Sunday 2 April 2023

பக்கத்தின் பக்கம் - சாருநிவேதிதா .3

பக்கத்தின் பக்கம் கற்சுறா
சாரு நிவேதிதாவின் பாரிஸ் பயணம் குறித்து நான் எழுதும் மூன்றாவது பதிவு இது. தன்னுடைய பாரீஸ் பயணம் குறித்து இவன் தனது கோணல் பக்கங்களில் மிக நீண்ட பதிவாக அதனை எழுதியிருந்தாலும், அவன் குறித்த எனது கருத்தினை முதலாவது பதிவாக நான் எழுதியவுடன் விரைவாகவே என்னைக் குறித்த பக்கங்களை அதிலிருந்து நீக்கிவிட்டிருந்தான் என்பதனை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். இவன் குறித்த பதிவை முதன் முறையாக நான் எழுதிய போது தொடர் பதிவுகளை நான் அவ்வப்போது எங்கேயேனும் எழுதுவேன் என்றே குறிப்பிட்டிருந்தேன். அதில் நம்மவரிடம் இருந்த கமாரா ஒன்றை எவ்வாறு திருட நினைத்தான் எனவும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கெனக் கொடுத்துவிட்ட பொருட்களையும் பணத்தையும் எவ்வாறு கையகப்படுத்தினான் எனவும் சொல்லியிருந்தேன். . இந்தப் பதிவில் பிரான்சின் ஒறதூர் என்ற கிராமத்திற்கு அவனை அழைத்துச் சென்ற கதையை எழுதுகிறேன். இது எனக்குச் சாத்தியமாகும் மூன்றாவது இடம். உண்மையில் இந்தக் கதையை எழுதும் போது மிகுந்த வெட்கத்துடனேயே நான் எழுதிக் கொள்கிறேன் என்பதனைச் சொல்லிக் கொள்கிறேன். இப்போதுள்ள நிலையில் இந்த விடயங்களை நீங்கள் வாசிக்கும் போது என்மீதும் எனது நண்பர்கள் மீதும் உங்களுக்கு அதிக கோபம் தோன்றுவதும், இவை எங்களுக்குத் தேவையான சம்பவம் எனவும் இவ்வாறு தமிழ்நாட்டுக்காரர்களுடன் சவகாசம் வைத்துத் திரிந்ததற்கு இதற்குமேல் இன்னும் வேணும் என்று தோன்றுவதும் சாத்தியமானதே. ஆனால் நமது நிலை அப்படியல்ல. நாம் எழுதத் தொடங்கிய காலங்களில் - அந்தத் 90இன் இறுதிக் காலங்களில் ஈழத்திலிருந்து எமக்கு எந்தத் தொடர்புகளும் இல்லை. எங்கள் குடும்பங்களினூடான தொடர்பும் அறுந்தறுந்து தொங்கிய தொடர்பாகவே இருந்த காலங்கள் அவை. யுத்தம் பல்வேறு நிலைகளில் ஈழத்தைச் சூழந்திருந்த காலங்கள் அவை. அப்பொழுது எக்ஸில் சஞ்சிகையை நாங்கள் வெளிக் கொண்டு வந்திருந்தோம். புலம்பெயர் சூழலிலும் சரி அதனைப் புகலிடம் எனச் சொல்லும் சூழலிலும் சரி எக்ஸில் சஞ்சிகையில் பலர் எழுதத் தயங்கிய காலமாக இருந்தது அது. அந்தக் காலத்தில் எமக்குக் கிடைத்த தொடர்புகள் மிக அதிகமாகத் தமிழ்நாட்டிலிருந்துதான் கிடைத்தது. எக்ஸில் சஞ்சிகைகள் சிலவற்றை நாம் தமிழ் நாட்டில் கூட அச்சிட்டோம். நமது புகலிடச் சூழலில் அச்சகத் தொடர்புகளை வைத்திருந்தவர்களது அடவாடித்தனங்களை விட எமக்குத் தமிழ்நாட்டின் தொடர்பு இலகுவானதாக இருந்தது. ஆனால் அவற்றை அங்கே அச்சிடும் தொடர்ச்சியை தொடர்ந்து செய்யமுடியாத கதை வேறு ஒரு கதை. அவை தனியாக எழுதப்பட வேண்டும். தமிழ் நாட்டிலிருந்து அ.மார்க்கஸ்- சாரு நிவேதிதா- லெனாகுமார்- விக்கிரமாதித்தயன்- கைலாஷ் சிவன்-ஜமாலன் போன்ற பலர் எக்ஸிலில் எழுதினார்கள். ஈழ யுத்தத்தின் மீதான தொடர் எதிர்க் குரலை அன்றைய பொழுதில் வெளிப்படுத்தி வந்த இதழ்களில் எக்ஸிலும் ஒன்றாக இருந்தது அதனோடு இணைந்து வேலை செய்த பலர் தமது பெயர்களைக் கூட வெளியிட வேண்டாம் எனச் சொல்லி எம்முடன் இணைந்திருந்த காலம் அது. அந்தக் காலத்தில் வெளிப்படையாக நுழைந்தவன் தான் சாரு என்ற அயோக்கியன். இவன் எங்களுக்கு ஏற்படுத்திய அவமானத்தை நான் வெளிப்படையாகச் சொல்லாது விட்டால் நான் தெரிந்தும் தவறு செய்தவனாவேன். இவனிடம் ஏமாந்த கதை எனக்கு வெட்கமெனினும் அதனைச் சொல்லாது விட்டால் அவமானம். அதனால் தான் இதனை எழுதுகிறேனேயொழிய சொல்வதானால் எனக்கு அவமானம் ஏதுமில்லை. அதனைச் சொல்வதனால் எனக்கு அவமானம் எனினும் அப்படிப்பட்ட அவமானமும் எனக்குப் பொருட்டில்லை. இனி அந்த ஓறதூர் கிராமத்திற்குச் சென்ற கதைக்கு வருகிறேன்.
