Wednesday 20 February 2019

பல்லவி- அனுபல்லவி- சரணம்- கற்சுறா


 

 

பல்லவி


கடந்த சிலதினங்களாக தமிழகத்து எழுத்தாளரான ஜெயமோகன் அவர்கள் நிகழ்த்திய உரை ஒன்றில் ஈழ இலக்கியங்கள் குறித்து சொல்லப்பட்ட கருத்து பரவலாக பலரது கவனத்தைப் பெற்று வினை எதிர் வினை மறு எதிர் வினை என பலர் கருத்துக்களைத் தெரிவித்தபடி இருக்கிறார்கள் என்பதனை நீங்கள் அறிவீர்கள். இதில் ஒரு வினையை நான் உட்பட சில நண்பர்கள்  நிகழ்த்தியிருந்தோம். அந்த வினையை சில இடங்களில் நையாண்டித்தனத்துடனும் சில இடங்களில் அத்து மீறிய சொற்பிரயோகத்துடனும் நிகழ்த்தியிருந்தோம். அந்த நிகழ்த்துதலின் இன்னொரு தொடர்ச்சியாக  இந்தப் பதிவினை எழுதுகிறேன்.

இங்கே இந்தப் பதிவினை எழுத எனக்கு முன்னுதவியாக இருப்பதில் முதன்மையானது நோயல் நடேசன் அவர்களது மறுவினையே. அவர் தனது வலைத்தளத்தில் எழுதிய பதிவினை வாசித்த போது நாம் இதுவரை எழுதி வந்த  உள்ளீடை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதனை உணர்ந்து கொண்டேன். வேறு சிலரோ கற்சுறா எழுதும் எழுத்துக்கள் விளக்கமாக இருப்பதில்லை. கடுமையான சொற்பிரயோகங்களுடன் வெறும் கோபத்தை மூட்டிவிடக்கூடியவை என்பதாக இருக்கின்றன என சொல்லி வருகிறார்கள்.

உண்மையில் என்னால் ஒரு விடையத்தை எழுதும் போது நீங்கள் எல்லோரும் எழுதிவிடக் கூடிய வார்த்தைகளை –  கருத்துக்களை நான் எழுத முனைவதில்லை. அதற்கு  உங்களில் பலர் இருக்கும் போது அதனையே நான் திரும்பச் செய்யத் தேவையில்லை என  எண்ணுபவன். அதனால் ஒரு கட்டுரைக்கு நீங்கள் எழுதும் பல்லவி அனுபல்லவிகளை நான் எழுதுவதில்லை.

ஆனாலும் இந்தக்கட்டுரையில் நான் என்னால் முடிந்தளவு உங்களைப் போன்று எழுத முனைகிறேன். இப்படியான வருத்தக்கார எழுத்தை என்னால் எழுத முடிவதில்லை என்பதனையும் சொல்லிக் கொள்கிறேன்.

அனுபல்லவி


தமிழகத்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது உரை குறித்து அதிருப்தி கொண்டு ஈழத்தில் மு.பொன்னம்பலம், அ. யேசுராசா, சோ. பத்மநாதன், மு.நித்தியானந்தன் போன்ற எழுத்தாளர்கள் தொடங்கி அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களான தமயந்தி, அருண்மொழிவர்மன்,கோ.நாதன், நான் உட்படப்  பலர் எதிர்கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இதில் அதனை ஒரு நகைச்சுவைப் பேச்சு என சோபாசக்தி தொடங்கி கருணாகரன் தற்போது நோயல் நடேசன் வரைக்கும் மறு கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கருத்துக்களுக்கு அவ்வப்போது நாம் எதிர்வினையும் எதிர்வினைக்கு மறு வினையும் ஆற்றியிருந்த போதிலும் தற்போது நோயல் நடேசன் அவர்கள் எழுதியிருக்கும் பதிவிற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டியவனாக இருக்கிறேன். இதனையும் வழமையக ஒற்றைப்பட விளக்கத்தைப் போட்டுவிட்டோ அல்லது ஒரு ஐநயாண்டித்தன உரையாடலை நிகழ்திவிட்டோ கடந்து போய்விடலாம். ஆனால் அவர் எனது பெயரைச் சொல்லி சில விளக்கமும் கேட்டிருக்கிறார். அதனை விடவும் அவர் ஒரு குழந்தையைப் போல கடந்த காலச் செயற்பாடுகள் குறித்து எதனையும் அறியாதபடி அப்பாவித்தனமாகச் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். உண்மையில் நோயல் நடேசன் அவர்களது இந்த நேர்மை எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. .

