Tuesday 19 May 2015

மூலம்: மூலவர்ணம்: வாக்குமூலம்.





கதை.


கற்சுறா





மூலம்.

செங்கமலம் இன்று வீட்டிற்கு வருகிறான்.
மிக நீண்ட நாட்களான காத்திருப்பு அது.
இருபத்தியெட்டு வருசத்துப் பகைக்குப் பின் அவனை நேரில் பார்க்கப்போகிறேன்.
அவனுக்கும் எனக்குமான முதல் உரையாடல் என்னவாக இருக்கும்? அப்பொழுது எனக்குச் சரியாக பதினேழு வயது. அவனுக்கும் இருபதைத் தாண்டியிராத வயது. இப்ப எப்படி இருக்கிறானோ எனத் தெரியாது. இப்ப எனக்கு
முன்மண்டையில் வழக்கை விழுந்து எனது முழு அடையாளமும் மாறிவிட்டிருக்கிறது. அவனும் கிழவனாகியிருக்கலாம்.

அவனை வேலை முடிய வந்து கூட்டிவருவதாகச் சொல்லியிருந்தேன். அவனை அவனது வேலையிடத்தில் போய்க் கூட்டிவரவேண்டும். அவனுக்கும் வேலை முடிய எப்படியும் ஏழுமணியாகும். அவன் ஒரு தமிழ்க்கடையில் வேலை செய்கிறான். தமிழ்க்கடை என்று சொன்னதும் ஏதோ ரொரண்டோவில் அதுமட்டுந்தான் தமிழ்ககடை என்று நினைக்கக்கூடாது. ரொரண்டோவில் அது ஒரு வித்தியாசமான சாப்பாட்டுக்கடை. கனடாவுக்கு புதுசா வாறவர்களுக்கு அதுவும் தமிழர்களுக்கு மட்டும் அவர்கள் உடனே வேலை கொடுப்பார்கள். கனடாவுக்கு வந்தவுடன் வேலை கிடைக்கக் கூடிய ஒரே இடமாயும்  தமிழர்களுக்குரிய  சட்டதிட்டங்களோடு இருப்பதும் அந்தக்கடைதான். அதற்காகத்தான் அதனை நாம் பாசத்தோடு தமிழ்க் கடை என்போம். எடுக்கிற வெல்பயரைக் கழித்துக் கொண்டுதான் சம்பளக் கணக்குப் பார்ப்பார்கள். அதிலும் கொடுக்கிற சாப்பாடு பிடிக்கிற சீட்டு கிழமைக்குக் கிழமை வெட்டுற லொத்தர் வாகனத்தில் ஏற்றி இறக்கிறது என்று மொத்தச் செலவும் வெட்டி மிச்சக்காசை வேண்டி எடுப்பதற்கு தலையைச் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும். இதை விட சிறிலங்கா ஜெயிலில  இருக்கேக்க வேலை செய்து தான் கூடக்காசு உழைத்ததாக ஒருமுறை இன்னொரு நண்பன் சொல்லியிருந்தான்.

நான் ஏழுமணிக்கு தமிழ்க் கடையடிக்குப் போய்விட்டேன்.  சமோசாவுக்கும் இடியப்பத்திற்காகவும் சனம் அடிபட்டு இடிபட்டுக் கொண்டு உள்ளேயும் வெளியேயும் எனப் போய்வருகிறார்கள். ஒரு டொலருக்கு 10 சமோசாவும் 4டொலர் 50 சதத்திற்கு 50 இடியப்பமும் சம்பலும் வைத்து  சொதி இலவசமாவும் கொடுக்கிறார்கள். அந்த இலவசச் சொதிக்குத்தான் இவ்வளவு அடிபாடு.  லைன்ல நின்ற சனத்தை விலத்திக் கொண்டு செங்கமலம்; ஓடிவந்தான் வெளியே ஓடிவந்த செங்கமலத்தை இழுத்துப்பிடித்து அண்ணை இடியப்பம் முடியேல்லத்தானே என ஒருவர்  கேட்டுவைத்தார். இல்லயப்பா... எனக் கத்திவிட்டு ஓடிவந்து காரில் ஏறினாhன். ஆள் நல்லாக் காய்ந்து மெலிந்து போயிருந்தான். இருபத்தியெட்டு வருசத்துக்கு முன் பார்த்த செங்கமலமல்ல அவன். சரியான சின்னவனாகியிருந்தான்.

என்ன எப்படித் தமிழ்க்கடை வேலை என்று பேச்சைத் தொடங்கினேன்.

கனடாவுக்கு வந்து இந்தக் கடையின்ர பெயரைப் பார்த்தவுடன் நான் திகைச்சுப் போனன். கனடாவில ஒரு கடைக்குத் தமிழில மாவீரன் எண்டு பெயரும் வைச்சு கடையின்ர பெயருக்கு முன் மாண்டவீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக்கடலில் மாவீரம் குளிக்கும் என்று போடுறதுக்கு ஒரு தவம் வேண்டும். வேலை செய்தால் இஞ்சதான் வேலை செய்யிறது என நினைச்சுப் போய்ச் சேர்ந்தனான். இப்ப இஞ்ச இருந்து எப்படித் தப்புறது என்று தெரியாமல் கிடக்கு என்றான் செங்கமலம்.

மட்டக்களப்பு ஜெயில் உடைப்பையும் களுத்துதுறை ஜெயில் சமரையும் பார்த்த எங்கட பெடியளுக்கு ரொரன்ரோ மாவீரன்ர தமிழ்க்கடையை உடைச்சு வெளியேறமுடியாமல் இருக்கிறது புதினம்தான்.   உடைத்துக்கொண்டு வெளியேறேலாம சீட்டாலையும் வட்டியாலையும் சுற்றி சென்றியை வளைச்சுப் போட்டிருக்கிறார் வீரத்தமிழ்மகன் என்றான்.

வீட்டு வாசலைத் திறக்கவே இன்று யாரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று ஜெபா எட்டிப்பார்த்தாள். ஜெபாவுக்கு செங்கமலத்தைக் கண்டதும் திகைப்பு வந்தவிட்டது. ஒன்றும் சொல்ல முடியவில்லை. செங்கமலம் பாவம் என்பது அவளுக்கும் தெரியும்.

செங்கமலத்திற்கு என்னைப் பிடிக்காது. என்னை எந்த ஒரு சந்தர்ப்பத்திலையும் அவன் நம்ப மாட்டான். நானும் அவனை நம்பத்தயாரில்லை. மற்றவனை எப்பவும் சந்தேகித்துக் கொண்டே இருக்கும் மனம் எனக்கு. அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டே இருக்கிறனான். அதிக நேரம் திரும்பிப் பார்க்காமல் இருந்தால் ஒரு துப்பாக்கி எனது தலைக்குப் பின்னுக்கு குறிபார்த்துக் கொண்டிருப்பதாகவே யோசிக்கத் தோன்றும். பயம் எல்லோருக்கும் இருக்கிறது. பயத்தில கொஞ்சப் பயம் கூடப்பயம் எண்டு ஒன்று இல்லைத்தானே பயம் பயம் தான். அதால செங்கமலம் என்னட்ட எவ்வளவு நெருங்கினாலும் என்னால முடியுதில்லை. எல்லாத்தையும் தாண்டி ஒன்றே ஒன்று, அவனுக்குத் தெரிஞ்சதென்றோ அல்லது சொந்தக்காரங்கள் என்றோ இங்கு யாருமில்லை. அவன் பாவம்.

செங்கமலம் அப்ப எங்கட ஏரியாப் பொறுப்பாளர். ஒரு ஹொண்டா 200 மோட்டசைக்கிள்ள திரிஞ்சு ஏரியா வேலை செய்தவன். ஊருக்கு ஹொண்டாவை முதலில கொண்டு வந்தவன் இவன்தான். அதுவரைக்கும் சீ90 தான் ஆகப்பெரிய மோட்டசைக்கிள். அப்ப எங்கட ஊரில செங்கமலத்தோடு சேர்த்து மொத்தம் 7 ஏரியாப் பொறுப்பாளர்கள் இருந்தவை. மற்றவர்கள் எல்லாரிட்டையும் சைக்கிளும் சீ90யும் இருக்கேக்க இவனிட்ட மட்டும் தான் ஹொண்டா 200 இருந்தது.

சரியா கணக்குப் பண்ணிப் பார்த்தால் அந்த நேரம் எங்கட ஊரில் 4 முழுக் காம்ப். 7 ஏரியாப் பொறுப்பாளர்கள். 11ஒவ்பீஸ் என்று ஊரே இயக்கமயப்பட்டுப் போயிருந்தது. பெரிய இயக்கத்திற்கு மட்டும்தான் காம்பும் ஒவ்பீசும் இருந்தது. மற்றயவற்றிற்கு எல்லாம் தனிய ஒவ்பீஸ் மட்டும்தான்.

அந்தக்காலத்தில் மாங்குளத்துக்காம்பில இருந்தும் பூனகரிக்காம்பில இருந்தும் அல்லது தள்ளாடிக் காம்பில இருந்தும் ஆமிக்காரன் செல்லடித்தாலும் எங்கட ஊருக்கு செல் வராது.  ஒரு காட்டு ஊர். இதுக்குத்தான் 7 ஏரியாப் பொறுப்பாளர்கள். இயக்கத்தை வளக்கிறதுக்கு ஊர் ஊரா வேலை செய்ய வேண்டும் தானே. ஆனால் ஏரியாப் பொறுப்பாளர்களுக்கும் அவர்களின்ர சென்றிப் பொயின்றுக்களுக்கும் இருந்த முக்கிய வேலையே ஊரில இருக்கிற மற்ற இயக்கங்களை வேவு பார்க்கிறதுதான்.

ஒருத்தன்ர காம்புக்கு முன்னால மற்ற இயக்கம் போக முடியாது. போனோலே  ஒன்றையொன்று தீப்பற்றும் நிலை. நினைத்தாலே இப்பபோது சிரிப்பு வருகிறது. அக்கினி நட்சத்திரத்தில வருகின்ற பிரபுவும் கார்த்திக்கும் வாயுக்குள்ள தேவடியாப் பய என்று திட்டுற மாதிரி திட்டிக்கொண்டு ஒண்டையொண்டு விலத்திச் செல்லுவார்கள். ஏதோ இது எல்லாத்தையும்  நாளைக்கு மலரப்போற தமிழீழத்திற்கு என்று சொல்லிவிட்டு ஊர்மக்கள் பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.


செங்கமலம் இயக்கத்திற்கு ஏரியாவேலை செய்ய வந்த நாளில இருந்து  அவன் ஒவ்பிசில பெரிசா இருக்கிறதில்லை. எல்லோரும் ஊர்மனைக்குள் ஒவ்பீஸ் வைச்சிருக்கும்போது செங்கமலத்தின்ர இயக்கம் மட்டும் ஒரு காட்டுரோட்டில தமது ஒவ்பீசை வைத்திருந்தது. அது ஒரு ஒவ்பீஸ் மாதிரியே இருக்கிறதில்லை. எப்பவும் அச்சம் தருகிற அளவுக்கு இருட்டடிச்சமாதிரி இருக்கும். அங்கு எப்பவாவது யாரையாவது விசாரணை என விசாரிக்கக் கூட்டிக் கொண்டு போனால்தான் செங்கமலமே போவான். மற்றப்படி ராசாத்தியக்கா வீட்டிலதான் படுகிடை. வைப்புச்செப்பெல்லாம் அவனுக்கு அங்குதான். அது இயக்கத்திற்கும் ஒரு பெரிய பிரச்சனையாய் ஒருபோதும் இருககவில்லை.

ஏனென்றால் ராசாத்தியக்காவுக்கும் பாலசிங்கண்ணையிற்கும் இயக்கமெண்டால் போதும். தமிழீழத்திற்கு தாம் செய்யுற தொண்டு அதுதான் என்று அவர்கள் நினைத்தார்கள்.. பாலசிங்கண்ணையும் வீட்டில பெரிதாக நிக்கிறதில்லை. இயக்கத்திற்கு லொறி ஓடுறவர். றெயினிங் எடுக்கவில்லை என்பதுதானேயொழிய மற்றப்படி இயக்கத்திற்குரிய எல்லா உரிமையும் கொண்டவர். பொடியள் சிலருக்கு ராசாத்தியக்கா வீடும் இயக்கத்தின்ர காம்ப் மாதிரித்தான். சாப்பாடு சமையல் குளிப்பு முழுக்கு எல்லாம் அங்குதான். ஆனால் மற்ற இயக்கமெல்லாம் “செங்கமலம் சிரிக்குது ராசாத்திய நினைக்குது” என்றும் “ராசாத்தி நினைப்பில செங்கமலம் நினைப்புத்தான்” என்றும்  பாட்டுப்பாடிக்கொண்டு திரிந்தார்கள்.

ஒருமுறை என்னை வேவு பார்த்த ஒரு நாய் நான் இந்தப் பாட்டுகளப் பாடினதைக் கேட்டு செங்கமலத்திற்குச் சொல்ல செங்கமலம் என்னை விளக்கத்திற்கு கூட்டிக்கொண்டு போனான். அன்றைக்குத்தான் செங்கமலத்தை பக்கத்தில பார்க்கிறன். ஒரு பற்றிக் சறம். கோடன் சேட்டு இறுகின மூஞ்சி என்று எப்பவும் எட்டத்தில பார்த்த உருவத்தை அனறைக்குத்தான் மிக நெருக்கமாய்ப் பார்க்கிறன். ஊருக்கிள்ள ரெண்டு வருசமாத் திரிஞ்சாலும் என்னோட அவன் ஒரு கதை கதைக்கிறேல்ல. இப்பவும் விளக்கத்திற்கு வரச் சொல்லிட்டான் ஆனால் விளங்கயில்ல.

கையை நீட்டி அறைந்தால் கைவிரல் பதியும் தூரம் தான் எனக்கும் அவனுக்கும். நான் எதுவும் பேசவில்லை.  அப்பவும் ஒன்றரை மணித்தியால விளக்கம். ஆனால் ஒன்றரை மணித்தியாலத்திற்குள் மூன்றே மூன்று கேள்விகள் தான் செங்கமலம் என்னைக் கேட்டான். “உனக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்.?” “உன்ர கொப்பற்ற மரியாதையை ஏன் கெடுக்கிறாய்.?” “ஏன் அவங்களுக்குப் பின்னால திரியிறாய்?” என்று விட்டுவிட்டு அரை மணித்தியாலத்திற்கு ஒரு கேள்வியாய் மூன்று கேள்விகளையும் கேட்டான்.

ஆனால் ஒன்றுக்கும் பதில் எதிர்பார்க்கவில்லை. அப்பாவித்தனமாக என்னைப் போ என்று சொல்லி விட்டுவிட்டான். ஏன் பாட்டுப் பாடினனீ என்றோ அல்லது ராசாத்தி அக்கா பற்றியோ அவன் கேட்கவில்லை. ஆனால் அப்படியொரு செங்கமலத்தை நான் அன்றுவரைக்கும் பார்த்ததே இல்லை. ராசாத்தி அக்காவுக்கும் செங்கமலத்திற்கும் உறவு இருந்ததோ என்று இன்று வரைக்கும் நான் யோசிக்கிறனான்.

