காலம் இதழ் ஆசிரியரான செல்வம் அருளானந்தம் அவர்கள் “ அகழ்” மின்னிதழிற்கு அளித்திருந்த நேர்காணல் அவதூறும் குழறுபடிகளும் மிகுதியாகக் கொண்டிருப்பதனைத் தெரிவுபடுத்தி முகநூலில் மூன்று குறிப்புக்களாக எழுதியிருந்த பதிவினை மேலும் சில திருத்தச் சேர்ப்புக்களுடன் இங்கே பதிவு செய்கிறேன்
செல்வம் அண்ணை : 1-2-3-4.
நீண்ட ஒரு காலத்தின் முன் முதன் முதலாகப் பாரிசில் செல்வம் அண்ணையைச் சந்திக்கக் கிடைத்தது.
காலம் செல்வம் அவர்கள் வந்திருக்கிறார் என அறியப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு மிகவும் எண்ணிக்கை குறைவான ஆட்களைக் கொண்டிருந்த நிகழ்வு அது. மிக இயல்பாகவே எவ்வளவு பிரச்சனையான விடயத்தையும் பகிடியாகக் கடந்து போகக் கூடிய வல்லமை வாய்ந்த செல்வம் அண்ணாவிடம் இலக்கியம் சமூக அரசியல் பற்றிய ஒரு கலந்துரையாடலாக அனைவரும் உரையாடிக் கொண்டிருந்தோம் .
ஒரு இடத்தில் கனடாவில் பெண்ணியவாதிகளது செயற்பாடுகள் எப்படியிருக்கின்றன என ஒருவர் வினாவிய போது, மிக இயல்பாகவே எவ்வளவு பிரச்சனையான விடயத்தையும் பகிடியாகக் கடந்து போகக் கூடிய வல்லமை வாய்ந்த செல்வம் அண்ணா…
‘ அதுவாங்கோ… அங்க பெண்ணியவாதிகள் எண்டு இருக்கினமுங்கோ அவையள் எங்கட குடும்பத்துக்குள்ள வந்து சிரித்துப்பேசி நீங்கள் சந்ததோசமாக இருக்கிறிங்களா எண்டு விசாரிப்பினம். இல்லை எண்டு சொன்னா பிரிச்சு விட்டிட்டுப் போவினம். ஒம் எண்டாலும் பிரிச்சு விட்டிட்டுப் போவினம்….’ எண்டார்.
மிக இயல்பாகவே எவ்வளவு பிரச்சனையான விடயத்தையும் பகிடியாகக் கடந்து போகக் கூடிய வல்லமை வாய்ந்த செல்வம் அண்ணரின் நிலை அன்றய நிகழ்வில் எப்படியிருந்திருக்கும் என்பதனை நாங்கள் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.
நிகழ்வு முடிய வெளியில வந்து ஒரு சிகரட்டை எடுத்து புகைத்தபடி ‘இப்படியெல்லாம் கோவிப்பினம் எண்டு தெரியாது. அப்படி நான் நினைத்துச் சொல்லயில்ல.’ நான் சும்மா முசுப்பாத்தியாயிருக்கும் என நினைத்துச் சொன்னேன்.’ என்றார்.
ஆனாலும் இவ்வாறு முசுப்பாத்தியாக நினைத்துத்தான் இந்த நேர்காணலையும் வழங்கியிருக்கிறார் என்று நான் கருதவேயில்லை.
அவருக்கென்று ஒரு நிலைப்பாடு இருக்கிறது. ஒரு இலக்கியச் செயல் முறை இருக்கிறது. அரசியல் செயற்பாடு இருக்கிறது. அது வெறுமனே பகிடி என்ற போர்வையில் நுணுக்கமாகக் கையாண்டு மிகப் பெரிய சமூக நெருக்கடிகளை காயடித்து ஒன்றுமே இல்லாதவாறு பூசி மெழுகிவிட முனைகிறது அது.
