பிரதி: கற்சுறா
(மேடையில் ஆறு உடல்கள் )
அரங்கம் முழுவதும் இருள்.
தூக்கில் தொங்கத் தயாராகிக் கொண்டிருக்கும் ஒரு ஆண்.
அரங்கத்தில் நான்கு கரும்பலகையுள்ளது. இடதுபுறமிருந்து உள்நுழையும் ஒருவன். அவன் டோச் லைற் ஒன்றுடன் வருகிறான். அந்த இருட்டுக்குள்ளி ருந்து ஒரு ஸ்ரூலைத் தேடி எடுத்து வலதுபுறநடுப்பகுதியில் கொண்டுபோய் வைத்துவிட்டு ஸ்ரூலின் மீது ஏறுகிறான். பின் இறங்கி வந்து தான் கொண்டு வந்திருந்த கயிற்றை எடுத்துக் கொண்டுபோய் ஸ்ரூலில் ஏறுகிறான். கால் இடுக்குக்குள் டோச்லைட்டை வைத்துவிட்டு தூக்குப் போடுகிறான். கழுத்தில் கயிற்றை மாட்டி விட்டு காலால் ஸ்ரூலைத் தட்டி விடுகிறான். டோச் லைட் கீழே விழ கால் சிதறி உடல் அடிபட்டு அடங்குகிறது.
பெண்ணுடல்:
(தனது இரண்டு குழந்தைகளுடன் இலாம்பைக் கையில் கொண்டு ஓடிவரும் பெண்ணுடல்)
ஐயோ என்ர ராசா. ஐயோ என்ன வேலை செய்தாய். என்ர அப்பு. எங்களை அநாதையாக விட்டுவிட்டுப் போட்டியோ. ராசா என்னையும் கூட்டிக்கொண்டு போ. இந்தப் பச்சைப் பிள்ளைகளை விட்டுட்டுப்போக எப்படியப்பு மனம் வந்தது?
(என வழமையான அழுகுரல் . ஒப்பாரி. சாவின் அவலம் - இழப்பு
குரலில் உணர்வு பூர்வமாகத் தொனிக்க
வேண்டும்.)
பால் வெள்ளை ஒளி மேலே தொங்கிக்
கொண்டிருக்கும் தற்கொலையாளியின் மீது மட்டும் இருக்க வேண்டும். நிலத்தில் படக்கூடாது. தற்கொலை செய்த உடலின் மெல்லிய ஆட்டத்திற்கு ஏற்ற ஆட்டம் ஒளியிலும் இருக்க வேண்டும். பெண்ணுடலும் பிள்ளைகளும் வெறும் இலாம்பு வெளிச்சத்தில் மட்டும் தெரியவேண்டும். முகமும் மேல் பாதி உடல் பகுதி மட்டுமே ஒளி படவேண்டும். பிள்ளைகள் கலங்கிய கண்ணீருடன் அப்பா என அழுதபடி அழைத்துக்கொண்டிருக்க வேண்டும். மிகுதிப் பகுதி பூராவும் இருள்.
அழுகையின் உச்சத்தில் வெளியிலிருந்து இருவர் ஓடிவருகிறார்கள்.
(ஆணும் பெண்ணும் கலந்த உடல் அவர்களுடையது. பறவையின்
அசைவில் நகரும் உடல்களாக இருக்கின்றனர். ஜிம்னாஸ் செய்பவர்கள் போல் காலின்
நுனியில் சுழன்று நகரும் வல்லமை இருந்தால்
மிக்க நன்று)
ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கிறார்கள்.அவர்கள் உடற்குறிகள். தைரியத்தின் முகபாவனையுடனும் ஏளனத்துடனும்பெண்ணுடலையும் பிள்ளைகளையும் கொண்டுபோய் அருகில் இருத்துகிறார்கள்.
தற்போது அரங்கின் முன்பகுதி ஒளி மிக மெல்லிய வெளிச்சம் பரவுகிறது. மேடையின் பின் பாதியிலுள்ள கரும்பலகைகளில் மட்டும் ஒளி தெளிவாக இருக்கிறது. கரும்பலகை மட்டும் தெரிய வேண்டும்.அதற்கு இடைஞ்சலாக முன்பகுதி வெளிச்சம் இருக்கக்கூடாது.
உடற்குறிகள் இரண்டும் பறவையின் அசைவில் அங்கும் இங்கும் தேடித்திரிந்து சோக் பென்சிலை எடுக்கிறனர்.