கொஞ்சக்காலத்தில செங்கமலத்தின்ர இயக்கம் தடை செய்யப்பட்டு ஆயுதம் எல்லாம் புடுங்கி ஒன்றும் இல்லை என்று ஆன பிறகு செங்கமலம் மட்டும் ஓடுறதுக்கு வழியில்லாமல் இருந்தபோது ஆஸ்பத்திரியில் இருந்த சைக்கிள் பார்க்கில் வேலை செய்து கொண்டிருந்தான்.

ஆனால் அந்த வேலையால் ஒரு நேரச் சாப்பாட்டுக் காசு கூட அவனுக்கு வராது. ஆனால் தான் ஒரு அப்பாவி, நேர்மையான மனிசன் எண்டு காட்டுறதுக்கும் உயிரோட இருக்கிறதற்கும் தான் அந்த வேலை உதவியது. ஆனாலும் எப்பவும் செங்கமலத்தில ஒரு கண் வைச்சுக் கொண்டுதானிருந்தனாங்கள்.

அந்த நேரத்தில் வத்தளையில இருந்து இடம்பெயர்ந்து வந்த பெட்டை ஒன்றைக் கூட்டிக்கொண்டு செங்கமலம் ஓடிற்றான். அதுக்குப் பிறகு நான் செங்கமலத்தை இங்குதான் சந்திக்கிறன்.

இப்ப செங்கமலமும் நானும் அரைப் போத்தல் பக்காடியை முடித்திருந்தோம்.

மவுனம் பேச்சு மவுனம் என்று நேரம் போய்க் கொண்டிருந்தது. நான் செங்கமலத்தின்அருகில் மூன்றாவது தடவையாக இன்று இருந்தேன்.

ஒன்றரை வருசத்திற்கு முதல் சன்சீ கப்பலில வன்கூவரில வந்திறங்கினவன். மனிசி செத்துப்போய்விட்டது. தான்தான் புதைத்துவிட்டு வந்தவனாம். பெடியனும் சின்னவயசிலேயே இயக்கத்தில சேர்ந்திட்டான்.

மகனோ இப்ப இவன கொஞ்சமும்; மதிக்கிறேல்ல. இரண்டாவது மகள். யாழ்ப்பாணத்தில ஒரு வாத்தியார் வீட்டில  விட்டுவிட்டு வந்திருக்கிறான். கந்தர் மடத்தில வீடு.

யூனிவெர்சிற்றியில படிப்பிக்கிற வாத்தியார். மனிசியும் ரீச்சர். அதுகளுக்கு ஒத்தாசையா வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவளைப்பற்றித்தான் அவனுக்குக் கவலை. மாறி மாறி அவளப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தான்.

படிக்கிற வயசில வேலை செய்யுறாள்.  இப்ப நினைக்கச் சரியான பயமாக் கிடக்கு. நடக்கிறதுகளைக் கேள்விப்படுறதைப் பார்த்தால் வாத்தின்ர வீட்டில விட்டதிலையும் பார்க்க சவுதிக்கு அனுப்பிற்று வந்திருக்கலாம்.

பதின்மூன்று வயது....  தாயில்லாமல்.......



கன நேரமா யோசிச்சுக் கொண்டிருந்தான்.

என்ன மகனோட கிட்டடியில கதைச்சனியோ எண்டு கேட்டன்.

அவன் கற்சிலைமடுவில இருக்கிறான். போன் அடித்து சுகம் விசாரிச்சாலே காசுதான் கேட்கிறான். வந்த காசே நான் இன்னும் குடுத்து முடியேல்ல அதுக்குள்ள கனடாவுக்குப் போய் ரண்டு வருசம் என்ன மயிரைப் புடுங்கிறாய் என்று கேட்கிறான். அவனோட கதைக்கேலாது. வயசுக்கு மீறின கதை என்றான்.

சின்னவயசிலேயே கொலை செய்து பழகினவங்கள். வாழ்க்கை எண்டால் என்னெண்டு தெரியாது. இப்ப அங்குள்ள பொடியளோடு கதைக்கேலாது.  இப்ப அவன் எடுத்தாலும் நான் எடுக்கிறேல்ல. என்றான்.

பிள்ளையளைக் குறை சொல்லி என்னசெய்யிறது. அவனுக்கும் காசு வேணும்தானே என்றேன்.

கேஸ் அக்ஸப் பண்ணினாலும் எதையாவது பார்க்கலாம். இரண்டு வருசமாகப்போகுது இவங்கள்; விசாரிக்கிறாங்கள் விசாரிக்கிறாங்கள் இன்னும் என்னை விசாரித்து முடியுதில்லை. கப்பல்ல வந்தவங்களைத் திருப்பி ஆனுப்புறாங்கள் எண்டு கதைக்கிறாங்கள். ஏன் வந்தனெற்று கிடக்கு. மகளோட நின்று இருக்கலாம். அல்லது மனிசி சாகேக்க நானும் செத்திருக்கலாம்.

வாழோணும் என்ற ஆசையில் தானே சயனைட்டை எறிஞ்சனாங்கள்...

.... யோசியாதே. என்றேன்.

நானும் என்ர குடும்பமும் ஒரு நாளும் சயினைட்டை எறியேல்ல....

என்றான் செங்கமலம்.




மூலவர்ணம்.


தேசபிதாக்களால் மாவீரர்களால் மாமனிதர்களால் 
கட்டப்பட்ட இந்தப் பூமியில் 
எப்போதும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. 
அழகிய நறுமணம் கொண்ட பூக்களின் அடியில் 
நமது குழந்தைகள் புதைக்கப்பட்டுள்ளார்கள். 
அவர்கள் அறியாத தவறுகளும் 
அவர்களே சொல்லாத பொய்களும் 
வரலாறு நீளவும் அவர்கள் மீது கவிந்து கிடக்கிறது. 
எனது குழந்தைகளைத் தோண்டியெடுத்து
 கொஞ்சிக் கொண்டிருக்க மனம் விருப்பியும் 
வெறும் நறுமணம் வீசும் பூக்களைப் 
புடுங்கி எறிய யாரும் விடுவதில்லை. 
தேசத்தின் பெயரிலும் மாவீரர்களின் பெயரிலும் 
வெறும் பூக்கள் 
பூத்துக் கொண்டிருக்கிறது.




வாக்கு ஒன்று:


அவர்களை மீண்டும் மீண்டும் வழியனுப்பிக் கொண்டிருந்தேன்.
கொல்லைப்புறத்திலிருந்து விளையாடிய குழந்தைக்குத்
தெரியாமல் ஒளிவதுதான் அது.

வளரும் ஒருகட்டு வார்த்தைகளில் இருந்தது அவளது பருவம்.

சிரிப்பொலியைத் தாண்டி ஓடும் குழந்தைக்குத் தெரிந்திருந்தது நீள் பயணம்.

மெல்லிய நீர்த்தரிப்பும் இளஞ்சூட்டுத்தாகமும் எடுத்து
எனது குறி விரைக்கத் தொடங்கியது.

கடைசி மனிதனின் மறைவுக்காய் காத்திருந்தன கண்கள்.

பயணத்தின் இடைமடிப்பில் விழுந்தது குழந்தை.

எல்லாக் குழந்தைகளையும் போலவே அவளும் என்னிடம் மன்றாடினாள்.

அல்லாவையையோ யேசுவையையோ அல்லது ஏதோ ஒரு

சைவக்கடவுளையோ பெயர் சொல்லி அழைக்கவில்லை

கணேசலிங்கம் என்னைக் கொல்லாதே என்றாள்.

நான் யாரையும் கொல்வதில்லையே.

எனது பெயரையே அவள் மெல்லிதாய் உச்சரித்தாள்.

நான் அவளைச் சீண்டினேன்.

அவள் சிலிர்த்தாள்.

ஆம் அவள் சிலிர்க்கிறாள் என்றே நான் சொல்கிறேன்.

நான் பரவசத்தில் திளைத்தேன்.

அவளது சிலிர்ப்பு பயம் கவ்வியது.

நான் அதையே விரும்பினேன்.

குழந்தையின் தொட்டிலில் அவளைக் கிடத்தி பேசத் தொடங்கினேன்

அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு என்ன வேலை நான் சொல்வதையெல்லாம் மறுக்காமல் கேட்பதுதானே.

அதற்காவே எனது பெற்றோர் அவளை நன்றாகப் பழக்கப்படுத்தியிருந்தார்கள்.

எங்கிருந்துதான்  பழகுகிறார்களோ தெரியாது
தங்களது பிள்ளைகளுக்காகவே வாழக் கற்றுக் கொண்டுவிடுகிறார்கள் எல்லோரது பெற்றோரும்.

வீட்டிற்கு வெளியில் யுத்தம் கோரமாய் மெல்ல நடந்து நகர்ந்து கொண்டிருந்தது.

யுத்தத்திற்குள் வாழவும் யுத்தத்திற்குள் பேசவும் நாங்கள் கற்றிருந்தோம்.

யுத்தம் பற்றி முன்பிருந்த பயத்திற்கும்
தற்போதுள்ள பயத்திற்கும் உள்ள இடைவெளியே அது.

அவளை முதல் முதலில் தொட்டபோது இருந்த பயம்
எனக்கு இப்பொழுது இல்லை.

ஆனால் அவளிடம் அதே பயம் தொடர்ந்தது.

அவள் ஒவ்வொரு தடவையும் முதல் யுத்தப் பயத்தினுள் இருந்து கொண்டிருந்தாள்.

அது ஒரு குழந்தையின் பயத்தை ஒத்திருந்தது.

அவளிடம் முதல் யுத்தம் பற்றிய அச்சம் எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது.

வெளியில் குழந்தைகள் யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

இப்போது நான் பல்கலைக் கழகத்திலிருந்து திரும்பும் ஒவ்வொரு தருணமும்

அவள் ஏதோ ஒரு மூலையில் ஒழியத் தொடங்கினாள்.
நான் தேடத் தொடங்கினேன்.

அந்த ஒழித்துப்பிடித்து விளையாடும் விளையாட்டை நான் விரும்பினேன்.

அவள் என்னிடமிருந்து தப்புவதற்காகத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

என்னிடமிருந்து அவள் தப்ப முடியாது.

அவள் ஒருபோதும் தப்பமுடியாது.

அதனால் அவளது உடலை எனக்குள் மறைப்பதற்கு முன்

அவளின் மொழியை மழித்தேன்.

அது செயல் இழந்தது.

ஒரு கராத்தே வீராங்களை போல் என்னுடன் தர்க்கம் செய்யும்
அத்தனை மொழிகளையும் அவளிடமிருந்து அழித்தேன்.

இப்பொழுது அவள் ஒரு குறுகிப் படுத்திருக்கும் புனைக்குட்டி போல ஆனாள்.

நான் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல ஆயத்தமானேன்.

பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் போரின் வீயூகம் அமைக்கும் படைத் தலைவர்களாக விசர் பிடித்து அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

பொங்கலுக்குத் தமிழீழம் தீபாவளிக்கு தமிழீழம் என்று

 நாங்கள் ஆரம்பத்தில் சொன்ன அதே வேகத்துடன்

இப்போதும் அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னை வளாகத்திற்குள் கண்டதும் ஒரு மாவீரனைக் கண்டதுபோல் அவர்களின் தேசபிதாவைக் கண்டதுபோல் ஆரவாரப்பட்டார்கள்.

எனக்குள் கர்வம் எகிறியது.

அவர்களின் ஆவேசம் என்னை வேறு உலகத்தில் இறக்கியது.

அவர்களின் கண்களை உற்று நோக்கிய நான் எனது அச்சம் தெளிவுற மெதுவாகப் பேசத் தொடங்கினேன்.

"நாம் எமது தேசிய விடுதலைக்கான போராட்டத்தின் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். சிங்கள இனவெறி அரசிற்கெதிரான யுத்தம் நம்முடையது. இந்த அரசு இனவாத அரசு. இதற்கெதிரான யுத்தத்தில் நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். தமிழ்த் தேசியத்தின் ஒரு விளைவு தான் நாங்கள். நமது முன்னோர்கள் அகிம்சைப்போராட்டம் நடாத்தினார்கள்.  தற்போது மக்களே எம்மை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்துள்ளார்கள். இது எமது விடுதலை. நமது சிறிய சிறிய பிரச்சனைகள் முரண்பாடுகள் எல்லாவற்றை யும் புறந்தள்ளிவிட்டு பொது எதிரிக் எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் "

என்ற சிறிய வழமையான உரையாடல் ஒன்றை அவர்களுக்கு நிகழ்த்தினேன்.

அவர்கள் மிக ஆக்கிரோசமானார்கள்.

எதையும் இலகுவாக உள்ளிளுக்கக் கூடிய தோல்களால் ஆனவர்கள் தானே அவர்கள்.

மயிர்க்கூச்செறியும் வார்த்தைகளை அர்த்தமற்றுப் பேசக்கூடியவர்களாக அப்போது எப்படி நாமிருந்தோமோ அப்படியே இப்போதும் பேசுகிறார்கள்.

சுழிபுரத்தில் ஆறு மாணவர்களுக்குக் குஞ்சாமணி அறுத்து வாயிற்குள் வைத்து மணலில் புதைத்தவர்கள் நாங்கள் இல்லை என்பதையும் விஜிதரனைக் கடத்தி சுட்டவர்கள் நாங்கள் இல்லை என்பதையும் எவ்வளவு உணர்வுகரமாக நம்பினோமோ ...
அதேபோல் நம்புகிறார்கள் இவர்கள்.

எந்தக் கஸ்டமும் இல்லாமல் நான் சொன்ன எல்லாவற்றையும் சீக்கிரத்தில் உள்ளிளுத்தார்கள்.

அவர்கள் உட்கொள்ள உட்கொள்ள எனக்குத் தொண்டை வற்றியது.

நமது சிறிய சிறிய முரண்பாடுகள் என்பதை  திருப்பித் திருப்பி அழுத்தமாகச் சொன்னேன்.

மிகமுக்கியமாக  நமது போராட்டத்தி;ற்கு இடையூறாக இருக்கும் சில பேராசிரியர்களை நாம் இனங்காணவேண்டும் எனவும்

அவர்கள் தமிழ்த்தேசியத்தின் துரோகிகள்.  அவர்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரைத்தேன்.

நான் பெயர்களைச் சொல்ல முதலே மாணவர்கள் பட்டியலிட்டார்கள்.

அவர்கள் பட்டியலிட்ட அத்தனையும் நான் நினைத்ததும் சரியாக இருந்தது.

ஆனால் அது என்னுடைய அளவை விட மிகஅதிகமாகவேயிருந்தது.

மாணவர்களும் எனது பெற்றறோர்களைப் போலவே. எப்போதும் அவர்கள் ஆசிரியர்களுக்காகவே வாழ்கிறார்கள்.

