Friday 4 November 2022

தற்குறித் தனத்திற்கான முழுப்பெயர்- கற்சுறா

 தற்குறித் தனத்திற்கான முழுப்பெயர்-



கற்சுறா.








வரலாறுகளால் நாம் கட்டப்பட்டிருக்கிறோமா? 

அல்லது 

கட்டப்பட்ட வரலாறுகளில் மட்டுந்தான் நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோமா? 

என்ற இரண்டே இரண்டு கேள்விகளால் நான் வாழும் காலத்தின் சில கதைகளைக்  கணக்கிட முனைகிறேன்.


ஒரு காலத்தில்  ஈழம் யுத்தத்தால் மட்டுமே நிரம்பியிருந்தது. அப்பொழுது எங்களுடைய வாழ்காலத்தை யுத்தமே அளவீடு செய்தது.


அன்பே!

 “ எங்கே இருக்கிறாய்?  எப்போது வருவாய்? 

நெஞ்சு படபடக்கிறது.

ஆனையிறவைக் கடக்க   இருக்கும்

வாகனங்களைப் போல் 

அவதியுடன் இருக்கிறேன். 

எனதன்பே…


எனக் காதலர்கள் தமது  பிரிவிற்கிடையில் இருக்கும் காதற் துயரைக் கூட யுத்தத்தால்  எழுதிவிடும் காலந்தான் அப்பொழுது. 

 ஆனையிறவு என்பது ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கொடுந்துயரச் சொல். அந்தத் துயரை, ஆனையிறவு என்ற அந்தத் துயர்ச்சொல்லை இன்றுள்ள ஈழத்தின் சந்ததியால் எவ்வளவு தூரம்  உணரமுடியும் என்பது மிகப்பெரிய கேள்வி.


இதேபோல் தான் இன்று  புதிதாய் மாறிய ஈழத்தின் ஒவ்வொரு ஊர்களிற்குள்ளும் பல்வேறு பொற்கதைகள் உண்டு. ஒற்றை ஊரில் மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு  ஊர்களிலும் யுத்தம் நல்லபடி வாழ்ந்தே கடந்ததற்கு ஆதாரமாய்  ஏராளம் அடையாளங்களை அது விட்டுச் சென்றிருக்கிறது. ஆனால் அவற்றை நின்று நிதானித்து அவதானித்துச் செல்ல இன்று யாருக்கும் தேவையில்லை.


இன்றுள்ள ஏ9 பாதையூடாகக் கடக்கும் போது இருக்கின்ற ஆனையிறவு அல்ல அன்றிருந்த ஆனையிறவு..  இன்றுள்ள ஏ9 பாதையின்  உணர்வுமல்ல  அந்தக்காலத்தின்  ஏ9  பாதை. இதற்குள் இருக்கின்ற கதைகளை இன்றைய காலத்தில் வெறுமனே புனைவுகளுக்கூடாக மட்டும்  பார்த்து நாம் கடந்து விடமுடியுமா?  ஆனால் மிக முனைப்பாக  நாம் புனைவுகளுக்கூடாக மட்டும் கடந்து விட எத்தனிக்கிறோம். 

நம்மிடையே உட்புகுந்திருக்கும் அதிக புனைவுகள் ஈழயுத்தகால வரலாற்றைச் சொல்வதாகச் சொல்லிக் கொண்டாலும் வெறுமனே அவை புனுகுகளாக மாறிவிடுவதனை அண்மைக்கால புனைவு வாசிப்பு அனுபவங்களிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும். 

ஈழ யுத்தகால இந்தப் புனைவுகள் யுத்தம் பற்றி அனுபவமற்ற தலைமுறைக்கும் யுத்தத்தை வெளியிலிருந்து பார்க்கும் யுத்தவிரும்பிகளான  தமிழகத்து மற்றும் புலம்பெயர்ந்த சமூகத்திற்குமாகவே எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களாலேயே பெரிதும் அவை விதந்தோதப்படுகின்றன. யுத்தத்திற்குள் வாழ்ந்து யுத்தத்தை வெறுத்த அல்லது மறுத்து நின்றவர்களால்  இந்த வகைப் புனைவுகள் கொண்டாடப்படுவதில்லை.


நம் எல்லோருக்கும் ஈழயுத்தம் தந்து போன பாடம் சிறியதல்ல.


எங்களுடைய காலத்தை மட்டுமல்ல எம்மிற்குள் நடைபெற்ற யுத்தம் எமக்குப் பின்னான மூன்று தலைமுறையின் வாழ்வைக் காவு கொடுத்திருக்கிறது என்பதனை இந்தப் புனைவாளர்களும் இந்தவகைப் புனைவின் பின்னிருக்கும் அபிமானிகளும் புரிந்து கொள்வதேயில்லை.


அந்த யுத்தத்தின் பின்னான இன்றைய  தலைமுறையினரின் வாழ்வும் கரிசனையும் பற்றி நாம் அறிய முனைந்தால் மிகப் பெரிய மனக்குழுறலே எஞ்சி நிற்கும். உண்மையில் யுத்தத்தின் விடுபட்ட காட்சிகளில் மட்டும் அந்தத் தலைமுறை பறந்து திரிகிறது. யுத்தத்தின் வலியையும் யுத்தமற்ற காலத்தின்  ஆனத்தத்தையும் உங்வாங்கிய உணர்வில் எழும் பறத்தல் அது.  


நீண்டதொருகாலம் யுத்தத்திற்குள் சிக்குண்ட  நாட்டில் யுத்தமற்றுப் போகும் போது என்னவெல்லாம் நிகழும் என்பதை எனது நாட்டின் வாழ்வுமுறையை வைத்து என்னால் கணக்கிட முடிந்தது. யுத்தம் நடந்து முடிந்த அத்தனை உலக நாடுகளிலும் இப்படித்தானே இருக்கும்  என்ற எண்ணம் தோன்றியது. யுத்தத்தில்அகப்பட்ட நேரடியான ஒரு இளைய தலைமுறையை ஒரு வழிகாட்டலும் இன்றித் தொலைத்துக் கொண்டோம்.  அப்படியிருக்கும் போது அந்த யுத்தத்தின் மூன்றாந் தலைமுறை பற்றி நாம் எண்ணிப்பார்க்கவே தேவையில்லை.அந்தத் தலைமுறை, தான் அறியும் கதைகளுக்கூடாகவே அதன் முன்னிருந்த காலத்தைக் கணக்கிட வேண்டியிருக்கும் புனைகதைகளுக்கூடாக அல்ல. அப்படியெனில் தான்  பெற்றுக்கொள்ள வேண்டிய கதைகளை அது எங்கிருந்து தேடுவது? 

அவர்கள் பெற்றுக் கொள்ளும் கதைகள் எவ்வளவு தூரம் போலியானவை என்பதனை நாம் கண்கூடாகக் கண்டு வரும் காலமாக இன்றைய காலங்கள் இருக்கின்றன.


நாற்பது வருடங்கள் தொடர்ச்சியாக யுத்தம் நடைபெற்ற ஒரு தேசம் யுத்தம் நிறைவு பெற்ற பின்னால் என்னமாதிரியான மன அழிவுகளுக்குள்ளும் சிந்தனை அழிவுகளுக்குள்ளும் சிக்கவேண்டிவரும் என்பதற்கு மற்றய தேசங்களைப் போல் எமது தேசமும் மிக நல்ல உதாரணம்.


ஆனால் அந்த வகை அழிவுகளிலிருந்து தற்காலிகமாகவேனும் தற்காத்துக்கொள்ள  நமது தேசத்திற்குக் கிடைத்த ஒரு வரம் புலம் பெயர்ந்த சமூகம். தன்சமூகத்தின் மீது அக்கறையும் அறிவும் கொண்ட சமூகமாக நமது புலம்பெயர் சமூகம் இருந்திருந்தால்  புலம் பெயர்ந்து வாழும் நிலங்களில் தாம் பெற்ற அனுபவங்களையும் அறிவுகளையும் கொண்டு தற்காலிகமாகவேனும் தனது சமூகத்தை  தற்காத்து விட்டிருப்பார்கள். ஆனால் அது நடைபெறவில்லை. அந்த அனுபவத்தை அவர்கள் கைக்கொள்ளவேயில்லை. தனது சமூகத்திற்குள் அதனைக் கொண்டு செலுத்தவும் இல்லை.


மாறாக அந்தப் புலம்பெயர் சமூகம் தன்னுடைய நலன் மட்டும் சிறக்கவும் தனது வாழ்வின் பணப் பெருமிதத்தினை மீள மீள நிலைநிறுத்தவும் கூடியதான பணிகளை மட்டுமே  தேர்ந்தெடுத்தது. அதற்கூடாகவே தனக்கு சமூகம் மீது  அக்கறையிருப்பதாகக் காட்டியது. ஆனால் இது நமது சமூகத்தை நிலை கொள்ளச் செய்யக் கூடிய வழிமுறையல்ல என்பதனை அனைவரும் நன்கு அறிவார்கள். அந்தப் புலம்பெயர் தற்குறிகளும் அறிவார்கள். 


இவ்வாறுதான் ஈழம் பற்றிய கரிசனையின்  கதைகளூடு தம்மை ஒரு விம்பமாகக் காட்டியபடி வெறுமனே தற்குறி மனநிலையில் இந்தப் புலம்பெயர்த்  தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் காலந்தள்ளியபடியே  கடக்கிறது. பெரும்பாலும் இவர்களிடம் இருந்தே போலிக்கதைகளை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டி நேருகிறது. இந்தப் புலம்பெயர்த்  தற்குறிச் சமூகம்தான் இறுதிவரை அந்த யுத்தத்தை ஆதரித்து  நின்றது என்பதையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும். 


மாறாக  இந்த யுத்தத்தை ஆதரித்து நின்ற நமது  சமூகத்தின்  கடை நிலை குறித்து அந்த  யுத்தகாலத்திலும் யுத்தம் முடிந்த காலத்திலும் தமது எதிர் விமர்சனங்களைத் தீவிரமாக எழுதியும் பேசியும் வந்தவர்கள் ஏராளம் ஏராளம். அவர்களில் பலர் யுத்தகாலத்திலேயே கொல்லப்பட்டார்கள் யுத்தம் முடிந்த காலத்திலும் கொல்லப்பட்டார்கள். பலர் மவுனமாக்கப்பட்டார்கள்.  அவர்களைப்பற்றிய கதைகளை அறியமுடியாதபடி வலிந்து சொல்லப்படும் வேறுகதைகள்தான் தேசியம் என்ற பெயரில் செயற்படும் இந்தத் தலைமுறையைச் சென்றடைகிறது. 


