பன்முகவெளி அரங்கு கனடாவில் முதல் முறையாக 23 ஜனவரி 2010 அன்று23 ஜனவரி 20105225 Finch Av East, wood said point, Scarborough,Ont,Canada .இல் நடைபெற்றது.

                                  

நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் மீதும் நிகழ்தப்படுவதற்காகத் தயார் நிலையில் திட்டமிடப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகள் மீதும் நாம் தொடர்ந்தும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறோம். நிறுவனமயப்பட்ட சமூக அதிகாரங்களுக்கெதிராக கதைகளாகவும் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் பதிவை முன்வைத்து தொடர்ந்து இயங்கிவரும் சகலரும் ஒன்றிணைந்து விவாதங்களை உருவாக்கும் ஒரு புள்ளியே இந்த பன்முகவெளி என அறிவித்தது அனைவருக்கும் தெரியும்.

முழுநேர அரங்காக இடம்பெற்ற பன்முகவெளி பலவிதமான கருத்தாளர்களது பேச்சுக்களை உள்ளடக்கி அவற்றின் மீதான விவாதங்களுடன் நிகழ்ந்து முடிந்தது.


முதலாவதாக சுய அறிமுகம் இடம்பெற்றது. அனைவரும் தமது ஆர்வம் முயற்சிகள் குறித்து தெரிவித்தார்கள். அதன்பின் முதலாது அமர்வுக்கு நம்மொழி பத்திரிகை ஆசிரியர் உமாபாஸ்கரன் தலைமை தாங்கினார்.
- பன்முகவெளி பற்றியும் அதன் அவசியம் தேவை பற்றியும் கற்சுறா பேசினார்.
இந்தப் பன்முக வெளி என்ற அரங்கை ஆரம்பித்ததற்கு எந்தவித பிரத்தியேக காரணமோ அல்லது எந்த அரசியற் பின்னணியோ இல்லை என்பதை திறந்த மனதுடன் முதலில் ஒப்புவிக்கிறேன். இங்கிருக்கின்ற நாம் அனைவருமே கடந்த காலத்தில் சமூகம் சார்ந்த அக்கறையுடன் பலவித தளங்களில் செயற்பட்டவர்கள். என்றும் இந்தப் பன்முகவெளியின் செயற்பாடு என்பது இந்த முரணையும் பகையுணர்வையும் நீக்கி ஒரு பரஸ்பரதளத்தில் திறந்த விவாதங்களை உருவாக்க வேண்டும் என்பதே.

இங்கே யாரும் யாரையும் வென்றெடுப்பதோ கட்சி கட்டுவதோ நோக்கமில்லை. அவரவர்க்கான தளத்தில் கருத்தோட்டத்தில் இருந்து உரையாடுவதும்  புதிய தளங்களைத் தொடுவதுமே இதன் முக்கிய நோக்கம். கனடாவில் இதுவரை பலவித சஞ்சிகைகள் பத்திரிகைகள்- சமூகம் சார் அக்கறையுடன் -வெளிவந்திருக்கின்றன. அவை தொகுக்கப்படுவதும் அவற்றை விமர்சனத்துக்குட்படுத்துவதும் இதன்முக்கிய செயற்பாடாக இருக்க வேண்டும். முடிந்தளவு இந்தமுறை பார்வைக்கு வைத்திருக்கிறேன். இது தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்பது மிக முக்கியமானது என்று கற்சுறா குறிப்பிட்டார்.