மேடையில் இருக்கும் முதல் கரும்பலகையில் ஓடிப்போய் நின்று நிதானித்து நிதானித்து குறி 1 கவிதை
எழுதுகிறது. பார்வையாளர்களின் தூரத்திற்கேற்ப எழுதும் வரிகளின் முணுமுணுப்பு அதிகமாகவேண்டும். கவிதையைஎழுதுதல் தெரியவேண்டும்.
குறி 1: அவர்கள் ஆற்றைக் கடந்து மெதுவாகச் செல்கிறார்கள். கடந்த பின்னும் ஆறு அவர்களைத் தொடர்கிறது. நீரின் ஞாபகம் அவர்களைத் துரத்துகிறது. ஆற்றின் நெளிவும் அதன் இரைச்சலும் நதியாகிநிற்கிறது. அவர்கள் ஆற்றைக் கடந்து போகிறார்கள்.
குறி 2: இதன் பாதியை அழித்து விட்டு அடுத்த கரும்பலகையில் ஓடிப்போய்த் திரும்ப எழுதுகிறது.
மேலிருந்து கீழாக...
அவர்கள் ஆற்றைக் கடந்து
மெதுவாகச் செல்கிறார்கள்.
கடந்த பின்னும்
ஆறு அவர்களைத் தொடர்கிறது.
நீரின் ஞாபகம் அவர்களைத் துரத்துகிறது.
ஆற்றின் நெளிவும்
அதன் இரைச்சலும்
நதியாகி நிற்கிறது.
அவர்கள் ஆற்றைக் கடந்து போகிறார்கள்.
குறி 2: மற்றக் கரும்பலகையில் திரும்ப எழுதுகிறது. அதற்கு பாதி மறந்து போகிறது. யோசித்து யோசித்து எழுதுகிறது.
ஆற்றின் நெளிவும்
அதன் இரைச்சலும் நதியாகி நிற்கிறது.
ஆற்றைக் கடந்து போகிறார்கள்.
;கடந்த பின்னும் ஆறு அவர்களைத் தொடர்கிறது.
அவர்கள் ஆற்றைக் கடந்து மெதுவாகச் செல்கிறார்கள்
நீரின் ஞாபகம் அவர்களைத் துரத்துகிறது.
குறி1: அடுத்த கரும்பலகையில் திரும்ப எழுதுகிறது.
நெளிவும் இரைச்சலும்
நதியாக
நீரின் ஞாபகம்.
அவர்களைக் கடந்தும் தொடர்கிறது
ஆற்றின் மறதி.
தற்கொலையாளிக்கு மேல் இருந்த பால்வெள்ளை ஒளி குறைந்துவிட மேலிருந்து மெதுவாக இறங்கிய தற்கொலையாளி தனது இருப்பிடச் சூழலில் பெருத்த சிரிப்பொலியுடன் சுழன்றடிக்கிறது. இருள்ப்பகுதிக்குள் மட்டுமே சுற்றிச் சுற்றி நிற்கிறது.
குறிகள் தமக்குள் அதிர்வுகளுடன் உரையாடுகின்றன. அவை முன்பாதியையே தமக்கான உரையாடல் தளமாக வைத்திருக்கிறன.
ஒளியின் வீரியம் உரையாடலுக்கும் அதன் பரிவர்த்தனைக்கும் இடைஞ்சலாக இருக்கும் அதற்குரிய வகையில் ஒளி கட்டுப்படுத்த வேண்டும். குறிகள் தமது இருப்பிடங்களில் அசையும் விதம் நன்குகவனிக்கப்படவேண்டும். மரபுவழிப்பட்ட நாடகப்பாணி தவிர்க்கப்படவேண்டும். பறவையின் சாயல் அவற்றின் அசைவுகளில் தெரியவேண்டும்.
அதன்பின் தற்கொலையாளி பேசுகிறது.
தற்கொலையாளி: நான் சந்தோசமாக இருக்கிறேன். நான் மிகச் சந்தோமாக இருக்கிறேன். என்னைச் சிதைப்பதற்கு நான் தயாராகிவிட்டேன். இது என்னுடைய தவம். நான்... என்னுடைய தசைப்பிண்டங்களை நானே ரசிக்கும் நாள் விரைவில் வரும். அதில் நான் வெற்றியடைவேன்
(தற்கொலையாளியின் குரலைக்
கேட்டு மெல்ல எழுந்து வருகின்றன குறிகள்;).
குறி1: உடல் எப்பொழுதும் சிதைந்து கொண்டுதானிருக்கிறது. இங்கே நீ சிதைப்பதற்கு எதுவுமில்லை. வேண்டுமென்றால் நீ நாட்களைச் சிதைக்கலாம். நீ வாழும் காலத்தைச் சிதைக்கலாம். உன்னுடலைநீ சிதைக்க முடியாது. அது பொய்.