இந்த வகைப் போக்குகளிலிருந்து மாறி மெல்லத் தவிர்த்த கதைகளாயும் புனைகதைகளாயும் சொல்லமுனைபவர்கள் அந்தக் கதைகளின் வரலாற்றில் தம்மை மட்டுமே  முன்நிறுத்தி வரையத் தொடங்கிறார்கள் என்பதுதான் இன்று நம்முன்னுள்ள இன்னொரு  சீரழிவு நிலை. இவர்கள் இதனைத் திட்டமிட்டே  செய்து வருகிறார்கள்.  இவர்களிடம் சமூகம் மீதான சிறு கரிசனை கூட இருப்பதில்லை. தன்னை மட்டும் முன்நிறுத்தி வாழும் ஒரு தற்குறி மனநிலையில் வெறுமனே யுத்தம் பற்றிய  பகட்டுக் கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். இந்த வகைப் பகட்டுக் கதைகள் சமூகத்தை ஒருபொழுதும் உய்விக்கப் போவதில்லை. தான் வாழும் சமூகத்தின் இயல்பான கதைகளை உள்வாங்க முனையும் ஒரு மூன்றாம் தலைமுறையை அது குழப்பத்தில் கொண்டு போய் நிறுத்தும் என்ற சமூக அக்கறை கூட இவர்களிடம் இல்லை.




புனைவு என்ற பெயரில் எழுதிவிடும் பொய்களைப் புனைவாக விட்டுக் கடந்துபோக அந்தத் தலைமுறைகளுக்கு முடிந்தாலும் வரலாற்றைச் சொல்வதாக எழுதப்படும் கட்டுக்கதைகளை அவற்றில்   உதிர்க்கப்படும் பொய்களை அவர்களால் கடந்து போக முடியாது. அதனை அவர்கள் உண்மை என்று நம்பிச் சிலகாலத்தை அழித்துவிடுவார்கள். யுத்தத்தின் எஞ்சிய வடுக்களாக பலர் இன்னமும் உயிரோடு வாழும் காலத்திலேயே இவ்வாறான பொய்களை உதிர்ப்பவர்கள் குறித்து நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். ஏனெனில் பலர் மறைந்து போகும்  இனிவரும் காலங்களில் எந்தப் பொய்யை எப்படி வேண்டுமானாலும் இந்த வகைத் தற்குறிகளால் எழுதிவிட முடியும் என்பதுதான் உண்மை.


அதனால்தான் 

வரலாறுகளால் நாம் கட்டப்பட்டிருக்கிறோமா? அல்லது கட்டப்பட்ட வரலாறுகளில் மட்டுந்தான் நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோமா? 

என நான் ஆரம்பத்தில் கேட்க வேண்டியிருந்தது.


கட்டப்படும் இந்த வகை  வரலாறுகளால் ஈழத்திலிருக்கும் இளைய தலைமுறையினருக்குள் ஏற்படும்  குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும்  ஈழ யுத்ததிற்கு வெளியில் வாழ்ந்து வரும் முக்கியமாகத்  தமிழகத்தவர்கள்   மற்றும் புலம்பெயர் தமிழர்களது  இன்றைய இளைஞர்கள் - குழந்தைகள் ஈழயுத்தக் கதைகள் குறித்துக் கைக் கொள்ளும் குழறுபடிகள்  ஏராளம். இந்தவகைக் குழப்பங்களையும் குழறுபடிகளையும் தோற்றுவிப்பவர்களிலும் அதனைத் தொடர்ந்து  தக்க வைத்துக் கொள்பவர்களிலும் மிக முக்கிய பங்காற்றுபவர்கள்   ஈழம் மற்றும் புலம் பெயர் தற்குறிகள் என்பதே என் கணிப்பு. 


தமிழகத்துச் சூழலுக்கும் ஈழத்தின் சூழலுக்கும் அரசியல் ரீதியாகவும் சரி இலக்கிய ரீதியாகவும் சரி பெரும் அன்னியோன்னியம் இருக்கிறது எனக் கணிப்பிட்டு வந்தாலும் அவை மேம்போக்கான பார்வை என்பதனை நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து உணரத் தொடங்கியிருந்தேன்.  


ஈழம்  அல்லது அதற்குள் நடைபெற்ற யுத்தங்கள் குறித்துக் கருத்தியல் ரீதியாக உண்மையை ஆழ்ந்து அணுகும் பார்வை, கிடைக்கும் தடயங்களிலிருந்தும் அவர்களுக்குக் கிட்டியதில்லை. கிட்டும் அறிதலையும் தமக்கும் தமது இருப்பிற்கு இடையூறு தரும் எனில்  கிட்டவும் தமிழகத்தவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. அவற்றை விமர்சனவழியிலும் அணுக நினைப்பதில்லை என்பதுடன் கேட்பார் கைப்பிள்ளையின் மனோபாவத்தில் கதைகளைக் கேட்டுவிடும் அறிவையுமே அவர்கள் கைக் கொண்டிருக்கிறார்கள்.


தமிழகத்து இலக்கியவாதிகள் மட்டுமல்ல அங்குள்ள சராசரி அரசியல்வாதி தொடக்கம் ஆட்சியதிகாரத்திலிருக்கும் அரசியல்வாதிகள் வரை ஒரே மனநிலை கொண்டவர்களே. ஈழம் குறித்த கதைகளை தமது வாழ்வை மீறிய தமது வாழ்வைக் குலைக்கக் கூடியதான கருத்துக்களைத் தெரிந்தும் அவர்கள் சொல்ல நினைப்பதில்லை. எப்போதாவது சொல்ல வேண்டும் எனவும் அவர்கள் நினைப்பதில்லை. தமிழ்நாட்டில் எதனைப் பங்கம் இல்லாது விற்கமுடியுமோ எதனால்  அவர்கள் “பெருமானம்” கொள்ளமுடியுமோ அதன்பக்கமே நின்று கதை சொல்ல முனைவார்கள். அது ஜெயலலிதா - கருணாநிதி- நெடுமாறன்- திருமாவளவன்- சீமான் எனப் பரவும் அரசியல்வாதிகள் முதற்கொண்டு இந்தியாருடே குமுதம் ஆனந்தவிகடன் மற்றும் இலக்கியச் சிற்றிதழ் எழுத்தாளர்கள் வரை நிலமை  அதேதான். விற்பனைக்கானதும் இருப்பிற்குமான கதை சொல்லலே அது. அதனைத் தவிர்த்து உண்மையின் பக்கம் அவர்களால் ஒருபொழுதிலும்  நிற்கமுடிந்ததில்லை.  


ஈழத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு அரசியற் சூழல் மாற்றங்களிலும் யுத்தச் சூழல் மாற்றங்களிலும் இந்தத் தமிழக அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்களை நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால் வெளிப்படையாக இந்தப் போக்கினை விளங்கிக் கொள்ள முடிந்திருக்கும்.  இதில் நெடுமாறன் வை.கோபாலசாமி ஆகியோரின் உரைகளும் அந்த உரைகளை மிஞ்சி எழுந்த எழுச்சித் தமிழன் என்றும் செந்தமிழன் என்றும்  அடைமொழியுடன் அடையாளப்படுத்தப்படும்  சீமானின் உரைகளையும் நீங்கள்  கூர்ந்து கவனிக்கத் தேவையேயில்லை. மேம்போக்காகக் கேட்டாலே அதன் உள்ளார்ந்த போலித் தர்க்கங்களை இலகுவாக  விளங்கிக் கொள்ள முடியும்.


இவ்வாறான அரசியல்வாதிகள் கடந்து இலக்கியவாதிகளின் பக்கம் கவனித்தால் அதிலும் எவ்வித வித்தியாசங்களும் நமக்குத்  தென்படாது. அதே அரசியல்வாதிகளது தற்குறித்தனத்துடனேயே தமிழகத்து இலக்கியவாதிகளின்  ஈழ யுத்தகாலம்  குறித்த புரிதல் மற்றும் யுத்தம் பற்றிய எழுத்துக்கள் குறித்த புரிதல்களும்  இருக்கும்.  அவற்றில்  பிரேம்- ஜெயமோகன்- அ. ராமசாமி- ரமேஷ்- அம்பை- மாலதிமைத்திரி- அ.மங்கை- அ. மார்க்ஸ்- என இந்தப்பட்டியலுக்கு அளவேயிருக்காது. இது நீண்ட நெடும் பட்டியல். ஈழம் குறித்தோ அல்லது ஈழ எழுத்தாளர்கள் குறித்தோ இவர்கள் இடும் பதிவுகள் அவற்றிற்கான பெரும் சான்றுகள். அது ஒரு தொகை. ஒரு வகை. 


இவர்களை வெளிநாடுகளிற்கு அழைக்கும் புலம்பெயர் தமிழர்களுக்காக எந்தப் பொய்யையும் புழுகையும் இவர்கள் சொல்லத் தயங்குவதில்லை. அவர்கள் அடையாளம் காட்டும் இலக்கியத்தை விடப் புதிதாக அவர்களால் எதையும் கண்டு கொள்ளவும் முடிவதில்லை. ஈழத்தில் நிகழும் இலக்கிய உரையாடல்களைக் கூட அவர்களுக்குள் உருவாக்குவதில்லை. வெறுமனே புழுகு மூட்டைகள். தமிழகத்தின் இலக்கிய உரையாடல்களுக்கூடாகக் கூடப் புதிய உரையாடல்களைக் கண்டடைவதில்லை. அந்தத்’ தேவையும் அவர்களுக்கில்லை.


நீண்ட காலத்தின் முன் தமிழகத்து நிழல் பதிப்பகத்தைச் சேர்ந்த                          ப. திருநாவுக்கரசு அவர்களால் “புலம்பெயர்ந்தோர் கவிதைகள்” என்ற தொகுப்பு வெளியிடப்பட்டதனை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அதில் தொகுக்கப்பட்ட கவிதைகளை எழுதியவர்கள் யாரிடமும்  கேட்காமலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதனைவிட   தமிழகத்தில் அக்காலத்தில் விற்கக் கூடிய, புலம் பெயர் வாழ்வு எனத்   தாம் நினைக்கும்  எண்ணத்திற்கிணைவான அழுகுரலும் அவலமும் கொண்ட கவிதைகளை மட்டும்  தொகுத்தே அதனை வெளியிட்டிருந்தார். புலம்பெயர் இலக்கியம் என்றால் அகதி வாழ்வும் அவல ஓலமும். பிரிவுச் சோகமும் மட்டுந்தான்  என்பதே ப. திருநாவுக்கரசர் போன்றவர்கள்  காட்ட முனைந்தது. 