நான் மிகவும் களைப்புற்றிருந்தேன். சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று ஒரு தேநீர் அருந்தினால் களைப்புக் குறையும்.
 மாணவர்களை விலத்திக்கொண்டு சென்று சிற்றுண்டிச்சாலையின்  மேசையில் அமர்ந்தேன்.

அது சிவரமணி இருந்த மேசை.
மறக்கப்பட்ட பாடலக்குத் தாளந் தட்டிய நண்பனும் விரல்களும் சிதறிக் கிடந்த தேனீர்த் துளிகளுமாய் அந்த நடுமேசை எனக்குப் பெரும் பீதியைத் தந்தது.

அங்கிருக்கவோ அல்லது தேநீர் அருந்தவோ என்னால் முடியவில்லை.
எழுந்து நடந்தேன்.

வரிசையில் நீண்டு நின்ற அசோகா மரங்களின் மறைவில் என்னை மறைத்தேன்.

பல்கலைக்கழகத்தின் மதிற்சுவர்கள் வெறும் கண்ணறைகளாயின.
முடியவில்லை.

உடலெங்கும் தீசூழ பல்கலைக் கழகத்தை விட்டு  வெளியில் ஓடிவந்தேன்.

வீட்டின் அறையில் முடங்கிக் கிடந்த அவள் வெளியில் வரவேயில்லை. தன்னுடலை முடிந்தவரை கீறிக் காயப்படுத்தியிருந்தாள். அவை பூனையின் நகக் கீறல்கள். அவளின் அசைவு ஒவ்வொன்றும் என்னைப் பயப்படுத்தியது. ஒரு பூனைக்குட்டியின் மிரட்சி கலந்த அசைவு அது.  




வாக்கு இரண்டு:


மவுனத்தின் மொழிக் கதவைத் திறந்து
வெளியில் பேசினேன்.

நான் பேசக் கூடியவளானேன்.

எனது உதடுகள் திணிக்கப்பட்ட அழுகிய ஆண்குறியை சூப்புவதைத் தவிர்த்து முதன் முறையாக சொற்களை உச்சரித்தது.

நான் விரும்பிய சொற்களையெல்லாம் பேசினேன்.

குறிக்கப்பட்ட நேரத்திற்குள் இத்தனை சொற்களை பேச நான் ஒருபோதும் எத்தனித்ததில்லை.

பேசப் பேச நான் எனது மொழிக்குள் இருந்து மெல்ல விடுபட்டேன்.

பேசாதிருந்தபோது எனக்குள் மொழி அடங்கிக் கிடந்தது.

மொழிக்குள் நான் அடங்கியிருந்தேன்.

மெல்ல மெல்ல மொழியிலிருந்து நான் விடுபட்டேன்.

ஆம் நான் மவுனத்தின் மொழிக் கதவைத் திறந்தேன்.

கணேசலிங்கம் எனது கதவைத் திறந்து கொண்டு வந்தார்.

அவர் வழமைக்கு மாறாகக் களைத்திருந்தார்.

அவரது முகம் அச்சத்தை எதிர் கொண்டிருந்தது.

அவர் வழமையற்ற வேறு ஒரு மொழியில் என்னுடன் பேச முற்பட்டார்.

எனக்கு எதுவுமே விளங்கவில்லை.

அது என்னுடன் இவ்வளவு நாளும் அவர் பேசிய மொழியல்ல.

அவரது வீட்டு வேலைக்காரியாய் வந்த நாட்களில் இருந்து இன்றுவரை நான் பேசாத மொழியை அவருடன் பேசினேன்.

முதல் முறையாக நான் மிகப்பெரிய நீண்ட சொற்களை அவர் முன்னால் பேசினேன்.

அவர் ஆச்சரியப்படவில்லை.

அவர் அச்சப்பட்டார்.

மொட்டந்தலையில் வேர்த்தது.

மிகத் தடுமாறியபடி தன்னுடைய மானத்தைக் காப்பாற்றும்படி மண்டியிட்டார்.
ஒரு பேராசிரியர் பதின்மூன்றாவது தடவையும் என்னிடம் மானமிழந்து கிடந்தார்.

இப்போது பேராசிரியருக்கு நன்றாக விளங்கிவிட்டது. தனது மானம் குறித்து தானே சிந்திக்கத் தொடங்கியருந்தார்.

தன்னை அவமானப்படுததலிலிருந்து மீட்டெடுக்க எதையும் செய்யத் தயாரானார்.


வீட்டிற்கு வெளியில் இருந்தது பொதுவெளி.

அதற்கும் எனக்கும் இடையில் இருந்தது மிகப்பெரிய இடைவெளி.
இடையில் கணேசலிங்கம் நடந்து திரிந்தார்.

பொதுவெளியில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தை விடவும் மிகப்பெரிய யுத்தம் எனக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நான் மிகப் பெரிய யுத்தம் ஒன்றின் ஒற்றைப் போராளி.

எனக்குரிய நேரத்தை மிச்சப்படுத்தவும் சுத்தமாய் இருக்கவும் முக்கியமாக தலையில் பேன் பிடிக்காமல் இருக்கவும் என கணேசலிங்கத்தின் பெற்றோர் என்னுடைய தலைமயிரை ஒட்ட வெட்டியிருந்தார்கள்.

இப்போது வெளியில் உள்ள போராளிகளின் சாயலை நான் ஒத்திருந்தேன்.

யாழ்ப்பாணத்திலிருந்த  வேலைக்காரிகள் அனைவரது சாயலும்   போரளிகளின் சாயலையே ஒத்திருந்தனர்.

வெளியில் குழந்தைப் போராளிகள் உள்ளே குழந்தை வேலைக்காரிகள்.

மானமிழந்த யாழ்ப்பாணம்.




இறுதி வாக்கு.


எப்பொழுதும் இடைஞ்சலான வார்த்தைகளுடனும் அபாண்டமான பழிகளுடனும் வாழப்பழகிவிட்ட என்னிடம் இருக்கும் ஒரேயொரு கேள்வி என்னவெனில் மேற்கூறிய இரண்டு வாக்கு மூலங்களையும் வாசித்த பின் பேராசிரியராகிய கணேசலிங்கம் தப்பிச் சென்ற வழி எது என்பதுதான். பேராசிரியரின் வழக்கை விசாரித்த அந்தக்காலத்து நீதவானின் துணையுடனோ அல்லது பல்கலைக் கழகத்தின் வாசல் வழியாகவோ அவன் தப்பித்திருக்கவில்லை.  அல்லது எல்லாக் கொலைகாரர்களும் தப்பித்த ஏ9 பாதையூடாகவோ சங்குப்பிட்டி வழியாகவோ அவன் தப்பித்திருக்க முடியாது. ஒரு சிறிய தீக்குச்சி போல் பற்றி பின் தீப்பிளம்பாகி எங்களை உறையவைத்த கோணேஸ்வரி எனும் கலாவின் கவிதையூடாக மட்டுமே கணேசலிங்கம் தப்பித்து மறைந்து போனாhன்.

சிங்களச் சகோதரிகளே 
உங்கள் யோனிகளுக்கு
இப்போது வேலையில்லை

என்று பாடிய அந்தக் கவிதை கணேசலிங்கத்தை எங்கேயோ ஒழித்து வைத்து விட்டது. யாழ்ப்பாணத்தில் வேலைக்கமர்த்தப்பட்ட வேலைக்காரக் குழந்தை குறித்து அவள் யோனி குறித்து கவிதை எழுதிவிட முடியாமல் போய்விட்டது கலாவுக்கு. நமது காலாவும் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டாள்.
உண்மையில் இனிக் கவிதை எழுதமுடியாமல் போன
கலா இப்போது எங்கே?
காலாவதியாகிப் போன கலா என்பவர் உண்மையில் யார்?




நன்றி
குவர்னிகா
41வது இலக்கியச்சந்திப்பு மலர்
2013 யூலை



































Sunday 17 May 2015

பொய் சொல்லக் கூடாது பாப்பா




கற்சுறா
ஒரு முறை எனது தந்தையார் பாரதியாரின் பாடல் குறித்து தனது நண்பருடன் வாக்குவாதப்பட்டார்.
பாரதியார்,

“பொய் சொல்லக் கூடாது பாப்பா” என்று ஒரு குழந்தைக்கு சொல்லும் பாடல் அது.

எதுவுமே அறியாத குழந்தைக்கு பொய் சொல்லக் கூடாது பாப்பா என்று பாரதியார் எப்படிச் சொல்ல முடியும்? இப்போ ஒரு பாப்பா பொய் என்றால் என்ன வென்று கேட்டால் என்ன விளக்கம் சொல்ல முடியும்?
பாப்பாவுக்கு பொய் என்பதைப் பாரதியாரே முதல் அறிமுகப்படுத்துகிறார் என்பது எனது தந்தையாரது வாதம். அதற்குப்பதிலாய் பாரதியார் “மெய் சொல்ல வேண்டுமடி பாப்பா” என்று பாடியிருக்கவேண்டும் என்றார்.
இந்த விவாதம் நடந்தது இலங்கையில்.

இப்படிக் கற்பிக்கும் விடையங்கள் குறித்து மிக மிக அவதானம் இருக்கவேண்டும். அதிலும் குழந்தைகளின் கல்வி குறித்து எப்படியான அவதானமும் நுண்ணிய புலனும் வேண்டும்?

 “அ”க்கு அம்மா “ஆ”க்கு ஆடு எனும் நாங்கள் “இ”க்கு இரத்தம் என்று சொல்லி கையைக் கத்தியால் வெட்டி வழியும் இரத்தத்தைப் படம் போட்டுக் காண்பிக்க முடியுமா?
குழந்தைகளுக்குப் கற்பிக்கும் போது ஆசான்கள் அதீத கவனத்துடன்  கவனமாக இருக்க வேண்டாமா?

இன்று ப.அ. ஜயகரன் தனது முகநூலில் ,
https://www.facebook.com/pajayakaran?fref=ts
இங்குள்ள தமிழ்ப்பாடசாலைகளது கல்வித்திட்டங்கள் கல்வி கற்பிக்கும் முறை தமிழ் ஆசிரியாகளது அக்கறையின்மை குறித்து பதிவிட்டிருந்தார். தகுந்த விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய முதற் பதிவு அது. அந்தப் பதிவு குறித்து அலட்சியமோ அழிச்சாட்டியமோ பண்ணமுடியாது. அதனை முன்னுதாரணமாகக் கொண்டு அத்தனை பெற்றோர்களும் தமது குழந்தைகளது எதிர்காலம் குறித்து உரிய அக்கறை கொள்ள வேண்டும்.

சிறிது காலத்தின் முன் கனடிய கல்விச் சபையால் நடாத்தப்படுகின்ற தமிழ் மொழித் திறமை நெறி அதாவது Tamil language credit course கனடாவில் பிறந்த பெருமளவிலான பிள்ளைகள் தமது தாய் மொழியைக் கற்பதற்கு கனடிய அரசால் செயற்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் கனடாவில் பிறந்த தமிழ்ப் பிள்ளைகள் மிக அதிகமாக கல்வி கற்கிறார்கள். இவர்களில் உயர்தரச் சித்திக்கென ஏற்படுத்தப்பட்டது இந்த தமிழியல் என்ற நூல். இந்த நூலின்; முதல் அத்தியாயம் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பற்றியது.
இந்தப் பக்கத்தில் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்து பிள்ளைகளுக்கு இப்படிச் சொல்லப்படுகிறது.




“போர்காரணமாகப் பெருமளவிலான இலங்கைத் தமிழர் புலம் பெர்ந்ததை நாம் அறிவோம். இவர்களது துன்பத்தை “அகதியின் முகம்” எனும் குறு நாவலாகச் செ. யோகநாதன் வெளிக்கொண்டுவந்தார். இதே போன்று அ.முத்துலிங்கம் அவர்களது சிறுகதைகள் புலம்பெயர்ந்தோரது கவலைகளையும் வலிகளையும் பதிலு செய்கின்றன. காசி ஆனந்தனது பாக்கள் புலம்பெயர்ந்தோரது ஏக்கத்தைப் படம் பிடித்தக் காட்டுகின்றன.”
இவர்களைப் போல இன்னும் பலவுள்ளன… 
என்கிறது.

இப்போது சொல்லுங்கள் நமது பிள்ளைகள் தமிழ் மொழி கற்க வேண்டுமா? இந்த தமிழியல் என்ற நூலைப்படித்துச் சித்தி எய்த வேண்டுமா? இந்தத் தமிழ்ப் பாடசாலைகள் இப்படி இயங்க வேண்டுமா?
கனடாவில் வாழும் பிள்ளைகள் தமிழ் மொழியை விரும்பி கற்பதற்கு முன்வரும் போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் தரவுகள் உண்மையாக இருக்கவேண்டும்,  கற்பிக்கும் ஆசிரியர்களே தவறான தகவல்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது அதையும் பாடத்திட்டத்தில்  கொண்டுவரும் போது ஆசிரியர்கள் அயோக்கியர்களாக மாறிவிடுகிறார்கள். இந்தத் தவறு பிள்ளைக்குத் தெரியவரும் போது அந்த ஆசிரியர்களின் தகமை கேலிக்குரியதாக மாறிவிடும்.
உண்மையில் இந்தத் தவறு தெரியாமல் செய்த தவறல்ல.
வேண்டுமென்றே செய்தது. இது வரலாற்றைத் திரித்தல். முகத்துதிபாடுதல். அக்கறையின்மை. துஸ்பிரையோகம்.


இந்த தமிழியல் நூல்

உருவாக்கம் 
சண்முகம் குகதாசன்

நூலாக்க உதவி
அனுசியா பாசுக்கரன்
            இராச்மீரா இராசையா
சுpவச்செல்வி சிவசுந்தரலிங்கம்
இரஞ்சினி சறீகதிர்காமநாதன்

மேய்ப்பு
விமலேசுவரி விசுவலிங்கம்

ஓளி அச்சு
சிந்துயா இரத்தினசபாபதி

வடிவமைப்பு /அட்டை
 நிலா துசியந்தன்

அச்சு
விரைவு அச்சுக் கலையகம்

செயற்றிட்ட நிறைவேற்றுனர்
சன்முகம் குகதாசன்

திருத்திய இரண்டாம் பதிப்பு

2013

பதிப்புரிமை
கனடாத் தமிழ்க் கல்லூரி
6-3150 எக்லின்ரன் சாலை கிழக்கு
இசுக்காபரோ, ஒன்ராறியோ
கனடா




 

Sunday 3 May 2015

உடல் வதையும் உள வதையும் -



கனடியத் தமிழ்ச் சூழலில் பெண்கள்.