அதன் ஒரு சாரம் தான் இந்த நேர்காணல் அதன் தொடக்கத்தையே
“தமிழில் எவ்வளவோ பெரிய ஆளுமைகள் இருக்க பிரியோசனமோ உறுதியான அரசியல் கருத்துகளோ இல்லாமல், தனிய இலக்கியத்தின் பக்கமாய் இருக்கும் என்னை ஏன் தெரிவு செய்தீர்கள் என்று தெரியவில்லை” எனக் கேட்டுத் தொடங்குவதுதான் அவரது நகைச்சுவைத் தந்திரம்.
மேற்கொண்டு சொல்லத் தொடங்கும் அவதூறுகளுக்கும் குழறுபடிகளுக்கும் இந்தவகை நகைச்சுவைத் தந்திரம் தனக்கு நற்சான்றிதழ் வழங்கிவிடும் என நினைத்தே அவர் சொல்லத் தொடங்குகிறார். அதன்படியே பலர் நேர்காணலையே வாசிக்காமலும் வாசித்தவர்களும் அவருடைய நகைச் சுவையையே பிரதானமாக்கிஅவருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிடும் துர்ப்பாக்கிய நிகழ்வும் நடந்தேறியது.
தான் சார்ந்த ஒரு சமூகம், தனது நண்பர்கள் அல்லது அந்த இனம் வலிகளால் வளைக்கப்பட்ட கதைகளை வெறும் அபத்தக் கதைகளால் சுற்றி வளைத்து எதுவுமேயற்றதாக்கி கடந்த காலம் முழுவதும் தாம் கொண்டாடிய முட்டாள் தனத்திற்கு நகைச்சுவை என அடையாளம் இட்டுக் கடக்க முடிவதென்றால் அது எங்கள் செல்வம் அண்ணையால் மட்டுந்தால் இயலும்.
இனி செல்வம் அண்ணை குறித்த நேர்காணலில் ஆங்காங்கே என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்ப்போம்.
அவர் பாரீஸ் வந்த காலங்கள் அவர் வேலை தேடியலைந்த காலங்கள் பின் ஈரோஸ் அமைப்பில் இணைந்து கொண்ட காலங்கள் எனக் கதைகளைச் சொல்லி வரும் செல்வம் அண்ணை தன்னுடைய கட்டிடக் காட்டுக்குள் என்ற கவிதைத் தொகுதியை சபாலிங்கத்தின் ஆசியா பதிப்பகம் வெளியிட்ட தருணத்தைச் சொல்ல வரும் போது
தன்னுடைய பகிடி மனோபவத்துடன்
‘அப்போது என் நண்பர்களில் ஒருவன் செல்வத்தாரின் கவிதைகளை புத்தகமாக்கியதால் தான் – யாரோ கவிதை விமர்சகரால் அவர் சுடப்பட்டார் என்று நக்கல் அடித்தான்.’ எனக் குறிப்பிட்டுக் கடந்து போகிறார்.
சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்ட அந்த நாட்களில் பாரிசில் அவர் அகதிகளுக்கான விண்ணப்பக் கோரிக்கை எழுதிக் கொடுத்து வருபவர் என்பதனால் யாரோ அகதிக் கேஸ் எழுதி ஏமாந்தவனால் அவர் சுடப்பட்டார் என்ற கதையைப் புலிகள் ஊருக்குள் கசிய விட்டிருந்தார்கள். அதனையும் பலர் நம்பிவிடும் நிலையும் அப்போது இருந்தது. ஏனெனில் ஈழத்தில் கொலை என்பது அவ்வாறு வெறும் அற்பத்தனமான காரணங்களுக்கெல்லாம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
ஆனால் பாரிசில் அவர் வாழ்ந்த வீட்டில் மனைவியின் முன்னால் மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் அவரது படுகொலை நடை பெற்ற அவலத்தை இவ்வளவு காலத்தின் பின்னாலும் மடை மாற்றி செயலிழக்கப்பண்ணுவது செல்வம் அண்ணைக்கான அரசியல் நிலைப்பாடு. அந்தக் காலத்தில் செல்வம் அண்ணைதான் கனடாவில் தலைமை தாங்கி கண்டனக் கூட்டம் நடாத்தினார் என்பதனை இந்த இடத்தில் நினைவு கொள்ளும்படி நண்பர்கள் நினைவுறுத்துகிறார்கள். மிக நல்ல விடயம். அன்றய தலைமை உரையையாவது மேற்கோளிட்டு மாற்றுப் பதிப்பகங்களேயற்றிருந்த அந்தக்காலத்தில் ஆசியாப் பதிப்பகத்தினை நடை முறைப்படுத்தி வந்த கதையைச் சொல்லும் ஒரு இடை வெளி அந்த நேர்காணலில் அவருக்குக் கிடைத்தது. அவர் அந்த இடத்தை மறைத்து மறந்து சென்றதுதான் அவருக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கிறது என நான் சொல்வது. அன்றைய புலம்பெயர் சூழலின் அத்தனை வடுக்களையும் சொல்லிவிடக் கிடைத்த இடத்தை மறைத்து நகர்ந்து செல்வதுதான் இன்றைய செல்வம் அண்ணையின் அரசியல் நிலைப்பாடு.
அடுத்து கி.பி. பற்றிய அவரது கருத்து.
‘கி.பி.அரவிந்தன் 90களுக்கு பிறகு, நான் கனடாவுக்கு வந்தபிறகுதான் பாரிஸ் வந்தார். அவருடைய கவிதைகள் நல்லதாயிருக்கலாம். சில சிலபேர் வேறு காரணங்களுக்காக அவர் புலம் பெயர்ந்த முதற் கவிஞன் என்று எழுதியதைப் பார்த்திருக்கிறேன்.
என்கிறார்.
இங்கே என்ன எழுதியது என்பதனை விடுத்து யார் முதலில் எழுதியது என்கிற போட்டி வருகிறது. இன்று முகநூலிலும் இப்படியான தர்க்கங்களுக்கே அதிக முக்கியம் கொடுத்து நிற்கிறார்கள் சிலர். யார் முதற் கவிஞன் என்பது குறித்து போட்டியிடுகிறார்கள். ஆனால் செல்வம் அண்ணை
கி.பி.யின் கவிதைகள் ‘நல்லாயிருக்கலாம்’ என்று சொல்லும் வார்த்தைகளுக்குள் இருக்கும் அற்பத்தனத்தைக் கணக்கிட மறந்து போய்விட்டார்கள். கேள்வி கேட்டவர்களின் நோக்கங்கள் வேறாக இருக்கும் பொழுது அற்பத்தனங்களை அவர்களாலும் கண்டடைய முடியாது இருக்கும்தானே.
கி.பின் கவிதைகள் குறித்த தர்கங்களையாவது பேசிவிடக் கிடைத்த இடை வெளியையும் தவறவிட்டார் அவர். அவருக்கு கி.பியின் அரசியற் கருத்துக்களில் முரண்பாடு இல்லை. கி.பியின் “முகங்கொள்” கவிதைத் தொகுதியும் செல்வம் அண்ணையின் “கட்டிடக் காட்டுக்குள்”கவிதைத் தொகுதியும் அருந்ததியின் “இரண்டாவது பிறப்பு”கவிதைத் தொகுதியும் ஒரே காலத்தில் தொகுப்புக்களாக வெளிவந்தவை. அதிலும் அருந்ததியின் கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டு பாரீஸ் எயார்போட் கஸ்டம்ஸ் பகுதியினரால் வெளியே கொடுக்க அனுமதியாது கைவிடப்பட்டதால் அவர் தனது இரண்டாவது தொகுப்பிற்கு இரண்டாவது பிறப்பு எனப் பெயரிட்டார் என்பதனை 1992 இலக்கியச் சந்திப்பில் தெரிவித்தார். இந்தக் காலத்தின் கவிதைகள் குறித்த ஓரு உரையாடலாகவும் அதன் தொடர்ச்சியாக கி.பியின் கனவின் மீதி எழுப்பிய அரசியல் என எத்தனையோ விடயங்களை உரையாடக்கிடைத்த இடத்தை வெறும் அற்பத்தனங்களால் கடந்து போய் கவிதை எழுதுபவனது மனதையும் தொலைத்து ஒரு இலக்கிய ஆர்வலனது முகத்தையும் தொலைத்து வெறுமனே யார் முதல் அரசவைக் கவிஞன் என்பதில் மட்டுமே போட்டியாக பதில் சொல்லிக் கடக்கிறார்.