அதன் சிலகாலத்தின்  பின் தோழர் அ.மங்கை அவர்கள் “பெயல் மணக்கும் பொழுது” என்ற பெயரில்  ஈழத்துப் பெண்கள் கவிதைத் தொகுதி ஒன்றினைத் தொகுத்திருந்தார். ஈழம் மற்றும் புலம் பெயர் தேசத்தின் அரசியலையோ அல்லது அனுபவத்தையோ விளங்கிக் கொண்டு  ஆய்வு செய்து தொகுக்கப்பட்ட தொகுப்பல்ல அது. வெறுமனே தமது அடையாள இருப்பை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட தொகுப்பே அது.  தமது புலம்பெயர்  இலக்கியத் “தொங்கு தசைகள்” (இது அவர்களது வார்த்தைதான்.இந்த இடத்தில் இதனைப் பாவிப்பதற்கு அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்) ஐக் கொண்டு இந்தத் தொகுப்பினை அவர்கள் வெளிக் கொண்டு வந்தார்கள். இதன் பின்னால் ஈழம் குறித்தானதோ அல்லது புலம்பெயர்ந்த சமூகம் குறித்தானதோ அல்லது ஈழப் பெண்கள் குறித்தானதோ என எந்தவித அரசியற் புரிதல்களும் அவர்கள் யாருக்கும்  இருந்ததில்லை. இலக்கியப் புரிதல்களும் இருந்ததில்லை. பகட்டு இலக்கியத் தொகுப்புக்கள் அவை.  அக்காலத்தில் தான் இவர்கள் போற்றும் பெண் இலக்கியவாதியான அம்பை அவர்கள் ஈழத்துப் பெண் கவிஞர்கள் நல்ல கவிதைகளை எழுதுவதில்லை என்றும் சொல்லியிருந்தார். ஆனால் அவற்றையும் தமது தற்குறித் தனத்தால் இந்தபுலம்பெயர்  சமூகம் இன்றுவரை தொடர்ந்தும் அடையாளப்படுத்திக் கொண்டேயிருப்பது வேதனையானது.


உண்மையில் நீண்ட கடும் யுத்ததிற்குள் வாழ்ந்த ஒரு சமூகத்தின் உண்மையான கதையை ஏன் இவர்கள் உரு மாற்ற நினைக்கிறார்கள். யுத்தம் முடிந்த பின்னால் அந்த நிலத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களது கதையைக் கூட ஏன் இவர்களால் அணுகமுடியாதிருக்கிறது? யுத்தத்திற்குள் அகப்பட்ட நிலத்தின் மக்களது கதை வேறாக இருக்கும் பொழுது இவர்களால் எவ்வாறு வேறு ஒரு கதை சொல்ல முடிகிறது? எனக் கணக்கிட்டால் அவர்கள் கொண்டிருக்கும் தற்குறித்தனம் சுலபமாக விளங்கும். யுத்தத்திற்குள் அகப்பட்டிருந்த நிலத்தின் கதையை எவ்வாறு தனது நலனுக்காகப் புலம்பெயர் சமூகம் பயன்படுத்தியதோ அதேபோல் புலம்பெயர் சமூகத்தின் கதையை தனது நலனுக்காகத் தமிழகம் பயன்படுத்துகிறது. இதில் அதே புலம்பெயர் தற்குறிகளும் மறுபயன்பெறுகிறார்கள் என்பதும் உண்மையே. 


இந்தவகைக் குரங்குச் சேட்டைக்கு உதாரணமாக சிலவற்றை உதாரணமாகக் காட்ட முடியும்.




ஈழயுத்தகாலத்தின்  கதைகளையோ அல்லது ஈழத்தில் எழுந்த இயக்கங்களின் அனுபவங்களையோ பெற்றிராத ஆனாலும்  புலம்பெயர்  எழுத்தாளர் என அனைவராலும்   அடையாளப்படுத்தப்படும்  அ. முத்துலிங்கம் அவர்கள்  ஈ.பி. ஆர். எல்.எவ் இயக்கத்தின்  உறுப்பினரான கவிஞர் செழியனிடம் கேட்ட கதையை தவறாக விளங்கி  “பதினொரு  பேய்கள்” என்ற பெயரில்  மிகவும் கீழ்த்தரமான ஒரு கதையை எழுதிக்  காலச்சுவட்டில் பிரசுரித்திருந்ததை நீங்கள் அறிவீர்கள். அந்தக் கதையை தான் தவறாக எழுதிவிட்டேன் என்பதனை உணர்ந்தோ உணராமலோ அ.முத்துலிங்கம் அவர்கள்  தனது இணையத்திலிருந்து அதனை நீக்கினாலும் அவரால் காலச்சுவட்டின் இதிழிலிருந்து அதனை  நீக்க முடியாது போனது. காலச்சுவட்டுக் குழுமத்திற்கும் இந்தக் கதை குறித்த எந்தப் புரிதல்களும் இருந்ததேயில்லை. ஈழத்து எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் பிரசுரிக்கும் நிலையில் அ. முத்துலிங்கம் அவர்கள் எழுதிவிட பிரசுரிக்க வேண்டிய அவல நிலை காலச்சுவட்டிற்கு. தமிழகத்துத் தற்குறிகளுக்காக அ. முத்துலிங்கம் போன்ற தற்குறிகளால் இவ்வாறான கதைகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.





இதே போல்தான் புலம்பெயர் இலக்கியப் பயில்வான் ரங்கநாதன்கள் அடையாளம் காட்டியதை மட்டும் கொண்டு ஜெயமோகன் அவர்கள் ஈழப்பெண்கவிஞர்கள் குறித்து  அரைகுறைப் பார்வையுடன் ஒரு  கட்டுரையைக் காலம் சஞ்சிகையில்  எழுதிவிட முடிந்தது.  ஈழக்கவிதைகள் குறித்தோ அல்லது ஈழத்துப் பெண்கவிகள் குறித்தோ புரிதலற்ற எழுத்து அது. ஆனால் ஜெயமோகனே எழுதிவிட்டார் என்ற அளவில் இவர்களுக்குள் புளங்காகிதம் வேறு. அதனையே  வரலாறாக அடையாளம் இட்டுச்செல்ல இன்னொருவகைத் தற்குறிக்  கூட்டம்.


நீண்ட காலத்தின் முன் ரொரண்டோவில் நடைபெற்ற சுந்தரராமசாமியின் நினைவுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றேன். கூட்டத்தை நடத்தியவர்கள் அந்த நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த போது,பிரமிளைத் துரோகி என விழித்துப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். சுந்தரராமசாமி சொன்ன கதைகளையோ அல்லது காலச்சுவடுக் குழுமம் சொன்ன கதைகளையோ மட்டும்  கேட்டே இவர்கள் அவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தார்கள். எழுத்துக்ளுக்கூடாக அவர்கள் எதையும் கண்டடைந்து அந்தக் கதையைச் சொல்லவேயில்லை. பிரமிளின் எழுத்துக்களை வாசித்தோ அல்லது சுந்தரராமசாமியின் எழுத்துக்களை வாசித்தோ அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை. பிரமீள் மற்றும் சுந்தரராமசாமி வாழும் காலத்தில் இவர்கள் தமிழ் நாட்டில் வாழந்தவர்களுமல்ல. அவர்களின் கதைகளைக் கேட்டு  அவ்வாறு சொல்வதினூடாக இங்குள்ள தற்குறிகள்  அவர்களுக்குக்  கைமாறு செய்தார்கள்.



தமிழகத்துத் தற்குறிகளுக்கு ஈழத்துத் தற்குறிகளின் “கைமாறு” தான் இது. இந்த வகை  மொக்குத் தற்குறிகளைக் கொண்டே   ஈழக்கதையை, ஈழத்தின் வாழ்வை, அதன் முழுவரலாறையும் அவர்கள் அளவீடு செய்து கொள்கிறார்கள்.  இவர்கள் சொல்லும் பொய்யை அவர்கள் கொண்டு செல்வதும் அவர்கள் சொல்லும் பொய்யை இவர்கள் கொண்டு செல்வதுமேதான் இன்றுவரை தொடர்கிறது.  இந்த உறவிற்குள் ஒரு விரிவான உரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டும். அது நிகழ்ந்ததேயில்லை.





ஒருமுறை பாரிசீல் நின்ற சாருநிவேதிதாவிற்கு ஆபிரிக்க நாடு ஒன்றின் ஊடாகப் பயணம் செய்த அகதித் தமிழ்ச் சிறுவன்  ஒருவரைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் சாருநிவேதிதாவிற்கு தன்னுடைய பயணக் கதையைச் சுவாரிசயமாகச்  சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் சாருநிவேதிதாவோ அந்தச்சிறுவன் சொன்ன கதையை விட்டு,  தான் எடுத்த குறிப்பில் வேறு ஒரு கதையை மிகத் தவறாக பதிவு செய்து வைத்திருந்தார். நான் அதனைத் திருத்தி “அவ்வாறு இல்லைச் சாரு அந்தச் சிறுவன் அப்படிச் சொல்லவில்லை. உங்களுக்குச் சொன்னது விளங்கவில்லையா” எனக் கேட்டபோது  “இல்லை தமிழ்நாட்டு வாசகனுக்கு நான் இப்படியே சொல்லமுடியாது. சொன்னால் பிரியோசனம் இல்லை. அதனை அவர்கள் வாசிக்கவும் மாட்டார்கள். அவர்களுக்குரியபடி நிறைய விடயங்களை நான் உருவாக்கித்தான் சொல்ல வேண்டும். தமிழ் நாட்டுச் சூழல் அப்படித்தான். நீ சும்மா இரு”

 என்றார்.


 அவர் தனது கோணல் பக்கங்களுக்காக அந்தக் குறிப்பினை எடுத்துக் கொண்டிருந்ததாகச் சொன்னார். இது நல்ல செயல் அல்ல என்பதைத் தான் சொல்ல முடியும். சொல்லிவிட்டேன். ஆனால்  அண்மைக்காலத்தில் அவர்குறித்த எனது  எதிர்க்கதையாடல்களுக்குப் பின்  அவர் தனது  கோணல் பக்கங்களிலிருந்து இடையிடையே  பல பக்கங்களை நீக்கிவிட்டதாக அறிந்தேன்.மிகவும் நல்ல செயல் அது.  புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையிலுள்ள கதைகளில் எந்தத் தர்க்கத்தை நாம் தேடுவது என்றெல்லாம் இன்று பலர் விவாதிக்கிறார்கள்.  யார் எழுதுகிறார்கள் என்பதில்தானே தர்க்கத்தைத்  தேடவேண்டும். தற்குறிகள் எழுதும் புனைவிற்கும் அபுனைவிற்கும் இடையில் என்ன தர்க்கந்தான் நிகழ்ந்துவிடும்?