 

சரணம் -1


நான் கடந்த சில தினங்களுக்கு முன் எனது முகநூலில் ஈழத்திலிருந்து எழுத்தாளர் கருணாகரன் அவர்கள் என்னுடன் பேசியிருந்தார் என்பதனைத் தெரிவித்திருந்தேன். மிக நீண்ட நேரம் பேசியிருந்த எழுத்தாளர் கருணாகரன் அவர்கள் என்னுடன் என்ன பேசியிருந்தாரோ அதில் அதிகமான விடயங்களைத் தாங்கியிருக்கிறது நோயல் நடேசன் அவர்களது இந்தக் கட்டுரை.  தனக்கான பதிலை எழுத இருப்பதாகச் சொன்ன எழுத்தாளர் கருணாகரன் அவர்கள் இதுவரை எதையும் எழுதிவிடாத போதும் நோயல் நடேசன் அவர்கள் இதனை எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம். ஆகையினால் நோயல் நடேசன் அவர்கள் எழுதியிருக்கும்  “அறச்சீற்றமா- ஆற்றமையா” என்ற கட்டுரைக்கு தகுந்த பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இனி அவரது கட்டுரைக்கான  பதிலுக்கு வருகிறேன்.

 

சரணம் -2


“இரவு மெயில் வண்டியில் நித்திரைபோல் பாசாங்கு செய்தபடி முன்சீட்டில் கால் போட்டபடி இருக்கும் தமிழர்களை தட்டிநகப்பாங்என அநூராதபுரத்தில் எழுப்புவது சிங்களவர்கள்தான். அதுபோல் ஜெயமோகன் தனது வார்த்தையால் தட்டி எழுப்பிவிட்டார் .

என்று சொல்லும் நோயல் நடேசன் அவர்கள் ஈழத்தில் கவிஞர்களை ஆழிப்பேரலையெனத் தட்டி எழுப்பிவிட்டதாகவும், அநுராதபுரத்துச் சிங்களவர்கள் எழும்புங்கடா என்று தட்டி எழுப்பியதாகவும் அதன் பின் ஈழக் கவிஞர்கள் பொங்கி எழுகிறார்கள் என்றும் சொல்லி தமிழகத்து எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களது அறிவீனக்கருத்துக்கு அறிவு முலாம் பூச முனைகிறார்.  அதனால் தான்

“முக்கியமாக 200 கவிஞர்கள் இலங்கைக்கு அதிகம். அதைவிட நகரத்திற்கு அதிக தொகை என்றிருக்கிறார் . கவிஞர்கள் அதிகமானால் மகளிர் கற்புக்கு பாதிப்பு என்றும் கூறிவிட்டார்.எந்தக் கவிஞரை நினைத்து கூறினாலும் வார்த்தைகள் சிக்கலாகிவிட்டது- உண்மைதான் .எல்லோரும் பொங்கிவிட்டார்கள் .”

எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள்போல் அல்ல. மேடைக்குப் புதியவர்கள். சுவைக்காக சில வார்த்தைகளை சேர்ப்பார்கள்.

என அந்த வார்த்தைக்கு முன்னால் உள்ளதையும் பின்னால் உள்ளதையும் கண்டு கொள்ள மறுக்கிறார். எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்கள் மட்டுமல்ல அவருடன் சேர்த்து  எங்களால் அடையாளப்படுத்தப்பட்ட அனைவருமே இப்படித்தான் சொல்கிறார்கள். அதனை ஒரு நகைச் சுவை மேடைப்  பேச்சு என்கிற அளவில் தான் அதனை மடை மாற்ற முனைகிறார்கள்.  இங்கே மு. பொன்னம்பலம் என்கின்ற ஒரு ஈழத்து எழுத்தாளரது பெயர் பாவிக்கப்பட்டுஅவர் எழுதியிராத ஒரு தகவலைச் சொல்லி அதுதான் ஈழ இலக்கியத்தின் இன்றைய நிலை என்பதாக ஒரு வியாக்கியானம் சொல்லிவிட்டு இப்போது அது நகைச் சுவைக்காகச் சொன்னது என்றால் உண்மையில் நீங்கள் எல்லோரும் யார்?