பார்வதி கந்தசாமியுடன் உரையாடல் 
            கற்சுறா







பார்வதி கந்தசாமி ஒரு மொழியிலாளர்
இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்
இலங்கைப் பல்கலைக் கழகங்களில் கல்வி பயிற்றி, அவுஸ்ரேலியப் பல்கலைக் கழகத்தில்முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் கலிபோர்னியாவிலுள்ள ஸ்ரைன்போட் பல்கலைக்கழகத்தில் மூத்த புல்பிறைட் புலமைப் பரிசில் பெற்று, கற்பித்தும் ஆய்வுகள் செய்தும் வந்தார். கனடாவில் யோர்க் பல்கலைக் கழகத்திலும் அகதிகள் ஆய்வுத் துறையில் ஆய்வாளராக இருந்தவர். தற்பொழுது உளநோய் ஆலோசகராக கடமையாற்றுகிறார். சமூகத்தேடலுக்கான பல நூல்கள், பெண்கள், சிறுவர், முதியோர் தொடர்பான பல விழிப்புணர்வு நாடகங்களை மேடையேற்றியும், தொலைக்காட்சி நாடகங்களையும் ஆவணப்படத்தியுமுள்ளார். கனடாவில் முதுதமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வசந்தம் என்ற அமைப்பின் காரணகர்த்தா. பெண்ணியவாதியாக செயற்பட்டு வரும் இவர் 
கனடாவில் பெண்களின் பிரைச்சனைகளில் 
தனது கவனத்தை முழுமையாக ஈடுபடுத்துபவர்.




கனடியத் தமிழ் சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவை என்பதை உங்கள் அனுபவத்துக்கூடாக கூறமுடியுமா?

எனது அனுபவத்துக்கூடாக என்று சொன்னால் பெண்களின் உளவியல் பிரச்சனைதான் மிகப் பாரதூரமானதாக இருக்கிறது. அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் உளவியல் தாக்கம் இப்ப இப்ப கூடுதலாக வெளிப்படுகிறது. 90களின் ஆரம்ப காலங்களில் நான் அமெரிக்காவில் இருக்கும் போது ஷசிறகொடிந்த பறவைகள்ஷ என்றொரு நாட்டிய நாடகம் எழுதி ஷவாட்டலூஷ பல்கலைக்கழகப் பிள்ளைகளுக்கு அனுப்பினேன். 89ம் ஆண்டு நான் கலிபோர்ணியாவில் உள்ள ஸ்ரான்போட் பல்கலைக்கழகத்திற்குப் போனேன். இங்கு கனடாவுக்கு ஒவ்வொரு வருடமும் வந்து வந்து போயிருக்கிறன். இங்கு வந்து போகும் போது இங்குள்ள பெண்களிடம் கேட்டு அறிந்ததும், தெற்காசியப் பெண்கள் அழைத்த கருத்தரங்கில் விளங்கிக் கொண்டவற்றையும் கலிபோர்ணியாவில் ஜெயிலில் அடைபடடிருந்த தமிழ்ப் பெண்களிடம் கேட்டு அறிந்த தகவல்களையும் இணைத்து அந்த அநுபவங்களை நாடக வடிவில் காட்டச் சிறகொடிந்த பறவையை ஊடகமாக் கொண்டேன்எனது அநுபவத்துக்கு ஊடாகப் பார்க்கும்போது இங்குள்ள மேற்கத்தைய சூழலுக்குள் எங்கள் பெண்கள் நிறையவே பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்ற உணர்வு ஆரம்பத்திலேயே தெரிந்தது. அவர்களில் பலர் ஏமாந்த பறவைகளாக ஒன்றும் தெரியாத சூழலுக்குள் இங்கு வானூர்திகளில் ஏற்றி அனுப்பப்படுகிறார்கள் என்றதைத் தெளிவாக உணர்ந்துதான் அந்த சிறகொடிந்த பறவைகள் என்ற நாட்டிய நாடகத்தை எழுதினேன். அதில் நான் அதிகம் கொண்டு வந்தது இந்திய இராணுவப் பிரச்சனைகள். உண்மையில் இந்திய இராணுவ ஆதிக்கக் காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியது எங்கள் பெண்கள்- ஈழத்தின் யுத்தகாலத்தில் இலங்கை இராணுவம் பெண்களுக்குச் செய்த அட்டூழியங்களைவிட இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள் பாரதூரமானவை. பெண்கள் எதிர்நேர்க்கும் பிரச்சனைகள் என்று பார்த்தால் பெண்களை மூன்றுவகையினராக வகுக்கவேண்டும். 1. நடுத்தர வயதுப் பெண்களும் இளம் குடும்பப் பெண்களும் 2. இளம் பெண்கள்  3. வயோதிபப் பெண்கள். பெண் குழந்தைகள் என நான்காவது வகையினராகவும் வகுக்கலாம். இவர்களில் முதலாவது வகையினர் அதிக பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர்;. சீதனப் பிரச்சினை, பாலியல் தொடர்பான பன்முகப் பிரச்சினை, குடிவரவுப் பிரச்சினை, அதிகாரக்கட்டுப்பாட்டுக்குள் அடங்கி ஒடுங்கி நாலு சுவர்களுக்குள் அடங்கி இருக்கவேண்டியமை, குழந்தை, முதியோர் பராமரிப்பு, ஆங்கில வகுப்புகளுக்குச் சென்று கனடியச் சூழலை அறியும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளாமை, ஒன்றுக்கும் உதவியற்ற ஒரு சடமாக, மீண்டும் மீண்டும் காது அடைக்கக் கத்தப்படுவதாலும் காதைப் பொத்தி அறையப்படுவதாலும் ஒதுக்கப்படுவதாலும் ஏற்படும் உளவியற் பாதிப்பு, பாலிய வயதுப் பிள்ளைகளை வளர்ப்பதால் ஏற்படும் அழுத்தம், போதிய பணவசதியின்மை, குடுப்ப வன்முறைக்கு உள்ளாதல், சமூக- அரசியல் அதிகாரங்களுக்குக் கட்டுப்படல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.


அப்படி பாதிப்புக்குள்ளான பெண்கள் எத்தனை பேர் வரையில் இருக்கிறார்கள்?

இருக்கிறார்கள்நிறையப் பேர் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் என்று நூற்றுக்கணக்கில்; இருக்கிறார்கள். இந்திய இராணுவ அட்டுழியங்களால் பாதிக்கப்பட்டோரில் அனேகமானவர்கள் வடபகுதிப் பெண்கள். இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்டு நாலாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் குடாநாட்டில் விதவைகளாகியுள்ளனர். வன்னிப் பிரதேசப் பெண்களும் இருக்கிறார்கள். என்னுடைய சினேகிதரின் அக்கா ஒருவர் இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர். அதன்பின் இச்சமூகத்தின் முன் முகம் கொடுக்க முடியாது என்ற குற்ற உணர்வில் அவ கிணற்றுக்குள் குதிச்சிட்டா  என்கிறார்கள். ஆனால் அவங்கள் தான் தூக்கிப்போட்டாங்களோ என்று யாருக்கும் தெரியாது. அதிகாரிகளிடம் கேட்க அவங்கள் சொன்னாங்கள் இது புலிகள் வந்து செய்திருக்கிறாங்கள் என்று. டொக்டர் சரவணபவானின் அறிக்கைப்படி அவ பாலியல் வதைக்கு உள்ளாகினவ. சாட்சியும் இருந்தது. அயலுக்குத் தெரியும் அமைதி குலைக்க வந்த இந்தியப்படைதான் செய்தது எண்டு. அதிகாரம் துப்பாக்கி முனையில் இருந்தது அவங்களிடம், அப்போது. யாரும் ஒன்றும் சொல்லமுடியாது.
அதைவிட இங்கு கலியாணம் பேசி வரும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அதிகமாகவேயுள்ளன. இலங்கையில் கலியாணம் செய்து குடும்பமாயிருக்கும் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை விட இங்கு பாரதூரமாக இருக்கிறது. ஏனெனில் இங்கு குடும்பமாக இருக்கும் பெண்களுக்கு எவ்வித ஆதரவும் கிடையாது. அங்கு இருக்கும் சமூக பாதுகாப்பு இங்கு இருக்கின்ற பெண்களுக்கு இல்லை. ஆயல் இல்லை. பேச்சுக் கலியாணங்களால் பல பெண்கள் நிலை எவ்வளவு தூரம் பாதிப்புக்குள்ளாகிறது என்பது பலருக்குத் தெரியும். இலங்கை போல் குடும்ப உறவினர்களின் வட்டம் இங்கு நெருக்கமானதாக இல்லை. இங்கு நடக்கின்ற பேச்சுக் கலியாணத்தில் பேசப்பட்டு கனடா வரும் பெண், வந்த அன்றே தங்குவதற்கு வீடு இல்லை. வந்த அன்றே புருசனுடன்; போகின்றா. அந்நியமான ஒருவனுடன்- முன்பின் பார்த்திராத ஒருவனுடன் அவ போகிறா. இங்கு இரண்டு பேரும் ஆளுக்காள் அந்நியமானவர்களாகவே இருக்கிறார்கள். அனேகமான சூழலில்- ஊரில் பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரராகவும் அந்தப் பையன் இருந்திருக்கலாம். ஆனால் அங்கிருக்கும் போது அவனுக்கு வேறு ஒரு முகம் இருந்தது. ஆனால் இங்கு வந்து கனடியச் சூழலில் அவனுடைய முகம் வேற. இது தான் அதிகமான குடும்பங்களில் அடிப்படைப் பிரச்சனையாக இருக்கிறது. அதைவிட எங்கட குடும்பங்களில் மது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதுக்காக மது அருந்தாத குடும்பங்களில் பிரச்சனை இல்லை என்பதல்ல. அங்கும் அனேகமான பிரச்சனைகள் இருக்கின்றன. மது அல்ல பிரச்சனை - மது அருந்தும் ஆள்தான் ஒரு பெரிய பிரச்சனை. இங்கு தமிழ்ப் பார்டிகளில் பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஆண்கள் ஒரு புறமாகவும் பெண்கள் ஒருபுறமாகவும் இருப்பார்கள். ஆண்களின் குடித்தல் நிகழ்வு ஆரம்பமாக பெண்கள் ரேஸ்ருக்கு தேவையான உணவுப் பொருட்கள் பரிமாறுவார்கள். அந்தச் சமயங்களில் நல்ல தண்ணியில் தளம்பும் அவரைப் புள்ளையளும் பாத்துக்கொண்டுதான் இருப்பார்கள் - ஆனால் அவர் இண்டைக்குத் தானே குடிக்கிறார். இங்கேதான் குடிக்கிறார் என்று தினமும் தண்ணியில் இருக்கும் புருசனைக் காப்பாற்றும் நிலை அவர்களுக்கு ஊட்டப்பட்டு இருக்கிறது. அவர்களை அறியாமலேயே அவர்கள் பாதிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பிரச்சனைப்படுத்தலுக்கு உட்படுகிறார்கள்.

பொதுவாகப் பெண்கள் (கனடாவில்) கலியாணத்திற்கு பின்பாக அதிக கொடுமைகளை அனுபவிக்கிறார்களா?

பலவகையாக இதைப் பார்க்க வேணும்.. கிழக்கு மாகாணம், மலையகத்திலிருந்து வந்கவர்களில் இப்படியான பிரச்சனை என்று வந்தவர்கள் மிக மிகக் குறைவுஅதற்கான சமூகவியற் காரணங்களைப் பார்க்கவேண்டும். எங்களுடைய கிராமங்களில் இருந்து வந்த பொம்புளயள்தான் இங்கு அதிகம் இருக்கிறார்கள். நகர்ப்புறம் சார்ந்து- நகர்ப்புறம் சார்ந்து என்றால் கொழும்பில்- யாழ்ப்பாணப் பட்டினத்தில் வசித்தவர்களைத்தான் சொல்லலாம் - வந்தவர்களது அநுபவங்கள் சற்று வித்தியாசமானவை. பெண்கள், கிராமப்புறங்களில்- யாழ்ப்பாண, மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் படித்த பெண்கள் கூடுதலாக வந்திருக்கினம்- அநேகமான பெண்கள் அங்கு படித்தவாகள்; அல்லது வேலை செய்தவர்கள். அவர்களுக்கு இங்கு வந்தபின் பெரிய ஏமாற்றம்- அவர்களில் பலர் இங்கு வந்தபின் குழந்தைகளைப் பெற்று;க் கணவன்மாரின் விருப்பில வீட்டுக்குள் அடங்கியிடுவினம்.. அதைவிட அவர்கள் எதிர்பார்த்து வந்தது போல வேலையை அவர்களது கணவன்மார் செய்யவில்லை. அனேகமான கணவன்மார் ரெஸ்ரோரன்ற்களில் கிளீனிங்- புயள ளுவயவழைn போன்ற வேலைகள்தான் செய்கிறார்கள். அது  அவர்களுக்கு பெரிய ஏமாற்றம்- ஒரு பொம்புளை இங்கு கலியாணம் பேசி வந்தவா. அங்கு பல்கலைக்கழகத்தில் லெக்சரா இருந்தவா. ;ங்கு கலியாணம் பேசி வந்த பின்தான் தெரியும் தன் மாப்பிள்ளை செக்கியூரிட்டி எண்டு- இதால செக்கியூரிட்டியாக இருப்பவர் கலியாணம் செய்யக்கூடாது என்று இல்லை. அது பிழையான வேலை எண்டும் இல்லை. பிரச்சனை அவ ஏமாற்றப்பட்டுப் போனா எண்டதுதான். அவவுடைய எதிர்பார்ப்புக்கு ஒரு இடி விழுந்த மாதிரி. அவர் செக்கியூரிட்டிதான் என்று தெரிந்து வந்திருந்தால் விசயம் வேறு. ஆனால் எங்ட நாட்டிலை மத்தியதர வர்க்கத்தின்ரை எதிர்பார்ப்பைச் சுமந்து வந்த அந்தப் பெண்ணுக்கு தன்ரை மாப்பிளை  எஞ்ஞினியர் அல்ல என்றதும் தான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்றதும் பாரிய மனத்தாக்கத்;தைக் கொண்டுவரும்தானே! அதைத்தாங்கி வாழும் சூழலில் அவ இருக்கமாட்டா- கனடாவைப் பொறுத்தளவில் அகதிகளாக வந்த பெண்கள் குறைவு. ஆண்கள்தான் அகதிகளாக வந்தவர்கள். அவர்களை நோக்கி வந்த பெண்கள்தான் கூடுதலாக இருக்கிறார்கள். மாப்பிள்ளைமாரைத் தேடிவந்தவர்கள், அதைவிட கணவன்மார்களிடம் ஸ்பொன்சர் மூலம் வந்தடைந்த பெண்கள்- ஆகிய இருவகையினரின் எண்ணிக்கையும்தான்; இங்கு அதிகம்.. இவர்களிடம் - அதாவது கலியாணம் செய்ய என்று அங்கிருந்து வந்த குடும்பங்களில் தோன்றும் பிரச்சனைகள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கும்..
இன்றைக்கு நீங்கள் கனடாவை எடுத்துப் பார்த்தீங்கள் என்றால் இப்படி வந்த பெண்களை நாங்கள் ஒரு வகையினராகப் பிரிக்க வேண்டியிருக்கிறது. இங்கு வளர்ந்து கொண்டுவாற பிள்ளைகளை வேறு ஒரு வகையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதைவிட அங்கிருந்து இளம் பெண்களாக இங்கு வந்தவர்களை வேறு வகையாகப் பார்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் எல்லோருக்குமான பிரச்சனைகள் வௌ;வேறு காலகட்டம்- சூழல் போன்றவற்றால் தாக்கப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களாக இருக்கினம். அதாவது என்னுடைய மகன் படிச்ச காலத்தில்- அதாவது ஒரு 5 வருசத்துக்கு முந்தி. அவற்றை படிப்பு வட்டத்தில் உள்ள சில பொம்பிளைப் பிள்ளைகளுக்கு போன் எடுக்கேலாது. பெற்றோர் தமது பிள்ளையள் ஆம்பிளைப் பிள்ளைக்கு போன் எடுத்தால் தடுக்கினம். ஆனா இண்டைக்கு கொஞ்சம் கொஞ்சம் மாறிவிட்டதுஇங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு கூட கலியாணத்தடை விதிக்கப்பட்டு அவர்களின் காதலுக்கு தடை விதிக்கப்பட்டு- காதல் பிரிக்கப்பட்டு பெற்றோர்களின் வற்புறுத்தலுக்குள்ளால அவர்கள் வேறு ஒரு சூழலுக்குள் போகினம்.. சில பிள்ளைகள் அதனை நமது வழமை- மரபு என்று ஏற்று பழையபடி தாய் தகப்பனைப்போல் மாறுகினம்.. தமிழ் சினிமாவின் பாதிப்பு நமது பிள்ளைகள் கனபேரிடத்தில் இருக்கிறது தானே.