இன்னொரு இடத்தில்  பாரீசின் வாழ்வுமுறையை அறியாது, அதனை அறியும் முறையில் கூட விளங்கிக் கொள்ளாத  ஒரு கதையொன்றைப் பணத்திற்காகக்  குமுதத்தில் சாருநிவேதிதா எழுதியிருந்தார். படு பிற்போக்குத் தனமான ஒரு கதை அது. அந்தக் கதைக்கான பணத்தை அனுப்பவேண்டிய தனது அறிவழகன் என்ற சொந்தப்பெயருடனான முகவரியையும் கதையோடு இணைத்திருந்தபடியால் குமுதம் இதழினர் அந்த முகவரியையும் கதைக்குக் கீழே பணவிபரத்துடன் பதிவு செய்திருந்தார்கள். அவர்கள் திட்டமிட்டே அதனைச் செய்தார்கள்.


 இதுதானே தமிழகத்தின் இன்றைய உண்மை நிலை.  பணம் சார்ந்து மட்டும் தானே இன்றைய தமிழக்கத்தின் இலக்கியம் அரசியல் எல்லாம்?. தமிழ் நாடு தனது எழுத்தாளர்களாக சாருநிவேதிதாக்களையும் வாசகர்களாகச் சாரு நிவேதிதாக்களையும் தானே உருவாக்கி விட்டிருக்கிறது. தமிழகத்து இலக்கியவாதிகளின் வெளிப்படை நிலையும்  இதுதான். சாருநிவேதிதாவை விட கொஞ்சம் மேலேயும் கொஞ்சம் கீழேயும்தானே மற்றயவர்கள். தாம் கொண்ட கருத்தியலுக்காக மட்டும் இயங்கும் எழுத்தாளர்கள் என இன்றுள்ளவர்களில்  நாம் யாரைத்தான் அடையாளம் இடுவது? 


நாம் தான் சாரு நிவேதிதாவிற்கு ஸீரோடிகிரி நாவலை எழுதிக்கொடுத்தோம் என்று பிறேம் ரமேஸ் விவாதித்த சண்டையையும் இந்தச் சாருநிவேதிதாவின் ஸீரோடிகிரி விருதை அ. மார்க்ஸ் அவர்கள் கையேந்தி வாங்கி நின்றதையும் கணக்குப் போட்டுப் பாருங்கள். இன்று பிரேமின் எழுத்துக்களும் மாலதி மைத்திரியின் எழுத்துக்களும் என்னுடையவைதான் என்றும் அவர்களுக்கு எழுதவே தெரியாது என்பதாக எழுத்தாளர்  ரமேஸ் அவர்கள் இன்று  விவாதித்து நிற்கும் தளத்தையும் கவனியுங்கள். இவை முக்கியமான தளங்கள். நாம் இலகுவாகக் கடந்து போக முடியாதவை.


இது இப்படி இருக்க, இந்தவகையான தமிழக இலக்கியவாதிகளைக் கவனம் கொள்ள வைக்கவும், இவர்களது கரிசனையைப் பெறவும் இவர்களது கவனத்தின் மூலம் தமது இருப்பை நிலை நிறுத்தவும் என இன்று எழுதிக் கொண்டு இருக்கும் அதிகமான  ஈழ எழுத்தாளர்களைப்பற்றி நாம் என்னவிதத்தில் அளவிட்டுக் கொள்வது? .  இவர்களால் எழுதப்படும் கதைகளில் அவலம் அதிகம் இல்லை அழுகுரல் அதிகம் இல்லை எனத் தமிழகத்துப் பதிப்பகங்கள் சொல்லும் போது அதற்கேற்றாற் போல் தமது கதைகளை அதிக அழுகுரல்களால் மாற்றி எழுதிவிடும் எழுத்தாளர்களைக் கொண்டிருப்பது ஈழ எழுத்தின் அவலம் இல்லாமல் வேறு என்ன?  இறுதி யுத்ததின் பொழுது இறந்து கொண்டிருக்கும் உடல்களைப் படம் எடுத்துப் பிரசுரித்துப் புலம்பெயர் தேசத்தில் காசுழைத்த  மோசடியாளர்களுக்கும்  இவர்களுக்கும் என்ன பெரிய  வேறுபாடு உள்ளது? இவர்கள் தான் புனைகதைகளால் ஈழவரலாற்றை பொய்யாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அழிந்து மாண்டவர்களின் கதைகளை இவர்களால் ஒருபொழுதும் அறத்தோடு எழுதவே முடியாது. அதன் வாழ்வோடும் எழுத முடியாது.


கடந்த 22 ஓகஸ்ட் 2022 அன்று “வாவ் தமிழா” இணையத்தில் நண்பர் கவிஞர் கருணாகரன் அவர்கள் விடுதலைப் புலிகளைத் தமிழர்கள் மதிப்பது ஏன் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில்

 

“புலிகள் இருந்த காலத்தில் எழுதப்பட்ட ஆக்கங்கள், (நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் அரசியல்) பிரதிகளை விடவும் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட ஆக்கங்களும் பிரதிகளும் அதிகளவாக இருக்கின்றன. இப்பொழுதுதான் அவர்களைப் பற்றிப் பேசப்படுவதும் அதிகமாக உள்ளது.

அந்தளவுக்கு உலகெங்கும் உள்ள தமிழர்களிற் பெரும்பாலானோர் இன்னும் புலிகளின் மீது பேரபிமானமும் போரபிமானமும் உள்ளோராகவே உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை புலிகள் தோற்கவில்லை. பதிலாகத் தோற்கடிக்கப்பட்டனர் என்பதேயாகும்.

புலிகள் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டனர் என்பதற்கிடையில் என்ன வேறுபாடு என்று நீங்கள் கேட்கக் கூடும். இந்த இரண்டு சொற்களுக்கும் இடையில் நுட்பமான – பெரிய – வேறுபாடுண்டு.

புலிகள் தோற்கவில்லை, அவர்கள் இலகுவில் தோற்கக் கூடியவர்களில்லை, அப்படி அவர்கள் தோற்றுப் போகவும் இல்லை என்பது.

புலிகள் தோற்கடிக்கப்பட்டனர் என்பது என்னதான் திறமையும் ஆற்றலும் வலுவும் வல்லமையும் இருந்தாலும் அதை மிஞ்சிய சக்திகளாலும் பலத்தினாலும் வலுக்கட்டமாகத் தோற்கடிக்கப்பட்டது எனக் கொள்ளப்படுகிறது. இதனால்தான், “40 நாடுகள் சேர்ந்து தொடுத்த யுத்தம் அது. வல்லரசுகள் திரைமறைவில் நடத்திய சதி. இலங்கை அரசு மட்டும் அந்த யுத்தத்தை நடத்தியிருக்குமானால் புலிகளிடம் அது நிச்சயமாகத் தோல்வியைத் தழுவியிருக்கும்” என்று இவர்கள் சொல்கிறார்கள்.

புலிகளின் போர் மிக நூதனமான பல உள்ளடக்கங்களைக் கொண்டது. கெரில்லாத் தாக்குதல் என்ற மறைந்திருந்து தாக்கும் நடவடிக்கையிலிருந்து மரபுப் படையாக நேருக்கு நேர் நின்று போரிடுவது வரை இது பல வடிவங்களைக்கொண்டது. இதற்கான பயிற்சியையும் படைக் கட்டமைப்புகளையும் தகுதியான ஆயுதங்கள் மற்றும் ஆளணியையும் அவர்கள் தாராளமாகக் கொண்டிருந்தனர்.” என்கிறார் கருணாகரன்.

இவ்வாறான ஒரு கருத்தை கருத்தியலை புலம்பெயர் சமூகத்தில் இருக்கும் ஒருவர் தெரிவித்திருந்தால்  ஆச்சரியப்பட ஒன்றுமே இருந்திருக்காது. அல்லது தமிழகத்தில் இருக்கும் ஒருவர் தெரிவித்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அந்த யுத்தத்திற்குள்ளும் அந்த மக்களுக்குள்ளும் தன் வாழ் காலத்தை வாழ்ந்து வந்த கருணாகரனால், யுத்தகால அனுபவத்தை எப்படித் தவறாக  சொல்லமுடிகிறது என்பது ஒரு பெருங்கேள்வி. கருணாகரனுக்குத் தெரிந்த ஒரு முழுமையான கதை வேறு விதமாக இருக்கும் பொழுது அவரால் எவ்வாறு இதனையெல்லாம் எழுதமுடிகிறது என்பது குறித்தும் நாம் கவனிக்கவே வேண்டும். யாரை நோக்கி எழுதுகிறார்? ஏன் எழுதுகிறார் என்ற வினாக்களை நாம் எழுப்பியாக வேண்டும்.

 

“ஈழப்போருக்கும் அதைப் பெருமெடுப்பில் நடத்திய விடுதலைப்புலிகளுக்கும் தமிழ்ப்பரப்பில் பெரும் மதிப்பும் ஈர்ப்பும் உள்ளது. ஈழப் போராட்டமும் போரும் புலிகளும் தோல்வியைக் கண்டாலும் அதை மீறியும் பலரிடத்திலும் இந்த ஈர்ப்பிருப்பதைக் காணலாம்.”

என்பதுடன்

“போரின் ஒரு பக்கம் இழப்புகளையும் மிகப் பெரிய அவலத்தையும் துயரையும் தருவதாக இருந்தாலும் அதன் மறுபக்கம் களிப்பூட்டுவதே.” 

என்றுஅந்தக் கட்டுரையை முடிவு செய்கிறார்கருணாகரன்.

அவர் யாரின் பக்கம் நின்று இந்தக் களிப்பூட்டலைக் கணக்கிடுகிறார் என்பது மிக முக்கியமானது. கேட்கப்படவேண்டியது.

புலிகளால் செய்யப்பட்டவை யுத்தமே ஒழிய போராட்டமல்ல என்பதும் கருணாகரனுக்கு நன்கு  தெரியும். ஈழயுத்ததின் பிற்காலத்தில் அதற்குள் இருந்தவர்கள் போராளிகளல்ல என்பதும் அவர்கள் எவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதையும் எங்கள் எல்லோரையும் விட கருணாகரன் நன்கறிவார்.

செஞ்சோலையில் கொல்லப்பட்ட 63 மாணவிகளை இன்றும் அநாதைக் குழந்தைகள் எனச் சொல்லிக் கொண்டிருக்கும்  தமிழகத்து மற்றும் புலம்பெயர்ந்த முட்டாள் மனநிலை கொண்டவரல்ல நண்பர் கருணாகரன். ஆனால் கருணாகரன் இவ்வாறு தமிழகத்து மற்றும் புலம் பெயர் தலையாட்டிக் கூட்டத்திற்குத் தேவையான கதையை மட்டும் சொல்ல வேண்டி வந்த நிர்ப்பந்தம் குறித்து நாம் கரிசனை கொண்டேயாக வேண்டும்.   

