Wednesday 16 December 2015

பக்கத்தின் பக்கம்.- அசிங்கம்


வீணான பக்கம்....

கற்சுறா

அண்மையில் எனது பெயரைப் பயன்படுத்தி மாமூலன் என்ற வின்சனாலும் நடராஜா முரளிதரனாலும் முன்வைக்கப்பட்ட கொச்சைப்படுத்தல்கள் முகநூலில் கடந்த இரண்டுநாட்களாக எழுதப்பட்டிருக்கிறது. 




அந்தக்காலத்தில் இதைத் தேனீயில் எழுதியது யார்? கனடாவில் இருந்து வந்த அந்த மின்னஞ்சலைத் தகவல் அறியும் சட்டத்தில் தரமாட்டேன் என்கிறது தேனீ!

இதுதான் அது.

( விபரம் தேவையானவர்கள் - இடப்பட்ட பின்னூட்டம் வாசிக்கவேண்டியவர்கள் மாமூலன் வாடி என்ற அவனது பக்கத்தில் போய்ப்பார்க்கவும்)


ஆரம்பத்தில் பெரியமீன் கனடாக் கடல்மீன் என்று ஜாடைகாட்டி என்னை அடையாளப்படுத்தினாலும் அவை இறுதிவரை எங்கு செல்கின்றது என்றே நான் வேடிக்கைப் பார்த்தேன்.

இது வெறும் ஊகங்களால் கொண்ட ஒருவகை ஐயப்பாடு என்று அதனை விட்டுவிடமுடியவில்லை. இல்லை எனது “அல்லது இயேசுவில் அறையப்பட்ட சிலுவை” என்ற நூல் வந்ததின் வெளிப்பாடு என்றும் விட்டுவிடமுடியவில்லை.

எனது நூலையும் சேனனது லண்டன்காரரையும் காலம்  செல்வம் எப்படி செய்யமுடிந்தது என்பது இவர்களுக்கு ஒருபக்கக் கேள்வியாக இருந்தாலும் இரண்டு பக்கத்தால் இவர்கள் தனித்தனியே ஓட்டிய வண்டியின் பாதை அண்மையில் மூடுப்பட்டுவிட்டது என்பது பெரிய மன உழைச்சலுக்கு அவர்களை உள்ளாக்கிவிட்டிருக்கிறது என்பதனையே என்னால் தெளிவாக உணரமுடிகிறது.( பாதை மூடப்பட்ட காரணம் பின்னர் விரிவாக எழுதுவேன்)

தற்போதைய இந்தப் பதிவிற்கு முன்னரான இவர்கள் இருவரது பதிவுகளையும் நோக்குபவர்களுக்கு  அவர்களின் ஆழ்மன உளைச்சல்களையும் அந்த உளைச்சல்களால் இவர்கள் அவதிப்பட்டுத் திரிவதையும் இலகுவில் ஒருவர் இனம்கண்டு கொள்ளமுடியும்.


ஏதாவது ஒரு விடையம் குறித்த தமது சந்தேகங்களை ஒருவர் எழுப்புவது நியாயமானதே. ஆனால் இவர்களோ அந்தச் சந்தேகங்களுக்கு பலருடைய பெயர்களை எந்தவித சிறிய ஆதாரங்கள் கூட இல்லாமல் பதிவுசெய்கிறார்கள். பின்னர் அப்படி இல்லை என்றானபோது அதற்குரிய வெட்கமோ கவலையோ படாமல் ஒரு சிறிய வருத்தம் ஒருசின்ன மன்னிப்புக் கோருதல் எதுவுமற்று தமது ஓட்டப்பந்தயம்(சவாரி) முடிந்தது என்று ஒரு அயோக்கியனின் குரலில் அறிவிக்கிறார்கள். 

ஒரு சமூக நோக்கம் கொண்டவனது செயல் ஒருபோதும் இப்படியிருக்க முடியாது.

போதியளவு ஆதாரம் இல்லாதபோது இலக்கியத்திலும் அரசியலிலும் இப்படி சிலேடைகள் பாவிப்பது வழமை என்று நடராஜா முரளிதரன் எழுதுவது எதனது வழித்தொடர்ச்சி?

பல்லாயிரம் மனிதர்களை தவறான  ஐயங்களுடனும் தவறான தடயங்களுடனும் கொலைசெய்த தொடர்ச்சியல்லாமல் வேறென்ன இது?
அந்தக்கொலைகளுக்கு ஒருசிறு வருத்தம் கூடப்படாத வக்கிரக் குணத்தின் தொடர்ச்சி இலக்கியம் என்ற பெயரில் இப்போது தொடருவது அயோக்கித்தனமானது.

புலிகள் கோலோச்சிய காலங்களிலும் ஏன் அவர்களின் கடைசிக் காலங்களிலும் கூட நடராஜா முரளிதரன் என்பவனை நான் என் அருகில் விட்டதும் இல்லை. கண்டுஒரு சிறு புன்னகை செய்தது கூட இல்லை. மனித வதையின் தொடர்ச்சி ஒன்று அவன் முகம்மீது எனக்கு இருந்தது. ஆனால் பாரீசிலிருந்து என்னுடன் மிக நெருக்கமாக இருந்த வின்சன்ட் என்ற மாமூலனின் தொடர்பினால் அவன் என்னிடம் நெருங்கினான். அது அவனுக்கு மிகச் சாதகமாக இருந்தது. சிவதாசனின் காரியாலயத்தின் வெளிவாசலில் வைத்து அவனை முதலில் சந்தித்தபோதே சொன்னேன் சபாலிங்கம் கொலை குறித்து உன்மீது இருக்கும் சந்தேகம் எனக்கு இலகுவில் போய்விடாது என்று. ஆனாலும் எனது சந்தேகத்திற்கு அப்பால் அதனை உறுதி செய்வது கனடியப் பொலிசாரது கடமை என்றே இப்போதும் கருதுகிறேன்.

வின்சன்ட என்ற மாமூலன் எனக்கருகில் இருந்து  என்னையே அவதூறு செய்த சம்பவங்கள் மிக அதிகமுண்டு.

நான் கனடா வந்து எனது எழுத்திற்காக நான் எதிர் கொண்ட மிரட்டல்கள் மிக அதிகமானது. எனது குடும்பத்தின் நிலை காரணமாக நான் அதனை இன்றுவரை பேசாதே இருந்தேன்.

அவை இப்போது எழுதப்படவேண்டும் என்றே நினைக்கின்றேன். இவ்வளவு கெதியாக எழுதப்படத் தேவையானது என்று உண்மையில் நான் நினைத்திருக்கவில்லை. 

காலம் பத்திரிகை குறித்தும் செல்வண்ணை குறித்தும் அல்லது இயல்விருது குறித்தும் நான் எழுதியவை அதிகம். அண்மையில் 105.9 F.M  ரமணன் என்னையும் காலம் செல்வத்தையும் உரையாடலுக்காக அழைத்தபோது கூட காலம் பத்திரிகையை நான் என்னளவில் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே சொன்னேன். அது கடந்த காலத்தைப் பதிவு செய்யவில்லை என்பதே எனது கருத்து. அந்தக் குற்றச்சாட்டை தனது இதழ்மீது நான் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்கு நன்கு தெரியும். 

நானும் அதீதாவும் சேர்ந்து வெளியிட்ட சிற்றிதழான “மற்றது” இதழ் 1 மற்றும் 2இலும் எல்லாவற்றையும் மிக வெளிப்படையாகவே பேசியிருப்போம். இந்த முரண்பாட்டுடனும் அதன் பின்னான ஒரு இலக்கிய மானசீக உறவுடனும் அவரை நான் எப்போதும் நெருங்கியே இருந்திருக்கிறேன்.

எமது இலக்கிய மோதலும் சரி அரசியல் மோதலும் சரி மிகவும் வெளிப்படையானது. நாம் புலிகளின் காலத்தில் அவர்களின் அரசியலை மொத்தமாக எதிர்த்து நின்று எழுதிய போது மட்டுமே கொஞ்சம் அவதானமாக இருந்தோம். ஆனால் எதையும் எழுதுவதற்குப் பயப்பட்டது கிடையாது. சபாலிங்கம் கொலைக்குப் பின் பாரீசில் அத்தனை இதழ்களும் நின்றபோது, வெளிப்படையாக புலிகளின் அராஜகத்தை எதிர்த்துத் எழுதத் தொடங்கியது எக்ஸில்.இதழ்

நாம் கொலைக்கருவிகள் சூழ்ந்திருக்க எழுதத் தொடங்கியவர்கள். பாரீசில் நாம் வெளியிட்ட எக்ஸில் பத்திரிகை எதிர் கொண்ட சவால்கள் மிகப் பெரிது.

இவை அத்தனையும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இத்தகை வெளிப்படையான செயற்பாடுகளை நோக்கி அசிங்கப்படுத்துகின்ற அயோக்கியத்தனத்தின் பக்கங்களை இனிவருங்காலங்களில் என்னால் வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளமுடியாது.

அனைத்தையும் எழுதத் தொடங்குகிறேன். இது உண்மையில் ஒரு அசிங்கத்தனமான பக்கம் தான் என்ன செய்வது? நண்பர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.  இவற்றைத் தலையில் கொண்டு திரிந்தபடி மறுபக்கம் புனைவு எழுதமுடிவதில்லை.