ஒறதூர் என்ற கிராமம் பாரீசிலிருந்து ஏறத்தாழ 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். 1945 ம் 1944 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சில் உள்ள ஓறதூர்-சுர்-கிளேன் கிராமம், போரிடாத பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 643 பொதுமக்கள் ஜெர்மன் நாசிகளால் படுகொலை செய்யப்பட்டபோது அழிக்கப்பட்டது என்ற தகவலை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.. போருக்குப் பிறகு அருகில் ஒரு புதிய கிராமம் கட்டப்பட்டது. பழைய கிராமத்தின் இடிபாடுகளை நிரந்தர நினைவுச்சின்னமாகவும் அருங்காட்சியகமாகவும் இன்றுவரை பிரெஞ்சு அரசு பாதுகாத்து வருகிறது. இன்றுள்ள வசதியில் அதுகுறித்து கூகிளில் தேடினால் அதிக விடயங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அன்றைய காலம் அப்படியல்ல. எங்கள் நாடு யுத்தத்தால் சூழ்ந்திருந்தது என்பதனாலும் இதேபோன்ற படுகொலைகளை நித்தமும் எதிர் கொண்டிருந்ததாலும் இந்த ஒறதூர் கிராமத்தின் அடையாளம் எமக்குள் ஒரு உருக்குதலைத் தந்தது. இவ்வாறான ஒரு கூட்டுப்படுகொலையை கந்தன் கருணையிலும் காத்தான் குடியிலும் புலிகள் நிகழ்த்தியிருந்ததும் அதற்கும் மேலாய் ஊர் ஊராய் ஒழித்தழித்த இலங்கை அரசினது காவு கொள்ளல்கள் எண்ணிக்கையற்றது. அவற்றின் உதாரணங்களாய் பாவற்குளம் செட்டிகுளம் கிராமங்கள் அப்போது இவ்வாறான உரத்த யுத்த சாட்சியங்களோடு காட்சியளித்தவை. ஆனால் அதுபோன்ற பலவற்றின் சாட்சியங்களை நாமே பாதுகாக்கத் தவறினோம். நினைவலைகளில் கூட ஒளித்துவைக்கத் தவறினோம். இவ்வாறு பாதுகாக்கத் தவறிய குற்றத்தை மறந்து இன்று அந்தவகைக் குற்றங்களுக்கு என்ன ஆதரம் இருக்கிறது என இன்று எம்மை நாமே கேள்வி கேட்கிறோம். இதுதான் அபத்தம். ஆனால் இந்த ஒறதூர் கிராமம் ஜெர்மனிய பாசிசத்திற்கான உன்னத சாட்சி. இந்த சாட்சியை நேரடியாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சாருவை அழைத்துப் போனேன். தமிழகத்தில் இருந்து வந்த ஒரு”உன்னத” எழுத்தாளனுக்கு அதன் நேரடி உணர்வைத் தெரியப்படுத்தவேண்டும் என்பது நம் நண்பர்களது விருப்பமாகவும் இருந்தது. பாரீசில் “லூவ்ர் மியூஸியம்” “நோர்த் டாம் சேர்ச்” “ஈபிள்ரவர்” என்று மிக முக்கிய வரலாற்றுத் தளங்களை நாம் காட்டி வந்தாலும் பாரீசின் புறபிராந்தியங்களின் வரலாறுகளை ஓர் அனுபவத்திகாகவேனும் இவர்களுக்கு அறியச் செய்ய வேண்டும் என்ற விருப்பு நமக்கிருந்தது. அதன் நிமித்தமே சாருவை அங்கே அழைத்துச் செல்வதற்குத் திட்டமிட்டேன். என்னிடம் நீண்ட தூரம் பயணம் செய்வதற்குரிய வாகனம் இருந்தாலும் எனக்கு நீண்ட தூரப் பயணம் செய்த அனுபவம் இல்லாததால் என்னால் தனியே கூட்டிச் செல்ல முடியாதிருந்தது. ஒறதூர் கிராமம் பாரீசிலிருந்து ஏறத்தாழ 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமம். குறைந்தது 5 மணிநேரமாவது வாகனம் ஓட்ட வேண்டும். எனக்கு அந்த அனுபவம் அப்போது இல்லை. நாம் அனைவரும் “தங்கம்” என்று அழைக்கும் சுந்தரலிங்கம் அவர்களை ஓட்டியாக வரும்படி கேட்ட போது மிகுந்த விருப்புடன் சம்மதித்தார். ஒரு சமூக அக்கறையாளனாகவும் செயற்பாட்டாளனாகவும் சினிமா நாடக நடிகனாகவும் தொடர்ந்து இயங்கும் அவர் தமிழகத்திலிருந்து வந்திருக்கும் ஒரு “உன்னத” எழுத்தாளனுக்கு பிரான்சின் வரலாறை அறிந்து கொள்ள வைக்க எடுக்கும் முயற்சிக்கு தான் செய்யும் கடமை என்பதாக நினைத்து உடனேயே சம்மதித்தார். அதற்கான ஒழுங்குகளைச் செய்து கொண்டு மூவருமாகப் புறப்பட்டோம். மற்றய நண்பர்கள் எம்முடன் இணயமுடியாதபடி அவர்கள் வேலை இருந்தது. அக்காலத்தில்தான் நீண்ட