உண்மையில் புலிகளின் வீரசாகசங்களும் அதன் பின்னாலிருந்த துணிவும் புலிகளின் போர் மிக நூதனமான பல உள்ளடக்கங்களைக் கொண்டது என்று சொல்லும் கருணாகரன் போன்றவர்களுக்கு ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட ஸகரான்  குழுவின் வீரசாகசம் ஏன் பொருட்படுத்தக் கூடியதாக இருப்பதில்லை. தாம் கொண்ட நிலைப்பாட்டிற்காகத் தம்மையே அழித்துக் கொண்டவர்களை ஈழவிடுதலைச் சாகசத்திலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது?

 சாய்ந்த மருதுவில் தானும் தன் குடும்பமும் குண்டை வெடிக்கவைத்து இறந்து போகும் இறுதிக் கணத்தில் தன்னுடைய கைக் குழந்தையை கதவின் இடுக்கினூடே வெளியில் எறிந்த தாயின் வீரத்தை எந்த வீரத்துடன் நாம்  பொருத்துவது?

எந்தத் தாயும் தன் குழந்தையை  எதற்காகவும் இறந்து போக விடுவதில்லை. அது தேசம் காக்கும் யுத்தமாக இருந்தாலும் கூட. யுத்தத்தில் இறந்து போகப் போராட அனுப்பும் தாய் என்பது கட்டமைக்கப்பட்ட கதை. அது வஞ்சகத்தனமான கதை.  நண்பர் கருணாகரன் அவர்கள் மற்றவர்கள் வேண்டிநிற்கும் - காத்து நிற்கும் கதைகளைச் சொல்வதை விடுத்து தன்நெஞ்சறிந்த கதைகளை வெளிப்படையாகப் பேச வேண்டும் என்பதே என் விருப்பு. உண்மையில் ஈழவிடுதலை எனச் சொல்லப்படும் காலத்தின் மிகச் சிறந்த ஆவணம் அவர். அவர் காலம் கழித்தேனும் உண்மைகளைப் பேசவேண்டும். அதுவே அவருக்குச் சிறப்பு.

இதே போன்றதொரு   கருத்து மனநிலையில் இருந்து தான்  நண்பன் சோபாசக்தி தன்னுடைய ஸலாம் அலைக் என்ற நாவல் வெளியீட்டுரையை அண்மையில்  தமிழகத்தில் செய்திருந்தார். அந்த உரையை அங்கே குழுமியிருந்தவர்கள் கேட்டுமுடிக்கும் தருவாயில் ஈழ இலக்கியத்தின் இன்னல்களை தொடர்ந்தும் அனுபவிக்கும் எழுத்தாளராகவும் அதனைப் புறந்தள்ளி எழுதிவரும் ஒரு கலகக்காரனாகவும்  அவரே ஈழத்தின் ஒரு உன்னத அடையாளமாகவும் உணர்ந்து தலையாட்டிக் கொண்டிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு உருவானது. இவ்வாறான உரைகளுக்கு  அங்கிருந்து எந்த மறு கேள்விகளும் உருவாவதில்லை. கேட்பார் கைப்பிள்ளை மனோபாவத்திலேயே அவர்களது தலையாட்டல்கள் எப்பொழுதும் இருந்து வருகிறது. ஈழத்தின் கதைகளை குழறுபடியாகவே விளங்கிக் கொண்டிருக்கும் தமிழகத்துச்  சூழலுக்குள் சோபாசக்தி போன்ற தற்குறிகளது செயற்பாடுகள் எந்த மாற்றங்களையும் நிகழ்த்திவிடுவதில்லை.

தொடரும் அவருடைய உரைகளில் 1980களின் பிற்காலத்தில் புலம் பெயர்ந்து ஐரோப்பா சென்ற தனது வகுப்பு நண்பர்கள் தன்னையும் அங்கே வரும்படி அழைத்தபோது நீங்கள் உங்கள் கோப்பை கழுவும் வேலையைச் செய்யுங்கள் என அவர்களுக்கு மொட்டைக்கடிதம் எழுதியதாகச் சொல்லும் இடத்தையும் இடையில் ஒரு இடத்தில் எனது எழுத்துச் செயற்பாடு  இப்பொழுது கொஞ்சம் தேங்கியிருக்கிறது. நான் சினிமாவில் கொஞ்சம் சீரியசாக இருக்கிறேன். நான்தான் அதனையும் போய்த் திருத்த வேண்டியிருக்கிறது என்று சொல்லும் இடத்தையும் நீங்கள் சிரித்தே கடந்து விடுங்கள். அவை நீங்கள் சிரிப்பதற்காகச் சொல்லப்பட்ட கதைகள் என நீங்களாகவே நினைத்துச்  சிரித்தே கடந்து விடுங்கள். ஏனெனில் இவையெல்லாம் இந்தச் சமூகத்திற்குத் தீங்கில்லாத கதைகள். அதனை நாம் சிரித்தே கடந்து விடுவதில் சிக்கல் ஒன்றும் இல்லை..

நாடகங்களில் நடைபெற்ற  நகைச்சுவையாக ஊர்களில் பேசப்பட்ட  சமூகக் கதைகளில் வேதனையில் வாழ்பவர்கள் வேதனையில் வாழவேண்டியதில்லை சாதனையிலும் வாழலாம் என்ற வசனத்தை மாற்றி வேலணையில் வாழ்பவர்கள் வேலணையில் வாழவேண்டியதில்லை சரவணையிலும் வாழலாம் என்ற பகிடி ஊர் முழுக்க நகைச் சுவைக்காகக் கட்டப்பட்ட கதை. இதனை தான் எழுதிய நாடகத்தில் தான் அவ்வாறு  நடந்ததாக அவுஸ்ரேலிய உரை ஒன்றில்  சொல்லியிருப்பார்.  அதனை அறிந்திருந்தவர்கள் கூடச் சிரித்தார்கள் ஏனெனில் அவர் நல்லதொரு கதை சொல்லி. அவரது பேச்சுக்களிலும் கதைகளிலும் இவ்வாறு நாம் சிரித்துக் கடந்து போக அதிக விடயங்கள் இருக்கும்.

 ஆனால் தமிழ்நாட்டில் இவர் பேசிய போது சிரித்துக் கடந்து விட முடியாத இடங்கள் இவை. எது உண்மை எது பொய் என்ற குளறுபடியில் இருக்கும் தமிழ் நாட்டுத் தலையாட்டித் தமிழர்களுக்குள் சோபாசக்தி போன்றவர்கள் ஏற்படுத்தும் குழறுபடிகள் மிக மோசமானவை. இவர்கள் சொல்லும் பொய்களை அவர்கள் உண்மை என நம்புகிறார்கள். 

 

 



  1. 2009க்கு முன்பு மூர்க்கமாக இப்போது லேசாக எனது சொந்த ஈழத் தமிழ் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

  2. நான் ஒரு படம் நடித்து வெளிவந்தால் அந்தப்படத்திற்குப் போகாதீர்கள் என யூரியூப் பிரச்சாரங்கள் துண்டுப் பிரசுரங்கள் இன்று வரை வெளிவந்து கொண்டிருக்கிறது.

  3. எழுதியதால் நான் எனது சொந்த சமூகத்தால் கடுமையாகப் புறக்கணிக்கப்பட்டேன்.

  4. சிலபல உடல் ரீதியான தாக்குதல் முயற்சிகளை எதிர் கொண்டேன்.

  5. வெவ்வேறு அழுத்தங்கள் உண்டு

  6. புத்தகங்களை வாங்கக் கூடாது என்று சொல்வார்கள்.

  7. புத்தகங்களை வாங்கி றோட்டிலே கொழுத்திப் போடுவார்கள்.

  8. அதனை யூரியூப் எடுத்து வேறு போடுவார்கள்.


இவ்வளவு அழுத்தங்களுக்குள்ளாலும் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன்.

  1. 2009 க்கு முற்பட்ட காலங்கள் வரை இவ்வளவு எதிர்ப்புக்களையும் சந்தித்துக் கொண்டு, உடல் ரீதியான தாக்குதல்கள் பயமுறுத்தல்கள்- ஒரு சிறிய கட்டுரை எழுதினாலே நண்பர்கள் போன்பண்ணிச் சொல்லுவார்கள். சோபா இந்த லாச்சப்பல் பக்கம் வராதேங்க உங்களப் பிடிச்சு மின்விளக்கில கட்டிருவாங்க. 

  2. என்னுடைய நண்பர் சபாலிங்கம் ஏப்ரல் மாதம்- மே மாதம் 1ம் திகதி 1994ம் ஆண்டு வீட்டிலே வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அச்சுறுத்தல்களுக்குள் தான் நான் இயங்கிக் கொண்டிருந்தேன்.

என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது உண்மையில் அறிவார்ந்த சமூகமாக இருந்தால் அந்த இடத்தில் இடைமறித்திருக்க வேண்டும். எங்கே? எப்படி? எவ்வாறு? என்றாவது கேட்டிருக்கும். இதுதான் தலையாடிக் கூட்டம் ஆயிற்றே. கதைகேட்டு வளரும் கூட்டம் ஆயிற்றே. அதற்கு இது கேட்காது. தாம் ஆட்டும் தலைக்கு என்ன மறுபயன் கிடைக்கும் என்பதே அதன் நினைப்பாக இருக்கும்.


  1. நான் இயங்குவதற்கு ஒரேயொ……………ரு ஊக்கசக்தியாக இருந்தவர்கள் வாசகத் தோழர்களான நீங்கள் மட்டுமே(கவனியுங்கள்  நீங்கள் மட்டுமே)

  2. நான் எழுத வந்த காலத்திலிருந்து குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்து வணிகப் பத்திகைகளாக இருக்கட்டும் சிறு பத்திரிகைகளாக இருக்கட்டும் இலக்கிய வாசகர்களாக இருக்கட்டும் என்னைக் கவனித்துப் பிடித்தீர்கள் எனக்கான இடத்தை வழங்கினீர்கள். நீங்கள் எனக்குப் போர்க்காலச் சலுகையை வழங்குகிறீர்கள். அளவுக்கு அதிகமாக எனக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என.நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு”

என அவர் சொல்லும் போதாவது அவர்களுக்கு உடல் கூசியிருக்க வேண்டும். அது நடக்கவில்லைஇந்த வார்த்தைகளைக் கேட்டு  அவர்கள் தங்களுக்குள் வெட்கப்படவும் இல்லை. ஏதோ தர்ம காரியம் செய்தது போல் நினைப்பு அவர்களுக்கு.


