அவன் தப்பித்திருக்கவில்லை. அல்லது எல்லாக் கொலைகாரர்களும் தப்பித்த ஏ9 பாதையூடாகவோ சங்குப்பிட்டி வழியாகவோ அவன் தப்பித்திருக்க முடியாது. ஒரு சிறிய தீக்குச்சி போல் பற்றி பின் தீப்பிளம்பாகி எங்களை உறையவைத்த கோணேஸ்வரி எனும் கலாவின் கவிதையூடாக மட்டுமே கணேசலிங்கம் தப்பித்து மறைந்து போனாhன்.
சிங்களச் சகோதரிகளே
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை
என்று பாடிய அந்தக் கவிதை கணேசலிங்கத்தை எங்கேயோ ஒழித்து வைத்து விட்டது. யாழ்ப்பாணத்தில் வேலைக்கமர்த்தப்பட்ட வேலைக்காரக் குழந்தை குறித்து அவள் யோனி குறித்து கவிதை எழுதிவிட முடியாமல் போய்விட்டது கலாவுக்கு. நமது காலாவும் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டாள்.
உண்மையில் இனிக் கவிதை எழுதமுடியாமல் போன
கலா இப்போது எங்கே?
காலாவதியாகிப் போன கலா என்பவர் உண்மையில் யார்?
நன்றி
குவர்னிகா
41வது இலக்கியச்சந்திப்பு மலர்
2013 யூலை