தயவு செய்து தேவையானவர்கள் மட்டும் வாசியுங்கள் மற்றவர்கள் தூக்கி எறிந்து விட்டு என்னைப் பொறுத்து மன்னியுங்கள்.

இப்போது டிசம்பர் மாதம் எனது வேலை கொஞ்சம் கடுமையானது. ஜனவரிமாதம்  இதனை விரிவாக எழுதத் தொடங்குவேன்.
வீணான பக்கமெனினும் இது எனது பக்கம் என்பதால் நான் அடுத்தவனுக்குக் கரைச்சல் கொடுக்கவில்லை என்பதை மட்டும் மனதில் நிறுத்துங்கள்.

நன்றி



Sunday 29 November 2015

"SPECIAL CAMP" இல் தமிழர்கள்


பாலன் தோழரின் நூல் குறித்த நிகழ்வு

கனடா- ரொரன்ரோ

கற்சுறா

எதையும் இலகுவாகக் கடந்து போய்விடலாம் என்பது இனிவருங்காலங்களில் பெருத்த சாத்தியமாகாது என்றே எண்ணுகிறேன். எங்களது பழி எங்களை ஒருபொழுதும் நிம்மதியாகப் படுத்துறங்க வைக்கப்போவதில்லை. நாங்கள் இறைதூதர்கள் என்ற கனவும் விடுதலையின் புதல்வர்கள் என்ற கனவும் மட்டும் சமூகத்தின் அடுத்த நகர்வுக்குப் போதுமானதாக ஒருபோதும் இருந்துவிடாது.
நமது சமூகத்தின் பெயரில் நமது தேசத்தின் பெயரில் நாங்கள் செய்த அநியாயங்களை எங்களுக்குள் நினைத்து, அதற்காக ஒருதுளியும் வெட்கப்படாமல் அந்தக் குற்ற உணர்வில் நாங்கள் குறிகிப் போகாமல் அதன் காரணத்தினை மிக விசாலமாக எங்களுக்குள் விவாதிக்காமல் எதிர்காலத்தில் நாம் ஒரு அங்குலமும் நகரமுடியாது என்றே எண்ணுகிறேன்.
இன்று கனடாவில் நடைபெற்ற பாலன் தோழர் அவர்களது சிறப்புமுகாம் நூல் அறிமுகக் கூட்டத்திற்குச் சென்றேன். நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை நடாத்திய நண்பர்களுக்கு நன்றிகள். நாம் நமது இலக்கியக் கூட்டங்களில் நமது அரசியற்கூட்டங்களில் காணாத முகங்கள் நிறையவே வந்திருந்தனர். மிகச் சந்தோசமாக இருந்தது.
நிகழ்வில் பாலன் தோழர் தனது நூலில் குறிப்பிட்ட அந்த சிறப்பு வதைமுகாமில் இருந்து வந்த நண்பர் மார்க் அன்ரனி,  உசா( நாடுகடந்த தமிழீழம் பிரதிநிதி) ஜோன் ஆர்கியூ(அம்னெஸ்டி இன்னடர் நசனல் கனடா), பேராசிரியர் சேரன், இந்திய அகதி முகாமில் நீண்டகாலம் இருந்த நண்பர் கணன் சுவாமி, அதே முகாம்களில் சிலகாலம் இருந்த நண்பர் த. அகிலன் என்போர் சிறப்புரை ஆற்றினார்கள். மிக அதிகமான தகவல்கள், இந்திய சிறப்பு முகாம்களின் கொடுமைகள் என்பன அவர்கள் பேச்சின் மூலம் வெளிக் கொண்டுவந்தார்கள்.



உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாமில் மட்டுமல்ல எந்த நாட்டுச் சிறப்பு முகாமில் யார் இ\ருந்தாலும் அவர்களை விடுதலை செய்யக் கோருவது மட்டுமல்ல நமது தேசத்துஅரச சிறைகளில், உலக வதைமுகாம்களில் உள்ள கைதிகளையும் விடுதலை செய்யக் கோருவது நமக்கு முன்னுள்ள முக்கிய பணி.
இந்த விடையத்தில்  அதே சிறப்பு முகாமில் எட்டுவருடங்களாக தனது வாழ்க்கையைக் கழித்து சித்திரவதைகளை அனுபவித்த பாலன் தோழரது மனம் அதன் முற்றுகையை அதனது முடிவைக் கோருகிறது. இது மிகவும் வரவேற்கப்படவேண்டியது. பாலன் தோழர் தனக்குள்ளால் அந்த முகாமின் தடயங்களை நமக்குத் தெரிவிக்கிறார்.
இன்றைய பேச்சாளர்களது பேச்சிலிருந்து எனக்கென்னவோ இந்த முகாமில் இருப்பவர்கள் பெரிய பாக்கியவான்கள் என்றே என்னால் நினைக்க முடிந்தது. அந்தச் சிறப்புமுகாமில் எவ்வித வன்முறைகள் நிகழ்கின்றன இந்திய அரசு அவர்களுக்கு என்ன செய்கிறது என்ன செய்யவில்லை என்ற தகவல்களோடு அங்கே எத்தனை பேர் வாழ்கிறார்கள் அவர்கள் எவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களை அறியும் மிக அதிகமான புகைப்படங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அங்கே வாழ்பவர்களுடன் வெளியிலிருந்து மற்றவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய வசதிகளும் இருக்கிறது என்பதையும் அறிய முடிந்தது.
ஆனால் பாருங்கள் நண்பர்களே உலகில் உள்ள எந்த வதைமுகாம்களையும் விட, மிக மோசமானதாகச் சுட்டப்படும் குவான்டநாமோ வதைமுகாமையும் விட மோசமான ஒரு வதைமுகாமை நமது ஈழத்தமிழினம்( ஆம் ஈழத்தமிழினமே) துணுக்காயில் வைத்திருந்தது. இது ஈழத்தமிழர்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.
உலகில் உள்ள வதைமுகாம்கள் எல்லாம் நிலத்திற்கு மேலே வைத்திருக்க நமது தேசமோ நிலத்திற்குக் கீழே வைத்திருந்தது. இன்றைய நிகழ்வில் பேசிய நண்பன் அகிலன் தமிழகத்தில் தன்னை வைத்திருந்த முகாமின் கூரையில் ஒரு  ஓட்டை இருந்தது என்றார். ஆனால் அவர் முன்னர் வாழ்ந்த வன்னியில் ஓட்டையே அற்ற வதை முகாம் ஒன்று இருந்தது. (மன்னிக்கவேண்டும் அகிலன்)அது துணுக்காயில் இருந்தது. அது பதின்மூன்று நிலக்கீழ் அகழிகளைக் கொண்டது. அங்கே மூன்று ஆண்டுகளாக ஒரு நாளுக்குமுன்நூறுபேருக்கக் குறையாமல் அவை எப்போதும் நிறைந்திருந்தன என்பது வரலாறு. அங்கே இருந்து தப்பியவர்கள் ஒரு சிலரே. அந்த வதைமுகாம் குறித்த படங்கள் யார் கையிலும் இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தன என்பது யாருக்கும் தெரியாதவை. வெறும் கதைகளாக மட்டுமே அவை எம்மிடம் உள்ளன. இறுதிவரை அது மர்ம வதைமுகாமாகவே இருந்தது. அதுகுறித்து அங்கிருந்த கைதிகளும் அந்த ஊர் மக்களுமே அறிவார்கள்.
ஈழத்துக் கவிஞர் செல்வி உட்பட பல முக்கியமானவர்கள் அங்குதான் இருந்து கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்கள் தப்பியவர்கள் மூலம் மட்டும் நமது இனத்திற்குக் கிடைத்த எஞ்சிய தகவல்கள். மூன்றாண்டு காலத்தில் ஏறக்குறை ஐயாயிரம் பேர் அங்கு வைத்து காவுகொள்ளப்பட்டவர்கள் என்பது ஒருகணிப்பாக இருக்கிறது.

இன்னும் தன்னைப்பற்றிய கணிப்பீட்டினை தன்னளவில் கூட செய்யமுடியாத ஒரு இனமாக நமது இனம் இருப்பதால் உண்மைகள் இலகுவில் கண்டடையமுடியாதவைதான்.