காலம் செய்த வேலையிலிருந்து என்னை நீக்கியிருந்தார்கள். அதனால் எனக்கு அது சாத்தியமாகியது. அந்த வேலை நீக்கத்தால் நான் பெரும் பணக் கஸ்டத்திற்கு உள்ளாகியருந்த காலம் அது. இருந்தாலும் சாருவுக்கு இதனை அறியச் செய்வதில் இருந்த அக்கறை அந்தக் கஸ்டத்தைப் பொருட்படுத்தவில்லை. ஒறதூர் கிராமத்திற்குச் சென்று வர எடுக்கும் பெற்றோல் மற்றும் உணவுக்கான பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு நாங்கள் வெளிக்கிட்டோம். போகும் வழியெங்கும் கவிஞர் இன்குலாப்பின் பாடல்களைக் கேட்படியே பயணம் செய்து கொண்டு பிரான்சில் அகதிகளாக வாழ்வதின் அவலம் குறித்துப் பேசியபடியே சென்றோம். அதனை சாரு கேட்டானோ இல்லையோ தெரியாது. நீங்கள் எவ்வளவோ கஸ்டப்படுகிறீர்கள் ஆனால் தமிழ்நாட்டில பிணங்களுடன் புணர்வு செய்ய இளைஞர்கள் வரிசையில் நிற்கிறார்கள். இறந்த சில்க் ஸ்மிதாவுடன் எத்தனை பேர் புணர்ந்தார்கள் தெரியுமா உங்களுக்கு? என்று தமிழ் நாட்டு இளைஞர்கள் குறித்து வசைபாடியபடியே வந்தான். தனக்குத் தமிழ் நாட்டில் வாழப் பிடிக்கவில்லை என்றான். ஒரு எழுத்தாளன் நிம்மதியாய் வாழக்கூடிய நாடு அது இல்லை என்றான். நாம் கிட்டத்தட்டப் பாதித் தூரத்தைக் கடந்திருந்தோம். ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் நிறுத்தி பெற்றோல் நிரப்பிக் கொண்டு பிரெஞ்சுக்காரர்கள் விரும்பி உண்ணும் உணவான “ French baguette sandwich” இல் மூன்று சான்ட்விச்சை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துக் கொண்டு மீளப்பயணித்தோம். நானும் தங்கமும் சான்ட்விச்சை உண்ணத் தொடங்கியிருந்தோம் சாரு அதனைத் தொடவேயில்லை. சாப்பிடுங்க எனச் சொன்னதும் சாண்ட்விச்சைத் தூக்கியெறிந்து இந்தக் கறுமத்தையெல்லாம் என்னால் திங்க முடியாது என்றான். இங்கே புரியாணி பரோட்டா எல்லாம் வாங்க முடியாது சாரு இது ஒரு அற்புதமான உணவு. பிரெஞ்சுக்காரர்கள் ஒருநாளும் வெறுத்துக் கொள்ளாத சாப்பாட்டு வகை இது. முதலில் இதனைச் சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு எறியுங்கள் என்றேன். அவன் மசியவில்லை. விழுந்த இடத்திலிருந்து சான்ட்விச்சை எடுக்கவும் இல்லை. அவன் “திங்கவும்” இல்லை. நாம் அது குறித்து அந்தப் பேச்சை அத்துடன் நிறுத்திவிட்டோம். நாம் ஒறதூருக்குள் நுழைந்து கொண்டிருந்தோம். மிகுந்த சிரமத்துடன் எங்கள் பின்னால் நடந்து கொண்டிருந்தான் சாரு. தன்னால் இவ்வளவு தூரம் நடக்கமுடியாது எனப் புறுபுறுத்தபடி வந்து கொண்டிருந்தான். அந்தக் கிராமத்தின் நுழைவாயிலில் “சைலன்ஸ் பிளீஸ்” என வாசகம் எழுதப்பட்டடிருந்தது. அதனை அவனுக்குச் சுட்டிக்காட்டினேன். அதன் பின் அவன் வாயைப் பொத்திக் கொண்டு வந்தான். இடிந்த கட்டடங்களும் அதற்குள் மாண்டுபோன மக்களின் வாழ்வு உபகரணங்களும் என கைவிடப்பட்ட தடயங்களுக்குள்ளால் நாங்கள் நடந்தபடி இருந்தோம். எந்த வீட்டில் எத்தனை பேர் வாழ்ந்தார்கள், எந்த இடத்தில் உணவகம் இருந்தது என்ற அடையாளங்களை மட்டும் இடிந்து போகாத ஒரு சுவரில் குறிப்பிட்டிருந்தார்கள். முடியுமானவரை எனது கமராவைக் கொண்டு அவனைப் படம் பிடித்தேன். அவனுக்கு எந்தவித ஈர்ப்பும் அந்த இடங்கள் குறித்து இருக்கவில்லை. வெறும் சலிப்போடே அவற்றை அவன் கவனித்தான். முடியுமானவரை அவற்றைச் சுற்றிக்காட்டியபின் நாம் பாரீஸ் திரும்ப முடிவெடுத்தோம். மீண்டும் ஏறத்தாள 500 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் காரை நிறுத்திப் பெற்றோல் நிரப்பிக் கொண்டு பெருந்தெருவில் இறக்கினோம். உண்மையில் அந்தப் பயணத்திற்காக நாம் அறுதியட்டு வைத்திருந்த செலவை நாம் தாண்டியிருந்தோம். பரீசை நெருங்கும் தருவாயில் எம்மிடம் கையிலிருந்த