தற்கொலையாளி: அசட்டுச் சிரிப்புடன். முட்டாள்கள். மிகச் சிறந்த முட்டாள்கள். காலமும்; நாளும் எங்கே சிதைகிறது. அப்படி நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுக்குள் இருக்கும் மொழியேசிதைகிறது. அதுவே மிகச் சிறந்த ஆட்டமாகிவிடுகிறது. மொழி சிதையும் தருணங்களை உங்களால் கணக்கிடமுடியாது. அது அப்பாவித் தனமானது.
அதனையே காலம் சிதைகிறது என்று குருட்டுத்தனமாக நம்பி ஏமாறிக் கொண்டிருக்கிறீர்கள்.
குறி 2: மொழி.... எனக்கானது. என் உடலுக்கானது. என்னால் உருவாக்கப்பட்டது. நான் உருவாக்கியது... அது எனக்குக் கட்டுப்பட்டது.
குறி1: அப்போ... நீ மொழியை விளங்கிக் கொள்ளவில்லை. மொழிக்கு அருகிலேயே நீ இல்லை. மொழி பற்றிய மிகச்சிறயளவு தெளிவு கூட உன்னிடம் இல்லை.
தற்கொலையாளி: மொழி பற்றி ஒரு அறிவும் இல்லாது மொழி எனக்குக் கட்டுப்பட்டது எனச் சொல்வது வேடிக்கையானது. எனக்குச் சரியான சிரிப்பு வருகிறது.
குறி2: உடல் உருவாக்கியதுதான் மொழி. அது உடலுக்காவே சுழலும். உடலுக்கேற்றவாறு அது விரியும் ஒடுங்கும். அதனைச் சிதைவு என்று நீங்கள் தான் தவறாக எண்ணி வைத்திருக்கிறிர்கள்.
குறி1: மொழிமீது நீ மிக அளவுக்கு அதிகமான புனிதத்தை உருவாக்கியிருக்கிறாய்.
தற்கொலையாளி: உனக்குத் தெரியுமா? மொழியே எப்பொழுதும் முதற்கொலையை நிகழ்த்தியிருக்கிறது என்பதை. கொலைக்கான காரணத்தையும் அதுவே வைத்திருக்கிறது. அனைத்திற்கும்காரணங்கள் தாராளமாக இருக்கிறது மொழியிடம். அதனை நீங்கள் எக்காலத்திலும் புனிதமாக்க முடியாது.
குறி1: (தற்கொலையாளியைப் பார்த்து)
உடலின் ஆனந்தத்தை நீ ஒப்புக் கொள்ளவில்லை. அதன் பரிசங்களில் இருக்கும் வீரியம் பற்றிய ஆசையில்லாதவன் நீ. உன்னை நினைக்க எனக்கு வெறுப்பு வருகிறது. நீ மோகம் இல்லாதவன்.
தற்கொலையாளி: மோகத்தை நீ எங்கே வைத்திருக்கிறாய்? சொல். எங்கே உனது மோகம் ஒழிந்திருக்கிறது? உனது மோகத்திற்கும் எனது மோகத்திற்கும் எங்கே வித்தியாசம் உள்ளது?அதுஉன்முன்னோர்களின் ஞாபகம். அதையே நீயும் ஞாபகம் வைத்திருக்கிறாய்.
குறி2: ஒருமுறை நீ உன் ஞபாகங்களை அழித்துப்பார். உன்னிடம் நீ சொல்லும் ஆனந்த மோகம் இருக்காது. உனக்கிருக்கும் பெரிய வியாதியே உனது ஞாபகம். நீ அதனை முதலில் அழிக்கவேண்டும்.
குறி1;: சிந்தனையை அழித்துவிட்டு நாம் தப்பித்தோம் என்று எண்ணுவதை விட்டுவிடுங்கள். சிந்திக்காவிட்டால் நீங்கள் பழையவற்றையே நினைத்துக்கொண்டிருப்பீர்கள்.
குறி2: ஞாபகங்களையும் சிந்தனையையும் நீ ஒன்றாக்கிறாய். ஞாபகம் வேறு. சிந்தனை வேறு. நினைவுகள் வேறு. மொழியின் வன்முறை இதுதான். ஞாபகங்களைத்தான் நீங்கள் முதலில்லமறக்கவேண்டும். ஞாபகம் என்பது எங்களுக்கு இருக்கும் பெரிய வியாதி. அது முதலில் அழிக்கப்படவேண்டும்.
குறி1: உடலிருக்கும்வரை அது முடியாது.
தற்கொலையாளி: அதுதான் சொல்கிறேன் உடலை அழி என்று.