எனினும் நாம் இழைத்த அதே குற்றங்களை இன்னொரு பகுதி இன்று நமக்கு வேறு ஒரு தளத்தில் செய்கிறது. ஆனால் நாம் அவர்களை இலகுவாகக் குற்றம் சாட்டுகிறோம். அவர்களை நோக்கிக் கையை நீட்டுகிறோம் எந்த வெட்கமும் இன்றி.
நாம் செய்த குற்றங்களை நாம் மறந்து விட்டோமா? நமது இனம் துணுக்காயில் மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வரை ஓடியபோதும் விசுவமடு வட்டுவாகல் ( நன்றி அகிலன்) வரை அதீத வதைமுகாம்களை வைத்திருந்தனர். அங்கே அடைக்கப்பட்டவர்கள் யாருமே மீண்டதாக வரலாறு இல்லை.
தான் செய்த குற்றத்திற்குரிய பாவமன்னிப்பினை தனக்குள் நிகழ்த்தாதவன் மற்றவனுடைய பாவத்தைப் பற்றிப் பேச தகுதியற்றவனாகிறான் என்று நான் தெரிவித்தபோது. தயவு செய்து இந்த நிகழ்வு குறித்து உரையாடுவது முக்கியம் நாம் அதற்குள் இருந்தே நமது கருத்துக்களைத் தெரிவிக்க முற்படுவோம் என்று தலைவர் தொடக்கம் அங்கிருந்தவர்கள் பலர் கருத்துக்களைத் தெரிவித்த்தார்கள்.
பலர் பழயதைப் பற்றி ஏன் பேசவேண்டும். அவை முடிந்து போனவை. அதுபற்றி ஏன் இன்று பேசவேண்டும் என்றும் கருத்து வெளியிட்டார்கள். எனக்கு இதுவே மிக மிக ஆபத்தானது எனத் தோன்றுகிறது. ஒரு ஈழத்தமிழனாய் குவான்டநாமோ சிறை குறித்து பேசமுன் நாசிகளின் வதைமுகாம்கள் குறித்துப் பேசமுன் எனக்கு ஈழத்தமிழன் வைத்திருந்த துணுக்காய் வதைமுகாம் பற்றி பேசவேண்டும் என்றே கருதுகிறேன். அப்படியொரு வதைமுகாமை வைத்திருந்ததற்காக முதலில் தன்னளவில் அவன் வருந்தவேண்டும் என்றே விரும்புகிறேன். 

தான் இழைத்த தவறில் இருந்து தன்னை விடுவிக்க இந்த சமூகம் தயாராக இல்லாத போது எந்த சமூகத்திற்கான விடுதலையையும் அதனால் ஒருபோதும் பூரணமாக விளங்கிக் கொள்ளவே முடியாது. அது போலியானது . அது ஆபத்து நிறைந்தது. தன்னுடைய வரலாற்றிலிருந்து தன்னுடைய அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத இனமாகப் போய்விட்டது நமது இனம். 

இது தனக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனக்குள் அசிங்கமான சித்திரவதை முகாம்களையும் கொடூரமான சிறைச்சாலைகளையும் திரும்பவும் உருவாக்கக் காத்திருக்கும் என்ற சந்தேகம் வந்துகொண்டேயிருக்கிறது. 

தமிழகத்துச் சிறப்பு முகாம் முடிவு அல்லது மூடு என்ற பாலன் தோழரது  வேண்டுகோளை அழுகிய தமிழ்த்தேசியம்  தன்கையில் எடுத்தால் அது தோற்றே போகும். அப்படியே தொடரும்போது அது அங்கு வதைபடும் மக்கள் மீதான கருணையற்ற செயலாகவே அமையும். அதை மட்டுமாவது விளங்கிக் கொள்ளுங்கள் நண்பர்களே.

நிகழ்வு முடிந்து வெளியில் வரும் போது என்னுடன் சிலர் பேசினார்கள். ஆனால் அங்கு என்னுடன் பேசிய உசா அவர்கள் தனக்குத் துணுக்காய் வதைமுகாம் பற்றி தெரியாது. நான் அறியவேயில்லை தம்பி எனச் சொன்னதே இன்னும் பயமாக இருந்தது.
இந்த நூலை எழுதிப் பதிவுசெய்த பாலன் தோழருக்கும் நிகழ்வை நடாத்தியவர்களுக்கும் உரையாற்றிய நண்பர்களுக்கும் மிகுந்த நன்றிகள்
.

Tuesday 17 November 2015

பக்கத்தின் பக்கம் - பாரீசில் சாரு

கற்சுறா

சாரு என்ற அயோக்கியனைப்பற்றி என்வாழ்நாளில்  ஒருபோதும் எழுதக்கூடாது என்றே எண்ணுவேன். அது ஒரு வெட்கக் கேடான விடையமாகவே எனக்கு எப்போதும் இருக்கும்.  

அவன் எழுதும் பலவற்றை பார்க்க நேரிடும் போது மிக அதிகமான கோபம் தோன்றிவிடும். அவை மிக அதிகமான பொய்களால் நிறைந்திருக்கும். அந்தப் பொய்யை அறியாத யாரோ சிலருக்காக எந்த வெட்கமும் இல்லாது எவ்வித குற்ற உணர்வும் இல்லாது அவன் அவற்றை எழுதியிருப்பான். அவன் எதற்காக எ\ழுதுகிறான் என்று எப்போதோ அவனுக்கு அருகில் இருந்தவர்கள் சிலர் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கும் அது வெட்கமாய் இருக்கும். 

அந்த அயோக்கியனால் இலக்கியம் என்ற மிகப்பெரிய சுத்துமாத்தினால் மிக இலகுவாக ஏமாற்றப்பட்டவர்களாக அவர்கள் இருந்தவர்கள். அப்படியானவர்களில் நானும் எனது பாரீஸ் நண்பர்கள் சிலரும் அடக்கம். அந்த ஏமாற்றத்துடனும் வெட்கத்துடனும்தான் அவன் குறித்து எழுதவே வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதை கட்டாயம் எழுத வேண்டும் என எண்ணி எழுதவில்லை. இப்படியே விட்டால் பிற்காலத்தில் சிலவற்றை சம்பவங்களை மறந்து போவேன் என்ற காரணத்தால் நேரம் வரும் வேளைகளில் பதிந்து வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். அவ்வளவுதான்
இதனை எழுது என்று கரைச்சல் தந்த நண்பர்களுக்கு நன்றிகள்.


கதை 1

கதையின் தொடக்கத்தில் நான் முடிவை எழுதுகிறேன்.

பாரீசில் அவன் எங்களுடன் சில காலங்கள் இருந்துவிட்டு அன்று தமிழ்நாடு திரும்புகிறான்.

பாரிசில் இருந்த காலங்களில் அதிகமான நாட்களை அதிகமான நாட்கள் என்ன அவ்வளவு காலமும் எனது வீட்டிலேயே தங்கி நின்றான். அவன் வந்த ஆரம்ப காலங்களில் ஒரு இலக்கிய சேவகனுக்கு எழுத்தாளனுக்கு அப்படியிருக்கின்ற எமது நண்பனுக்கு தோழனுக்கு என்று நாம் என்னவெல்லாம் செய்வோமோ அவற்றையெல்லாம் மனசாரச் செய்தோம். ஆள்மாறி ஆள் மாறி அவனைத் தாங்கினோம். நண்பன் சோபா,  சுகன், ஸ்ராலின்  தேவதாஸ் என்று பாரீஸில் அவனைத் தாங்கிப் பிடிக்காத நண்பர்கள் இல்லை. போகும் வரும் இடங்களில் படம் எடுக்க வேண்டும் என்று நண்பன் சுகன் ஒரு கமராவைக்கூட  யாரோ ஒருவரிடம் கடன் வாங்கி அவன் கையில் கொடுத்தான். சில வேளைகளில் அருகில் நாம் இல்லாது இருந்தால் தனியே அந்தரிக்கப்படாது என்று அவனது கையில் நானும் சோபாவும் 200பிராங்கும் கொடுத்தோம். அதிகமான இடங்களை மறைந்த தோழர் புஸ்பராசாவின் காரிலும் எனது காரிலும் அவனை ஏற்றித் திரிந்து காண்பித்தோம். அற்புதமான பாரீஸ் நகரின் அத்தனை அழகையும் அவ|னுக்கு இவ்வாறுதான் காட்டினோம் என்றே நினைக்கிறேன்.