தொடர்ந்து…
சில்லாலை என்ற ஊரில் தனது கிறிஸ்தவக் குடும்பத்தின் மனநிலை அதற்குள்ளும் மெல்லிதாக இருந்த மனிதநேயம் குறித்துப் பேச முனையும் செல்வம் அண்ணை மலையக மக்கள் குறித்து சொல்லும் கருத்து மிக முக்கியமானது. ஆனால் அது அவர் பேசியும் ஆதரித்தும் நிற்கும் தமிழ்த் தேசியத்தின் மனநிலைக்கு எப்போதுமே முரணானது.
அதனை அடுத்துக் கேட்கும் கேள்வியிலேயே அடியொட்டத் துடைத்தெடுத்து விடுகிறார்.
போரையும் ஆதரிக்கிறீர்கள், யுத்தத்தை மறுக்கவும் செய்கிறீர்கள்… ஒரு கலைஞனின் அல்லாட்டமாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அப்போது உங்கள் கருத்தியல் நிலைப்பாடு என்னவாக இருந்தது? இன்று அதனை மீள் பரிசீலனை செய்கிறீர்களா?
எனக் கேட்டதற்கு….
‘உண்மையைச் சொல்லப் போனால் இன்றைக்கு நடிக்க தேவையில்லை. துரையப்பாவைக் கொலை செய்ததைப் பற்றி நான் கவலைப்படவில்லை.’
என்ற பதிலை அன்றைய காலத்தில் தான் பார்த்தறிந்ததாகச் சொல்லி அந்தக் கொலையை ஆதரித்து நிற்கிறார். ஒரு கலைஞனாகவும் சமூக அக்கறையாளனாகவும் பார்க்க வேண்டிய கண்ணைக் கூடத் தொலைத்து வெறும் புலித் தேசியவாதியினதும் இன்றைய அப்பட்டமான தமிழ்த் தேசியவாதியின் கண்ணை செல்வம் அண்ணை கொண்டிருப்பது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இலக்கியத் தளத்தில் தன்னை ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லும் அவர் சொல்லியிருக்கவே கூடாத பதில் இது.
இந்த இடத்தில் தான் “தேவி எழுந்தாள்” தொகுப்பில் கவிஞர் சிவசேகரம் அவர்கள் எழுதியிருந்த
‘துரோகி எனத் தீர்த்து
அன்றொருநாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது
சுடக் கண்டவனைச் சுட்டது
சுற்றி நின்றவனைச் சுட்டது
சும்மா நின்றவனையும் சுட்டது’
என்ற
கவிதையை செல்வம் அண்ணை அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
அதிலும்
இன்று அந்தக் கருத்துக்களில் மாற்றங்கள் இருக்கலாம் என்று சொல்லிப் போகும் செல்வம் அண்ணை
‘நான் சொல்வது என்னவென்றால் அந்தக்காலத்தில் போராட்டம் செய்வது சரி என்று நினைத்த ஆள் நான். ஆனால் இப்படி எல்லாம் தலை கீழாக போகும். இப்படி எல்லாம் செய்வாங்கள் என்று தெரியாது. போர் செய்வது சரி, அது வெல்லும் என்றும் நம்பினேன் நான்.’ என்கிறார்.