அடுத்து விஜி அவர்கள் இடம்பெயர்வும் பெண்களும் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். நீண்டகாலமாக மனிதஉரிமைகள் குறித்து தீவிரமாகப் பேசிவரும் விஜி அவர்கள் யாழ்ப்பாணத்தில்87களில் ஆரம்பிக்கப்பட்ட பூரணி எனும் பெண்களுக்கான அமைப்பில் ராஜினி, செல்வி, சிவரமணி போன்றவர்களுடன் இணைந்து செயற்பட்டவர். 92இல் இருந்து  94 வரையான காலப்பகுதியில் வடகிழக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பெண்களுடன் கொழும்பில் பணியாற்றியவர். பின்னர் கிழக்கிலங்கையில் சூர்யா பெண்கள் அமைப்பில் இணைந்து பணியாற்றியவர்.  தற்போது கனடாவில் வசித்துவரும் விஜி அவர்கள் தொழிலாளிகளது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

Women of color எனும் அமைப்பில் தற்போது இணைந்து செயற்பட்டு வருகிறார். 2005இல் மனிதவுரிமைக்கும் சமாதானத்திற்கும் அபிவிருத்திக்குமான நோபல் பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்ட உலகின் முக்கியமான ஆயிரம் பெண்களில் ஒருவராக கணிக்கப்பட்டவர். இவர் பேசும் போது இலங்கையில் அனைத்து ஆயுதம் தாங்கிய அனைத்து அமைப்பினராலும் பெண்கள் எப்படி நெருக்குதலுக்குள்ளானார்கள் என்றும் முஸ்லீம் பெண்கள் எப்படி யாழில் இருந்து இடம்பெயரும்போது துன்புறுத்தப்பட்டார்கள் என்றும் பேசினார்.


தொடர்ந்து சபேசன் அவர்கள் குறுந்தேசியவாதத்தின் தவறுகளுக்கு அப்பால் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். ஒரு தேசிய விடுதலைப் போராட்டம்  எவ்வகையில் சீரழிக்கப்பட்டது. சீரழிக்கப்படும் என்று தமிழீழவிடுதலைப் போராட்டத்தை மையப்படுத்திப் பேசினார். இலங்கை அரசை தனது ஆளுமைக்குள் வைப்பதற்கு தமிழீழ விடுதலை  இயக்கங்களை குறிப்பாக புலிகளை வளர்க்கிறது இந்திய அரசு,  ஆனால் ரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் தான் வளர்த்தவர்களே தன்னை மீறிப்போகின்றார்கள் என்ற நிலையில், பஞ்சாபில் செய்ததையே செய்யநினைக்கிறார்கள்.  அதுவும் இனவாத பிரேமதாச அரசுடன் தேனிலவு நடத்திய தந்திரோபாயத்தால் இந்தியாவை வென்ற அதே நடைமுறையை கையாண்டு ராஜபக்ஸவுடன் தேனிலவு கொண்ட இந்திரா கொங்கிரஸ் புலிகளை அழிக்கிறது.  இங்கே நாங்கள் பஞ்சாப்பையும் ஈழத்தையும் ஒரே சமாந்திர அரசியலில் பார்க்க முடியும். என்று சொன்னார்.

புலிகளின் தவறுகள் போன்றவற்ரை நேர்முகமாக பார்ப்பதும் விமர்சிப்பதும் என்று பார்த்தால் ஒரு மூர்க்கமான தற்திறுத்தியாகத்தான் அமையும்.  இன்னமும் முக்கியமானது மேற்குறிப்பிட்ட பாரம்பரியம்தான்.  அதாவது யாழ்மையவாதமான இந்தப் பாரம்பரியம் தமிழ்க் கொங்கிரஸில் ஆரம்பித்து புலிகளின் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்ததாக யாரும் சந்தோசப்பட முடியாது. தொடர்ந்தும் வணங்காமண், வட்டுக்கோட்டை, நாடுகடந்ந்த தமிழீழம் என்று கோவணம் கூடத் தேவையில்லை என்று நிர்வாணமாக தனது அசிங்கத்தை வெளிப்படுத்துகிறது எங்கள் பிற்போக்கு தமிழ் தேசியம். 
என்பதைத் தெரிவித்தார்.