அன்று அவன் தமிழ்நாடு திரும்பும் நாள். முதல் நாள் நண்பர் அரவிந் அப்பாத்துரை வீட்டில் நிகழ்ந்த பார்ட்டியில் பங்கு கொள்கிறோம்.  அதிகாலை வரை அப்பாத்துரையின் வீட்டிலிருந்து அவனை கிளப்பிக் கொண்டுவர முடியவில்லை. கடந்த சில தினங்களாக அவன் தந்த துன்பம் எம்மை சந்தேகம் கொள்ள வைத்தது. அவனை எப்படியாவது  அனுப்பித்தொலைக்க வேண்டும் என்பதே எல்லோரது நோக்கமும். நண்பர் அரவிந் அப்பாத்துரையும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவரும் தனது தந்தை சுகவீனமாக இருக்கிறார் அவருக்கு கொடுத்து விடும்படி அன்றிரவு 2000பிராங் பணத்தையும் அன்று அவனிடம் கொடுத்திருந்தார்.
அதிகாலை எனது வீட்டிற்கு வந்து படுத்தவன் எழுந்திருக்கவேயில்லை ஒரு கிழமையாக செய்த சொப்பிங் பொருட்கள் ஹோல் எங்கும் பரவியிருக்கிறது. எதையும் சூட்கேசுக்குள் அடுக்கவில்லை. மதியம் விமான நிலையத்தில் நிற்க வேண்டும். நான் உடனேயே சோபாவுக்கு போன் பண்ணினேன். என்னால் சமாளிக்க முடியவில்லை. உடனே நீ வா என்றேன். அரை மணி நேரத்தில் சோபா வந்தான். தன்னை ஒரு மணி நேரத்திற்குள் 1000 பக்கங்களை  எழுதச் சொல்லுங்கள் எழுதித் தருகிறேன் என்னால் இவற்றை அடுக்க முடியாது என்றான் சாரு. நாம் மனதிற்குள் சிரித்தோம். இங்கேயே நின்று விடுவானோ என்று எமக்கு மேலதிகமாகப் பயம் பிடித்தது. இல்லை சாரு எப்படியும் பைகளை அடுக்க வேண்டும் என வற்புறுத்தி சோபா சொல்லி அடுக்கினான். நான் பிறேம் ரமேசுக்கும் மாலதி தாபிதாவுக்கும் கொஞ்ச பொருட்கள் வாங்கிக் கொடுத்தேன். வாங்கும் போது இவன் மீது வந்த சந்தேகத்தில் எதையெல்லாம் அவர்களுக்கு வாங்கினேனோ அதையெல்லாத்தையும் இவனுக்கும் வாங்கினேன். எல்லாவற்றையும் அடுக்கி எடுத்துக் கொண்டுவிமான நிலையம் புறப்பட்டோம். சுகன் தான் கடன் வாங்கிய கமரா எங்கே என்றான் அதனை எனது வீட்டில் வைத்துவிட்டதாகச் சொன்னான். விமான நிலையத்தில் சூட்கேசுகளைக் கொடுத்ததும் ஓவர் லக்கேஜ் என்றார்கள். உடனேயே நாங்கள் பைகளில் வெயிட்டின் அளவைக் குறைப்பதற்காக பைகளைப்பிரித்து பொருட்களைக் குறைத்தோம். சந்தையில் வாங்கிய பச்சைமிளகாய் உட்பட அதற்குள் இருந்தது.  அப்படியான பல பொருட்களை எடுக்க வேண்டிவந்தது. அதற்குள் ஒளித்து மறைத்த சுகனது கமராவையும் எடுத்துவிட்டு அனுப்பினோம்.
இமிக்கிறேசன் அதிகாரிகளைக் கடந்து அவன் கையைக் காட்டிச் சென்றதும் இந்தமுறை ஆள்மாறி வந்திட்டுது அடுத்தமுறை எப்படியாவது ஸீரோ டிகிரி எழுதியவனைக் கூப்பிட வேண்டும் என்றான் சோபாசக்தி.
தமிழ்நாடு சென்று பிரேம் றமேசினது பொருட்களையோ அல்லது அரவிந் அப்பாத்துரையின் பணத்தையோ அவன் கொடுக்கவேயில்லை.
அவன் தொடர்ந்தும் எங்களைப்பற்றி தவறாகவே எண்ணிவைத்திருக்கிறான். 

கதை2 
நேரம் கிடைக்கும் போது



Saturday 7 November 2015

தராசில் கவிதை.



அப்பா…
என்னப்பா – எங்கேயப்பா?

காணும் பொத்தும்.

உமது மூளையை தராசிலிட்டால்
மறுதட்டில் எது?
நிறுத்தமுடியாது
மேலும் கீழும்.

சீசோ அப்- பன் சோ.

இல்லை-யப்பா
விரலால் நாக்கைப் பொத்தி
முன்னால் நிற்பவனது
கண்ணையும் பொத்தும்.

தராசில் வைத்தால் ஆடவேணாமா கவிதை?

கற்சுறா



Tuesday 29 September 2015

என்.கே ரகுநாதனுடன் இருத்தலும் உரைத்தலும்.

 நிகழ்வு குறித்த சிறு பதிவு:

கற்சுறா



ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி என்ற ரகுநாதன் அவர்களது தன்வரலாற்று நூலை முன்வைத்து அவருடன் இருந்து ஒரு உரையாடலை தேடகம் அமைப்பினர் 27 செப்டம்பர்2015இல் 
நாடாத்தினார்கள். 


நிகழ்வினை தோழர் சீவரத்தினம் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். ரகுநாதன் ஐயா அவர்கள் தனது உடல் நிலை சரியில்லாத நிலையிலும் கூட்டம் முடியும்வரை அமர்ந்திருந்தார்.

தொடர்ந்து எம்.சியின் மகன் சந்திரபோஸ், க.நவம், பாக்கியநாதன், பேராதரன், யோகராஜா ஆகியோர் உரையாற்றினார்கள்.







அவர் தும்பளை சிவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்ற போதுதான் ஒரு போராளியாக மாறினார் என்றும் மற்றப் பிள்ளைகளுடன் சேர்க்காமல் பின்வாங்கிலில் அதுவும் தனிவாங்கிலில் இருந்து கல்வி பயில வைக்கப்பட்டவர் அந்தப்பாடசாலையில் அதிவிசேட சித்தி எய்தி எல்லாப் பிள்ளைகளைவிடவும் சிறந்த மாணவன் என்ற தகமையைப் பெற்றார் என்று தனக்குத் தெரிந்த ரகுநாதன் குறித்து ஞாபகக்குறிப்புக்களை சந்திரபோஸ் அவர்கள் சொல்லிச் சென்றார்.


ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று ஆவணங்களாக, தமிழ்நாட்டில், பாமாவின்கருக்கு,’  கே.. குணசேகரனின்வடு,’  ராஜ்கௌதமனின்சிலுவைராஜ் சரித்திரம்,’ என்பவை முதற்கொண்டு, இன்னும் பல தன்வரலாற்று நூல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.



ஈழத்தைப் பொறுத்தவரை, கடந்த ஐம்பதுகளின் ஆரம்பத்தில் வதிரியைச் சேர்ந்த கா. சூரன் எழுதியசூரன் சுயசரிதை,’  2001இல் டொமினிக் ஜீவா எழுதியஎழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்,’  2004இல் என்.கே. ரகுநாதன் எழுதியஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி,’  2005இல் இலங்கையன் செல்வரத்தினம் எழுதியவாழ்வும் வடுவும்,’  2011இல் தெணியான் எழுதியஇன்னும் சொல்லாதவை,’  அதேயாண்டில் யோகரட்ணம் எழுதியதீண்டாமைக் கொடுமைகளும் தீமூட்டிய நாட்களும்,’  2013இல் தெணியான் எழுதிய இன்னொன்றானபூச்சியம் பூச்சியமல்லஎன்பன ஒடுக்கப்பட்டோரது தன்வரலாற்று நூல்கள் என்ற தகவலோடு
சாதி என்பது இன்னும் அழிந்து விடவில்லை ஈழயுத்தகாலத்தில் எப்படி ஈழத்தில் சாதி காப்பாற்றப்பட்டது. வெளிநாடுகளில் இன்னமும் எப்படி சாதி காப்பாற்றப்படுகிறது  என்று அதிகமான சப்பவங்களைப் பட்டியலிட்டு க.நவம் அவர்கள் பேசினார்.




கையைக் காலை அடித்து முறிக்கும் கூட்டத்திற்குள் இருந்து மிகத் துணிவாக கந்தன் கருணை என்ற நாடகத்தை எழுதியவர். தாய் நாவலில் வந்த பெலகேயாவின் பாத்திரத்தோடு தனது தாய் வள்ளியை ஒப்பிடும் ரகுநாதன் அவர்களின் மனம் மிக அற்புதமானது என்றும் இந்த நாவல் மற்றய இலக்கிய நயம் கொண்ட கதைகளைப் போல் வாசிக்க முடியாது. இது எங்களது வலிகளைச் சொன்னகதை. எங்களது அசிங்கங்களைச் சொன்ன கதை என்றும் பேராதரன் குறிப்பிட்டு ஆசியாவின் முதல்தரமான நூலகம் எங்களிடம் இருந்தது. அங்கு தான் அதன் கோடியில்தான் இடுப்பில் காவோலை கட்டிக் கொண்டு ஒரு சமூகம் தனது சமூகத்தையே தெருவில் நடக்கவைத்து அவமானப்படுத்தியது. இந்த அசிங்கங்களைக் கொண்ட சமூகத்திற்கு ஆசியாவின் முதற்தரமான நூலகம் இருந்தாலென்ன எரித்தலென்ன என்று தார்மீகக் கோபத்துடன் பேசினார்.





ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் கதை என்ற அருமையான பெயர் கொண்ட நாவல் என்று தனது பேச்சைத் தொடங்கிய பாக்கியநாதன் அவர்கள்.கிழக்குக் கடற்கரையிலிருந்து தொண்டமானாறுவரையான பகுதியில் வராத்துப்பளை தொடங்கி சந்தாதோட்டம், மாயக்கை,சுளகுகட்டி,அல்லாய் வடக்கு, அல்வாய் தெற்கு, வேர்குத்தி, வதிரி, கொற்றாவத்தை, நவிண்டில், சமரபாகு, இலந்தைக்காடு தொண்டைமானாறு வரையான 3மைல் அகலமும் 10மைல் நீளமும் உள்ள வரண்ட எதுவுித பயிர்களும் வளர்கமுடியாத கட்டாந்தரைப்பிரதேசங்களில் இந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வாழத் திணிக்கப்பட்டார்கள். இங்குள்ள மக்களின் கதைகளைச் சொன்ன ரகுநாதன் அவர்கள். தனியே இரண்டு மூன்று கிராமங்களை மட்டும் தனது நாவலில் முன்நிறுத்தி கதையை முடித்துள்ளார். என்று குறிப்பிட்டார்.