குறி1: சுத்த மடைத்தனம். மொழியை அழிக்காமல் உடலை அழித்தல் சாத்தியமில்லை. மொழியை அழித்துப்பார் நினைவுகளே வராது உங்களுக்கு. சிந்தனைகளே வராது உங்களுக்கு.
தற்கொலையாளி: சிந்தனைதானே மொழியை உருவாக்கியது. சிந்தனையும் ஞாபகங்களும்தானே மொழிகளின் மூலம். உடலின் ஆனந்தம்.
அழுது தலைவிரிகோலமாக இருந்த பெண்ணுடல் எழும்பி மெதுவாகமேடைக்குள் நுழைகிறது. கையில் இலாம்பு மற்றவை எல்லாமே இருள். குறிகள் தற்போது ஒழித்துக் கொண்டன. தற்கொலையாளிபழையபடி தொங்கிக் கொண்டு இருக்கிறது. பால் வெள்ளை ஒளி வந்துவிடுகிறது. பெண்ணுடலின் முகம் மட்டும் மங்கலாகத் தெரிகிறது. தற்போது பெண்ணுடல் பேசுகிறது.
பெண்ணுடல்: நான் எனது ஞாபகங்களை அழிக்க முடியாது. நான் எனது உடலை அழிக்க முடியாது. நான் எனது சிந்தனையை அழிக்க முடியாது. வாழ்வு என்பதே இந்த மூன்றிற்குள்ளும் தானேஒழிந்திருக்கிறது. நீங்கள் என்னைத் தற்கொலைக்குத் தூண்டுகிறீர்கள். நான் அந்தப் பக்கத்தில் இருந்து எப்பவோ தப்பிவிட்டேன். நீங்கள் என்னைத் தற்கொலைக்குத் தூண்டுற வேலையை இனிக்கைவிடவேண்டும்.
குறி1: (கொஞ்சம் கோபமாக )தற்கொலைக்கு யாரும் யாரையும் தூண்டமுடியாது.
பின் அமைதியாக இங்கே வா. இதில உட்காரு. நீயும் உட்காரு. உனது சிந்தனையை விடு. உனது உடலை விடு. உனது ஞாபகங்களை விடு. அதை வெறும் சொற்கள் என்று நினை. இந்த சொற்களால் ஆனநிபந்தனை என்ன? நியதி என்ன?
(பெண்ணுடலில் இருந்து பார்வையை விலத்தி)
வெறும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு நீங்கள் கனதூரம் போகமுடியாது.
(பெண்ணுடல்எழுந்து போய் பெரியகட்டுக்குள் இருந்து அதிகமான அல்பங்களுடனும் பெரிய திரட்டுக்களுடனும் வருகிறார்.)
மெல்ல மெல்ல குறிகள் நெருங்குகின்றன.
பெண்ணுடல்: இஞ்ச பாருங்கோ... இதுகள வடிவாப் பாருங்கோ.... ஒவ்வொண்டா ஆறுதலாகப் பாருங்கோ... நீங்கள் சொல்லறதெல்லாம் பொய். இஞ்ச... இதுதான் என்ர அப்பா. இது என்ர அப்பான்ரஅம்மா. இஞ்ச பாருங்கோ ஒரு குட்டிப் பிள்ள. இதுதான் நானாம். ஆனா நான் பிறக்ககேக்க அவா இல்ல. செத்துப்போட்டா. என்ர அப்பம்மா...அவா சும்மா சாதாரணமான ஆள் இல்ல. தன்ர பிள்ளைகளுக்குஉதவும் எண்டு கண்டது எல்லாத்தையும் சேர்த்துச் சேர்த்து வைப்பாவாம். சாகேக்க கூட தலமாட்டில இருந்து ஒரு சரை பச்சை மிளகாய் எடுத்திருக்கினம். அவ அதை ஆருக்குச் சேர்த்தவா? சொல்லு? சாகேக்க வைச்சிருந்த பச்சைமிளகாய்ச் சரையை கடைசி வரையும் அவ தனக்காக வைத்திருக்க மாட்டாதானே.
குறி1ம் 2ம் பெரிய ஈடுபாடு இல்லாமல் சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறி 2: பிள்ள இஞ்ச வா... இது ஆருபிள்ள.
பெண்ணுடல்: இது உனக்குத் தெரியாது. என்ர அவற்ர அம்மாவும் அவற்ர தங்கச்சியும். அவே தெரியுமே இண்டுவரைக்கும் இவரோட கதைக்கிறேல்ல. இவர் சொன்னாக் கேட்கமாட்டார்.
சில வினாடிகளின் பின்...
அவருக்கும் விளங்காது. அவைக்கும் விளங்காது.