புலம் பெயர்ந்த சூழலை கவனத்திற்கெடுத்தால் மிக அதிகமான பெண்கள் தற்கொலைக்கு உள்ளானது கனடாதான்- எப்படி அதன் உக்கிரம் இங்கு இருக்கிறது- எத்தனைபேர் தற்கொலை செய்திருப்பார்கள்?
               
நாங்கள் இங்கு தற்கொலை நிறையவே இடம்பெறுகிறது என்று யோசித்து 95ம் ஆண்டு ஒரு வீடியோ ஒன்று எடுத்தோம். அதற்குப் பெயர் மன உளைச்சல். அரை மணிநேர வீடியோ- அதில் ஒரு பெண் எப்படி- என்ன விதமான மன உளைச்சலுக்கு உள்ளாகிறாள்- அந்த மன உளைச்சலை எந்தெந்தக் காரணிகள் தீர்மானிக்கின்றன- அவைகள்தான் அவளை தற்கொலைக்கு தள்ளிவிடுகின்றன என்பதைப் பார்த்தோம்- தற்கொலைக்கு தள்ளிவிடும் சூழலுக்கு ஒரு பெண் வரும்போது நாங்கள் அப்படி ஒரு பெண்ணைச் சந்திச்சோமெண்டால் எவ்வாறு உதவி செய்யலாம் என்பதுதான் அந்த வீடியோ- அது ஒரு நல்ல வெற்றி; அதற்குப்பிறகு பெண்கள் நீண்டகாலமாகத் தற்கொலை செய்யவில்லை. பின்னர்  ஒரு பெண் மட்டும் அதுவும் கொலையா- தற்கொலையா என்பது கேள்விக்குறியாக இருந்து பிறகு அது கொலையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பெண்ணினுடைய கணவன் இன்னும் ஜெயிலில் தான் இருக்கிறார். நீண்டகாலமாக பெண்களுடைய தற்கொலைகள் நடக்காமல் இருந்தது.பிறகு திகிலூட்டும் கொலைகள் நடந்தன. அண்மையில் ஒருசில தற்கொலைகள்! ஆனால் ஒரு காலத்தில் நடந்து வந்த தற்கொலைகள் திடீரென்று ஒரு நிறுத்தம் வந்தது இந்தக் கல்விய+ட்டலினால். ஒரு அரை மணி நேர வீடியோதான். ஆனால் கலாபம் நிறுவனத்தினூடாக பல தடவைகள் இங்கே போட்டோம்.. அது நமது பெண்களிடத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள சூழல் எப்படி, என்னென்ன பிரச்சனைகள் பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன என்று நினைக்கிறீர்கள்?

தங்களைப்பற்றிய நல்ல அபிப்பிராயமோ தங்களால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோ இந்தப் பெண்களிடம் இல்லை. அது ஏற்படுத்தப்படவில்லை. தன்னம்பிக்கை ஊட்டப்படாததால் அவர்கள் தங்களால் ஒன்றும் இயலாது. தாங்கள் ஒன்றுக்கும் உதவாத ஆட்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தற்கொலை செய்த பெண்களின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அதில் ஒரு பெண் தான் விரும்பியவரை விட்டு வேறு ஒருவரைப்; பெற்றோரும் சகோதரர்களும் கலியாணம் செய்யும்படி தூண்டியதால் தற்கொலை செய்து கொண்டவர்;;. அவர் வேறுயாரிடமும் அதுபற்றிச் சொல்லவில்லை. ஆனால் டுஐN வகுப்பில் அது பற்றிக் கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறா. அவ சும்மா எழுதின கட்டுரை அவவின் வரலாறாக இருந்திருக்கிறது. அது பற்றி ஆசிரியர்கள் கவனப்படவில்லை- அவர்கள் கவுன்சிலர்கள் இல்லை என- அவ இறந்த பின்தான் எல்லோரும் யோசித்தார்கள். ஐயோ பிள்ளை இப்படி எழுதினதே கட்டுரை என. இப்படி இந்தப் பெண்களுக்கு எங்கே உதவிக்குப் போறது என்ன செய்யுறது என்று தெரிவதில்லை
இன்னொன்று 20வயதுக்கு மேல் உள்ள பிள்ளை கலியாணம் செய்ய என வந்தவர் அவவைப் பாவிச்சு அகதி அந்தஸ்த்து இழந்த தன் காதலியைக் கைப்பிடிக்கப் பயன்படுத்தப் பட்டதாலும் தனது வருங்காலக்கணவர் என மனதால் அவரைக் காதலித்ததால் மனமுடைந்து மாடியால் பாய்ந்தவ ஒருவர் எனக் கூறப்பட்டது. இப்ப பிரச்சனைக்கு உள்ளான பெண்களைக் கவனித்தால் பலரும் இவரை வேண்டாம்- இந்தக் கலியாணம் வேண்டாம் என்று சொன்னோம் என்பவர்கள் தான் கூடுதலாக இருக்கினம்- இதைவிட சமூக நிர்ப்பந்தமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது, அதாவது காதலித்தவர்கள்- கண்டு இரண்டு நாள் கதைச்சால் போதும் கதைத்தவர்களைத்தான் கலியாணம் செய்ய வேண்டும்- என்ற நிர்ப்பந்தம்- அவர்கள் எங்கும் எதிலும் சேர்ந்து போகாதவர்களாக இருந்தாலும் அவர்களைச் சேர்த்து வைக்கிறது சமூகம்.. காதல் என்பதற்குப் புது வரைவிலக்கணம் எஙகடை சமூகத்திலை. கண்டதும் காதல். கண்டறியாததும் காதல்.

கனடாவில் தற்கொலை செய்த பெண்களைப்பற்றிச் சொன்னீர்கள். அடிப்படையில் குறிப்பிடும்படி என்ன சிக்கல்கள் இருக்கின்றன?
                
புருசன்மாரின் வன்கொடுமை நிறையவே இவர்களுக்கு இருக்கிறது. அது தாண்டி மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பார்த்தீங்கள் என்றால் புருசன்காரன் சொல்கிறான்-ஒருநாளும் தான் பெண்சாதிக்கு அடித்ததில்லை என்று- அங்கு பிரச்சனை என்னவென்றால் உளவியல் ரீதியில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர்  புரிந்துகொள்ளவில்லை. இருவரையும் வற்புறுத்திக் கட்டி வைத்திருக்கிறார்கள். விரும்பிச் செய்த கலியாணம் இல்லை. ஒரு பிள்ளை எல்லாம் சுதந்திரப்பறவையில் இருந்த பிள்ளை. அது கொஞ்சக் காலம் என்றாலும் சுதந்திரமாக தான் விரும்பியதையும் செய்து திரிந்த பிள்ளை- அப்படியான ஒரு சின்னப் பிள்ளையை திடீரென கொண்டுவந்து கலியாணம் செய்து வைத்தால் அதுக்கும் பிள்ளைகள் பிறந்தவுடன் பிள்ளை பெறும் இயந்திரம் மாதிரி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து பிள்ளைகளைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்  வெளியில் வேலைக்குப் போய் சுத்தித்திரிந்த பிள்ளைக்கு வீட்டில் அடைச்சு வைத்தது இன்னொரு பாரிய கொடுமை. அதால அந்தப் பிள்ளை தற்கொலை செய்திருக்கு- அந்தப் பிள்ளை தற்கொலை செய்ததும் எல்லோருடைய கேள்வியும்- அவளுக்கு என்ன குறை? ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? என்பது எல்லோருடைய குறையும்- ஆனா அவவுக்கு தான் வேலை செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருந்திருக்கிறது. அவவுக்கு வேலை செய்ய முடியவில்லை. பிள்ளைகள் அவவுக்கு பெரிய ஒரு சுமை- அவவுக்கு வயது குறைவு- பிள்ளை ஒன்றும் வருத்தக்காரப் பிள்ளையாய்ப் போச்சுது. அவரின் ஆறுதல் தனது அம்மா வரும் வரைக்கும் பொறு,பொறு என்பதுதான்- ஆனால் அவவுக்கு கலியாணம் கட்டின நாள் முதல் மன உளைச்சல் இருந்திருக்கவேணும்- யாரிடமும் வெளியில் சொல்ல முடிவதில்லை. தனது நிலை பற்றி அறிய முடிவதில்லை. அவர்களுக்கு வெளியில் போய் யாரிடமாவது கதைக்கும் சூழல் இருந்திருந்தால் இப்படியான முடிவுகள் பெரும்பாலும் எடுக்கமாட்டுதுகள்- கனடாவிலை மொழியும் ஒரு தடைதான். நமது குடும்பச் சூழல்தான் மிகவும் மோசமான தாக்கத்தை கொண்டு வருகிறது. புருசன் என்பவன் ஏதோ தெய்வம் என்றும் அந்தப் புருசனைச் சார்ந்து வாழ வேண்டியது நமது கடமை என்றும் கட்டப்பட்ட இறுக்கமான கலாச்சார சூழலில் இந்தப் பெண்களுக்கு தம்மை எப்படி விடுவிக்க வேண்டும் என்று தெரிவதில்லை. அதற்கான அரச உதவி நிறுவனங்களது உதவி இவர்களைப் போயடைவதைப் பற்றி அக்கறை எடுப்பதில்லை. தட்டுங்கள் திறக்கப்கடும் கேளுங்கள் தரப்படும்தான். மனப்பாதிப்பைப் பற்றிய விளக்கம் தந்த சுசான் என்ற மனவைத்தியர் பாயும் புகையிரதத்தில் குழந்தையுடன் பாய்ந்து மாய்ந்தும் கூட மேல் நாட்டுச் சமூகம் கூட அக்கறை எடுப்பதாய் இல்லை. வேரோடு புடுங்கி எடுக்கப்பட்டுப் புதிய சூழலில் வேர்கள் இல்லாமல் பனிச்சூழலில் கட்டிடக் காட்டுக்குள்ளே நாலு சுவர்களுக்குள்ளேயும் நச்சுக் காற்று நிறைந்க பாதாள அறைகளிலும் தனித்து விடப்படும்போது நமது பெண்களது மனம் விரக்தியடையாமல் என்ன செய்யும்?

தமது பிள்ளைகள் அவர்களின் புருசன்மாரினால் எவ்வளவு கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாலும் பெற்றோர், உடன்பிறப்புக்கள். சமூகம் சேர்ந்து வாழும்படியே வற்புறுத்திக் கொண்டிருக்கினம். வா- அல்லது பிரிந்து போ- கொஞ்சக் காலத்திற்காவது பிரிந்திரு என்று சொல்கிற பெற்றோர் மிக மிகக் குறைவு. இப்படியான சூழலில் குடும்பத்தாலும், சமூகத்தாலும், அரசாலும்; கைவிடப்படும் பெண் பிள்ளைகள் - ஆதரவற்ற பெண்கள் உளப்பாதிப்புக் கூடி தற்கொலையை நாடுகின்றனர். அவர்களுக்கு தம்மை அழித்து விடுவதே ஆதரவற்ற நிலையின் விடுதலை என்று நினைக்கின்றனர். இப்ப அண்மையில் றெயினுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண்கூட, அவவுக்கு அவவின் குடும்பத்தால பாதிப்பு ஏற்பட்டதாக இல்லை. ஆனால் அவா, தனது புருசனை இழந்துவிட்டதும் தான் எல்லாவற்றையும் இழந்து விட்டதாக நினைத்து விட்டா. அந்தப் பெண் தன்னுடைய பிள்ளைகளை கார் டிக்கிக்குள்ள போட்டுட்டு தானும் படுத்துக் கொண்டு தன்னுடைய உயிரையும் எடுக்க முனைந்தா முதல். அவவுக்கு அப்போதே மனச்சோர்வு இருக்குது. அழுது கொண்டே இருக்கிறா. ஒரே வீட்டுக்குள்ளேயே இருக்கிறா. தன்ர புருசன்ர 50 படங்களை வீட்டின் கோல் முழுக்கவும் போட்டிருக்கிறா. இது அதாவது அவவின் மனச்சோர்விலதான் அவ அப்படிச் செய்கிறா என்று உணர்ந்த கொள்ளும் ஆற்றல் அவவின் உறவினர்களுக்கு இருக்கவில்லை. அதை உணர்ந்து கொள்ளக் கூடிய ஆற்றலை உண்மையில் நாங்கள் வளர்க்க வேண்டும்.

.பல குடும்பங்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்ளுதலில் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், அநேகமானவர்கள் பெண்களிலேயே அனைத்துப் பிழைகளையும் போடுகிறார்கள். என்ன பிரச்சனைக்கும் பெண்தான். பிள்ளை பிழை விட்டாலும் பொம்புளைதான். புருசன் பிழை விட்டாலும் பொம்புளைதான். புருசன் கசினோக்குப் போனாலும் பொம்புளைதான் பிரச்சனை. புருசன் குடிச்சாலும் பொம்புளைதான் பிரச்சனை. இந்த மனோநிலைதான் பெரிய பிரச்சனை. அப்ப, நீ சரியா இருந்தா அவன் ஏன் குடிக்கிறான். நீ சரியா இருந்தா திருத்தலாம். இப்படித் திருப்பித் திருப்பி திருப்பி வந்து அந்தப் பொம்புளைதான் பிரச்சனை. எண்டு பழி பிரச்சனை எங்கேயோ இருக்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டவவைத் தாக்கிறது சமூகம். இண்டைக்கு கனடாவில வந்து என்ன கதைக்கினம் எண்டா பெண்ணாதிக்கம் கூடிவிட்டது. கனடாவில ஆம்புளையளுக்கு பொம்புளையள் ஞாயம் கதைக்கினம். டிவேர்ஸ் எடுக்கினம். என்ற போக்கு பொதுப் புத்தி மட்டத்தில இருக்குது. அதைவிட பெண்களைப் பற்றி மோசமான கதைகளை உருவாக்குவது பெண்களாகத்தான் இருக்கினம்.. அவர்கள் தாங்கள் சுமந்துவந்த சமுதாயப் படிமானத்தை, அதாவது ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற படிவத்தை மனதில நல்ல வடிவாகத் திடமாக திட்டமாகப் பதித்து வைத்திருக்கிறார்கள். அப்ப அந்தப் படிவத்தில இருந்து விலகினா அது பிழை. நான் ஒரு ஆம்பிளையோட காரில் போனா அவனோட நான் தொடர்பு. பாலியல் தொடர்பு என்றது மாதிரியான பேச்சுக்களை முன்வைக்கத் தயங்காதவர்கள். இளம் பெண்கள், புருசனை விட்டுட்டு இருப்பவர்கள், புருசன் இல்லாது இருப்பவர்கள, புருசனை இழந்தவர்களதான் இப்படியான துன்புறுத்தலுக்கு உள்ளாபவர்கள். இது ஒரு மிகப் பெரிய கொடுமை..