ரகுநாதன் என்ற ஒரு போராளி இந்த நாவலில் தவறிப் போனார் என்று தனது உரையைத் தொடங்கிய யோகராஜா நாவல் முழுவதும் வாசிக்கும் போது ரகுநாதன் என்ற போராளி தொலைந்து விட்டான் என்றும் அவருடைய வாழ்வில் மிகப் பெரிய சாதனையாக இருந்தது அவருடைய கலப்புத் திருமணம். அதைச் செய்யத் துணிந்த ரகுநாதன் தன்னுடைய தன் வரலாற்று நூலில் அதுகுறித்து மொனமாகக் கடந்து போயிருப்பது மிகவும் கவலைக்குரியது. ரகுநாதன் அவருடைய சாதிக்காரர்களால் திருமணத்தின் பின் ஒதுக்கிவைக்கப்பட்டார். அதிலிருந்து தன்னை மீட்பதற்காக அதனைக் குறிப்பிடாது இந்த நாவலை எழுதியிருக்கிறாரோ என்று என்னைச் சந்தேகப்படவைக்கின்றது. என்றும் குறிப்பிட்டு ரகுநாதனின் மைத்துனர் பசுபதியின் கவிதைகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.




நிகழ்வின் இறுதியில் ரகுநாதனின் மகன் ஜெயா இந்த நிகழ்வு, உடல்நலம் குன்றியிருக்கும் தன்னுடைய தந்தைக்கு கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுக்கும் அவரைத் திரும்பவும் எழுதத் தூண்டும் என்று குறிப்பிட்டு நிகழ்வை நடாத்திய தேடகம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தார்.








கலந்துரையாடலின் பின்னர் ஓவியர் றஸ்மியினால் வரையப்பட்ட ரகுநாதன் அவர்களது ஓவியத்தை ரகுநாதன் அவர்களிடம்  தேடகம் அமைப்பினர் சார்பில் தோழர் மாற்கு அவர்கள் கையளித்தார்.


ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி
வெளியீடு: உயிர்மெய்/ கருப்புப் பிரதிகள்.
Kaptein Linges 9a
6006 Aalesund
Norway
email: banu.nor@gmail.com

Tuesday 21 July 2015

“இவர்களுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.”

லெனின் சின்னத்தம்பி:
நாவலை முன்வைத்து தேடகம் ஒழுங்கு செய்த அரங்கில் பேசியது.

கற்சுறா



“திட்டமிட்டு ஒருவருக்கு அயோக்கியத்தனம் பண்ணுகின்ற ஒருவன்
ஒருபோதும் இன்னொருவருக்கு நன்மை செய்துவிடப்போவதில்லை.
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அப்படி அவன் நன்மை செய்கிறான் என்றால்
எப்போதும் அது தன்னுடைய இலாபம் கருதியதாகவே இருக்கும்.
ஆனாலும் அந்த அயோக்கியத்தனத்தை மற்றவனுக்குச் செய்வதற்காக அவன் தருணங்களைக் கணக்கிட்டபடியே இருப்பான்.”

இந்தச் சத்தியம் பலருக்கு தமது வாழ்வின் அனுபவமாக இருந்தாலும் ஒரு ரெஸ்ரோரன்ட் தொழிலாளிக்கு அவன் அன்றாடம் உணரும் சத்தியமாக இருந்து விடுகிறது.

ஐரோப்பாவில் அகதி வாழ்வினைத் தொடங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ரெஸ்ரோரன்ற் இல் கோப்பை கழுவும் அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள்.

கோப்பைகழுவியவர்களில் அநேகர் பின்நாளில் புலம்பெயர் கவிஞர்களாகிய பொழுது கோப்பை கழுவிய வலிகளைத் தங்களது கவிதைகளாக எழுதினார்கள். அதனால் அதிகமான புலம்பெயர் கவிதைகளில் கோப்பை கழுவும் வலி பதிவாகிவிட்டது என்றே எண்ணுகிறேன்.

பின்நாளில் அந்தக் கவிஞர்களும் கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டார்கள். அதனால் அந்த வலிகளின் பூரணத்துவம் எழுத்துக்களில் பதியப்படவில்லை. அந்த வலிகளின் ஒரு பகுதிப் பூரணத்துவத்தையேனும் இந்த லெனின் சின்னத்தம்பி என்ற நாவல் பதிந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

கோப்பை கழுவும் தொழில் என்பது ஒரு இலங்கை அகதிக்கு ஆரம்பகாலங்களில் இலகுவாகப் பெற்றுவிடக்கூடிய தொழிலாக இருந்தது. கோப்பை கழுவுவதிலும் பயிற்சி. - அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற ஒருவிதமான கட்டுப்பாடு இருந்தாலும் ஒரு  இலங்கைத் தமிழனுக்கு அத்தனை பயிற்சிகளையும் அனுபவங்களையும் ஒருநாளில் பெற்றுவிடும் வல்லமை இருந்தது.

ஒரு இலங்கைத் தமிழன் எப்படி யுத்தத்திற்கு தன்னைத் தத்துக் கொடுக்கும் வல்லமை பெற்றிருந்தானோ அதே போல் புலம்பெயர்ந்த தேசங்களில் ஒரு கடை முதலாளிக்குத் தன்னைத் தத்துக் கொடுக்க எப்போதும் தயாராய் இருந்தான்.

அதனாலேயே ஒவ்வொரு சாப்பாட்டுக்கடை முதலாளிகளும் தமது வேலையிடங்களில் ஒரு இலங்கைத் தமிழனை எவ்வித முன்னனு பவமும் இன்றி வேலைக்கு அமர்த்தத் தயாராய் இருந்தானர்.

அப்படிப்பட்ட ஒரு காலங்களில் பேர்லினில் உள்ள ஒரு உணவுச்சாலைக்கு வேலைக்குச் சேர்ந்தவர்தான் இந்த நாவலில் வரும் லெனின் சின்னத்தம்பியும்.

இளமையான தோற்றத்துடன் தலையில் மயிருடன் வேலைக்குச் சேரும் லெனின் சின்னத்தம்பி வேலைத்தளம் திவாலாகிப்போய் மண்டையில் மயிரற்று முதுமையாக வெளியேறுகிறார்..

இடையில் பதினைந்து வருடங்கள். ஒரு ரெஸ்ரோரன்ற் எப்படி ஒரு கடை நிலைத் தொழிலாளியை ஏமாற்றியது ஒரு முதலாளித்துவ நாடு இவர்களை ஏமாற்ற சட்டங்களாக முதலாளிகளுக்கு எப்படி வசதி செய்து கொடுத்திருக்கிறது. அந்த சட்டங்களைப் பயன்படுத்தி எப்படி முதலாளிகள் அயோக்கியத்தனம் பண்ணுகிறார்கள். சேர்ந்து வேலை செய்யும் வேற்று இனத் தொழிலாளர்கள் ஒரு கோப்பை கழுபுபவன் கறுப்பன் ஒரு ஆசிய நாட்டவன் என்பதால் வசவுகள் கயமைத்தனம் என்பவற்றால் எப்படி ஒதுக்குகிறார்கள். அவமதிக்கிறார்கள் என்று சொல்லிச் செல்கிறது கதை.

இது கதையல்ல. 

உண்மையில் அகதிகளாய் வந்து ரெஸ்ரோரன்ரில் கோப்பை கழுவிய ஒவ்வொரு இலங்கைத் தொழிலாளர்களின் வாழ்வு.

நான் கடந்த 25வருடங்களுக்கு மேலாக ரெஸ்ரோரன்ற் தொழில் செய்து வருகிறேன். இந்தக் கதையின் ஒவ்வொரு பக்கங்களிலும் நான் இருக்கிறேன். 

எனக்கு இது புனைவு அல்ல. என்னை பெயர் மாற்றி விட்டிருக்கிறான் ஜீவமுரளி.
என்னைப் போன்றவர்கள் அனுபவித்த கதை இது.

இந்தக் கதையின் ஆரம்பத்தில் பெயர் வைத்தல் சம்பவம் ஒன்று வரும். அது அப்படியே எனக்கு நடந்தது.

நான் பிரான்சிற்கு வந்த மறுநாள் எனது அண்ணா வேலை செய்த கடையில் என்னைச் சேர்த்து விட்டு அவர் வேறு வேலைக்குச் சென்றார். அண்ணாவிற்கு அவர்கள் அவரது பெயரை மாற்றி புறினோ என்று அழைத்து வந்தார்கள்.
அவருடைய பெயரோ என்னுடைய பெயரோ உச்சரிப்பிற்கு இடைஞ்சல் இல்லாத பெயர். அப்படியிருந்தும் எங்களுக்கு அவர்கள் எங்களது பெயரை மாற்றினார்கள்.

இவர்களுடைய கடைக்கு  நான் வேலைக்குப் போனதும் எனது பெயரை அவர்கள் கேட்கவில்லை அண்ணாவிற்கு  அழைத்த அதே புறினோ என்ற பெயரைக் கொண்டே என்னையும் அழைத்தார்கள்.

அந்தப் பெயரைக் கொண்டு அவர்கள் என்னை அழைக்கும்போது ஆழ்மனத்தில் வரும் கவலையை அல்லது அழுகையை நீங்கள் எந்தமொழிக் கவிதையைக் கொண்டும் எழுதிவிடமுடியாது.