பணம் முற்றாகத் தீர்ந்திருந்தது. இறுதியாக நாம் செல்லும் பெருந்தெருவினைக் கடப்பதற்குப் பணம் செலுத்த வேண்டியிருந்தது. எம்மிடம் அதற்குரிய தொகை இருக்கவில்லை. அவசர வேதைவைக்காக உதவும் எனக் கையில் வைக்கச் சொல்லி எப்போதோ சாருவிற்கு கொடுத்த பணத்தை அவன் வைத்திருந்தான். “அதனைத் தாருங்கள் பாரீஸ் வந்ததும் திரும்பத் தருகிறோம்” எனச் சொல்லிக் கேட்டோம். முதலில் மறுத்தான். பின்னர் வேறு வழியின்றி எம்மைத் திட்டடியபடி “இப்படியாகுமென்றால் நான் இதற்கு வந்திருக்க மாட்டேன்” என்றான். அவனது பணத்தை எமக்காகத் திரும்பக் கேட்கவில்லை. அவனுக்கு நாம் கொடுத்து வைத்திருந்த பணத்தையே கேட்டோம். அதனையும் திரும்பத் தருகிறோம் என்று சொல்லியே கேட்டோம். ஆனால் அந்த அயோக்கியன் அதற்கு எங்களைத் திட்டினான். தனக்கு இந்த ஒறதூரையே பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றான். நானும் தங்கமும் ஆளையாள் முழித்துப்பார்த்தபடி திண்டாடினோம். உண்மையில் எம்மை நினைத்து இன்றுவரை வெட்கப்படுகிறோம். இந்த வகை முட்டாள்களாக நாம் இருந்திருக்கிறோம் என்பது இன்றுவரை உறுத்துகிறது. ஆனால் இந்த அயோக்கியனை இன்னொரு உலகம் இன்றும் எழுத்தாளனாகக் கொண்டாடுகிறது. சமூகத்தின் அத்தனை விழுமியங்களையும் மனங்கொண்டறிந்து அதற்குள்ளாகத் தன் அறிவினூடாகப் பயணித்து எதிர் கொள்ளும் எழுத்துக்களைத் தருபவர்களையே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வாழ்வில் இந்த வகைத் தற்குறிகள் நம்மை வந்தடையும் போது அல்லது காண நேரும் போது எழும் ஏமாற்றம் சொற்களில் சொல்ல முடியாதவை.
சாருநிவேதிதாவின் பாரீஸ் பயணத்தில் நான் கட்டறிந்த அசிங்கங்கள் ஏராளம். ஒரு எழுத்தாளனுக்கு இருக்கக் கூடிய எந்தத் தார்மீகக் கரிசனையும் அவனிடம் இருந்ததில்லை. அண்மையில் நோர்த்தடாம் தேவாலயம் எரிந்தபோது அவன் அவலக்குரலெடுத்து தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தான். அழகிய பாரீசின் தேவாலயம் எரிந்தது என்று. அந்த அழகிய பாரீசின் அதிகமான இடங்களை நானே அவனுக்குச் சுற்றிக் காட்டினேன். அந்தப் பொழுதுகளிலெல்லாம் நாங்கள் பட்ட அவமானங்கள் கொஞ்சமல்ல. புலம்பெயர் வாழ்வின் எந்த அர்த்தங்களையும் அவனால் ஒருபொழுதிலும் புரிந்து கொள்ள முடியவில்லை. தான் ஒரு பெரிய ஆன்மா. அதற்கு அடிமைச் சேவகம் செய்ய வேண்டியவர்கள் நீங்கள் என்பதாகவே அவனது ஒவ்வொரு செயற்பாடுகளும் இருந்தன.ஆனால் தற்குறியாகத் தமிழ் நாட்டில் எந்த அவலத்தைச் சொல்லித் தன்னை முன்நிறுத்த முடியுமோ அதனை மட்டுமே அவன் எழுதிக் கொண்டிருந்தான். அதற்காக அவன் பணமும் பெற்றான். என்வீட்டில் நடந்த சம்பவம் ஒன்றையே அவன் கதையாக எழுதி அதனையும் தவறாக எழுதி குழுதம் இதழிற்கு அனுப்பிப் பணமும் பெற்றான்.(குழுதம் கதை குறித்த பதிவினை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.) இவனைப் பின்பற்றும் இந்த அயோக்கியத் தனத்தைப் பின்பற்றும் பலர் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள். ஈழத்திலும் இருக்கிறார்கள் புலம் பெயர் தேசத்திலும் இருக்கிறார்கள் நாங்கள் முன்பு இருந்ததைப் போல். என்ன வேடிக்கை என்றால் இந்த சமூகம் தங்களை இன்னும் நம்புகிறது என இந்த அயோக்கியன்கள் நம்புகிறார்கள். அப்படி ஒருபொழுதிலும் நிகழ்ந்ததில்லை. தற்குறிகளை இந்த சமூகம் ஒவ்வொரு பொழுதிலும் தூக்கி வெளியிலே போட்டுவிடுகிறது. அவமானப்படுத்திவிடுகிறது. தற்குறிகளை இந்த சமூகம் ஒருபொழுதிலும் கையில் ஏந்தி நிற்பதில்லை. அது இந்தத் தற்குறிகளுக்குத்தான் தெரிவதில்லை. நன்றி அபத்தம் சஞ்சிகை ஜனவரி இதழ் http://www.thayagam.com/wp-content/uploads/2023/01/Apaththam-first-issue-1.pdf