  1. என்னுடைய எழுத்துப்பயணத்தில் ஏறக்குறைய 25 வருடங்கள் வந்து விட்டேன்.

எனச் சொல்லிமுடிக்கும் போது வரலாற்றின் உண்மைத் தகவல்களை ஆதாரத்தோடு கேட்டுக் கொண்டிருந்ததாக அவர்கள் நம்பினார்கள். இதற்குள் இருக்கும் தன்னலப் பித்தலாட்டத்தை  விளங்கிக் கொள்ளும் அறிவு அவர்களிடம் அறவே இல்லை. அந்த விளங்கிக்கொள்ளும் அறிவை அவர்கள் இன்றுவரை எங்கிருந்தும் பெறவில்லை. ஈழம் குறித்த கதைகளை ஆய்வு செய்து பெற்றுக் கொள்ள அவர்கள் ஒருபொழுதிலும் முனையவில்லை. புலம்பெயர்ந்த கூட்டத்தினர் அவர்களை அழைத்து வந்து  சொல்லும் விடயங்களையும் புலம்பெயர் கூட்டத்தினர் அங்கே சென்று சொல்லும் விடயங்களையும் மட்டும் உண்மை என நம்புகிறார்கள். அதனையே வரலாறு எனக் காட்ட முனைகிறார்கள். வரலாறாக எழுதுகிறார்கள். இதில் உண்மை என்பது ஒருபொழுதிலும் இருப்பதில்லை. இந்த உரையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு சோபாசக்தி எழுதத் தொடங்கி 25 வருடங்கள் தான் ஆகிறது. ஆனால் சபாலிங்கத்தைப் புலிகள் சுட்டுப் படுகொலை செய்து 28 வருடங்கள் முடிந்து விட்டது என்ற பகுத்தறிவு கூட அவர்களிடம் இல்லாமல் போனது  எப்படி?  சொந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டேன் என்றால் எங்கே எவ்வாறு நிகழ்ந்தது என்று ஒரு இரட்டைக் கேள்வியைத் தன்னும் அவர்கள்  கேட்க்கக் கூடாதா?


இவ்வாறுதான் ஈழக் கதைகள் குறித்து எந்தப் பகுத்தறியும் அறிவுமற்று கேட்பவர்களது கதைகளில் இருந்து வரலாற்றைப் புனைய நினைக்கிறார்கள் தமிழக நண்பர்கள். இவர்களது அறிவுகெட்ட தற்குறித் தனத்தைத்  தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள் ஈழத்தின் தற்குறிகள்.

இந்த நிலை மாற வேண்டும். 

கட்டப்பட்ட வராறுகளால் சமூகங்களை ஒருபொழுதும் அளவிடவே முடியாது. காட்டப்பட்ட வரலாறுகளுக்குள் வாழ்ந்து தொலையவும் முடியாது. கண்முன்னால் நடந்த கதைகளையே அதன் முன்னால் மடை மாற்றும் போது நமக்குச்  சொல்லப்பட்ட தொன்மங்கள் பற்றி நாம் அச்சம் கொள்ள வேண்டாமா?

வரலாற்றில் இந்தத் தற்குறித்தனத்தை பிரித்தறியும் அறிவை எங்கிருந்து பெற்றுக் கொள்ளும் அடுத்த தலைமுறை. அதற்கு வழிகாட்டுவது யார்?


நன்றி.


இதுவரை நான் மேலே எழுதிய எழுத்தை வாசித்து முடிக்கும் ஒருவருக்கு அல்லது சாதாரண தற்குறி இலக்கியக்காரருக்கு கோபம் மூக்கு நுனியில் எழுந்துவிட நேரும். 

இதில் இலக்கிய அறம் இல்லை. இது ஒரு தனிநபர் விமர்சனம். இது பேசமுனையும் மையக் கருத்துடன் ஒன்றிப் போகவில்லை என்றெல்லாம் சொல்லிவிட நேரும். அதுவும் சரிவராது விட்டால் சோபாசக்தி மற்றும் கருணாகரனை நேரடியாகத் தாக்குகிறது எனவும் சொல்லிவிட நேரும்.


 ஆனால் இதனையே கீழேயுள்ளது போல்  நாலைந்து  வரியில் கவிதை என்று சொல்லி எழுதியிருந்தால்  ஆழமான விடயம் என்றும் இலக்கிய நயம் என்றும் நல்ல கவிதை என்றும் வாசித்துப் பேசாது கடந்திருப்பார்கள்..


 

 

நெடு வழிப்பயணம்.

 

முன்னிருக்கும் பாதைகளில்

முட்கள் இருந்ததாகச் சொல்வதில்,

 

இல்லை.

 

இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் ஒற்றை நொடியில்

யரோ  என்னைக் கடந்து சென்றார்கள்.

 

மீளக் கால் பதித்துவிட முடியாதபடிக்குத்

தேங்கிநிற்கும் சனக் கூட்டத்திடையேதான் நானும் 

ஒழிந்து நின்றேன்.

 

கடந்து போனவனின் கைகளில் 

இருந்தது நெருஞ்சிமுள் பையா?

அப்போ

அவனுக்கு முன் யார் கடந்திருப்பான் கையில்  பையுடன்?

 

என்று

 

 கவிதை எனச் சொல்லி  இதனை எழுதியிருந்தால்  கொண்டாடியிருக்கவும் கூடும்.

இதுதான் இன்றும்  நிலைத்து நிற்கும் தற்குறித் தனத்திற்கான முழுப் பெயர்.. 





Sunday 24 July 2022

தற்குறிகளை இடைமறித்தல்.

 “24 யூலை 2022  தமிழகத்தில் என்.கே. ரகுநாதம் “.





கற்சுறா



என்.கே. ரகுநாதம் நூல் அறிமுக நிகழ்வில் உரையாற்றத் தயார் செய்யப்பட்ட கட்டுரை.


அனைத்து நண்பர்களுக்கும்  வணக்கம்.


இந்த இடத்தில் உங்களுடன் உரையாடக் கிடைத்த சந்தர்ப்பத்திற்கு பெரு நன்றியுடையவனாக இருப்பேன்.  ஏனெனில் நான் தமிழக இலக்கிய நண்பர்களை நோக்கி உரையாற்றும் முக்கிய நிகழ்வு எனக் கருதுகிறேன்.. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் இதில் உரையாற்றியவர்களுக்கும் மிகுந்த நன்றிகள்.


நான் “என். கே. ரகுநாதன்” அவர்கள் குறித்தோ அல்லது “என்.கே. ரகுநாதம்” என்கின்ற அவரது தொகுப்புக் குறித்தோ அல்லது அந்தத் தொகுப்பின் கருத்தியலினை நாம் ஏன் கொண்டோடவும் - கொண்டாவும்  நினைக்கிறோம் என்பது குறித்தோ  நான் இந்த நிகழ்வில் பேசப்பேவதில்லை என்பதனை முதலிலேயே சொல்லி விடுகிறேன்.


இந்தப் பெரும் நூலை நான் தொகுத்தேன் என்ற காரணத்தினால் மட்டும் இந்த உரையை நான் ஆற்ற வேண்டும் என்று விரும்பியதில்லை. அது என் தெரிவுமல்ல.


மிக நீண்ட தொடர் காலத்தில் ஈழத்தவர்களும் தமிழகத்தவர்களும்  எவ்வாறு இணைந்து வருகிறோம் என்பதும். இந்த இணைவின் பலம் எவ்வாறு கண்டடையப்பட்டு அடையாளப்படுத்த முனைகிறது என்று சிந்திக்கும் போது ஏற்படும் ஒரு நெருடல் ஒரு வெற்றிடம் எப்பொழுதும் இருந்தபடியே இருக்கிறது. இன்றும்  அதனை உணர்ந்து கொள்ள நேரும் பொழுது இதனைச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எழுகிறது.


இந்த வெற்றிடம் மிக ஆபத்தான விளைவை ஏற்படுத்திவிடக் கூடியது.



கருத்தியலால் இந்த சமூகத்தை அணுகவிரும்புவதும் கருத்தியலால் ஒரு உறவை ஏற்படுத்தவிரும்புவதும் என்ற வரைவே நமக்கிடையில் இருக்கவேண்டும்.


நாம் விம்பங்களால் நமது சமூகங்களை விளங்கிக் கொள்ளவோ அணுகவோ முடியாது. உறவுகளைப் பேணமுடியாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.  அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நான் உங்களில் பலரை அணுகியிருக்கிறேன்.


கருத்தியலால் சமூகத்தை அணுகும் போது அங்கே நீண்ட பெரும் உரையாடல் நிகழவேண்டும். அது உடன்பாடாகவோ இருக்கலாம்  அல்லது முரண்பாடாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது நடைபெற வேண்டும்.   அப்படியொரு நிலை நமக்கிடையில் இன்றும்  நடைபெறவேயில்லை. 


வெறுமனே வழிபாட்டுமுறையில் இங்கிருந்து வந்து அங்கே கதை சொல்பவர்களையும் அங்கிருந்து இங்கே வந்து கதை சொல்பவர்களையும் ஏற்றுக் கொள்ளும் போக்கே இன்றுவரை  தொடர்கிறது.


ஈழச் சமூகம் குறித்தும்  அதன் வாழ்வியலும் அதன் அரசியல் நகர்வுகளும் தமிழகத்தில் உரிய முறையில் பெரும்பாலும் அணுகப்படவில்லை - உள்வாங்கப்படவில்லை. உரையாடலாய்  அது வெளிபப்படவேயில்லை  என்ற உண்மையை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். 


அவை வெறுமனே புகழாரங்களாகவும் இல்லையேல் குற்றவுணர்வில் வெளிப்படும் கேவல்களாகவும். இல்லையேல் உணர்ச்சிவசப்பட்ட துதிபாடல்களாகவுமே விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இது பொதுவாக வெகுசன மட்டத்தில் நிகழ்ந்து வந்தாலும் சீரிய இலக்கியச் செல்நெறித் தளத்திலும் அதன்போக்கில் மாற்றமின்றியே இருந்திருக்கிறது.