உங்களுக்கு நினைவிருக்கலாம் குட்டி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. 11வயதில் சிறுமி ஒன்றை தன்னுடைய வீட்டிற்கு வேலைக்குக் கொண்டு வரும் ஒரு பட்டணத்து மனிதன் தன்னுடைய காரிற்குள் அவளை ஏற்றியவுடன்  அந்தச் சிறுமியின் பெயரை மாற்றுவான்.

வன்னியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமிகள் அநேகம் பேர் இதேபோல் யாழ்ப்பாணத்துத் திமிர் பிடித்தவர்களால் உடனடிப் பெயர்மாற்றம்’ செய்யப்பட்டவர்கள்தான்.

இப்படி இந்தப் பெயர் மாற்றும் வலி…
புலம்பெயர்ந்த சூழலில்  ஒரு கொட்டும் பனியை விட அல்லது பனியின் கொடுங்குளிரை விடவும் கொடுமையானது.

இங்கே இந்தப் பெயர் மாற்றம் என்பது ஒரு துவேசத்தின் அடையாளமாக நான் வேறு நீ வேறு நானும் நீயும் ஒன்றல்ல எக்காலத்திலும் நாங்கள் சேரமுடியாதவர்கள் என்பதன் குறியிடாகச் சொல்லப்படுகிறது. 

அந்நியத் தன்மையை  எப்போதும் நினைவுபடுத்தும் விதமான உச்சரிப்புப் பிழைகளோடு நமதுபெயரை உச்சரித்தல் என்பது நீங்கள் எப்போதுமே எங்களுடையவர்களாக மாறமுடியாது என்பதாகக் காட்டப்படுவது.  இதனை மிக நுணுக்கமாக ஜெகதீஸ்வர காந்த சர்மாவின் பாத்திரத்திற்கூடாக முரளி காட்டியிருப்பான்.

இந்த நாவலில் திறப்பு ஒரு அடையாளமாக வருகிறது. வேலையாட்களுக்கு வழங்கப்படும் திறப்பு என்பது ஒரு அதிகாரத்தின் சின்னமாகவும் மறுபுறம் அடிமையின் சின்னமாகவும் நாவலில் வந்து முடிகிறது.
வைத்திருக்கும் திறப்பும் நாவலில் சொல்லப்படும் மூன்று மாடிக்கட்டடங்களின் கதவுகளும் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையேயான இடைவெளிகளையும் அவர்களிடையே உள்ள 

பரஸ்பரத்தின் அளவுகளையும் கூறுபவையாக நாவல் முடிவு வரையிலும் வந்து போகிறது.

இந்த நாவலில் வருகின்ற சம்பவங்கள் அனுபவங்கள் உங்களில் யாருக்கேனும் சாதாரணமாக ஒரு பிளாஸ்டிக் வாளி செய்யும் கம்பனியில் இங்கு பெற்றிருக்க முடியும். அல்லது ஒரு இராணுவ பயிற்சி முகாமில் நீங்கள் பெற்றிருக்க முடியும்.

இங்கு பிளாஸ்டிக் வாளி செய்யும் கம்பனியில் வேலை செய்த பலரை எனக்குத் தெரியும் அவர்கள் இதில் வந்த லெனின் சின்னத்தம்பியாக இருந்து கங்காணிமாரினால் ஏமாற்றப்பட்ட சில கதைகளை எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனாலும் ஒட்டு மொத்தமாக ஏமாற்றப்படும் / வதை செய்யப்படும் லெனின் சின்னத்தம்பிகள் இன்னமும் ரெஸ்ரோறன்ற்களிலேயே வேலை செய்கிறார்கள்.

ரெஸ்ரோறன்ற் ஒன்றில் வேலை செய்கின்ற அத்தனை வேலையாட்களுக் கும் தமது வேலை அடையாளங்களும் வேலையின் தரங்களும் தெரிந்திருக்கும் ஆனால் தனக்குரிய வேலை எதுவென்றும் தன்னுடைய தகுதி எதுவென்றும் கடைசிவரை தெரியாமல் இருந்து தினமும் வேலைக்குச் செல்லுதல் என்பது அங்கு கோப்பை கழுவுகின்ற கடைநிலைத் தொழிலாளிக்கு மட்டுந்தான்.

யாராலும் எந்தநேரத்திலும் பந்தாடப்படுகின்ற வதைபடப்படுகின்ற ஒரு நபராகவே அந்தக் கோப்பை கழுவும் பாத்திரம் இருக்கும். அதற்கு இனம் மொழி மதம் அத்தனையும் கடந்த ஒரு விசித்திரமான வதை கிடைத்துக் கொண்டிருக்கும். அது ஒரு கடை நிலைத் தொழில். அந்தத் தொழிலின் வதை இந்த லெினின் சின்னத் தம்பி என்ற பாத்திரத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்த லெனின் சின்னத்தம்பி இரண்டு பிள்ளைகள் மனைவியுடன் இரண்டு தசாப்தங்களாக பேர்லினில் வாழும் ஒரு அகதித் தமிழன். புதிய ஒரு பிரதேசத்தின் கால வேறுபாடுகளைக் கூடப் பொருட்படுத்தாமல் குடும்பச்சூழலின் நிமித்தம் அதிகாலையில் இருந்து நடுச்சாமம் வரை உணவுச்சாலையில் வாழ்வைத் தொலைக்கிறார்.

வேலைத்தளத்தில் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான அழுத்தம் காரணமாக  மனநிலை குழம்பிப்போய் தூக்கத்தைத் தொலைத்து ஒரு பைத்தியக்கார மனநிலையில் உழன்று திரிகிறார் சின்னத்தம்பி.

ஒரு தசாப்தம் கடந்த பின்னர் கூட வேலையின் சூட்சுமங்களை கைக்கொள்ளமுடியாது இருக்கும். அந்த நிலையிலும் செக்குமாடுபோல் ஒரு இலங்கைத் தமிழன் சுற்றிக் கொண்டிருப்பான். இந்த செக்குமாட்டு நிலை ஐரோப்பிய முதலாளிகளுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டதொன்று. இதுதான் ஒரு இலங்கைத் தமிழனை அவன் வேலைக்கு அமர்த்த ஆசைகொள்ளும் காரணம்.

இந்தக்காரணத்தை அத்தனை இலங்கை அகதியின் மனநிலையிலிருந்து லெனின் சின்னத்தம்பி இந்த நாவலில் திறம்படச் செய்வார்.

இதில் லெனின் சின்னத்தம்பியின் பாத்திரம் முழுக்கவும் ரெஸ்ரோரன்ற் சுவருக்குள்ளேயே கட்டப்பட்டிருக்கிறது. ஒரு கோப்பை கழுவுவதிலிருந்து அவனது ஒப்பந்தத்தினை இலாவகமாக மாற்றியமைத்து ஒரு சமையற்காரனுக்குரிய  பழுவான வேலைகளைத் திணிப்பதும் அதனை நிராகரிக்கமுடியாதபடி சூழலை உருவாக்குவதும் .வேலையற்றுப்போகின்ற அச்சத்தை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் பாரிய அண்டாக்களும் அதன் சத்தங்களும் மேற்பார்வையாளனின் மிரட்டல்களும் வெளியே போனால் திறபடாத கதவுகளும் என்று லெனின் சின்னத்தம்பியின் கதை மூன்று மாடிகொண்ட நான்கு சுவர்களுக்குள்ளேயே  சொல்லப்பட்டிருக்கிறது.

லெனின் சின்னத்தம்பியின் குடும்பம் அகதிவாழ்வு  என அது விரிவுபடுத்தப்படவில்லை. அதைச் சொல்லவந்த கதையல்ல இது. ஒரு முதலாளித்துவ நாட்டில் ஒரு உணவுச்சாலை என்கின்ற வேலைத் தளம் எவ்வளவு கொடுமையாக இயங்குகின்றது எந்த முன் அனுபவமும் அற்ற ஒரு இலங்கைத் தொழிலாளியின் உழைப்பை மட்டுமல்ல மற்றய நாட்டின் கடைநிலைத் தொழிலாளிகளையும் எப்படி நடாத்துகிறார்கள் என்பதனையே கதையாகச் சுற்றியிருக்கிறது. அதனை லெனின் சின்னத்தம்பியை மையாமாக வைத்துச் சொல்லப்படுகிறது.

ஒரு முதலாளி ஒட்டுமொத்தமான தொழிலாளிகளையும் ஏமாற்றி வேலை வாங்கிக் கொண்டிருக்கும் போது அதன் படிநிலைகளில் அடுத்திருக்கும் மேற்பார்வையாளன் தனக்குக் கீழுள்ளவனை ஏமாற்றிக் கொண்டிருப்பான். அத்து மீறிய அதிகாரத்தைச் செலுத்துவான். அப்படியே படிநிலை குறைந்து ஒரு கடைநிலைத் தொழிலாளியை முதலாளியுடன் சேர்ந்து மேலுள்ள அத்தனை பேரும் அதிகாரத்துடன் வேலைப்பழுவையும்  அதிகமாக்கி மனித நிலை என்ற தரத்திலிருந்து தாழ்த்தி  ஒரு சித்திரவதை கூடமாக யோசிக்க வைக்கும் அளவுக்கு அந்த ரெஸ்ரோரன்ற் சூழலை உருவாக்கி விட்டிருப்பார்கள்.   