இப்போது இங்கு பிரிந்திருக்கும் பெண்கள் எவ்வகையில் மீளவும் புருசன்மாரினாலோ குடும்ப உறவினர்களாலோ பிரச்சனைக்கு உள்ளாகினம். அவைக்கு எப்படி கனடிய அரசு உதவி வழங்குகின்றது?
                
எவ்வளவு பிரிஞ்சு இருந்தாலும் பல பெண்கள் மீளவும் கணவர்மாருடன் திரும்பிப் போறவர்களாகத்தான் இருக்கிறார்கள். திரும்பிப்போய் மீள கூடுதலான வன்முறைச் சூழலிற்குள் உள்ளானவர்கள் அதிகம்- எங்கள் பெண்கள் மட்டுமல்ல கனடியச் சமூகத்திற்குள் இருக்கும் பெண்களே அப்படித்தான்- உண்மையாக கொடுமையான வன்முறை ஏற்படுவது நமது பெண்களைவிட மேற்கு நாடுகளில் வாழுகின்ற பெண்களுக்கு கூட- அதை எங்கட ஆட்கள் உணர்ந்து கொள்வதில்லை. அவர்கள் உடுப்பை வித்தியாசமாகப் போட்டு வெளியில திரிஞ்ச உடன அவர்கள் சுதந்திரமானவர்கள் என்ற எண்ணம் நம்மவர்களிடம் உள்ளது. ஏனெண்டா றோட்டில தெருவில கொஞ்சுகினம்- என்றவுடனே அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்று நினைக்கினம்- இங்கு வன்முறைக்கு உட்பட்ட பெண்களுக்கு- ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு என்று இருக்கும்செல்ற்றர்வழிய போய்ப் பார்த்தீர்கள் என்றால் ஏராளமான வெள்ளைப் கறுப்புப் பெண்கள் இருப்பதைப் பார்ப்பீர்கள்- அதுக்குள்ள வந்து இப்போது அநேகமாகப் புது வரவாளர்களின் தொகை கூடிக் கொண்டு வருகிறது. இங்கே வைத்தியசாலைகளில் உளவியல் பிரிவுகளில் இருக்கும் தமிழ் பெண்களை விட செல்ற்றரில் இருக்கும் தமிழ்ப் பெண்கள் குறைவு- ஆனால் செல்ற்றரில் இருக்கும் மற்ற இனப் பெண்களில் புதுக்குடிவரவாளர் அதிகம்செலற்;றரில் இருப்பவர்கள் உளவியல் தாக்கத்துக்கு உட்படாதவர்கள் என்று இல்லை- எங்கள் பெண்களை அதிகம் உளவியல் நிறுவனங்களில்தான் காணக்கூடியதாக இருக்கிறது என்றால் இது எதைக் காட்டுகிறது? நாங்கள் அடிவாங்கி வாங்கி வாங்கி மனமே மரத்துப் போகிறது- வதைப்படுத்தும் வார்த்கைப் பரயோகங்களால மனம் பேதலிச்சுப் போகிறம்- அதுக்குள்ள நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒரு பெண்ணுக்கு பாரதூரமான உளவியல் பிரச்சனை வந்தால் அந்தப் பெண்ணைக் கைவிட்டு ஆண் வெளியேறுவது எமது சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. ஆனால் ஆணுக்கு அப்படி நடந்தால் கூடுதலான பெண்கள் கடைசி வரையும் வைத்துப் பார்க்கினம். நான் வேலை செய்யிற தமிழ் பெண்களிடையே தமிழ் குடும்பங்களில ஒரே ஒரு ஆண்தான் சுகவீனமாக ஆனால் குடும்பத்தோடு இருக்கிறார்- மற்றவர்கள் எல்லோரும் பெண்கள். பெண்களுக்கு உளவியல் பிரச்சனைகள் வந்தவுடன் விலகியவர்கள்தான பலர்;- தனித்து பெண்ணை விட்டுவிடுவது. ஏனென்றால் பாரிய உளவியல் பிரச்சனைகள் உள்ள பெண்களிடம் பாலியல் உணர்வுகள் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். இப்படியான பெண்கள் ஆண்களால் கைவிடப்படுகிறார்கள்அந்த நிலையில் ஆண்கள் இருக்கின்றனர். ஆனால் அவளிடம் கல்லானாலும் புரு~ன் என்பது மீண்டும் மீண்டும் பல சமூகப் பெறுமானங்களுடாக பல்வேறு மட்டங்களில் வற்புறுகத்தப்படுகின்றது. அதனால் அவள் கைவிடமுடியாதவள ஆகின்றாள.;. கணவனுடன் பேசாமல் இருக்கும் பெண்களும் தாலியைக் கைவிடமாட்டார்கள். கணவன் இரண்டாம் மனைவியோடை வாழந்;தாலும் தாலி முதல் மலைவியின் கழுத்திலையிருந்து இறங்கமாட்டாது. இது எதைக்காட்டுகிறது என்றால் சமூகம் பெண்மீது கணவன் என்ற அதிகார ஏணியால் அவளைத் தானே தன்னை இனங்காண முடியாதவாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதைத்தான். அவள் அத்தகைய நிலையில் தான் இருந்துகொண்டே தன்னை இழந்த நிலையில் தாலியுடன் வாழுவதே பாதிக்கப்பட்ட மனநிலைக்கு உதாரணமல்;லவா? தாலி அவளது சமூகப் பாதுகாப்புக்கருவி. சமூக அடையாளத்தை காக்கும் ஒன்றாக அவளுக்கு உள்ளது.

செல்ற்றரில் இருந்து எத்தனை பெண்கள் தற்கொலை செய்திருப்பார்கள்?
                
செல்ற்றரில்- அதாவது காப்பகங்களில் இருந்து யாரும் தற்கொலை செய்யவில்லை. செல்ற்றருக்குப் போன தமிழ்ப்பெண்கள் யாரும் தற்கொலை செய்யவில்லை. ஆனால் போன எல்லாரும் பின்னர் தனிய வாழ்கை நடத்துகிறார்கள் என்றும் இல்லை. அதுக்குள்ள ஆதரவுகள் நிறைய இருக்குது. அதுக்குள்ள போகும்போது முதலில் நிறையப் பெண்களுக்கு சரியான கஸ்டமாக இருக்கும்- செல்ட்டர்களுக்கு நான் போறனான். செல்ட்டர்கள்தான் என்னுடைய இப்பத்தைய வேலைகளின் ஆதாரம்.. அதில இருக்கிற பிள்ளைகள் ஆரம்பத்தில சரியான மன உளைச்சல்களுக்கு உள்ளாகி தங்களைப் போட்டு சித்திரவதைப்படுத்துவினம். அவர்களுக்கு தாங்கள் கொலை செய்யப்படுவினம் என்ற பயம் கூட எப்பவும் இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் வெளியில இருந்து வாற பிரச்சனைகள் பெரிய பயங்கரமான பிரச்சனைகள்- அது மடடுமல்ல ஒரு செல்ட்டரில் இருந்து ஒரு பிள்ளை வெளியில் போக அண்ணன்காரன் கையில எட்டிப் பிடிச்சிட்டான் தேடித் தேடி செல்ட்டரைக் கண்டுபிடிச்சு வந்து அவவை எட்டிப் பிடிச்சுக்கொண்டு, எங்களை அவமானப்படுத்துகிறாய்- எங்கட குடும்ப மானம் போகுது- நீ உன்ர புருசனோட போகோணும் என்று சொல்லி வற்புறுத்துவினம். இந்தப் பிள்ளைகளை குடும்பம்- பாதுகாக்கேல்ல- ஆதரவு தரேல்லை- அந்தப் பிள்ளைக்கு எல்லாம் அவவின் குடும்பத்தின் ஆதரவு துப்பரவாக இல்லை. எல்லோரும் கைவிட்டிட்டினம். ஏனென்றால் நீ புருசனை விட்டிட்டுப் போட்டாய்- அவவுக்கு புருசனோட வாழப் பிடிக்கவில்லைஆனா குடும்பம் புருசனோட போ எண்டு வற்புறுத்துகிறது- அப்ப இந்த குடும்ப உறவு- இரத்த உறவு என்று சொல்வதெல்லாம் என்னவாகின்றது இப்போது? எப்படியாவது பிள்ளையைத் தேடி அலைந்து கண்டுபிடித்து புருசனோட சேர்த்துவிடத்தான் இந்தக் குடும்பம் முன்னிற்கிறது. புருசனின் கொடுமை பற்றியோ உளவியல் ரீதியில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியோ ஒரு அக்கறையும் படுவதில்லை இது. கட்டிய புரு~னிடமே பாலியல் கொடுமைகளைச் சகிக்க முடியாத சில பெண்கள் உள்ளனர். இதை எங்கட சமூகம் நம்புமா? மேலை நாட்டு வீடியோக்களுக்கான பாலியல் ஈடுபாடுகள் நிஜவாழ்க்கை நிகழ்வுகளாகக் கருதித் தங்கள் மனைவியரை வற்புறுத்தும்போது அதுவும் பாதிப்பைப் பெண்களிடம் ஏற்படுத்துகின்றது.


சில பெண்கள் பிள்ளைகளுடன் செல்ட்டரில் வாழ்கிறார்கள்தானே. அவர்களுக்கான உதவி பராமரிப்பு செல்ட்டரில் எப்படி இருக்கிறது?
               