Saturday 1 April 2023

தொட்டால் தீட்டு- கைவிடப்பட்ட கவிதைகள் குறித்த கதை.

 “தொட்டால் தீட்டு”








கற்சுறா 


சாதிய மனோபவத்தில் மட்டுமே காலத்தைக் கழித்து வரும் சமூகம் தன் வாழ் காலத்தில் எவ்வாறு வாழ்ந்து முடிக்க முனைகிறதோ அவ்வாறே  அது தன் சீர் கெட்ட மனதை தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றிலும் சுமத்த முனைகிறது. 


அதனையே இலக்கியப் பரப்பிலும் செயற்படுத்த முனைகிறது.  அதன் வழி நின்று தான் சார்ந்து இயங்கும், தன்நலன் கருதும் இலக்கியங்களையும்  இலக்கியக்காரர்களையும் மட்டுமே அடையாளம் கொள்ள முனைகிறது.  இந்த அடையாளங்களை விலத்தி ஓடும் இலக்கியங்களையும் இலக்கியக்காரர்களையும் எனது அறிவுக்குட்பட்டு பதிவு செய்தலே இந்த எழுத்து. இங்கே நான் கட்டித்தழுவமுனையும் ஈழத்து எழுத்தாளர்கள் குறித்து எழுதும் பதிவே இது. இதன் தொடக்கத்தில் நமது சூழலில் நாம் பேச வேண்டிய கவிதைகள் அதன் தர்க்கங்கள் குறித்து எழுத முனைகிறேன். இந்த எழுத்துக்கள் ஏன் நமது பெரும்பரப்பில் பேசப்படுவதில்லை. ஒரு உரையாடலுக்காக் கூட அவை ஏன் கவனம் கொள்ளப்படுவதில்லை என்று நாம் பேசியாக வேண்டும். நமது பெரும்பரப்பு என்பது எந்த நிலைப்பாடுள்ளது என்பதனை நாம் தொடர்ந்து பேசுவதினூடாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.  நாம் தொட்டால் நமக்குத் தீட்டு வந்து விடும் என்ற ஆதிக்க மனநிலை கொண்ட எழுத்து அறிதல் முறையை இலக்கியச் சூழலிருந்து காடாத்தவே இந்த எழுத்தின் தொடக்கம்.


 உரையாடல்களால் மட்டுமே அதன் சாத்தியம் நிகழும் 

அந்த உரையாடலை எங்களுக்குள் வளர்த்துக் கொள்வோம்.

முரண்படுவோம்.


உரையாடல் நிகழவேண்டும் எனச் சொல்லிக் கொண்டு “தொட்டால் தீட்டு” என  சமூகம் கொண்டலையும் சாதிய மனநிலையிலிருந்து நாம் இலக்கியத்தையும் அணுக வேண்டாம்.


தொடக்கத்தில் ஈழக்கவிதைகளில் கவனம் கொள்ளப்படாத கவிதைத் தளம் பற்றிப் பேசத் தொடங்குகிறேன்.




இங்கே எழுதப்படுவது கவிதைக்கான வரை வரம்பு குறித்தானதல்ல. சொல்லப்பட்ட கவிதையின் தர்க்கங்களுக்குள்ளும் நின்று பேசும் விடயமுமல்ல. சீரான நடைபாதையில்  நடந்து செல்லப்பட முன்வைக்கப்பட்ட  சந்தர்ப்பத்தில் நடைக்கு அழைக்கப்படாக் கவிதைகள் குறித்து சிலவற்றைப் பேச வேண்டும்.


போடுதடிகளின் கவிதை அடையாளத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் கவிதைகள் எப்பொழுதும்  எம்மைப் பேரானந்தம் கொள்ள வைப்பவைகள்தான்.. வாசிப்பின் இதத்திலிருந்து மட்டுமல்ல அவை  இந்த சமூகத்தைச் சுட்டி நிற்கும் தர்க்கங்கிளிலும் எம்மைப் பேருவகை கொள்ளச் செய்கிறது.


1.

கனமழை பெருத்து ஓய்கிறது.

காற்று புயலாய் வீசுகிறது.

சக்கரங்களை உருட்டத் தொடங்கும் சிறார்களின் சிரிப்பொலி.


இன்னொரு பெருமழை.சோவெனப்பெய்ய

வீட்டிற்குள் நுழைகிறார்கள் சிறுவர்கள்.



2.

தற்செயலாகத் தான் முறைத்துப் பார்த்தது போது

சற்று நேரத்தில்

செயற்கையாகப் புன்னகைத்தனர்

என்னவோ யோசினையில்

கைகள் முட்டி விட்டதாக

தொட்டுக்கொண்டனர்

இரு குவளைகளுக்கான நீர் கொதித்துவிட்டது

மேசையில்

அவர்களுக்கு நடுவில்

வெறுந்தேநீர் ஆவிவிட்டபடி

இப்போது

அமைதியாக நிறைவேறியது ஒப்பந்தம்

கசப்பின்றி அருந்த

அவரவருக்கான சீனியை அவரவர் போடட்டும்.

3.

தன் தோள்களை உயர்த்தியும்

 கிளைகளை அசைத்தும்

 இலைகளால் நகைத்தும்

 உடல் மொழியால்

 தன் பேச்சுக்கு மெருகூட்டியது

 மரம்

நாட்கள் கழிய

 கிளைகளும் நுனிகளில் முகையும்

 அரும்பும் துளிரும் விரியத் தொடங்கின

 என்னுள்.

4.

நுளம்புகளுடன்  கைகுலுக்கி கதைக்கதான் ஆசை.