ஒரு கலைஞனாக அன்றைக்கும் இன்றைக்கும் என்ன கருத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதனை அவர் அறுதியாகச் சொல்ல வேண்டும். இருக்கலாம் என மழுப்புவதிலோ இப்படித் தலை கீழாகப் போகும் எனத் தெரியாது எனச் சொல்வதிலோ ஒரு கலை வாழாது.
சமூகத்தின் மீது பற்றுள்ள கலைஞனுக்கு இத்தனை அழிவுகளுக்கும் பின்னாலாவது அறுதியான கணக்கீடு கிடைத்துவிடும். ஆனால் அது இங்கு நிகழவில்லை.
தொடர்ந்து சபாலிங்கம் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் ஈழத்துச் சீமானாகக் காட்டியிருந்தது.
தன்னைச் சந்திக்கின்ற காலத்தில்தான் அவர்(சபாலிங்கம்) வாசிக்கத் தொடங்குகிறார்
‘வாசித்து வாசித்து அவர் கொஞ்சம் தன்னை மாற்றிக்கொள்கின்றார்.’ என்று சொல்கிறார். அவருக்கு எல்லாம் கவிதை வராது என்று சொல்கிறார். கிட்டத்தட்ட கவிதை வாசித்து அவருடைய முரட்டுக்குணங்கள் இல்லாமல் போகிறது என்கிறார்.ஆனால் அவருக்கு ஒரு புலி எதிர்ப்பு இருந்தது. என்கிறார்.
இந்தப் பதிவில் அவருடைய கொலை குறித்த அச்சத்தை அல்லது அது தரும் வலியை அதன் பின்னால் புலம் பெயர் சூழலில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கணக்கிடுவதை விட சபாலிங்கத்திற்கு பிரான்சின் ரெலோவுக்கான தலைமைப் பொறுப்புக் கொடுக்கப்படாத கவலையை முன்நிறுத்துவதில் காட்டும் அக்கறைதான் செல்வம் அண்ணையினது அரசியல் தந்திரத்தைக் காட்டி நிற்கிறது. அதனால் தான் சொல்கிறேன் செல்வம் அண்ணை அரசியல் நீக்கம் செய்யப்பட்ட மனநிலை கொண்டவரல்ல. மிகுந்த நேர்த்தியான அரசியல் செயற்பாடு கொண்டவர். ஆனால் அது எப்பொழுதும் நான் பேசும் சமூகநீதிக்கு எதிர்த் திசையில் இருப்பது. அதனை இந்த நேர்காணலின் ஒவ்வொரு வரிகளும் உணர்த்தி நிற்கிறது.
தொடர்ந்து கனடா இலக்கிய அரசியற் சூழல் பற்றிச் சொல்கிறார். தேடகம் தேடல் நண்பர்கள் குறித்த சில கதைகளில் நண்பர்கள் கூட இருந்தவர்கள் முரண்படுவதாகச் சொல்கிறார்கள். அதனை அவர்கள் தான் எழுதவேண்டும் அந்த நண்பர்கள் இந்த இடத்திலேனும் சொல்லமுடியாத கருத்துக்கள் எப்போதும் தேவையற்றவை.
‘புலிகள் அழிந்த பின்னரும் சொல்கிறேன். இன்னும் முப்பது வருடங்களின் பின்னர் பிரபாகரன் பென்னம் பெரிய ஆளாக இருப்பார்.’ எனச் சொல்வதில் அவரே சொல்வது போலான வெள்ளீசு மனநிலை தான் அதுவாக இருக்கிறது.