  செல்ரர் என்பது ஒரு னிரந்கர வதிவிடம் அல்ல. தற்காலிக வதிவிடம்தான். கூடுதலான பெண்கள் பிள்ளைகளுடன்தான் இருக்கிறார்கள். செல்ட்டரில் வாழ்கை கஸ்டமானது. குறிப்பாக எங்களது குடும்பங்களுக்கு இது மிகவும் கஸ்டம்வாழ்iகைமுறை, மொழி, உணவு, இடவசதி, பாடசாலை வசதி, பணவசதி கஸ்டம்தான். ஆனால் செல்ட்டர் தற்காலிகமானதுதான்- ஆனாலும் நாய் வாயிலிருந்தும், புலிவாயிலிருந்தும், நரிகள், ஓநாய்கள், வல்லூறுகளிலிருந்தும் பாம்புகளின் நஞசிலிருந்தும் வெளியேறியதாகப் பலவேறு மிருகங்களாகத் தங்கள் கணவர்மாரின் கொடுமைகளை வர்ணிக்கும் பெண்கள் செல்ரரில் கஸ்டங்கள் இருந்தாலும் தாங்கள் பட்ட மனச்சித்திரவதையை விட அது பரவாயில்லை என்கிறார்கள். என்ன பிரச்சனைகள் என்றால் எல்லா செல்ட்டர்களும் வசதியானது என்று இல்லை. அரசாங்கத்தின் நேரடிப் பணம் போகும் செல்ட்டர் என்று இருக்கிறது- கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுபடும். அவர்களுக்கு. அவர்கள் கொஞ்சம் வசதியான அறைகள் வைச்சிருக்கினம்- ஆனா வேற செல்ட்டர்கள் இருக்குது. சரியான நெருக்கம். ஒரு அறைக்குள்ளேயே தாய் பிள்ளைகள் எல்லாம் படுக்கோணும். மேலேயும் கீழேயும் படுக்கிற கட்டில் இருக்கும். சில இயங்களில அதுக்குள்ள குசினி எல்லாம் பொதுவாக இருக்கும்.. தாங்களே சமைக்கலாம். சில இடங்களிலை ஒரு அறையிலையே இரண்டு முடும்பங்களும் இருக்கும். சல இடங்களிலை சாப்பாடு எவ்வாம் வழங்கப்படும். முஸ்லீம் பெண்களுக்குலால் முறைப்படியான உணவுப் பிரச்சனைகள்- மாமிசச் சாப்பாடு, மரக்கறிச் சாப்பாட்டுப் பிரச்சனைகள் எல்லாம் இருக்கு. இப்போ கொஞ்சம் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. எமது நாடு மாதிரி இங்கு எல்லாம் அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பு இல்லை. ஒவ்வொன்றும் தமது சபைக்குள்ளால் இயங்கும். அரசாங்க கண்காணிப்பில் இருக்கும் செல்ட்டரில் வேலையாட்கள் கூடவாக இருக்கும். இப்படி செல்ட்டர் சிக்கல்கள் இருக்க செல்ட்டர் வேலையாட்களால் பாதிக்கப்பட்ட பாரபட்சம் காட்டப்பட்ட பெண்களகூட இருக்கிறர்கள். நான் போற ஒரு செல்ட்டர் திறமான செல்ட்டர்- ஏனென்றால் அதன் தலைவர் வந்து ஒரு கறுப்பினத்தவர். அங்கு பணிகள் நடக்கும் விதம் வித்தியாசம். வேறு ஒரு செல்டர் இருக்கிறது. அங்கே நானும் வேலை செய்தனான். ஒன்றரை மாதம் வேலை செய்தனான். என்னையே கலைச்சாச்சு. நான் பெண்களுக்கு கூட ஆதரவு செய்யுறன். தங்களுக்கு எதிராக நடக்கிறன் என்று. பொதுவாக செல்டரில் துவேசம் இருக்கிறது. அதைவிடப் பிரச்சனை பிள்ளைகள்தான். நிறையப் பிள்ளைகள் சிறிய இடத்தில் இருக்கும் போது பாரிய சிக்கல்கள் வரும். குடும்பத்தின் வன்முறைச் சூழலுக்குள் ஆட்பட்டு பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அங்கு வருவார்கள். அவர்களுடன் வேறு பிள்ளைகள் கலக்கும் போது. பெருத்த சிக்கல்கள் வரும். இந்த செல்டர் வாழ்வு தற்காலிகம் என்றபடியால் அதன் பிறகு அவர்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டு தனித்துப் போகும் போது மாறுவார்கள். ஆனால் புருசன்மாரால் அடித்துத் துன்புறுத்தலுக்குள்ளானவர்கள் என்றால் தான் குறைந்த கட்டண வீடு கிடைக்கும். மெட்ரோ கவுஸ் என்ற வீடு. அது உடனடியாகப் பிரச்சனை வந்து அவர்கள் உடனடியாக செல்டருக்குப் போகவேண்டும். போக முதல் அவர்களுக்கு அடி விழுந்திருக்க வேண்டும். பெரிய அநியாயம் என்னவென்றால். உணர்வு ரீதியில் உளவியல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளானவர்களுக்கு வீடு கொடுப்பதில்லை. உண்மையாய் அடிச்சுக் காயம் இருக்கோணும். பொலிஸ் ரிப்போட் இருக்கோணும். அப்படியானவர்களுக்குத் தான் தனி வீடு கொடுப்பார்கள். உளவியல் ரீதியில் துன்புறுத்தப்படும் பெண்கள் ஏராளம். உதாரணத்துக்கு ஒரு பெண் இருக்கிறா, அவ உளவியல் ரீதியில் பலத்த துன்புறுத்தலுக்குட்பட்டா. உடலியல் ரீதியிலும் துன்புறுத்தப்பட்டா. ஆனால் அவவுக்கு செல்டருக்குப் போகத் துணிவு இல்லை. பலம் இல்லை. எவ்வளவு உதவிகள் கிடைத்தும் முடியவில்லை. சமூகக் கட்டுப் பாடுகளை உடைத்துக் கொண்டு, உறவினர்களை வெறுத்துக் கொண்டு  போறதுக்கு அவ முடியாமல் இருந்தா. கடைசியில் அவவின் பிள்ளைகள் பாடசாலையில் பாடங்களை ஒழுங்காகச் செய்யவில்;லை என்று பாடசாலையில் பிள்ளைகள் ஒடுங்கிப் போயிருப்பது கண்டு, பிள்ளைகளின் நடத்தைகள் நடைமுறைகள் எல்லாம் பலவீனமாக இருப்பது கண்டு ஆசிரியர்கள் அந்தப் பிள்ளைகளிடம் கேள்வி கேட்டுக் கேட்டு அறிந்து கொண்ட பின் குழந்தை நலச்சேவை (hடைனசநn யனை ளழஉநைவல) க்கு அறிவிச்சுத் தான் தெரிய வந்தது அந்தப் பிள்ளைகளுக்கும் தாய்க்கும் இவ்வளவு பிரச்சனைகள் என்று. உனக்குப் பிள்ளைகள் வேணும் என்றால் புருசனைவிட்டுட்டு வர வேணும் என்று. அவர் திருந்தாமல் அவருடன் இருக்கேலாது- ஆனா நீ புருசனோடதான் இருப்பதென்றால் இரு, நாங்கள் பிள்ளைகளைத் தரமாட்டம் என்று சொன்னதால அவ பிள்ளைகள்தான் தேவை என்று புருசனை விட்டு வந்துவிட்டா. அப்படி எல்லோருக்கும் வீடு கிடைக்காது. மிக அண்மையிலிருந்து உணர்வுரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளானோருக்கும் வீடு கொடுக்கிறார்கள். ஆனால் அதை நிரூபிக்கிறது கொஞசம் ~;டம். அண்மையில் நாலைந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் கையை வெட்டினா. அவா ஒரு கறுப்பினப் பெண். அவவுக்கு நீண்டகாலமாக மனவுளைச்சல் இருந்தது. இவர் பள்ளிக்கூடத்துக்குத் தன் பிள்ளைகளை மாதக்கணக்கில் அனுப்பவில்லை என்று பள்ளிக்கூடம் தான் hடைனசநn யனை ளுழஉநைவல க்கு அறிவிச்சு அது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டது. அவர்கள் என்ன செய்தார்கள்? பிள்ளைகளை எடுத்துக் கொண்டு போட்டார்கள்—. ஆனால் இந்தத் தாய் மனவுளைச்சலில் இருக்கிறா என்று அவவுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை. அவவின் மனவுளைச்சல் பாராதூரமான பிரச்சனை. அது பற்றிய கவனம் இல்லாது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு போவது பெரிய கொடுமை. அவவுக்குப் பிள்ளைகள் தான் பொக்கிசம்.. தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பிள்ளைகள் திடீரெனப் பறி போனவுடன், இது பக்கத்து வீட்டுக்காறி சொல்லித்தான் நடந்திருக்கிறது என்று நினைத்து ஓடிப்போய் அவவின் கையை  வெட்டிவிட்டா. 2மாதத்துக்கு முன் நடந்தது இது.
சரி. தனியாக வீடு கொடுத்து வாழும் பெண்களுக்கு தமிழ்ச் சூழலில் வெளியில் இருந்து எவ்வகைப் பிரச்சனைகள் வருகிறது?
                பயங்கரமான பிரச்சனகள் இருக்கின்றன. பலருக்குத் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருக்கிறது.இந்தப் பெண்கள் சரியான மனோவைராக்கியத்தை வளர்க்கிறேல்ல- அப்ப அவையள் என்ன செய்வினம்- தனித்து வீடு எடுத்தவுடன் வீட்டுக்குள்ள உள்ளிட்டு மாப்பிள்ளைமார் சிலர் இருந்திடுவினம். புருசன்மாருக்கும் சுகமான வழி. அப்படிப் போய் இருப்பவை ஏராளம். சிலர் கௌரவப் பிரச்சனையில் போகமாட்டினம். இதில பெண்கள் திடமாக நிற்காட்டி அவர்களுக்குப் பிரச்சனைதான். திடமாக நிற்காமல் என்றால் இவங்கட வெருட்டல்கள் அவமதிப்புக்களை பொலிசிற்கு அறிவிக்காமல் விட்டால் அது கூடிக்கொண்டே போகும். பொலிசுக்கு அறிவித்தால் என்ன நடக்கும் என்றால் அதிகம் சிக்கலானவர்கள் என்றால் அவரை 500யாருக்குள் போகக் கூடாது என்பார்கள். அதிலும் கூடினால் ஜெயிலிற்குள் போடுவார்கள். நிறையப்பேரை உள்ளுக்குள் போட்டும் இருக்கிறார்கள். ஆனால் தனியாக வாழ்ந்த பெண்களைப் பிரச்சனைப்படுத்தவும் கொலை செய்யவும் செய்கிறார்கள்மொன்றியோலில் ஒரு தமிழ்ப் பெண், ஸ்காபரோவில், யோர்க்கில் இப்படி கொலை நடந்திருக்கு. வெள்ளை இனத்தவரிடையே இப்படியானவை கூட நடந்தகற்கான ஆதாரம் உண்டு. n~ல்ரரில் இருந்திட்டு வீடு பார்க்க- பொருட்கள் எடுக்க எனப் போனவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். பொலிஸ்காரன் பிரிந்த தன் மனைவியைக் கொன்றது எனக் கதை நீழும்.

இந்தச் செல்ட்டர்கள் மற்றும் பெண்களுக்கான அமைப்புக்களில் எத்தனை தமிழ் அமைப்புக்கள் பங்காற்றுகின்றன? இவர்கள் எவ்வகையில் பெண்களின் சிக்கலுக்குள் வேலை செய்கிறார்கள்?
               
  செல்ற்றருக்குள் தமிழ் தெரிந்தோர் மிக மிகக் குறைவு. வேலை செய்யும் தமிழரும்; மிகக் குறைவு. அதைவிட வெளியில் தெற்காசியப் பெண்கள் நிறுவனம் என்று ஒன்று இருக்கிறது. அதில் தமிழ் மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். குடும்ப சேலைகள் சங்கம். தமிழீழச்சங்கம், வசந்தம்செனற் யோசெப் பெண்கள் எதவி நிறுவனம். சேபோர்ண் n‘ல்த் சென்ரர் போன்ற வற்றழல் அல தொடர்பாக வேலை செய்ய தமிழ் ஓழியர்கள் உள்ளனர். ஆனால் வீடுகளில் சென்று உதவுவாரில்லை. நான் வந்து உளவியல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன். கூடுதலான பெண்கள் உளவியலில் பாதிக்கப்படுகிறார்கள்- என்னுடைய வேலைத்தளத்தில் ஒரேயொரு தமிழ் பேசும் ஆண்தான் இருக்கிறார். நாங்க வீடுகளிலும் சென்று உதவுவோம்.. ஆனால் நான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனிப்பட்ட முறையில் சந்தித்து உதவிவருகிறேன்.

எத்தனை பாதிக்கப்பட்ட பெண்கள் வரையில் உங்கள் தளத்தில் இருப்பார்கள்?
                
நிறுவனம் சார்ந்த தடயங்களை நான் இங்கு கூறமுடியாது. ஆனால் எத்தனையோ பெண்கள் இருக்கும் இடத்தில் ஒரேயொரு ஆண் மட்டும்தான் இருக்கிறார்- நான் உளவியலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில்தான் வேலை செய்கிறேன்.அவையளுக்கு 18 க்கு உட்பட்ட பிள்ளைகள் இருக்க வேணும். அவர்கள் வீடற்றவர்களாக இருக்க வேண்டும். அப்படியானவர்களைத்தான் நாங்கள் இதில் எடுத்து வேலை செய்கிறோம்- இது வேலை சம்பந்தமான தளம்- இதில் ஒரு ஆண் மட்டும்தான் இருக்கிறார். இது குடும்பம் என்ற சூழலில் அல்லாமல் தனிப்பட்டவர்கள் என்று பார்த்தால் அதில் நிறைய ஆண்கள் உளவியலில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் எவ்வகையான பாதிப்புக்குள்ளானவர்கள்?
                
இவர்கள் அதிகமான யுத்தம் சம்பந்தமான பாதிப்புக்குள்ளனவர்கள்- டிப்பிரசன்தான் - மன உளைச்சல் கூட- இதில் பாரதூரமான மனச்சோர்வுக்கு உள்ளானவர்கள்தான் அதிகம். சாதாரண மனச்சோர்வுள்ளவர்களை நாம் எடுப்பதில்லை. யுத்தத்தில் நேரடிப் பாதிப்புக்குள்ளானவர்கள் இவர்கில் பலர்;. இது எனது வேலை சம்பந்தமானது. வெளியில் நான் நிறையப் பேரைப் பார்க்கிறேன். நிறையப் பிரச்சனைகளுக்குள்ளான பெண்களை செல்ட்டர் வழிய போய்த் தனியாகச் சந்திக்கNpறன். வேண்டிய உதவி செய்யிறன். கிட்டடியில் எல்லாம் ஒரு பெண்ணுக்கு புருசன்ர அண்ணன்காரன் போய் வீட்டில அடிச்pருக்கிறான். ஆம்பிளை. நல்லா ஆங்கிலத்திலை கதைப்பார்;-. பொலிஸ்காரர் போனவுடன் அவவுக்கு சுகமில்லை. அதுதான் ஓடுறா என்று சொல்லி நன்றாகக் கதைத்து அனுப்பிவிட்டான். அந்தப் பெண்ணுக்கு போன் பண்ணக் கூடிய வழியி அப்ப இருக்கேல்லை வீட்டில. மாமி போணும் கையுமை;. பக்கத்துவீட்டுக்காரனிட்ட போய்க்கேட்க அவனும் விடேல்ல. பக்கத்துவீட்டுக்காரனிட்ட புரு~ன் இவவுக்கு விசர் என்று சொல்லித் தடுத்திட்டான். அவவுக்கு மென்டல் பிரச்சனை அதுதான் வந்திருக்கிறா என்று. அடுத்த வீட்டுக்காரனிட்ட போய்த்தான் போன் பண்ணியிருக்கிறா. இந்தப் பொலிசுக்காரர் வந்து இந்தப் பிள்ளைக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. அவ நல்ல திடமானவ- அவவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை- இப்படி பொலிசுக்கு முன்னாலையும் கோட்டிலையும் பொம்புளையளை விசர் எண்டு மென்டலாக்கிறவை நிறைய இருக்கினம்.. நிறையப்பேர் பெண்களின் துன்பத்தை மென்டலாகக் காட்டிறவர்கள். கோட்டில காட்டிறதுக்கு டொக்ரரிட்டக் கூட மென்டல் என்று லெட்டர் எடுக்க வெளிக்கிட்டிருக்கினம். ஒரு குடும்பத்தில பிள்ளையை எடுக்கிற பிரச்சனையில தாயை மென்டல் என்று டொக்ரரிட்ட லெட்டர் எடுக்க முயற்சி செய்திருக்கினம்- இப்படி பெண்களை மென்டலாக்கிறது கனடிய தமிழச்சமூகத்திலை அதிகம். இங்கு அதிகமாக இருக்கிறது.

செல்ட்டரில இருக்கிற பெண்களுக்கு அங்கிருந்து வேலைக்கு வேண்டிய வசதி செய்து கொடுக்கினமா?
                
போய் வரலாம். அவர்களாகவே வேலைதேடவேண்டும். அவர்களது பிரச்சனைகள் குறித்து அதாவது அதிக மனவுளைச்சலுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு அவர்களே கூட்டிக் கொண்டு போய் வருவினம். ஆனால்  அவையளுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்க வேணும்.. தாங்களாக இயங்க வேணும்- என்றதற்காக அவர்களாகவே வேலை தேடி போய் வரக்கூடிய சூழலை ஏற்படுத்துகிறார்கள். பிள்ளைகளை வெளியில் விட்டுட்டு போக னுயல உயசந எடுத்துக் கொடுக்கினம்.. செல்ரர்களில் குழந்தை பராமரிப்பு உதவியும் உண்டு. அநேகமாக செல்ட்டருக்குப் போன பெண்கள் முன்னேறுவதுதான் அதிகம்..

பொதுவாக குடும்பங்களில் ஏற்படும் நெருக்கடி- ஆண்களின் வன்முறை பொருளாதாரத்தில் முன்னேறிய, படித்த பெண்கள் மத்தியிலும் இதே சூழல் நிலவுகிறது தானே?
                
ஆம்- நிறையவே இருக்கிறது. அவர்க இங்குள்ள சூழல் நன்கு புரிந்தவர்களாக இருப்பார்கள். தமது மரியாதை பற்றி அதிகம் யோசிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் எங்களை அணுக மாட்டார்கள். தாங்களாகவே செல்ட்டர்களுக்கு போவார்கள். ஒரு டொக்ரர் கூட அவவின் குடும்பத்துக்குள் உளவியல் சார்ந்த பிரச்சனை வந்து பிரிந்திருக்கும் நிலை வந்தது. பின் என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் படித்த பெண்கள் வன்முறைக்கு ஆளாவதும் சகஜம். சமூகப் பெறுமானங்கள் அவர்களையும் விட்டு வைக்கவில்லை. ஆணாதிக்கம் எந்த மட்டத்தில் இல்லை?