அதற்குள் செத்துவிடுகிறார்கள்

ஒரு தடி எடுத்து அடித்ததில்லை

மற்றவர் இரத்தத்தினை உறிஞ்சிக்

குடிப்பது தவறு

ஒரு கைலாகு கொடுத்து

கதைக்கலாமென்றால்

அதற்குள் இறந்துவிடுகிறார்கள்

 

 

 

என்றவாறாகப் பரவலாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்  இந்தவகைத் தமிழக் கவிதை வரிகள் என்ன வகை தர்க்கத்தை நமக்குள் விதைக்கின்றன. இவற்றால் நமக்குள் என்ன உரையாடல்   நிகழும்?  இந்த வகை வரிகளுக்குள் இருந்து உருக்கொள்ளக் கூடிய விதை எது? என்று கேட்டால் எதுவுமில்லை. இப்படித்தான் இழவெடுத்தலைகிறது ஈழத்துக் கவிதைச் சூழல். இதற்குள் பரீட்சாத்தக் கவிதைகள் என்றும் மற்றவருடைய கவிதைகளை மீளத் திருத்தி எழுதுதல் என்றும் கவிதைக்கான போஸ்ட் மோர்ட்டம் என்றும் இன்னொருபக்கம் கவிதைக்கு வைத்தியம் பார்க்கிறார்கள்.

 

ஆனால் இவற்றையெல்லாந்தான் நாம்  தற்காலக் கவிதைகள் எனவும் இதனை எழுதுபவர்களைக் கவிஞர்கள் எனவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்தச் சமூகத்தை தன் முன்னால் நிறுத்தி அதனை எதிர்கொண்டு உளல வைக்கும் தர்க்கம் கொண்ட கவிதைகளை அதனை எழுதிவிடும் கவிஞர்களை  இந்தப் “புதிர்க்”  கவிதைச்  சமூகத்தினரால் புரிந்து கொள்ளளவே முடிவதில்லை. இந்த வகைப் புதிர்கவிதைத் தொகுப்பாளர்களால் தொகுக்கப்படும்  கவிதைப் பரப்பிற்குள், எதிர் கொண்டுழலும்  கவிதைகள் தெரிவு கொள்ளப்படுவதில்லை.  இந்த வகைப் புதிர்க்கவிதைச் சமூகத்தினரால் மொழி பெயர்ப்பிற்குள்ளாகும் கவிதைகளுக்குள்ளும் உளல வைக்கும் கவிஞர்களின் கவிதைகள் அடங்குவதில்லை. அப்படி அடங்கினாலும் இவை ஒரு அடையாளத்திற்கானதாக இருக்குமேயல்லாமல் அந்தக் கவிஞர்களின் தர்க்கம் கொண்ட கவிதைகளை அவர்களால் விளங்கிக் கொள்ளவும் முடிவதில்லை. மொழி பெயர்க்கவும் முடிவதில்லை. அதனைத் தமது தொகுப்பிற்குள் கொண்டு நகர்த்தவும் முடிவதில்லை.  

அதனை விட இந்தக் கவிஞர்களை அவர்களால் அடையாளம் கொண்டு நெருங்கவும் முடிவதில்லை. கவிதை பற்றி உணர்பவர்களால் மட்டுமே இவர்களின் கவிதைக்காலை அன்றாடம்  கட்டித்தழுவ முடிகிறது. இதற்கான ஒரே காரணம் கவிதை குறித்த அறிதல் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. அவர்கள் கொண்டியங்கும் அறவு கெட்ட அரசியல் கருத்துக்களுமேதான் காரணமாக இருந்து விடுகிறது. ஒரு கவிதை குறித்த பார்வை என்பது அது புலமையோடு மட்டும் கணக்கிட்டுக் கொண்டுவிட முடியாது. 

இந்த வகைப்பாட்டுப் புரிதலோடு இன்று பெருகியெழும் கவிதைத் தொகுதிகளின் வெளியீடுகளும் ஏற்கனவே வெளிவந்திருக்கின்ற எண்ணற்ற கவிதைத் தொகுதிகளும் குறித்து நாம் மலைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதனால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. நமக்குள் எழுந்திருந்த எத்தனையோ கவிஞர்கள் கவிதைத் தொழிலை மறந்து வேறு தொழிலுக்குப் போய்விட்டார்கள். பணத்தை மட்டும் குறிபார்த்து இயங்கும் தமிழ்நாட்டுப் பதிப்பகங்கள் யார் எதை எழுதிக் கொடுத்தாலும் “தமிழ்ப்பரப்பில்  முக்கிய கவிதைகள்” என்றவாறாக அதற்கு ஒரு வியாக்கியானம் எழுதிப் பதிப்பிட்டு விடுவதால் அவை நமக்குள் எவ்வித தர்க்கங்களையும் ஏற்படுத்திவிடுவதில்லை. அவை இந்த சமூகத்திற்குள் நிலைத்து நிற்பதும் இல்லை.

இந்த வகைத் தமிழ்ப்பரப்பின் முக்கிய கவிதைகளின் பரப்பிலிருந்து நான் கவனம் கொள்ளும் ஒரு கவிஞராக, அண்மைய காலத்தின் பெரு அதிர்வுகளையும் காலாவதியாகாத கவனக் குவிப்போடு கவிதையைக் குலைத்து விடும் மனப்பான்மையோடு வர்த்தைகளை நகர்த்தும் கவிஞராய் இந்த இடத்தில்  மைக்கேலை அடையாளப்படுத்துகிறேன்.