இயந்திரமயமான நவீனமயப்படுத்தப்பட்ட மிகுந்த தொழில் வல்லமை பெற்ற ஒரு சமையற்கூடத்தில் அதிகாரமையம் எப்படி ஏமாற்றுக்களையும் குழிபறிப்புக்களையும் திட்டமிட்டுச் செய்கிறது என்ற ஒரு பார்வையாக இருப்பதால்

இதில் அநாவசியமான கற்பனைக்கும் அதன் சித்து விளையாட்டிற்கும் இடமளிக்கவில்லை. இது ஒரு நாவலின் செல்நெறிக்குள் அகப்படாமல் பக்கப் பிரிப்புக்களுக்குள் கூட நிற்காது தொடக்கமும் முடிவுமாக ஒரு இறுக்கமான மொழியோடு கதை சொல்லப்படுகிறது.

ஜீவமுரளியின் வாதங்களையும் அவனோடு உரையாடல்களையும் தொடரும் எனக்கு இந்த மொழி ஒரு இடைஞ்சலாக இருக்கவில்லை. ஆனால் பலருக்கு  அந்த இடைஞ்சல் இருக்கக்கூடும். 

ஒரு சிறுகதை வாசகனுக்கு அல்லது நாவல் வாசகனுக்குப் பரீட்சயமான மொழியல்ல இது.  எனினும் ஒரு ரெஸ்ரோரன்ற்  தொழிலாளி அனுபவம் பெற்றவனுக்கு அந்த இடைஞ்சல் இருக்காது. கதையை இந்தவகை மொழிக்குள்ளால் புரியப்படுவதிலும் ஒரு தேவை இருப்பதாகவே உணர்கிறேன்.

கடந்த கிழமை ஜீவமுரளியுடன் பேசினேன். நான் நாவலின் தொடக்கம் முதல் முடிவு வரை வாசித்தேன். 

ரெஸ்ரோறன்ற் ஒன்றில் வேலை செய்யும் ஒரு கடை நிலைத் தொழிலான கோப்பை கழுபுவனது சிக்கல்கள் வலிகள் சட்டத்தின் ஏமாற்றுக்கள் எல்லாவற்றையும் பதிந்திருக்கிறாய். வெள்ளைக்கார முதலாளியிடம் வேலை செய்தால் இந்த ஏமாற்றுக்கள் இலகுவாக வரும் மச்சான். ஆனால் தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு வேலை செய்த சம்பளமே வராது.. செய்த முதல்மாதச் சம்பளத்தை எப்படியாவது வாங்கிவிடவேண்டுமென்று தொடர்ந்து வேலை செய்யும் எத்தனையே ஆண்களை அளவுக்கும் அதிகமான பெண்களை இங்கு எனக்குத் தெரியும் என்றேன். 

உண்மையில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சோத்துக்கடையில் வேலை செய்த எங்கள் சிறுவர்கள் பற்றிய கதை ஏதாவது எங்கேனும் ஒரு சிறுதையிலாவது பதியப்பட்டிருக்கிறதா? என்று தேடினால் இல்லை. ஏன் பதியப்படவில்லை என்ற காரணத்தைத் தேடினால்
எந்த எழுத்தாளர்களும் அந்தச் சிறுவர்களாய் இருந்து வாழவில்லை. என்பதுடன் அந்த வலிகளைக் கொண்ட சூழலை தமக்கு அருகாமையில் கூட இருத்திப் பார்க்கவில்லை. நினைத்துப் பார்க்கவில்லை.

உதாரணத்திற்குப் பாருங்கள்…
இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த ஒரு நபர். இந்த நபர் முதல்நாள் கிளீனிங் தொழிலுக்குப் போய் வந்து அதனை அவமானமாகக் கருதித் தனக்குத் துடைப்பான் என்று அழகாகப் பெயரிட்டார். அப்போது நான் கேட்டேன் அண்ணே நீங்கள் துடைப்பான் என்றால் நான் என்ன எனக்குச் சட்டி பானை அகப்பை என்று பெயர் வைக்கவோ என்று? வாழ்க்கையில் தாங்கள் துடைக்கவும் கழுவவும் வேண்டியவர்கள் அல்ல ஆனால் காலம் நம்மைச் செய்யவைக்கிறது என்ற ஆழ்ந்த துக்கத்தில் சூட்டப்பட்ட பெயரே அந்தத் துடைப்பான் என்பது.

சமூகத்தில் இருக்கும்  அதிகாரங்கள் மீது காறி உமிழ்வதும் அந்த அதிகாரம் செயற்படுத்தும் அவமானங்களைப் புரட்டிப் போடுதலும் ஒரு எழுத்தாளனின் கலைஞனின் முக்கிய செயற்பாடாய் இருக்கவேண்டும். அது தனக்கு நிகழாததாய் ஆயினும்.

அந்தவகையில் லெனின் சின்னத்தம்பி தன்னளவில் கோபங் கொண்டுள்ளது. ஆனாலும்
ஜீவமுரளியின் இந்த லெனின் சின்னத்தம்பி பாத்திரம் உள்ளாரக் கொஞ்சம் புனிதத் தன்மை கொண்டிருக்கிறது.

நானோ எனக்குத் தெரிந்த லெனின் சின்னத்தம்பிகளோ எமது வேலைத்தளங்களில் புனிதமானவர்களாக ஒருபோதும் இருக்கவில்லை.
இருக்கவும் முடியாத சூழல் அது.

லெனின் சின்னத்தம்பியாய் வாழ்ந்த காலத்தில் ஒருமுறை பாரீசில் முதலாளியுடன் ஏற்பட்ட தகராறில் அங்குள்ள தொழிற்சங்கத்தில் முறையிடச் சென்றேன் தொழிற்சங்கவாதியோ என் முதலாளிக்கு போன் பண்ணி உன்னுடைய ஆள் இங்கு வந்திருக்கிறார் நான் என்ன செய்ய என்று எங்களுக்குத் தெரியாமல் என் முதலாளியுடன்  பேரம் பேசினான்.

அன்றிலிருந்து முதலாளிகளுடன் இருக்கும் தகராறினை நேரடியாகவே நாங்கள் எதிர்கொண்டோம். நாங்கள் தோற்றுத்தான் போவோம் என்று நிட்சயம் தெரிந்திருந்தும். எதிர்கொண்டோம்.

எங்களுக்கு ஒன்றே ஒன்று தெரிந்திருந்தது. இந்தச் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை கற்றுக் கொள்ள மொழி விளங்கவில்லை. அதற்கான அறிவும் இருக்கவில்லை. முதலாளிகளுடன் சண்டையிட்டு சட்டரீதியாக நாம் வெல்லமுடியாது என்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்திருந்தது.
அதற்கான கள்ள வழியைக் கற்றுக் கொண்டோம். அதில் எங்களால் முடிந்தவரை முதலாளிகளை வியாபார ரீதியாகத் தோற்கடித்துக் கொண்டிருந்தோம்.

நாங்கள் முடிந்தவரை அவர்களிடமிருந்து உணவுகளைத் திருடினோம். அவர்களுடைய பொருட்களுக்கு இரகசியமாகச் சேதாரம் விளைவித்தோம். உணவுகளைப் பாவனைக்கொவ்வாததாக பழுதடையச் செய்தோம். அவனைத் தற்காலிகமாகவேனும் தடுமாறச் சேய்தோம். ஆனால் அது ஒரு போதும் முழுமையானதாக இருக்கவில்லை.
ஏமாற்றும் தளத்தில் அவர்களே வென்றார்கள்.

ஆனாலும் ஒரு தமிழ்முதலாளியிடம் வேலை செய்வது என்பது வேறுகதை. அது வெள்ளைக்கார முதலாளியிடம் வேலை செய்வதை விட ஆயிரம் மடங்கு அசிங்கமானது. அவமானமானது.

இங்கே திருடுவதற்கு கூட எதுவுமே இருக்காது. எல்லா உணவுகளும் ஏற்கனவே நாட்சென்றவை.  மிக அதிகமாகப் பழமையானவை. சுகாதாரத் திணைக்களத்தால் மறுக்கப்பட்ட  - தடைசெய்யப்பட்ட உணவுகளையே அவர்கள் பயன்படுத்துவார்கள்.
அதில் நாம் ஒருபோதும் கைநனைக்க முடியாது.

எனக்கும் இங்கு தமிழ் முதலாளிகளிடம் வேலை செய்த அனுபவம் அளவுக்கு மிகுதியாக இருக்கிறது. அங்கே உப்புக் கூடிவிட்டதா என்று பார்ப்பதற்குக் கூட நாக்கில் வைக்க முடியாத உணவுகளை அவர்கள் பயன்படுத்துவார்கள்.

இங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் முதலாளிகளின்  கொத்தடிமைகளாக இருக்கிறார்களா என்று கூடச் சந்தேகம் வரும்.
அவ்வளவு அசிங்கமான நடைமுறைகள் உள்ளுக்குள் இருக்கும்.

இங்கு மணித்தியாலத்திற்கு 5டொலர்படி வேலை செய்து 5000டொலருக்கும் மேலால் முதலாளி சம்பளம்  கொடுக்கவேண்டியவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். ஆனால் முதலாளியோ பென்சிலும் BMW இலும் இன்னமும் வந்து இறங்குகிறான்.
ஒரு தமிழ்க்கடையில் எனக்கு நாலு மாதம் சம்பளம் தருமதி இருக்கும்போது  அவர்கள் குடும்பமாக கியூபா சென்றுவிடுவார்கள். நான் பிள்ளைகளுக்குப் பால் வாங்க பக்கத்திவீட்டிற்குச் சென்று வருவேன்.