பாடசாலைக்கு போகும் பெண்கள் சிறுமிகள்- அவர்களின் குடும்ப உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது நமக்குத் தெரியும். ஜரோப்பாவில் 2000 ஆண்டளவில் 3 தமிழ்ச் சிறுமிகள் பாலியல் உடலுறவுக்கு உட்பட்டுள்ளது அதுவும் அந்தப் பிள்ளைகளின் தந்தையாலே துன்புறுத்தப்பட்டதும் அது வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்- அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராகப் போனவரின் தகவல் இது- (இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.) அந்த மாதிரியான நிலை இங்கு எப்படியுள்ளது?
                பாடசாலைப் பெண்கள் மட்டுமில்லை- பொதுவாக எல்லாச சிறு, இளம்பெண்வர்ககத்தினரையும் இதில் அடக்கலாம். நிறையவே இருக்குது. இருக்குது என்று சொன்னவுடன் உடனே என்ன செய்வினம் என்றால் எங்கட ஆட்கள்- ஜயோ எங்கட சமூகத்தில அப்படி ஒன்றும் இல்லை என்றது போல் ஓடிவருவினம். அப்படி ஒரு மாயையைப் பரப்பி வந்திருக்கினம். எங்கட ஆம்பிளையள் றேப் பண்ணுவதில்லை- எங்கட ஆம்புளையளுக்கு யுனைள இல்லைஎங்கட சமூகத்தில யுனைள என்ற சாமானே இல்லை. அது எல்லாம் வேறு யாருக்கோ என்ற எண்ணம் வலுவாக இருக்கிறது. இங்கு ஒரு கேஸ் நடந்தது- ஒரு தமிழ்ப் பாட்டன் ஒரு சின்னப் பிள்ளையைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது- அதைப் பெரிதாக அட்டகாசம் செய்து என்ன இது உவங்களுக்கு விசரோ.. பாட்டன் ஒரு ஆசைக்கு பிள்ளையை நுள்ளிக் கிள்ளி இதெண்டால் இதை இப்படி எடுக்கிறாங்களே என்று சொல்லி மூடிக் கட்டிக்கொண்டு சண்டைக்கு போனார்கள்- அது தாண்டிஅந்தப் பிள்ளை போய்ச் சொல்லியிருக்கிறது- இது உண்மை.யாய் நிகழ்ந்திருக்கிறது என்று யோசிப்பதில்லை. அந்தக் குழந்தையையும் வெருட்டி பேசி சொல்லாமல் மறைக்கினம். கனக்க வெளியில போக வேண்டாம்- என்னுடைய மகனைப்பற்றிச் சொல்ல வேண்டும். அவனுக்கு சின்ன வயதில் இதேமாதிரி அனுபவங்கள் நடந்திருக்கிறது. ஆனால் என்னுடைய மகனே என்னுடன் வாய்விட்டுக் கதைக்கேல்ல- இப்ப மகன் வளர்ந்து அம்மாவிட்ட சொல்லலாம் என்ற சூழல் வந்திருக்கிறதுசொல்கிறார்- இப்படியான வன்முறைகள் மிக நெருங்கிய உறவினர்களால்தான் அதிகமாக நடக்கின்றது- இப்படியான சம்பவங்களை வெளியில் சொல்லக்கூடிய நிலையை நமது சூழல் வளர்க்கேல்ல. இப்ப எனக்குச் சின்ன வயதில் நடந்த,  4,5 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள்  என்னை மனரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது பற்றி எனக்குச் சொல்லக் கூடிய சூழலை என் பெற்றோர்கள் வளர்க்கேல்ல. அது சொல்லக் கூடாது என்று செய்பவர்களே சொல்லிப் போடுவினம். சொன்னால் சொக்கிலேட் தரமாட்டேன் என்றால் சொக்ளட் காணாத கிராமப்புறச்சிறு குழந்தை என்ன செய்யும்;. சொக்லேட் அந்த நேரத்தில் சரியான முக்கியம். இது பற்றிச் சொன்னால் சைக்கிளில் ஏற்றமாட்டேன், ஆசுப்பத்திரிக்குக் கூட்டிக்தொண்டு போய் ஊசி போடுவிப்பேன், பேயிட்டைக் குடுத்திடுவன் என்றெல்லாம் பயப்படுத்துவார்கள் என்றால்? ஒரு 5 வயதுப் பிள்ளைக்கு சைக்கிளில் ஏறிப் போவதுதானே முக்கியம்.. உணமையில் சிறுவயதில் நிகழ்ந்த நிகழ்வுகள் படம் போல மனதில். ஆனால், சில நிகழ்வுகள் துணிக்கையாகத்தான் நினைவில் வருகிறது. அப்போதெல்லாம் எங்களது பெற்றோர் எங்களுக்குச் சொல்லித்தரேல்ல. இது பிழை. அது பிழை என்று. இந்தப் பாலியல் அறிவூட்டல்கள் எங்களது பெற்றோர்களுக்கு இருக்கேல்ல. ஏன் எனக்குக் கூட இருக்கேல்ல. நான் என்ரை பிள்ளையளுக்குச் சொல்லிக்கொடுக்கவில்லையே. இப்ப நிலமை மாற்றம்... இப்போது ஒவ்வொரு பெற்றோரும் இந்த அறிவூட்டல்களில் பிள்ளைகளை இப்படியான சூழல் இருக்குது என்று தெரியப்படுத்த வேணும். இப்படி நடந்த பெற்றோர் சிலர் வந்து சரியாக் கவலைப்பட்டிச்சினம். ஒரு சில பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கினம். ஒரு பெண்ணின் பிள்ளையை அவவின் தம்பிக்காரனுடன் விட்டுட்டுப் போடுவினம். அந்தப் பிள்ளை அவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இது தாய்க்குத் தெரியாது. தாய் நம்பப்போறாவோ. இந்தப் பிள்ளை பாடசாலையில் சொல்லக்கூடிய சூழல் ஏற்ப்பட்டது. அதால சொல்லி hடைனசநn யுனை ளுழஉநைவல மூலம்  தாய்க்குச் சொல்லி தெளிவாக அவர்களுக்குத் தெரிஞ்சிட்டுது. இது நடந்திருக்கிறது என்று. அதன்பிறகு அவரை அந்த வீட்டில் வைத்திருக்கவும் ஏலாது. அதைவிட அவரை கைது செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இதனை விளங்கிக் கொள்ளக்கூடிய குடும்பம் என்றபடியால் அவருக்குரிய நடவடிக்கைகளை சுமுகமான முறையில் செய்தார்கள். ஆனால் எல்லாக் குடும்பங்களும் அப்படிச் செய்ய மாட்டினம். நம்பமாட்டினம். இன்னொரு குடும்பத்தில ஒரு பிள்ளையின் தகப்பன். தாய் இல்லாத பிள்ளை. அவர்தான் வளர்த்துக் கொண்டு வந்தார்- அவர் வந்து அந்தப் பிள்ளையுடன் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லி குற்றம் சாட்டி பிள்ளையிடம் இருந்து பிரித்திருக்கிறார்கள்- ஆனால் அவர் தான் அப்படிச் செய்யவில்லை என்று வாதாடி- னுழஉவழசஇடம் போய் கடிதம் எடுத்து ஆதாரம் தேட முயற்சி செய்தார். இப்ப அந்தப் பிள்ளை சொல்வதினை மறுத்து முறியடிக்கத்தானே பார்க்கிறார்கள்- அதைப் பொய்யாக்கத்தானே பார்க்கிறார்கள்- சிலர் கேட்கலாம் அவர் உண்மையாகச் செய்தார் என்று என்னென்று உங்களுக்கு தெரியும்? என்று- எனக்கு தெரியாது. ஆனால் அந்தக் குழந்தை சொல்வதனை நாம் ஏற்கத்தானே வேண்டும். அவர் 10 பேரிட்ட சொல்லிவிடுகிறார்- என்னை இப்படிச் செய்திட்டாங்கள் என்று- சமூகம் என்ன செய்யிறது- ஜயோ தாயில்லாம வளர்த்த அந்தாளப் பற்றி இப்படியா சொல்லுறது என்று- அதை நாங்களும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. இப்படி நடக்கலாம்- இப்படி நடக்கும்- இருக்கு- எங்களிட்ட இருக்கு என்பதை ஏற்றுக்கொள்ள நமது சமூகம் தயாரில்லை. ஆனால் இந்தக் கொடுமை நமது சமூகத்தில் நிறையவே இருக்கிறது. அண்மையில் பெற்ற தந்தை 12 வயதில் தனக்குப் பாலியல் கொடுமை செய்ததாக 25 வயதுப் பெண் கூறினார்.

குடும்பங்களில் நிலவும் சிக்கல்கள் பிரிவினைகள் எல்லாம் பாலியல் பிரச்சனைகள் சார்ந்தது. இங்குவாழும் குடும்பங்களில் பாலியல் உணர்வு நிவர்த்திகள் ஏற்படாததும் தான் பெரும்பாலான உளவியல் சிக்கல்களுக்கும் குடும்பச் சிக்கல்களுக்கும் காரணம் என்று ஓரு கருத்து நிலவுகிறது. இது ஆண் சார்ந்த கருத்தாகத்தான் இருக்கிறது- இந்த கருத்துப் பற்றி உங்கள் கணிப்பு என்ன?
                இதில வந்து ஆண்களுக்கு பாலியல் உணர்வு கூட- பெண்களுக்கு பாலியல் உணர்வு குறைவு என்ற கருத்துடன் கூட எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் பாலியல் உணர்வு குறைந்த ஆண்கள் எங்களிடத்தில் பெருகிக் கொண்டு வருகிறார்கள என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்று வந்து காரணம்- குடிவகை- குடிப்பழக்கத்தால் பாலியல் உணர்வு குறைந்துவிடும் நிலையில் பல குடும்பங்களில் பிரச்சனைகள் வருகிறது. பெண்களால் ஆண்களின் பாலியல் தேவையை நிவர்த்தி செய்யவில்லை என்பது சில குடும்பங்களில் இருக்கிறது- பெண் ஏற்கனவே மனவுளைச்சலுக்குட்பட்டு மனச்சோர்விற்கு ஆட்பட்டிருந்தால் அவவிற்கு பாலியல் உணர்வு இருக்காது. அதை விளங்கிக் கொள்வதில்லை. ஏன் பாலியல் உறவுக்கு வருகிறார் இல்லை என்பதன் விளக்கத்தை அறிய முற்படுவதில்லை- வேலையால வந்து கதிரைக்குள்ள இருந்தால்- நான் வேலைக்குப் போறன்- நீ வீட்டில தானே இருக்கிறாய் உனக்கென்ன- என்று சொல்வதுதான் இந்த ஆண்கள்- 2குழந்தைகளை வீட்டில வைத்து அதுவும் கைக்குழந்தைகளை நாள் முழுவதும் பராமரிக்கிறது பொம்புளை;- 12 மணித்தியாலம் வேலை செய்யிற ஆம்பிளையைவிடக் களைச்சுப் போவா- பிறகு வேலையால  வந்த அவரக் கவனிச்சு, அவருக்கு சாப்பாடு போட்டு வரவும் அவவுக்கு வேலை ஓயாது- அதுக்குப்பிறகு அவருக்கு வு. பார்க்கிறதுதான் வேலையாக இருக்கும். அநேக குடும்பங்களில் பெண்களுக்கு அதுக்குப்பிறகும் வேலை ஓயாது- கழவுவது- துடைப்பது- சாப்பாடு கட்டி வைப்பது- அப்படிச் செய்யேக்க அந்தப் பிள்ளை களைச்சுத்தானே போவா- அப்ப நீங்க நினைச்சுப் பாருங்கோ- இப்படியான பொம்புளையள் பாலியல் உணர்வோட இருப்பினம் என்று எதிர்பார்க்கலாமா? அதுவும் பக்டரிக்கு வேலைக்குப் போகும் பெண்களுக்கு இவ்வளவு வேலையும் வீட்டில் செய்ய அவர்களக்கு நித்திரை கொள்ள நேரமே இருக்காது- உடம்பு களைச்சுப் போகும். அப்ப இந்தப் பெண்கள் போய்ப் படுக்க ஆண்கள் பாலியல் உணர்வில் உழன்றால் அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். அவையோடை வேலையைப் பங்கிட வேண்டும்.. களைப்பில் மல்லாந்து கிடக்கிற பொம்புளையை செக்ஸிற்கு கூப்பிடுவது அநியாயம்.. அதைவிட இங்குள்ளது மாதிரிh வாய்வழிப் புணர்ச்சி- எல்லாம் நமது பெண்களுக்கு அந்நியமானது- அவர்களுடைய பாலியல் படிப்பில் அறியப்படாதது. இதை எதிர்பார்த்தும் ஏமாற்றம் ஆண்களுக்கு ஏற்படுகிறது. பாலியல் உறவு பரஸ்பர புரிந்துணர்வின் மூலம்தான் வெற்றியான உறவாகும். வயாகரா வெற்றியளிக்கவில்லையே.


இங்கு பெண்களிடம் வேறு எவ்வகையான சிக்கல்களைக் காண்கிறீர்கள்? இந்தச் சீர்;கெட்ட மனோநிலையில் தமிழ்க் குழந்தைகள் எவ்வகையான பாதிப்புக்குள்ளாகிறார்கள்?


கனடாவுக்கு வந்த Immigrants  எல்லோரும் செறிந்து வாழும் நிலைதான் இங்கு இருக்கிறது. எங்கள் சமூகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தீர்கள் என்றால் வேறு சமூகங்களுடனோ அல்லது மற்றக் கலாச்சாரங்களுடனோ கொண்டு வந்து இணைக்கும் போக்கு இல்லை. கலியாணவீடோ செத்தவீடோ என்னவென்றாலும் நம்மவர்கள் தனித்து இருப்பார்கள். கலை நிகழ்ச்சிகள் என்றால் பரதநாட்டியம் அளவுக்குத்தான் அறிவு இருக்கிறது. என்னென்றால் இன்னொரு நாட்டிற்கு வந்து அங்குள்ள சூழலை உள்வாங்குவது இல்லை. நம்மவர்களுக்கு ஒரு பயம். நாங்கள் நமது கலாச்சாரத்தை விட்டு வெளியில் போனால் பிள்ளைகளும் போய்விடுவார்கள எண்டு;. அந்தப் பயத்தின் காரணமாக அநேகர் அங்கால தொடர்பு கொள்ளுகினம் இல்லை. அதைவிட எங்களிட்ட ஒரு றேசிஸ்ட் கருத்தோட்டம்; ஆழமாகச் சமைஞ்சுபோய் இருக்கிறது. வெள்ளைக்காரனிட்ட இருக்கிறதைவிட எங்களிட்ட பல மடங்கு இருக்கிறது-கறுப்பு இனத்தவர்ளுடன் பிள்ளைகளைப் பழகக்கூட விடமாட்டார்கள். நட்பாக இருக்க விடமாட்டார்கள். ஒரு பிள்ளையை கறுப்புப் பிள்ளைதான் அவவின் குடும்பப் பிரச்சனையில் இருந்து காப்பாற்றினவர்கள். ஆனால் அந்தப் பிள்ளையின் சகோதரங்கள் அவவைச் சேர்த்துப் பழகுவதில்லை. ஏனென்றால் அவ கறுப்புப் பிள்ளையுடன் கூடி இருந்தவா என்றுஇந்த மனோநிலையை குழந்தைகளிடமும் விதைக்கிறார்கள்.


மற்றது இதழ்1
2003