2009இன் பின்னான  யுத்த நிறைவுக் காலகட்டங்களில் மிக அதிகமான உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த தமிழகத்திலிருந்து எழுத்தாளர் பிறேம் அவர்கள் “தனது அடுத்த நாவல் “ஈழம்  குறித்துத்தான் எழுதப்போகிறேன்” என ஒரு அறிவித்தலைச் செய்திருந்தார். அதேபோல் இயக்குனர் ராம் அவர்களும் இதேபோன்றே எனது அடுத்த திரைப்படம் “ஈழம் பற்றிய கதைதான்” என அறிவித்திருந்தார். இரண்டு பேருக்குமே “தயவு செய்து அப்படியான எண்ணத்தைக் கைவிடுங்கள். உங்களால் அதனை முழுமையாக ஒருபொழுதிலும் அதனைச் செய்யமுடியாது. இந்த உணர்ச்சிவசப்படும் நிலையிலிருந்து வெளியே வாருங்கள்( இவ்வாறுதான் எழுதினேன் என ஞாபகம் உள்ள வரிகள் இவை )எனப் பதில் எழுதியிருந்தேன். 


தமிழகத்தில் ஒரு கருத்தியல் நிலையில் கைகோர்த்து இருக்கக் கூடியவர்களின் மனநிலையே இப்படியிருக்கும் பொழுது எத்தனை முத்துக்குமார்கள் தீயில் எரிவார்கள்? எரியூட்டப்படுவார்கள்? என யோசியுங்கள். முத்துக்குமார் எரிந்து போனதை அரசியலாக்கிய இயக்குனர் பாரதிராஜா எனது அடுத்த படத்திற்கு முத்துக்குமார் என்றுதான் பெயர் வைப்பேன் என்றார். அதனோடு சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனோ ஆயிரம் முத்துக்குமார்கள் உருவாகுவார்கள் என்று உரத்துக் கோசமிட்டார்.இதன் நீண்ட தொடர்ச்சிகள்தான் இன்றுவரை இலக்கியச் சூழலிலும் வளர்ந்து போயிருக்கிறது. 


பொதுவாகவே ஈழத்தில் நடைபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் என்றாலும் சரி, இறுதியாக நடைபெறறு முடிந்த  ஈழவிடுதலைப் போராட்டங்கள் என்றாலும் சரி உங்கள் அருகில் உள்ளவர்களின் கருத்துக்களையே கேட்டு அவற்றையே  பொதுக் கருத்துக்களாக முன்வைக்கும் விளங்கிக் கொள்ளும் அளவிலேயே தமிழகம் நின்று விட்டிருக்கிறது. அதற்குமப்பால் அதன் உள்ளார்ந்த வீரியத்தை அது ஒருபொழுதிலும் கண்டுகொள்ளவேயில்லை. அதனைக் கண்டு கொள்ளும் பாவனை தூரத்திலும் இல்லை.


 


அதனால் தான் நான் என்.கே. ரகுநாதன் . குறித்து  இங்கு எதையும் பேசப் போவதில்லை என்றும் இந்தவகை வியாதியின் பின்னால் இருக்கும் அசட்டுத்தனத்தின் மொத்தவடிவம் எது எனவும் அண்மைக்காலத்தில் அறிந்து கொண்ட அனுபவத்தின் ஒருசிறிய  கருத்துரைப்பினைக் குறிப்பிட இருப்பதாகச் சொல்கிறேன்.


ஈழச்சாதியமைப்பின் நச்செழுற்சியை உடைத்து நொருக்க  கருத்தியற் பகிர்வுகளும்  சிந்தாந்தத் திட்டமிடல்களுமேயற்ற ஒரு காலத்தில் தன்னெழுச்சியாய் தனது பத்தொன்பாதாவது வயதில் 1951ம் வருடம் எழுத்தைக் கையில் எடுத்தவர் என்.கே. ரகுநாதன் அவர்கள். அந்த எழுச்சியின் தொடர்ச்சியினை நாம் ஒரு கருத்தியலாகவே பார்க்கிறோம். ஆம் 1951ம் ஆண்டு அந்த நிலவிலே பேசிய கதை ஒரு கருத்தியல் அடையாளம். அந்தக் கருத்தியல் தமிழகத்தை வந்தடைய இவ்வளவு காலம் சென்றிருக்கிறது என்பது மிகப் பெரிய வருத்தம்.


இந்தப் பின்னடைவு எதனால் நிகழ்ந்தது? எங்கே தவறு இருந்தது? சாதிய நச்சுக் கொடிக்கான ஒருங்கிணைந்த எழுச்சியைப் பரவலான அறிதலுடன் கண்டடைய முடியாது  போனது ஏன் என நாம் வினாவ வேண்டும். 


விம்பங்களை முன்நகர்த்திய செயலுக்குக் காரணமானவர்களைக் கண்டறிய வேண்டும். அவர்களைத்தான்  நாம்  முதலில் நாம் தகர்த்தெறிய வேண்டும். கருத்தியலால் மட்டும் நாம் இணையவேண்டும். ஆனால் அது ஒரு பொழுதிலும்  நடைபெறவேயில்லை. இன்றைய சூழலை உற்று நோக்கும் போது அது ஒருபொழுதும் நடைபெறப்போவதேயில்லை என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது.


வெற்று முகங்களுக்குப் பின்னால் அவர்கள் சொல்லும் போலிப் பிரசங்கங்களிற்குப் பின்னால் இயங்குபவர்களாக நீங்கள் தொடர்ந்தும் இருந்தால் உங்களை விடவும் உங்கள் எதிராளிகள் எப்போதும்  “அற்புதமானவர்கள்” என்றே எண்ணத் தோன்றுவார்கள். அதனை நாம் எங்கே நிறுத்துவது? எவ்வாறு கண்டடைவது என இனியாவது யோசிக்க வேண்டும்.


இன்றுள்ள தமிழகத்துச் சூழலில் சமூக நீதியின் பக்கம் நின்று செயற்படுவதாக யார் விம்பம் காட்டினாலும் அவர்கள் தமக்கு வசதியான தமக்குத் தீங்கற்ற யாரோ ஒருவருடைய விம்பத்தையும் அவரது குரலையும் எந்தக் கேள்விகளும் இல்லாது அதன் பின்னாலுள்ள எந்தக் கதைகளையும் அறிய விருப்பமில்லாது கொண்டாடவும்  அதனையே  முன்னுதாரணமானது என்று வெளிக்காட்டவும் முனைகின்றார்கள். இது காலாகாலம் நடக்கின்ற செயற்பாடுகள் எனினும்  இது மிக அயோக்கியத்தனமானது. மிக நீண்ட பக்க விளைவுகளை உருவாக்கிவிடக்கூடியது. இது உண்மையானதல்ல.


நீங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.



உங்களுக்கு இங்கிருந்து அங்கு வந்து கதை சொல்பவர்களையும் உங்களிடமிருந்து இங்கு  வந்து மீண்டும் உங்களுக்கு  கதை கொண்டு வந்து சொல்பவர்களையும்  நம்பி நீங்கள் ஏமாந்து போகிறீர்கள். அவர்கள் இரண்டுபேருமே ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பவர்கள். முதலில் இவர்களை நம்பாதீர்கள். இவர்களை விடவும் உண்மையில் வேறு கதை இருக்கும் என்ற சாதாரண அறிவையாவது நீங்கள் அறிந்து கொண்டிருக்க வேண்டும்.. 


இவர்களிலிருந்து அந்தக் கதைகள் முற்றிலும் வேறுபாடாகவே இருக்கிறது. தன்னை மட்டும் முன்னிலைப்படுத்திச் சொல்லும்  ஒரு தற்குறியால் ஈழத்தின் பரவலான கதைகளையும் அதன் மீதான எதிர்க்கதைகளையும்  சொல்லிவிட முடியாது. அந்தத் தற்குறி தனது விம்பத்தை மட்டுமே கணக்கில் வைத்துக் கதை சொல்லும்போது அதனை  ஏன் நீங்கள் நம்பித் தொலைக்க வேண்டும். அதுதான் உண்மை என்று நீங்கள் ஏன் காவியலைய வேண்டும்? 


"உன்னுடைய  அறிவு பெரிது நீ அதனால் நீ யோசி" என்று தமிழகத்திலிருந்துதானே உங்களுக்கு ஒருவர் சொல்லி வைத்தார். அவர் ஒரு மகாமொக்கன் என்பதா உங்கள் கணிப்பு?


பகுத்தறிவு குறித்த கருத்தியலினை முன்னகர்த்தும் அறிவாளிகளாக இருப்பதாகச் சொல்லும் நீங்கள் எதையும் பகுத்தறியாது கடந்து விடுகிறீர்கள்.


சாதாரண ஒரு பூம் பூம் மாட்டுக்காரன்சொல்வதை நம்பிவிடும் ஏமாளியாக நீங்கள் இருக்கிறீர்கள் என்றாவது புரிந்து கொள்ளுங்கள். 


ஆனால் என்னமோ  நீங்கள் அனைவருமே தஞ்சாவூர்ப் பொம்மையினை எனக்குள் எப்பொழுதும் ஞாபகம் ஊட்டிக் கொண்டிருக்கிறீர்கள். நடைபெறுகின்ற கூட்டங்களில் நீங்கள் ஆட்டிக் கொண்டிருக்கும் உங்கள் தலைகளைக் கவனிக்கும் போது எனக்கு அப்படியொரு எண்ணம் தோன்றுவது ஒன்றும் வியப்பல்ல.ஒரு பொம்மையாக அரசியற்கருத்தகளை உள்வாங்குவதில் உங்களுக்குள் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.  அவ்வளவு இலகுவாகத் தலையாட்டியபடி இருக்கிறீர்கள். நீங்கள் இவர்களுக்குத் தலையாட்டுவதுபோல் எம்மால்  ஒருபொழுதும் ஆட்ட முடியாது என்பதனை நீங்கள் அவதானித்தேயாகவேண்டும். எமக்கு அந்தத் தேவை ஒருபொழுதிலும் இல்லை. மறுவளமாக அதனை நீங்கள் கேட்டு எங்களுக்குத் திருப்பிச் சொல்லும் போது,  உங்களுக்கும்  நாம் தலையை ஆட்டுவோம் என நீங்கள் ஒருபொழுதிலும் எதிர்பார்க்கக் கூடாது. 


இங்கே  சில கதைகளை உங்களுக்கு ஞாபகம் ஊட்டுகிறேன்


ஒரு முறை  உங்களிடமிருந்து இங்கு வந்தவர் ஒருவர் அவர் பெயர் எஸ். இராமகிருஸ்ணன்.  அவரைக் குறுந்திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வில் பேச அழைத்திருந்தார்கள். அவர் அதற்குச் சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு தமிழகத்துத் திரைப்படம் ஒன்றிற்கு கதைவசனம் எழுதியிருந்தார் எனச் சொன்னார்கள். அதனாலேயே அந்தத் தகுதி அவருக்குக் கிடைத்தது. இங்கு கனடாவிலுள்ள திரைப்படம் எடுக்கும் இளையோருக்கு ஒரு கதை சொன்னார்.