அடுத்து மதிய உணவுக்கான இடைவேளை வழங்கப்பட்டது. மதிய உணவைத் தொடர்ந்து, இரண்டாவது அமர்வு ஆரம்பமாகியது.  அமர்விற்கு ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
சந்தோசம் ஆனால் யாருக்கும் தெரியாமல் என்று டன்ஸ்ரன் தமிழ்ச்சூழலில் ஒருபாலுறவுக்கான சிக்கல்கள் குறித்துப் பேச ஆரம்பித்தார். அவருடன் விஜய் அவர்களும் கலந்து கொண்டார். சபையோரை ஆறு குழுவாகப்பிரித்து அவர்களிடம் மூன்று கேள்விகளைக் கொடுத்துப் பதில் எழுதச் சொன்னார்கள். 1.Gay, Lesbian இவற்றிற்கான தமிழ்ச் சொற்கள் என்ன? 2. Gay, Lesbian குறித்து தமிழ்ச் சினிமா சித்தரிப்பது என்ன? 3. Gay, Lesbian இன் எதிர்காலம் என்ன? போன்றவை அந்தக் கேள்விகள். சபையோர் குறிப்பிட்ட பதில்களில் இருந்து தொடங்கியது அந்த நிகழ்வு ஒரு அரங்கப்பட்டறை போல் நடைபெற்றது.  


வன்னி ஒரு விமர்சனப்பார்வை என்ற தலைப்பில் அகங்கிளறி பேசினார். அதனை அவர் மூன்று பிரிவுகளாகப்பிரித்துப் பேசினார். 1.வன்னியின் வரலாற்றுப் பார்வை. 2. பிரதேசவாதமும் வன்னியும். 3. விடுதலைப்புலிகளும் வன்னியும். என்பன அவை. வன்னியின் வரலாறு என்பது   இதுவரை தகுந்தபடி பதிவுசெய்யப்படவில்லை. ஆய்வு செய்யப்படவில்லை.  யாழ்ப்பாணத்து மேல்  ஆதிக்கம் வன்னியை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்திவந்ததையும். விடுதலைப்புலிகளது யுத்தம் வன்னி மக்களை எவ்வாறு தனக்குச்சாதகமாகப் பலிகொண்டது என்றும் பண்டாரவன்னியன் தொடக்கம் கார்த்திகைப் பூவை தேசியப்பபூ ஆக்கியது வரை அத்தனை கதையாடல்களையும் பலவித உதாரணங்களுடன் சொல்லிக் கட்டுடைத்தார். ஆவணப்படுத்தினார். சபை இறுகிய முகத்துடன் உறைந்து போயிருந்தது.


அடுத்து வின்சன்ற்  அவர்கள் துருவத்தின் சொந்தக்காரர்கள் என்ற தலைப்பில் கனடாவின் தொல் குடிகளான செவ்விந்தியர்களது வாழ்வும் போராட்டங்களும் பற்றிக் குறிப்பிட்டார். அவர்களது வாழ்நிலங்கள், வீடுகள், அவர்களது பிள்ளைகளைக் கட்டாயப் பள்ளிக்குப் பிடித்துக் கொண்டு போனதால் பிள்ளைகளைப் பார்க்க பாடசாலையைச் சுற்றி பெற்றோர் வீடமைத்து வாழ்வதைப் பற்றி ஒளிப்படங்களுடன் விளக்கினார்.
இறுதியாக

Brown Like me என்ற விவரணப்படம் காண்பிக்கப்பட்டது.  assap நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இந்த விவரணப்படம், சவுத் ஏசியன் ஒருபாலுறவுக்காரர்களது நெருக்கடிகள் குறித்துப் பேசியது.

முதலாவது பன்முகவெளி அரங்கு  பலதரமான விவாதங்களைக் கொண்டு இடம்பெற்றது. அடுத்த அரங்குக்கான திகதி மிகவிரைவில் அறிவிக்கப்படும். அரங்கில் கனடாவின் முக்கிய பல இலக்கியமுகங்களைக் காணவில்லையாயினும் பல புதிய ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்.