தொடர்ந்து
‘ஒன்றைச் சொல்லலாம், 2009 இல் புலிகள் தோற்று அழியேக்கை புலிகளின் தோல்வி மாத்திரமல்ல இனி தமிழ் மக்கள் முழங்காலில்தான் இருக்கவேண்டும் என்றேன். “விதியே விதியே தமிழ் சாதியை என்ன செய்ய நினைத்தாய்” என்ற கவிதையோ அல்லது நிலாந்தன் சண்டைக்கால் தப்பி வந்து “சொற்கேளா புதல்வர்களின் சூடு இறங்கா உடல்களைக் கடந்து வந்தோம்” என்ற மாதிரியான ஒரு கவிதை எழுதிய ஞாபாகம், இதுகளை நினைக்க வேண்டியதுதான்.’
என அறுதியுரைக்கிறார்.
அதுவரை புலிகள் மக்களை தம்மோடு அழைத்து வந்து தமக்காக மக்களைப் பலி கொடுத்த கதையை கொஞ்சமும் ஞாபகப்படுத்த மறுக்கிறார்.
‘ ஐயோ நாங்கள் தாண்டி வந்த பிரேதங்கள் எல்லாம் தனியே ஆமி சுட்டுக் கொன்ற பிரேதங்கள் மட்டுமல்ல’ என்ற அந்தச் சனத்தின் கதையை தன்னுடைய புலி விசுவாசத்தால் ஒட்ட மழுங்கடித்து விடுகிறார். அந்த மறதிக்கு நிலாந்தனைத் துணைக்கழைக்கிறார். நண்பர் நிலாந்தனது இன்றைய கருத்துக்களில் எந்தவித பிசகையும் கொண்டிராத செல்வம் அண்ணை அவரைத் துணைக்கழைப்பதில் என்னபிழை?
கனடாவிற்குப் புலம் பெயர்ந்த பின் மொன்றியலில் பார்வை சஞ்சிகை வெளியிட்ட வரலாறு, பின் ரொரண்டோவிற்கு இடம் மாறி தேடகம் அமைப்போடு இணைந்து செயலாற்றியது எனச் சொல்லிப் போகும் செல்வம் அண்ணை தாயகம் ஜோர்ஜ் குருசேவ் பற்றிக் குறிப்பிடும் தருணத்தில்
“தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற முக்கியமான இடம் அருகே ஒருவன் தமிழில் அச்சிட்ட பேப்பர்களை விற்றுக்கொண்டு இருந்தான். எமக்கு தமிழ் பேப்பர்களைப் பார்க்க பெரிய ஆச்சரியமாகப் போய்விட்டது. யார் அதனைச் செய்க்கிறார் என்று கண்டுபிடித்தால் ஜோர்ஜ் என்று தெரிந்தது. அவர் நல்ல கெட்டிக்காரன். பத்திரிகை மீது ஆர்வம் கொண்டவர். முன்னோடி என்று சொல்லலாம். ஜோர்ஜோடு தொடர்பு கொண்டோம். விடுதலைப்புலிகள் தங்களுடைய விடயங்களுக்கு ஜோர்ஜ் உதவுகிறார் இல்லை என்று அவரோடு தொடர்பு கொண்டு தூசணத்தால் பேசியிருக்கிறார்கள். அப்ப தொலைபேசியில் தொடர்பு கொண்டு யாரென்று தெரியாமல் ஏசலாம் தானே. அதனால் நொந்துபோய் கடும் புலி எதிர்ப்பில் அவர் இருந்தார்.”
என்று குறிப்பிடுகிறார்.