கனடாவில் இன்னொரு தமிழ் முதலாளியிடம் வேலை செய்துமுடிய சம்பளம் வாங்குவதற்கு வோடன்& பிஞ்ச் சந்தியில் போய் மணித்தியாலக்கணக்காகக் காவல் நிற்கவேண்டும். நின்றும் ஏமாந்து வீட்டிற்குப் போகவேண்டும். வரமாட்டான். மறுநாள் தருவான் என்றுவிட்டு திரும்பவும் வேலைக்குப் போகவேண்டும்.

அவன் போய்வருகின்ற  பாலியல் தொழிலாளர்களில் வீட்டுவாசலில் போய் நின்று சம்பளம் வாங்கிய அனுபவம் எனக்கு அதிகமாகவுண்டு.

இங்கே தமிழ் முதலாளிகளுக்கு தமிழ் வேலையாட்களை வைத்திருப்பதில் இருக்கின்ற சாதகமான விடையம் என்னவென்றால் ஒரு தமிழ்த் தொழிலாளியின் குடுப்பக் கஸ்டங்களை அவன் உள்ளாரத் தெரிந்து கொண்டுவிடுவான். அதன் பின் அவனை தன்னால் முடிந்தவரை எப்படியெல்லாம் ஏமாற்றலாமோ அப்படியெல்லாம்  ஏமாற்றுவான்.

இங்கு இயங்குகின்ற தமிழ்க்கடைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளைக் கேளுங்கள் ஒரு வெள்ளைக்கார முதலாளியிடம் வேலை செய்யும் வலியைவிட ஆயிரம் மடங்கு வலிகள் அவர்களிடம் வேலை செய்வதில் இருக்கும். 

சம்பளத்தைக் கூட விடுங்கள் அங்கே அவர்களை அசிங்கமாக நடாத்தும் விதம் கதைகளில் இல்லாதவை.

என்ன வாயிற்குள் வைத்திருக்கிறாய் ஆ என்று காட்டு என்று ஒரு தொழிலாளியைப் பார்த்து அடிக்கடி அசிங்கமாகக் கேட்கும் தமிழ் முதலாளியை எனக்குத் தெரியும்.

ஒரு பெண் தொழிலாளிக்கு இடுப்பிற்குள் கையை விட்டு என்னத்தை ஒழித்துக்கொண்டு போகிறாய் என்று கேட்ட கயமைத்தனமானவர்கள் நமது தமிழ் முதலாளிகள்.

வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் போட்டுவிட்டு- அந்த விளம்பரம் பார்த்து மறுநாள் வந்த ஒரு நடுத்தர வயதான பெண்ணை நோக்கி
நாளைக்கு சாகப்போகிறாய் உனக்கு வேலை ஒரு கேடா என்று மற்றய தொழிலாளிகளுக்கு முன்னால் அசிங்கமாய் அந்தப்பெண்ணை நடாத்தியவர்கள் தமிழ் முதலாளிகள்.

ரெஸ்ரோறன்ற்களில் மிகக் குறைந்தளவு சம்பளமே கொடுத்து அந்தச் சம்பளத்திற்கும் மேலால் அவர்களது உழைப்பைச் சுரண்டி வேலை வாங்கும் முதலாளிகள்  தொழிலாளிகளுக்கு ஒரு நாளில் சேர்ந்து வேலை செய்யும் சகபணியாளர்களால் கொடுக்கப்படும்  1வீத டிப்ஸ் காசையும் (இது ஒரு நாளுக்கு 2டொலரோ 2.50 டொலரோ தான் அவர்களுடைய பஸ்காசுக்குக் கூட வராது.)அவர்களுக்குத் தெரியாமல் களவெடுக்கின்ற முதலாளிகள் தமிழ் முதலாளிகள்.

இப்படி இங்குள்ள தமிழ் முதலாளிகளுக்கு மலையகத்திலிருந்து நமது சக தமிழனை வடக்கத்தையான் என்று சொல்லி   கொண்டுவந்து ஏமாற்றி வேலை வாங்கிய மனநிலை இன்னமும் மாறவில்லை. அவர்களுடை மனதில் தங்களுக்கு வேலை செய்கின்ற அத்தனை தொழிலாளர்களும்  இன்னமும் வடக்கத்தையான்களே..

அவ்வளவு கீழ்த்தரமான வசவுகள். வதைகள் இன்னமும் இந்தத் தமிழ் முதலாளிகளிடத்தில்.

வேற்று இனத்து ரெஸ்ரோறன்ற் முதலாளிகளைப்போல் தமிழ் ரெஸ்ரோறன்ற் முதலாளிகள் இருக்கவில்லை. அவர்களில் அதிகமானவர்கள் தமது அறிவீனத்தால் தாங்களாகவே அழிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தின் மரபுகளை ஐரேப்பிய கனடிய நாடுகளிலும் முட்டாள் தனமாகப் பிரையோகித்தார்கள். 

யாழ்ப்பாணத்து முதலாளிகளாய் இங்கும் இருக்கவேண்டும் என்று விரும்பினார்கள் அதனால் அவர்களில் பலர்  முழுமையான வெற்றியை அடையவில்லை. கண்முன்னால் அழிந்து போனார்கள்.

இங்கு என்னுடன் வேலைசெய்த ஒரு லெனின் சின்னத்தம்பியைக் நிதமும் கவனித்து வந்தேன். அவர் தான் செய்கின்ற தொழிலுக்கு மிகவும் நேர்மையானவர். முதலாளி தனக்கு என்ன துரோகம்’ செய்தாலும் எப்படி ஏமாற்றினாலும் அதை அவர் அறிந்தாலும் அதற்கு எந்த ஒரு எதிர்வினையையும் ஆற்றமாட்டார். ஜீவமுரளியின் லெனின் சின்னத்தம்பி போல் மிகவும் புனிதமானவர்.

முதலாளி மீதான தனது கோபத்தில் மிகவும் சத்தமாக  “இவர்களுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.”  
என்று கொஞ்சம் சத்தமாகக் கத்தியயபடி தனது வேலையைத் திரும்பவும் தொடங்குவார். அவரைப்பார்க்க எங்களுக்குக் கோபம் வரும்.

எங்களை விடவும் தமிழ் முதலாளிகள் மிகவும் புத்திசாலிகள். தமது தொழிலாளிகளின் குடுப்ப நிலையை தினமும் அவதானித்துக் கொண்டிருப்பார்கள். அதில் மாற்றம் வந்துவிடக்கூடாது என்பது அவர்களுடைய மிகப்பெரிய விருப்பமாக இருந்து வருகிறது.
ஆனால் இப்போதோ நிலமை வேறு….

கனடாவைப் பொறுத்தவரை ரெஸ்ரோரன்ற் முதலாளிகளுக்கு இப்போது புதிய லெனின் சின்னத்தம்பிகள் வருவது இல்லை. அப்படி வருபவர்களும் லெனின் சின்னத்தம்பிகளாக இல்லை. ஒரு லெனின் சின்னத்தம்பியைக் கண்டுபிடிப்பது அவர்களுக்குப் பெரும் பாடாக இருக்கிறது.

இப்போது கேரளாவிலிருந்தோ பங்களாதேசிலிருந்தோ புதிதாக வரும்  லெனின் சின்னத்தம்பி ஒன்றிற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

ரொரன்ரோவிற்கு சன்சீ கப்பலில் வந்த ஆட்களே கடைசி லெனின் சின்னத்தம்பிகள். அவர்களே லெனின் சின்னத் தம்பிகளாக ரொரன்டோவில் இப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக… ஒருகாலகட்டம் வரையிலும் கோப்பை கழுவியவனாக தற்போது தொடர்ந்தும் ரெஸ்ரோரண்டில் வேலை செய்பவனாக எனது அனுபவம் இப்படித்தான் இருக்கிறது.

கதையைக் கதையாக்குவதில் இருக்கும் சவுகரியம் வாழ்வைக் கதையாக்குவதில் இருப்பதில்லை. அது ஜீவமுரளிக்கு வாய்த்திருக்கிறது. எனக்கோ கோபங்களுடனும் துன்பங்களுடனும் கடந்து சென்றுகொண்டிருக்கும் ஒரு கதையை எழுத்தில் கொண்டுவர வாய்க்குதே இல்லை. 

ஏமாற்றம் என்பது எல்லாத்தளத்திலும் இருந்தாலும் அன்றாடம் சந்திக்கும் ஒரே விதமான ஏமாற்றம் என்பதை யாரும் ரசிப்பது இல்லை. எனது நிலையோ இதே போல்தான்.

இதுவரை பலமான முறையில் பதிவாக்காது இருக்கும் ஒரு தளத்தை முரளி பதிவாக்கியிருப்பது மிகுந்த சந்தோசமானது.

ஒரு கோப்பை கழுவுபவன் தன்னளவில் புரட்சிகர லெனினாகவும் உள்ளரா பவ்வியமான சின்னத்தம்பியாகவும் வாழ்ந்து தொலைத்த பழி எங்களோடு முடியட்டும்.
நன்றி