Jeyaruban Mike Philip என்ற பெயரில்  எழுதிவரும் மைக்கேலுக்கு மிக நீண்ட இலக்கியத் தொடர்ச்சியும்   ஈழப்போராட்டப்  வாழ்வு முறையும் உண்டு. அவை வேறு இடத்தில் பேச வேண்டியவை. ஆனால் அந்த மைக்கேலை எழுத்துக் கூடாக மட்டும்  நெருங்கியவன் என்ற அடிப்படையில் அவரது எழுத்து முறை எமக்குள் என்ன தர்க்கத்தை விளைவிக்கக் கூடியவை என்பதனையும் அவை எவ்வாறு கவனம் கொள்ளப்படுகிறது என்பதனையும் சொல்லும் இடமே இது.(மைக்கேலின் படங்களில் அவருடைய எழுத்தின் அடையாளத்தை முன்வைத்து அணுகும் போது எனக்குப் பிடித்த பார்வை இது என்பதால் இந்தப் படத்தைப் பதிவு செய்கிறேன்.)





 

அண்மையில் மைக்கேல் எழுதிய இரண்டு பதிவுகள் குறித்துப் பேசுவதன் மூலம் இந்தப் பதிவினைத்  தொடங்குகிறேன்.

 

  1. ஒரு அனுபவப் பகிர்வு.

*******************

உங்களுக்குத் தெரியும், நான் ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உணவு பரிமாறுபவன்.

கடந்த மூன்று வருடங்களாக கோவிட் வைரஸ் உக்கிரமமாக இருந்தபோதும், நான் கோவிட் நோயாளிகளுக்கு உணவு கொண்டுபோயிருந்தேன். வைரஸ் என்னைத் தாக்கவில்லை. மிகவும் பாதுகாப்பான வலயத்தில் உலவியதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதைவிட, எனக்கு herd immunity இருப்பதாக நான் நம்பியிருந்த பொய்த்துணிச்சலும் காரணமாக இருக்கலாம்.(இருக்கலாம்!).

***

கடந்தவாரம் ஏதோவொரு பிறள்நடவடிக்கையால் என்னைக் கோவிட் பீடித்துவிட்டது.

காய்ச்சல், வயிற்றாலடி, மூட்டுநோவு என இரண்டுநாள் துன்பமாக இருந்தது.

மூன்றாவதுநாள், சாருநிவேதிதாவின் இணையப்பக்கத்தைப் படிக்கக்கூடியதாக உடம்பு முன்னேறியிருந்தது.

****

இப்போது இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்றால், கோவிட்டின் பின்விளைவாக, எனக்கு ஞாபகம் தடுமாறுகிறது…. மூக்கில் இருந்து இரத்தச்சொட்டு வீழுகிறது… நீண்ட சுவாசமெடுக்கும்போது உடல் நடுங்குகிறது. ஜெயமோகனையும் படிக்கமுடியவில்லை. முகநூல் கவிதைகளைப் படிக்கும்போது, கண்களில் கண்ணீர் வருகிறது. நான் அவ்வளவுக்கு உணர்ச்சிகரமானவன் இல்லை என்றாலும், கோவிட் என்னைப் பலவீனன் ஆக்கிவிட்டது.

****

முடிந்தவரை கவனமாக இருங்கள் நண்பர்களே! இதுவொரு ஆட்கொல்லி நோய்.

(30 நவம்பர் 2022)

 

இந்தப் பதிவை அவர் எழுதியபின் அவரை நலம் விசாரித்தவர்களும் அவரைக் குணமடைய வேண்டும் எனச் சொன்னவர்களுமே அதிகம். இதற்குள் சொல்லப்பட்டிருக்கும் இலக்கிய அரசியற் கருத்து நிலையை அவர்கள் தெரிந்து கொள்ளவோ அல்லது அது குறித்து உரையாடவோ அவர்களால் முடியாதிருந்தது. இதுதான் இன்றைய அறிதல் நிலை. 

ஒரு ஆட்கொல்லி நோயிலிருப்பவருக்கு ஆபத்தான எழுத்துக்களாக அக்காலத்தில் படிக்கத் தடை செய்யப்பட வேண்டிய எழுத்துக்களின் நிலைய அவர்  சொல்ல வரும் காலம் மிக முக்கியமானது என நினைக்கிறேன்.

ஒரு அரசியல் நிலைப்பாடும் அது குறித்த காறார் புரிதலுமற்ற எழுத்துக்களினூடாக மட்டும்  அன்றாடம் அலைந்துழலும் நமக்கு தர்க்கம் “டபெக்”தைத்து விடுகின்றன.அவை உள் நுழைந்து எம்மை உருக்குலைய வைக்கின்றன. அந்த எழுத்துக்களின் காலை நாம் கட்டிப்பிடித்தபடியேதான் தினமும் கடக்கிறோம். அந்த வகையில் நான் மேற் சொன்ன பரம பிதாக்களின் வாய்ச் சொற்களில் நுழையாத பெயர் மைக்கேல். அவர் குறித்து நிற்கும் எழுத்துக்களை விரிவாக எனது அறிதலுக்குள்ளால் பேசுவதே பெரும்பணி. 

கனடா மொன்றியலில் வாழும் ஒரு ஈழத்து எழுத்தாளர். அவர் எழுதிய இன்னொரு பதிவு இது.

  1. stethoscope

*********************

எதிர்க்கவிதை எழுதக்கூடிய ஒரு வைத்தியனை நேற்று lift இல் கண்டேன்.

ஓய்வுபெறக்கூடிய வயது என்றாலும், அகன்ற மார்பும், பிடரிமயிர் கீழிருந்து சிலிர்த்து மேல்நோக்கியிருந்த சிங்கமயிருடனும்,நையாண்டிபேசும் கண்களுடன் எனைச் சந்தித்தார்.