உண்மையில் ஜோர்ஜ் எவ்வாறு எங்கு நின்று தாயகத்தை விற்றார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் புலிகள் தொலைபேசியில் தூசுணத்தால் பேசியதால் தான் அவர் புலி எதிர்ப்பாளராக மாறினார். அல்லது கடும் புலி எதிர்ப்பில் இருந்தார் எனக் குறுக்கி விடுவதின் பின்னாலுள்ள அரசியல் மிக நுணுக்கமானது,
அத்தனை பன்முக கருத்தியல்களையும் ஆயுத முறையில் கையகப்படுத்தி மிக நீண்ட - கொடிய யுத்தத்தை போராட்டம் என்ற போர்வையில் புலிகள் மேற்கொண்டிருந்த காலங்களை, அதற்குள் பேச்சற்றும் மூச்சற்றும் இருந்த மக்களின் குரல்களை பேசியது மட்டுமல்லாது. ஈழத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் மீடியாக்கள் எனச் செல்லமாக சொல்லிக் கொள்ளும் அத்தனை ஊடகங்களும் முதுகெலும்பை மறைத்து புலிகளின் பினாமிகளாகிப் போன காலத்தில் அதனை இறுதிவரை மறுத்து நின்ற ஒரு பத்திரிகையை மிக நாசூக்காக தனது கெட்டித்தனத்தால் கதை மாற்றி சின்னத்தனமாக்கிவிடுகிறார் செல்வம் அண்ணை.
இதுதான் அவரது அரசியல் என்கிறேன் நான். இதனை அவர் வேண்டுமென்றே செய்கிறார். தாயகத்தின் அத்தனை பக்கங்களையும் ஒருவர் இன்று புரட்டிப் பார்க்க நேரிடின் இந்தக் கள்ளத் தனத்தை உடனே கண்டு பிடித்து விட முடியும்.
அடுத்துக் காலம் இதழ் குறித்துப் பேசுகிறார்.
“இது முற்று முழுதாக தமிழ் இலக்கியத்தில் ஒரு புது முயற்சி. மணிக்கொடி மரபில் வந்த ஒரு சஞ்சிகை என்று இதைச் சொன்னாலும், இது முற்று முழுதாக வேறு.”
என்கிறார். இது வெறும் பிதற்றல். இதன் முழு எதிர் நிலைப்பாடு என்னுடையது. இது பற்றி நான் அதிகம் இங்கு பேசவில்லை 50வது காலம் இதழ் வெளியீடு ரொரண்டோவில் நடைபெற்றது. அதற்கு நான் போயிருந்தேன். அந்த நிகழ்வு குறித்து அப்போதே எனது முக நூலில் (28 மார்ச் 2017)நான் எழுதிய பதிவினைப் பதிவிட்டு இதனைக் கடந்து செல்கிறேன்.
“கனடாவில் வெளிவந்து கொண்டிருக்கும் காலம் சஞ்சிகை 50 இதழ்களை கண்டடைந்திருக்கிறது. நாம் அனைவருமே பெருமைகொள்ளப்படவேண்டிய விடையம். அதன் உழைப்பு… மனவலி உடல்வலி பட்டவருக்குத்தான் தெரியும்.
புலம்பெயர் சூழலில் பள்ளம், ஊதா, கண், தூண்டில்,தேடல், ழகரம், நான்காவது பரிமாணம், பனிமலர், சுமைகள்,சுவடுகள், சிந்தனை, தேனீ, அம்மா, புன்னகை, எக்ஸில், உயிர் நிழல், என்று என் நினைவில் உள்ளவை எவையும்( நான் மறந்து போனதை நண்பர்கள் அறியப்ப|டுத்துக) ஒரு 20த் தாண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நம்மிடையில் காலம் இதழ் 50 வெளியீட்டைத் தொட்டிருக்கிறது. இது பாராட்டப்படவேண்டியதும் நாம் பெருமைப்படவேண்டியதுமான ஒரு விடயம்.