"கனடாவிலுள்ள நீங்கள் சுந்தரராமசாமியின்  புளியமாரத்தின் கதையை வாசியுங்கள். சுஜாதாவை வாசியுங்கள். அவற்றை  வாசிக்காது நீங்கள் ஒரு நல்ல குறும்படமமோ திரைப்படமோ  எடுக்க முடியாது"

என்றார்.



அவரை இங்கு வரவழைத்த கூட்டம் கைதட்டியது. சிலாகித்தது.  இங்குள்ள இளையோர்களது அனுபவத் திறன் குறித்தோ அல்லது அறிவின் தேடல் குறித்தோ அவர்களுக்கான தேவைகள்- அவர்களுக்குச் சமூகம் பற்றி இருக்கும் கரிசனையின் வடிவம் குறித்தே எவ்வித புரிதலுமற்ற நிலையிலேயே உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் அவை. ஆனால் அங்கிருந்து வந்த அவர் ஏதோ அற்புதமான கருத்தைச் சொல்லிவிட்டார் என்று இங்குள்ள கூட்டம் கைதட்டியது சிலாகித்தது. இரண்டும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவையே. இரண்டும் தற்குறிகளே...


இந்தக் கைதட்டிய கூட்டம் ஒருநாள் அங்கே வந்திருந்து தனக்குரியவகையில் இங்குள்ள இன்னொரு கதையைச் சொல்லும். நீங்கள் வாயைப் பிளந்து கேட்பீர்கள். அதுதான் உண்மை என நம்புவீர்கள். நீங்கள் நம்பத்தான் வேண்டும்.


ஏனெனில்  உங்களுக்கு ஒன்றும் புரியாது. உங்கள் அறிவால் நீங்கள் ஒருபொழுதும்  யோசிக்கப் போவதில்லை.  உங்களுக்கு இன்னொரு கதை தெரியாத பட்சத்தில் தெரிந்து கொள்ள விரும்பாத பட்சத்தில் பகுத்தறிந்து உணராத பட்சத்தில் நீங்கள் நம்பத்தானே வேண்டும். இல்லையேல் நம்பியமாதிரி நடிக்கத்தான் வேண்டும். அது உங்களுக்கு மிக வசதியானது. 


ஆனால் இவை ஒரு பொழுதும் உண்மையாக இருக்கப் போவதில்லை என்பதையாவது உணர்ந்து கொள்ளுங்கள்.


அப்படித்தான் அண்மையில்  இங்கிருந்து ஒருவர் அங்கே வந்து

“அண்ணாமலை மட்டுமல்ல அமித்ஷா வந்தாலும் ஈழத்தில் பி.ஜே.பி. காலூன்ற முடியாது” என விட்ட  வேடிக்கையை நீங்கள் நம்புகிறீர்கள். அது ஒரு  வேடிக்கை எனத் தெரிந்தாலும் அதனை மறுதலித்துச் சொல்ல உங்களிடம் ஒருவித தேடலோ அறிவோ இல்லை. அவரே ஈழத்தின் கருத்துச் சொல்லியாகவும் கதை சொல்லியாகவும் நீங்கள் நம்பி வைத்திருக்கீறீர்கள். அதனை மீறி உங்களால் ஒரு அறிவையும் மேலதிகமாகப் பெறமுடியாதிருக்கிறது. இது உங்கள் தவறே அன்றி அவருடையதல்ல. 


ஈழத்தில் இன்றுள்ள சூழலை விளங்கிக் கொள்ள ஒரு ஆறுமுகம் அங்கே வந்து திரும்பி ஈழத்தில் நாவலரான கதையும் அந்த நாவலரினால் அடைந்த சமூக மாற்றங்களையும் இன்று வரை துடைத்தெறிய முடியாதிருக்கிறது என்ற கதை போதுமானது. வெறுமனே தமிழ்நாட்டு சகபாடிகளுக்கு புல்லரிக்க வைக்க இந்தத் தற்குறிகளால் உதிர்க்கப்படும் வார்த்தைகளே இவை. இவை தாண்டிஅந்த வார்த்தைகள் எவ்வித சமூநோக்கம் கொண்டவையுமல்ல ..


இன்னொரு இடத்தில் அவரே  "ஈழத்தில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் தமிழுக்கு 3ம் இடம் தான்" என அழுது  எழுதியதும் அந்தத் தமிழிற்குள் ஒரு தலித்திற்கு எத்தனையாம் இடம் என நீங்கள் ஒருபொழுதும்  கேட்பதில்லை. அதுதான் ஈழத்தின் கதை என நீங்களும் அடையாளம் கொள்கீறீர்கள். ஈழம் குறித்து உங்களுக்கு எதையும் தேடி அறியும் அறிவில்லை. நீங்கள் மூளைச்சலவை செய்யப்பட்ட தற்கொலைப் போராளிகளைப் போல் அவரைப் போன்றவர்கள்  முன்னால்  நடிக்கிறீர்கள்.அது உங்களுக்கு ஒருபக்கம் வசதியாகவும் இன்னொருபக்கம் அவருக்கு இன்னும் வசதியாகவும் இருக்கிறது.


ஒருத்தன் பொய் சொல்கிறான் எனத் தெரிந்தும் அந்தப் பொய்யை மெய்யாக்க முனைபவர்கள் அதிமேதகு பொய்யர்கள்.


“எனது எழுத்துக்களுக்காக எனது சொந்த சமூகத்தால் தொடர்ந்து நான் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் உடல் ரீதியான தாக்குதல் முயற்சிகளை எதிர் கொண்டேன். வெவ்வேறு அழுத்தங்கள் உண்டு. புத்தகங்களை வாங்கக் கூடாது என்று சொல்லுவார்கள். புத்தகங்களை வாங்கி றோட்டிலே கொழுத்திப் போடுவார்கள். இவ்வளவு எழுத்துகளுக்குள்ளாலும் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன். ஒரு சின்னக் கட்டுரை எழுதினாலும் போன் பண்ணிச் சொல்லுவார்கள் சோபா கொஞ்சம் கவனமாக இருங்கள். லாச்சப்பல் பக்கம் வராதீங்க. எனது நண்பர் சபாலிங்கம் 1994 மே மாதம் அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அச்சுறுத்தல்களுக்குள்ளேதான் நான் இயங்கிக் கொண்டிருந்தேன். எனறு சொன்னவர் நான் எனது எழுத்துப் பயணத்தில் கிட்டத்தட்ட 25 வருடங்கள் வந்து விட்டேன். எனக்கு விழா எடுத்துவிடாதீர்கள். ” 

என்கிறார்.


(பார்க்க: https://www.youtube.com/watch?v=tekIw-MqO-g)


இவ்வாறு உங்கள் மேடையில் ஒருவர் உரையாற்றும் பொழுது நீங்கள் ஆகக் குறைந்தது சபாலிங்கத்தைப் படுகொலை செய்து 28 வருடங்கள் ஆகிவிட்டது. என்றாவது இடைமறித்துச் சொல்லக் கூடாதா? 


ஒரு அரசியற் சம்பவங்களைத் தன்னிலிருந்தே தொடங்க நினைக்கும் தற்குறிகளின் காலமாக நினைத்து நீங்கள் கடந்துபோவது எப்படி? ஈழத்தில் எழுத்துக்காகவும் கருத்திற்காகவும் மரணித்தவர்கள் பலர் உண்டு. அச்சுறுத்தப்பட்டவர்கள் பலர் உண்டு. தன்னுடைய முகத்தையே வெளிக்காட்ட விருப்பமற்று, ஆனால் தினமும் எழுதிக் கொண்டிருக்கும் எத்தனையோ எழுத்தாழுமைகள் உண்டு. ஆனால் இவ்வளவு கேவலமாக அவற்றையெல்லாம்  தன்னுடைய அடையாளமாக அடையாளமிட்டு உங்களுக்குக் கதை சொல்லும் போது நீங்களும் மெய் மறந்து கடந்து சென்று விடலாமா? இது அயோக்கியத்தனம் இல்லையா?


உங்கள் சமூகம் உங்களை எங்கே நிராகரித்தது? போகும் இடமெல்லாம் உங்களுக்கு விருதுகளை வழங்கும் இந்தத் தமிழ்ச் சமூகமா உங்களை நிராகரிக்கிறது? உங்கள் புத்தகத்தைக் கொழுத்துகிறது? உங்களை எழுத விடாமல் தடைசெய்கிறது? உங்களைத் தொந்தரவு செய்கிறது? எனக் கேட்கமாட்டீர்களா?




பெரியதொரு பூசணிக்காயை புலுடாவாய் சொன்னபொழுதில் கணக்குப் பார்த்து அறிவை யோசிக்க உங்களால் முடியாது போனது என்பது நீங்கள் கருத்தியலால் எதையும் அணுகவில்லை என்பதையே. வெறும் விம்பங்களால் அணுகி அத்தனை போலிப் பிரச்சாரங்களுக்கும் மண்டையை மண்டையை ஆட்டுவதால் ஏதும் ஆகிவிடப் பேவதில்லை.


கருத்தியல் தளத்தில்  மிகு சிரத்தையோடு சமூக நீதியின் பக்கம் நின்று பேசுவதாகச் சொல்பவர்கள் உரையாடல்களை நிகழ்த்துவதாகச் சொல்பவர்கள் உண்மையில் அவ்வாறு செயலாற்றுவதில்லை.  


ஆனால் தமிழகத்துப் பதிப்பகத்தார்- தமிழகத்து எழுத்தாளர்கள் -தமிழகத்துக் கருத்தியலாளர்கள் என்று அடையாளமிடப்படுபவர்களால் தொடர்ந்தும் இந்தத் தரித்திர நிலை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த அவலத்திற்கு அல்லது கேவலத்திற்கு நாம் ஒரு முற்றுப் புள்ளியை வைத்தேயாகவேண்டும். இல்லையேல் நாம் கருத்தியலால் இணையவே முடியாது. புலம்பெயர் சூழலில் இருந்து உங்களை நோக்கி வருபவர்கள் என்ன பொய்யை வேண்டுமானாலும் உங்களுக்குச் சொல்லிவிட்டுப் போகலாம் என நினைத்துவிட்டார்கள். அதனை நீங்கள் மாற்றி அமையுங்கள்.


தஞ்சாவூர்ப் பொம்மைகளாக நீங்கள் கேட்டுக் கொண்டும் அந்தப் பொய்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருப்பீர்களானால் அவர்களின் பொய்களிற்கு அளவே இருக்கப் போவதில்லை. நீங்களும் தஞ்சாவூர் பொம்மை வேசம் போடாது மெதுவாய் நகர்ந்து சீமானின் தம்பிகளாகப் போய் அமர்ந்து விடுங்கள். அதுவே உங்களுக்குச் சிறப்பு.