குறி 1: என்னத்த?
பெண்ணுடல்: நாங்கள் சொல்லறதத்தான்.
இந்த ஞபாகங்கள் இவரை நல்லா உருக்குலைச்சிட்டுது. உங்களுக்குத் தெரியாது. ஞபாகங்களைத் தொலைக்க அவர் எத்தனை டொக்டரிட்டப் போனவர் எண்டு.
குறி2: ஞபாகங்கள் மனிதனை கொல்லும் ஒரு இரசாயனக் கருவி தெரியுமோ. அப்பிடிப் பார்த்தா நான் சொல்லுறன் மறதிக்குத்தான் நீங்கள் மருந்தெடுக்கவேணும் என்று. மறதிதானே நமக்குத்தேவையானது.
ஞாபகங்களை நாம்... தொலைக்க வேண்டும்.
பெண்ணுடல்: ஞாபகங்களைத் தொலைச்சுப்போட்டு.....?
வாழ்வென்பது நினைவுகளில்தான் இருக்கிறது. நீ என்ன வாழ்வென்பது எதிர்காலம் மட்டும் என்றா நினைக்கிறாய். கடந்த காலத்தில் நமது முன்னோர்கள் வாழ்ந்து சென்ற வாழ்வும் எங்களுடையதுதான். அதில்லாமல், அதை நினையாமல் இருந்தால் நாம் வாழ்கிறோம் என்று அர்த்தமில்லை. முடிஞ்சால் நீ உனது ஞபகங்களைத் தொலைத்துப்பார். நினைவுகளற்று ஒரு நிமிடம் இரு பார்ப்போம். உங்களாலஇருக்கேலாது.
குறி2: (எட்டி எட்டி மெல்லப் பார்க்கிறார் பெரிய விருப்பமில்லை.) இப்ப இவர்கள் எங்கே. நான் உங்களிடத்தில் ஒருநாளும் காணவில்லை. ஏன் இவர்கள் உங்களிடத்தில் வருவதில்லை.
பெண்ணுடல்: அவர்களுக்கு எங்களைப் பிடிப்பதில்லை.
குறி2: அதுதான் கேட்கிறேன் ஏன்?
பெண்ணுடல்: தெரியாது என்று மெல்லிதாகத் தலையாட்டுகிறார்.
குறி1: நீங்கள் அவர்களை வெறுக்கவில்லையா?
பெண்ணுடல்: இல்லை.
குறி2: வெறுப்பு என்பது சொந்தங்களுக்குள் தொடர்ச்சியானது இல்லைத்தானே.
குறி1: சொந்தங்களும் தொடர்ச்சியானது இல்லைத்தானே.
பெண்ணுடல்: இந்த இரண்டு குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள். இவர்கள் என்னுடையவர்கள் மட்டும் என்று நான் சொந்தம் கொண்டாடும் காலங்கள் எத்தனையாக இருக்கும்.
குறி2: இவர்கள் உன் உடலில் பிறந்தவர்கள். இவர்கள் உன்னுடையவர்கள். ஆனால் உன் உடலிருக்கும் வரை மட்டுமே அது சாத்தியம்.
பெண்ணுடல்: அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது. எனது பெற்றோர் அழிந்த பின்னாலும் நான் எப்படி அவர்களுடையதாக இருக்கிறேனோ எனக்குப் பின்னாலும் என்குழந்தைகள்என்னுடையவர்களாக இருப்பார்கள்தானே.
குறி1: (கொஞ்சம் குழப்பமாக... அங்குமிங்கும் ஓடி)
நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். நான் ஒருபொழுதும் ஒத்துக்கொள்ள மாட்டேன்.
நான் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய பெற்றோருடையவனாக ஒருபோதும் இருந்ததில்லை. காலம் முழுவதும் அவர்களை நான் வெறுத்தேன். அவர்களை வெறுத்தபொழுதுகளில் எல்லாம் நான் தற்கொலை செய்தேன். என்னுடைய வாழ்வில் மூன்று முறை நான் தற்கொலை செய்திருக்கிறேன் தெரியுமா?
பெண்ணுடல்: இஞ்ச பார்... அவர்களை வெறுத்த பொழுதுகளில் எல்லாம் தற்கொலை செய்வது என்பதே நீ அவர்களுடையவன் என்பதால் தான். நீ உன் பெற்றோருடையவன் இல்லை என்று உணரும்போது உன்னால் வாழமுடியவில்லை. அதுசரி...நீ மூன்றுமுறை தற்கொலை செய்திருக்கிறேன் என்கிறாய். அந்த மூன்று முறையில் ஒருமுறைகூட நீ ஏன் மரணிக்கவில்லை.