ஆனால் ஒரு விடயம். மேற் சொன்ன அத்தனை இதழ்களும் பேசிய ஒரு விடயத்தையாவது காலம் இதழ் பேசியதா? அதன் இலக்கியத்தின் மீதான பங்களிப்பென்ன? நாம் கடந்து வந்த காலத்தின் இலக்கியத்தை அது பேசியதா? இரட்டை இதழுடன் நின்று போன ஒரு இலக்கிய இதழ் பேசிய சீரிய இலக்கியத்தை அல்லது அரசியலை ஏன் காலம் இதழ் பேசமறுத்தது? என்று நாம் தற்போதும் பேசமுடியாதா? காலத்தைப் பேசாத காலமாய் இருந்த காலத்தை நாம் பேசவேண்டாமா?
காலம் 50 இதழ் வெளியீட்டு நிகழ்வு இப்படியான கேள்விகளுக்கான பதில் நிகழ்வாக இருக்கும் என்று ஒருபுறம் நான் நினைத்திருந்தேன். அதிலும் விட காலம் சஞ்சிகை குறித்து நான் வைத்திருக்கும் எதிர் கருத்துக்களைப் புறக்கணித்து அதன் புகழ் சொல்லும் நிகழ்வாக இருந்து விடும் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் இரண்டுமேயற்று, காலம் இதழ் குறித்த ஒருவித அக்கறையுமற்று நடைபெற்ற நிகழ்வு அது. மிகுந்த ஏமாற்றம். யாராவது எதையாவது எழுதுவார்கள் என இன்று வரை பொறுத்திருந்தேன். நிகழ்வு குறித்து மிகுந்த ஏமாற்றம். மிக அதிகமான கோபம்.
காலம் இதழ்குறித்து மட்டும் தீவிரமாகப் பேசாது வேறு விடையங்களை அதிகமாகப் பேசிய நிகழ்வு அது.
என்று எழுதியிருந்தேன்.
காலம் இதழில் எழுதியவர்கள் மற்றும் எழுத்துக்கள் பற்றிப் பேசும் இடத்தில்
“எப்பவும் என்னுடன் சண்டைபிடிக்கும் கற்சுறாவின் படைப்பு வந்திருக்கு. இவற்றில் நான் நல்ல கவனமாகத்தான் இருப்பேன். விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்த்து அல்லது ஆதரித்து ஒரு கட்டுரையும் நான் பிரசுரித்தது இல்லை.”
என்கிறார்.
எனக்கும் அவருக்குமான சண்டை என்பது எதுவாக இருக்கிறது? குடும்பச் சண்டை - மாமன் மருமகன்- அண்ணன் தம்பி சண்டை? அல்லது காசுக்கணக்குச் சண்டையா?
இலக்கியத்திலும் ஈழ அரசியலிலும் ஒரு மங்கலான ஒரு மழுப்பலான மறதியான தோற்றத்தை வரலாறு எனவும் அதுவே காலத்தின் சாகசம் எனவும் காட்ட முனைந்த பொழுதுகளில் இல்லை என மறுத்த சண்டை மற்றும்படி அவருக்கும் எனக்கும் தனிமனிதத் தகராறு எதுவும் இல்லை. அவர் செய்கின்ற கேலிக் கூத்துக்களை சூப்பர் என்றோ செம்மையான அலுவல் என்றோ கட்டை விரலை தம் பிடித்துக் காட்ட முடியவில்லை. தொடர்ந்தும் “செம” என்பதாக கனடாவிலும் தமிழகத்திலும் இருப்பவர்கள் செய்து காட்டி அவரைப் பாழ் கிடங்கில் தள்ளாதீர்கள்.
நன்றி வணக்கம்
( தயவு செய்து அவரது நேர்காணலை கீழே தந்திருக்கிறேன். முழுமையாக வாசியுங்கள் அதன் “லிங்க்” ஐ க் “கொப்பி அன்ட் பேஸ்ட்” செய்து வாசித்து விடுங்கள் அதன் முழு ஸ்பரிசத்தையும் அப்பொழுதுதான் தொட்டுணர்ந்து கொள்ள முடியும்.)
நேர்காணல் லிங்க்….
https://akazhonline.com/?p=