***

நான் ஏழு மாடிகளிலிருந்து சாப்பாட்டு வண்டில்களைக் கீழே, கழுவுவதற்காக இழுத்துவரவேண்டும். ஏழாவது மாடியிலிலிருந்து ஆரம்பித்து, ஆறு,ஐந்து, நாலு, மூன்று என ஒவ்வொரு தளத்திலும் உணவு வண்டில்களைத்தேடிக்கொண்டு கீழே வருவேன்.

***

நான் வழமைமைபோல ஏழாவது மாடியிலிருந்து, கீழிறங்கும்போது, ஆறாவது மாடியியில்,கழுத்தில் தெதஸ்கோப்புடன் இந்தக்கிழவர் நுழைந்தார்.

“நானும் உன்னுடன் பயணிக்கலாமா” எனக்கேட்டுக்கொண்டு பதிலுக்குக் காத்திராமலேயே liftஇற்குள் நுழைந்து கொண்டார்.

****

“உள்ளே வாருங்கள் டாக்டர்” என வரவழைத்த பின், நான் ஒவ்வொரு மாடியிலும் தங்கிவரவேண்டியிருக்கும் என்பதை விளங்கப்படுத்தினேன்.

“நான் உனக்காகக்காத்திருப்பேன். எனக்கு அவசரமொன்றுமில்லை” என்றார்.

****

நான் ஒவ்வொரு மாடியிலும், உணவு வண்டில்களைத் தேடி இழுத்துக்கொண்டுவரும் வரைக்கும், lift இன் கதவுகளைத் திறந்துவைத்துக் கொண்டு எனக்காகக் காத்திருந்தார்.

நான்கு உணவுவண்டில்களைச் சேகரித்துக்கொண்டு தரைத்தளத்தில் நான் வெளியேறுவதற்கு முன்னர்தான் கவனித்தேன், டாக்டர் நிலக்கீழ் அறைக்குச் செல்வதற்கான பொத்தானை அழுத்தியிருந்தார். அங்குதான் mortuary இருக்கிறது.

****

“மிக்க நன்றி டாக்டர்! உங்களது நேரத்தை நான் விரயம் செய்துவிட்டேன். மன்னிக்கவும்” என்றேன்.

“Dude! எனக்கு ஒரு அவசரமுமில்லை. என்னுடைய patients ஏற்கனவே இறந்தவர்கள்தானே!” என்றார்.

(6 நவம்பர்2022)

 

மைக்கேலின் எழுத்தின் தர்க்கங்கள் குறித்து நாம் அதிகம் பேச வேண்டியிருக்கிறது. வாழ்வின் பெரும் வலிகளை தன்னுடைய வாழ்பனுபவத்தின் வழி மெல்லக் கடத்தி மொழியிற்குள்ளால் அதனைச் சீர் குலைத்து விடுவதில் வல்லவர் அவர். 

வயோதிபர் நிலையத்தில் உணவு பரிமாறும் தொழிலில் ஏற்படும் சிறு சிறு சம்பவங்களைச் சொல்வதாக உணரப்படும் கதைகளின் உள்நோக்கம் மிகப்பெரியது. மனித சமூகத்தின் துர்வாடையை லாவகமாக நுகரச் செய்யும் கதைகள் அவருடையவை.

எப்பொழுதும் தன்னுடைய கருத்தியலில் இருந்து மற்றவர்களால் கரைத்துவிட முடியாத அவர் இன்று வரை தனன்னுடைய எழுத்துக்களை தொகுத்துவிட விரும்பவில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தின் எத்தனையோ சீரழிந்த கதைகளை அனுபவத்தினூடகக் கொண்டிருக்கும் மைக்கேல் தன்னுடைய எழுத்திற்குள்ளால் அதனை அவ்வப்போது எழுதிக் கொண்டேயிருக்கிறார். அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து அவதானிப்பவர்கள் அதனை அவ்வப்போது  உணர்ந்து கொள்ள முடிந்தாலே பெரும் சிறப்பு.

ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை. மிகக் கவனமாக இவ்வாறான எழுத்துக்கள் நாம் வாழும் சமூகத்தில் கவனம் கொள்ளப்படுவது தவிர்க்கப்படுகிறது. சிக்கலேதுமற்ற வாசிப்பு மனதிற்குள்  எந்தத் தர்க்கங்களையும் நிகழ்த்தாத கவிதைகள் எழுதுபவர்களைத்தான்  கவிஞர்கள் என அடையாளம் காட்டிக் கொண்டாடும் போலி மனநிலையை காலாவதியாக்க வேண்டும். இந்த சமூகத்தை தம்முடைய ஒற்றை விரலால் சுட்டி நிற்கும் எழுத்துக்களை இன்றுள்ள பலர் தொட்டுவிடவும் விரும்புவதில்லை. அவை  தமக்கும் தமது எழுத்திற்கும் எப்பொழுதும் பெரும் இடைஞ்சல் தரக் கூடியது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். கவிதை குறித்து உரையாடத் தொடங்குவதாகச் சொல்லும் பல தளங்களில் இந்த உரையாடல் நிகழுவதில்லை. மைக்கேலின் எழுத்துக்களை தொடர்ந்து நாம் அணுக முற்படும் வேளை இன்னும் பல விடயங்களை மேற்கொண்டு பேச முடியும். தொடர்ந்து பேசுவோம்.


நன்றி அபத்தம் சஞ்சிகை ஜனவரி இதழ் http://www.thayagam.com/wp-content/uploads/2023/01/Apaththam-first-issue-1.pdf