குறி1: அவை எழுதி முடிக்கப்படாத கவிதைகள். நான் எனது அழகிய கவிதையை ஒருநாள் எழுதி முடிப்பேன்.
பெண்ணுடல்: அதனை நீ எப்போது எழுதுவாய்?
குறி1: அதற்குரிய சந்தர்ப்பங்கள் எனக்கு விரைவில் அமையும்.
குறி2: தற்கொலை என்ற சொல் வீரியம் இழந்த சொல். அதற்கு நம்மிடத்தில் போதுமான அர்த்தமில்லை. செயலுக்கும் சொல்லுக்கும் பொருத்தமற்று இருக்கும் சொல் அது. அதனால் தான் நீமரணிக்கவில்லை.
குறி1: உடலழிப்பும் மொழியழிப்பும் சேரும் புள்ளி அது.
குறி2: தற்கொலையை நிகழ்த்துதல் என்பதற்கு கவிஞனாக இருக்க வேண்டும். கவிஞர்கள் என்பவர்கள் தற்கொலையாளிகளாக இருக்க வேண்டும்.
பெண்ணுடல்: நளினச் சிரிப்புடன் ஓ... அதுதானா.... நம்மிடத்திலே கவிஞர்கள் என்பவர்களே இல்லை.
குறி2: இருக்கிறார்கள்... அவர்கள் தற்கொலைக்குத் தயாராய் இல்லாதவர்கள். அவர்கள் தங்களையோ அல்லது தங்கள் மொழியையோ சிதைக்கத் திராணியற்றவர்கள்.
குறி1: ஆனால்... அவர்கள் கவிஞர்கள்.
குறி2: ம்...ம்... ம்.... கவிஞர்கள். திராணியற்ற கவிஞர்கள். தற்கொலை என்பது தரம்வாய்ந்த கவிதை. அதை எழுதுபவர்கள் சரியான குறைவு. நம்மிடத்தில் நடந்த தற்கொலை என்பதெல்லாம்.கொலைகள் தானே.
பெண்ணுடல்: அப்ப தற்கொலை என்பது ஒன்று இல்லைத்தானே. அந்தச் சொல்லினுள் இருக்கும் அர்த்தம் பொய்யானதுதானே.
குறி1: தற்கொலை என்று ஒன்று இல்லை எனச் சொல்லமுடியாது. அது இருக்கிறது. அது சமூகத்தின் எதிராட்டத்தில் தொடங்குகிறது. எதிராட்டத்தில் முடிகிறது. அது ஒரு கலையாக இருக்கிறது. அதனைநாம் அதிகமான தருணங்களில் உணருவதில்லை.
குறி2: அது உடலை அழிப்பதிலே வித்தையை வகுக்கிறது. தன்னுடலினில் இருக்கின்ற தாகத்தைப் பிய்த்துக் காட்டுகிறது. இங்கே பார் இந்தத் தசைக் குவியல். இதற்குள் ஒரு அழகிய உடல் இருந்தது. அதுதன் அழகை, உலகத்தின் ஆசையை அது சிதைத்திருக்கிறது.
பெண்ணுடல்: அப்ப அது ஒரு தற்செயல் நிகழ்வு. சமூகத்திற்கெதிராக தன்னை நியாயப்படுத்த மட்டும் எடுக்கும் ஒரு முடிவு. அதற்கு மற்றவர்கள் பற்றிய ஒரு கரிசனையே இல்லை. அக்கறையற்றசெயல்.
குறி1: சும்மா கதையாதை... இதில இருந்து சும்மா கொஞ்சம் யோசிச்சுப் பாரேன். ஒரு உடல் தன்னை ஒடும் புகையிரதத்துள் விழுத்தி நொருங்கப்பண்ணி சிதைப்பதற்கு எத்தனை தைரியம் வேண்டும்.தன்னைச் சிதைப்பதற்கு முன் எத்தனை தடவை தன் சிந்தனையில் அது நிகழ்த்திப் பார்த்திருக்கும். தன் உடலின் வதைகளை அது ஏற்கனவே உணர்ந்திருக்குமல்லோ. எலும்பு முறியிறதும். தசைஅரைபடுவதையும் அது எத்தனை தரம் உணர்ந்திருக்கும். சும்மா தற்கொலை என்று ஒற்றைச் சொல்லில் அர்த்தமிழந்து சொல்லிவிட்டுப் போகமுடியாதுதானே. அது எவ்வளவு உன்னதமானது.
குறி2: தற்கொலையை சும்மா நிகழ்த்திவிட்டுப் போகலாம் என்பவனும் தற்கொலை செய்பவன் கோழை என்பவனும் தான் தன்னைக் கவிஞன் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு திரிகிறான்.
பெண்ணுடல்: (மேலே தொங்கிக் கொண்டிருப்பவனைக் காட்டி )வாழ்வின் ரசனையை வாழ்வின் வலியை அனுபவிக்கத் தெரியாதவனை கோழை என்று அழையாமல்; வேறு என்னவென்று அழைப்பது?
குறி 1ம் குறி 2ம்: (நெருங்கிக் கோபப்படுகின்றன) என்ன சொல்லுறாய்.
பெண்ணுடல்: வாழ்வின் நெருக்குதலை அனுபவிப்பதும் ஏன் வாழ்வதே தற்கொலைக்குச் சமனானது தானே. தற்கொலை செய்வதிலும் விடத் தைரியம் தேவை வாழ்வதற்கு. வாழத் தெரியாதவனேஅவனைப்போல் தற்கொலை செய்கிறான். இதனைக் கெட்டபின் குறி1 மெதுவாக வந்து பெண்ணுடலின் பக்கத்தில் வந்து நிற்கிறது.
குறி2: முட்டாள். எல்லோரும் சொல்லும் பழய கதை அது. வாழ்வது தற்கொலை செய்வதை விட உன்னதமானது என்றால் எல்லோரும் வாழ்ந்து விட்டுப் போவார்கள். தற்கொலைக்கு சாகசக்காரனின்மனம் தேவை . துறவுக்கு நெருக்கமாக வேண்டும்.
குறி1: (குறி 2ஐப் பார்த்து )வாழ்வை வெறுப்பவன் துறவியாகவேண்டியதுதானே அதற்கு ஏன் தற்கொலை செய்யவேண்டும்.?
குறி2: துறவுக்கு நெருக்கமாக வேண்டும் என்றுதான் சொன்னேன். துறவியாகவேண்டும் எனச் சொல்லவில்லை. துறவு என்பதே வாழ்வை ரசிப்பவனது உச்ச நோக்கம். வாழ்வை அதீதமாக இரசிப்பவனே துறவியென்பவன். தற்கொலையாளிக்கு அது நோக்கமல்ல.
பெண்ணுடல்: துறவு எண்டுறது வாழ்வின் இன்பங்களில் இருந்தும் ஆசைகளில் இருந்தும் விடுபடுதலே. அது சித்த மனம். உலகப்பொதுநிலையிலிருந்து வெறுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட வாழ்வு. அதை நீஇலகுவில் கொச்சைப்படுத்த முடியாது.
குறி2: மிக்க (ஆச்சரியத்துடன்) என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? இங்கை வா நீ தானே சொல்கிறாய். ஒதுக்கப்பட்ட வாழ்வு என்று. அதுவாழ்வு. நான் சொல்வது, சாவு. அதிலும் கொலை என்பது வாழ்வுக்கானது. வாழ்வின்அதீதமான விருப்பங்களால் செய்யப்படுவது. வாழ்வு பற்றிய மிகையான கற்பனைகளில் உருவாவது கொலை. தற்கொலை அப்படியல்ல.
குறி1: (ஐயத்தில் )தற்கொலைக்கும் கொலைக்கும் பெரிய வித்தியாசமில்லை. தற்கொலையும் ஒருவகையில் கொலைதான்.
குறி2: நீ நினைக்கிறாயா? தற்கொலை என்பது திடீரென எடுக்கும் முடிவு என்று. இல்லை. ஒரு உடலில் அது எப்பவோ எடுக்கப்பட்டு விடும். அதனை உடனே அது நிகழ்த்துவதில்லை. அது ஒரு நாடகத்தைப் போல் பலநடைமுறைப்பயிற்சிகளை எடுக்கிறது. தனக்குள்ளாக கற்பனைத் திறனை வளர்க்கிறது. ஒரு நல்ல கவிதையாக வரும் போது அது தற்கொலையை நிகழ்த்துகிறது.
குறி1;: நாம் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பது தற்கொலைக்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமா?
குறி2: உண்மை அதுதான். பெண்ணுடலைப் பார்த்து. உன்ர புருசன் தற்கொலை செய்துவிட்டான் எண்டுறதுக்குப் புலம்பாதை. அதை ரசி. திரும்பத் திரும்ப வாசி. அதற்காக உன்னைத் தற்கொலைக்குத் தூண்டுகிறேன் என்று மட்டும் என்மீது கொலைக்குற்றம் சுமத்தாதை. நான் கொலையாளியல்ல.
பெண்ணுடல்: அது எனக்குப் புரிகிறது. ஆனால் மொழி மீதுதான் எனக்கு வெறுப்புவருகிறது.
குறி1:என்ர புருசன். என்ர புள்ள என்ர உடல் என்ர குடும்பம் என்று மற்றவன் சொன்ன கட்டுக் கதைகளை நம்பி ஏமாறாதை. அப்படியொன்றில்லை. இதுதான் மொழியின் மிகச் சிறந்த சித்து விளையாட்டு.
குறி2: மொழியை நாம் விளங்கிக் கொண்டுவிட்டால் தான் எங்களை நாம் கடக்க முடியும். இல்லையேல் மொழி எங்களைத் தின்றுவிடும்.
பெண்ணுடல்: தனது குழந்தைகளை விடுத்துத் தனியே வருகிறது. தன்னைத் தற்கொலைக்குத் தயார் படுத்துகிறது. அங்குமிங்கும் எதையோ தேடி அலைகிறது.
தற்கொலையாளி மெதுவாகக் கீழே இறங்குகிறான். பால் வெள்ளை ஒளி மறைகிறது. குழந்தைகளும் குறிகளும் ஒழிந்து கொள்கின்றன.
தற்கொலையாளி: (பெண்ணுடலைச் சுற்றிச் சுற்றி ஆட்டம் போடுகிறது.) மொழியைப்பற்றி நீ இப்பொழுது என்ன விளங்கி வைத்திருக்கிறாய்.
பெண்ணுடல்: (அழுகையுடன்)மொழியை எமக்குக் கிடைத்த ஒரு அற்புதமான கரு என்று நினைத்திருந்தேன்.
தற்கொலையாளி: இல்லை. அது சுத்த ஏமாத்துத் தனம். சிந்தனையையும் விழுங்கி உடலையும் தின்றுவிட்டது மொழி. அதனை நீ உணரவில்லையா?
பெண்ணுடல்: நான் எனது ஞாபகங்களையும் எனது சிந்தனையையும் தொலைத்து நீண்டநாட்களாகிவிட்டன. என்னை மொழி விழுங்கமுடியாது. நான் மொழியின் சிதைவை இப்பொழுது எனக்குள் உணரத்தொடங்கிவிட்டேன்.
தற்கொலையாளி: நீ இப்பொழுதுதான் மொழியின் வெற்றுப் புலம்பலை உணருகிறாய். (மிகப்பெரிய சிரிப்பின் ஒலி)
பெண்ணுடல்: ம்... ம்...
தற்கொலையாளி: தர்க்கமற்ற சொற்கள் இப்போது உனக்குத் தேவையற்றதாகிவிடுகிறது.
பெண்ணுடல்: உண்மைதான்.
தற்கொலையாளி: நீ உனக்குள் ஒரு கவிதை எழுதத் தொடங்குகிறாய்.
பெண்ணுடல்: இல்லை. இல்லை. நான் எனது கவிதைகளை அழிக்கப்போகிறேன்.
தற்கொலையாளி: இரண்டும் ஒன்றுதான்.
பெண்ணுடல்: இல்லை... இல்லை...
முடிந்தவரை எனது கவிதைகளை நான் அழித்துவிட்டேன். எஞ்சியிருக்கும் எனது தடயங்களையும் தயவு செய்து அழித்துவிடுங்கள்...
பெண்ணுடல் தன்னைத் தீயில் எரிக்கிறது. தற்கொலையாளி பலத்த சிரிப்புடன் துள்ளிக் குதிக்கிறது. தற்கொலையாளியின் துள்ளலும் பெண்ணுடல் தீயில் எரிதலும் மிகப்பெரிய ஆட்டமாகிறது.
தற்போது அரங்கம் முழுவதும் இருள். தனியே நெருப்புச் சுவாலை மட்டும் தெரிகிறது.
அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தை ஒன்று எழுந்து சென்று கரும்பலகையில் எழுதுகிறது. மரணத்தின் வாசனையும் மரணத்தின் இசையும் அரங்கம் முழுவதும் பரவுகிறது. மோப்ப நாயின்நடையில் அங்கும் இங்குமாக அலைகின்றன உடற்குறிகள்.
குழந்தைகள் இரண்டும் மெதுவாக எழுந்து கரும்பலகைக்கு வருகின்றன.
குழந்தை ஒன்று:
நதியாக
நீரின் ஞாபகம்.
அவர்களைக் கடந்தும் தொடர்கிறது
ஆற்றின் மறதி.
குழந்தை இரண்டு:
ஆற்றின் மறதி
அவர்களைக் கடந்தும் தொடர்கிறது.
முற்றும்
நன்றி மணல்வீடு 30/31
நன்றி மணல்வீடு 30/31