2009 இல் 400000 மக்களை ஆட்டு மந்தையை வளைப்பதுபோல வளைத்துக்கொண்டு யுத்த பூமிக்கு கொண்டு சென்றபோதுநாம் அறம் பாடவில்லை. எதிர்ப்புக்குரல் எழுப்பவில்லை.

பல நூறு வருடங்களாக வடக்கில் இருந்த இஸ்லாமியரை இருப்பிடத்தை விட்டு துரத்தியபோது வராத அறச்சீற்றம் இப்போது மட்டும் எப்படிவந்தது?

இலங்கை அரசின்மீது எத்தனை கவிஞர்கள் அறம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்?”

என்கிறார் எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்கள். இவர் அதிக வாசிப்பு அனுபவம் இல்லாதவர் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது இவர் ஈழத்து எழுத்துகளை வாசிப்பதேயில்லை என எடுத்துக் கொள்வதா?
அதற்காக நாம் முதலில் இருந்து அவருக்கு பாடத்தைத் தொடங்க முடியாது. அவர் தான் தேடி வாசிக்க வேண்டும்.

இதன் பின் அவர் சொல்லும் வார்த்தைகள் மிகுந்த வேடிக்கையானது.

 

 

“ஆனால் ஜெயமோகன் மீது, அதுவும் சாதாரணமாக எழுதுகோலை மட்டும் நம்பியிருக்கும் இந்தியாவின் ஒரு கோடியில் இருக்கும் ஒரு தனிமனிதன் மேல் ஏன் இந்தச் சீற்றமெல்லாம் வந்தது?”
 

என்கிறார் நமது எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்கள்.

பாருங்கள் எவ்வளவு அறிவீனம் என்று. ஈழத்தில் யாரும் எழுதுகோலை நம்பியிருப்பதில்லை. தமிழகத்து வியாபார எழுத்தாளர்களைப் போல் ஈழத்தில் யாருக்கும் எழுத்து வியாபாரம் ஆனதில்லை.  இந்தியாவின் ஒரு கோடியில் இருக்கும் ஒரு முட்டாள் வியாபார எழுத்தாளன் வந்து சொன்ன பொய்யிற்குத் தான் இந்த சீற்றம் வந்தது என்பதைக் கூட வாசித்து அறிந்து கொள்ள முடியாத படி எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்களுக்கு எது கண்ணை மறைக்கிறது எனத்தான் நான் திரும்பக் கேட்கிறேன். தமிழகத்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது அகமலத்தைத் துடைக்காது அவரது புறமலத்தைத் துடைக்கும் கருவியாக நோயல் நடேசன் அவர்கள் மாறியிருப்பதனை என்னவென்பது?

கிராமங்களில் முதலிரவின் பின்பு மாப்பிள்ளையின் அக்கா படுக்கைத் துணி தோய்க்கும்போது இரவு தம்பதிகளிடையே நடந்ததை, நடக்காததை கண்டுகொள்வார் என்பது போல் ஈழ இலக்கிய சமூகத்தில் நடக்காத விடயத்தை ஜெயமோகன் சுட்டுகிறார்.

என அந்த முட்டாள்தனமான உரைக்கு விளக்கவுரை செய்ய முனைகிறார் நோயல் நடேசன்.  ஆனால்  அன்டன் பாலசிங்கங்களைப் பார்த்து வந்த சமூகம் தான்  நமது சமூகம் என்பது போல் தனது முட்டாள் ஆய்வுக்கு எதிர் நிலையில் அன்டன் பாலசிங்கத்தை முன்வைக்கிறார். உண்மையில் இவர் விளங்கிச் செய்கிறாரா? விளக்கமில்லாது செய்கிறாரா எனத் தெரியவில்லை. என்ன பிதற்றலையாவது செய்து தமிழகத்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களைக் காப்பாற்றிவிடவேண்டும் என நினைத்து வெறுமையாக தன்னை நிறுத்துகிறார். தமிழகத்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது உரையில் “பாய்விரித்தல்” என்றார். இவரோ “ படுக்கைத் துணி தோய்க்கும் மாப்பிள்ளையின் அக்காவாக உருவகிக் கிறார். உண்மையில் இந்த மானங்கெட்ட சிந்தனையின் அடி மூலம் எது எனத்தான் கண்டு பிடிக்க முடியவில்லை. இவ்வளவு கேவலமாகவா ஒருத்தனின் புரிதல் இருக்கும்?

“ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பிணத்துடன் குடும்பம் நடத்தும் நமது அரசியல்போல் இலக்கியத்திலும் செய்ய விளைகிறோம். யாராவது புதிதாகச் செய்பவர்களைத் தாக்குகிறோம். கனடாவில் இலக்கியத்தோட்டம் சரியோ பிழையோ ஏதோ செய்கிறார்கள். அது சரியில்லையென்றால் அதைவிடத் திறமாக செய்யுங்கள். அதை விடச் சரியாகச் செய்து காட்டுங்கள். இங்கே உள்ள போலி முகங்கள், பாவனைகள் நல்லதல்ல. குறை சொல்வதற்கு ஆயிரம் பேர் வரலாம். நிறைவாகச் செய்வதற்கே ஆட்கள் தேவை.

என்கிறார் நோயல் நடேசன் அவர்கள்.

ஆம். “சரியோ பிழையோ ஏதோ செய்கிறார்கள்” என விட்டுவிட முடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கடந்த யுத்தக காலத்தில் புலிகளும் இதைத் தான் சொன்னார்கள். புலிகளைப் பற்றிச் சொன்னவர்களும் இதைத் தான் சொன்னார்கள். "சரியோ பிழையோ அவர்கள் ஏதோ செய்கிறார்கள்" என்று.
"எங்களைத் தவறு என்று சொன்னால் நீங்கள் இயக்கம் தொடங்கிப் போராடுங்கோ பார்ப்பம்" என்றார்கள். இதனை புலிகளோடு மட்டும் வைத்து நோக்கத் தேவையில்லை. இந்த "ஏதோ செய்கிறார்கள்" என்ற மனநிலையில்  எல்லோரும் இருந்து விடலாம் எனில் இந்த உலகில் யாருக்கு என்ன சிந்தனைஇருந்தால் என்ன? யாருக்கு என்ன பிரச்சனை இருந்தால் என்ன?
 அது என்னவென்று உன்னால் புரிந்து கொள்ள முடியாது என்றால் நாங்கள் என்னதான் செய்யமுடியும்? சமூக அசைவியக்கத்தின் அத்தனை விழுமியங்களையும் கண்டு கொள்ள முனையாத ஒரு "கோமா நிலையே" அது. அதற்குள்  நாம் இருந்தால் என்ன? செத்தால் என்ன?
 
 

சரணம்- 3


“முன்பு கவிதையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாமலிருந்த நான் கடந்த வருடங்களில் மூன்று கவிஞர்களதுகவிதைகளைப் பற்றி எழுதியும் ஒரு கவிஞருக்கு முன்னுரையும் எழுதியிருக்கிறேன். அதேபோல் முகமே தெரியாதவர்களது சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் என்பவற்றுக்கும் மதிப்புரைகள், விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன்.பெருமையாக இதைச்சொல்லவில்லை.”

என்கிறீர்கள். திரு நோயல் அவர்களே! இது பெருமையல்ல. அசிங்கம். கவிதை பற்றிய அறிவற்று கவிதைகளுக்கு முன்னுரை எழுதுவதும் கவிஞர்கள் குறித்து எழுதுவதும் நமது சாபக்கேடு.

“கிழக்கு மாகாண பெண் கவிஞர்களான ஆழியாள், அனார் போன்றவர்களை பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அவர் மூலமாகவே நான் இவர்களைத் தெரிந்து கொண்டேன்.” 
 என்கிறீர்கள். ஆழியாளையும் ஆனாரையும்  தெரியாது இருக்கும் ஒருத்தனுக்கு தமிழகத்து எழுத்தாளாரன ஜெயமோகன் எழுதித்த தெரிந்து கொண்ட ஒருத்தன் கவிதைத் தொகுப்புக்களுக்கு முன்னுரை எழுதும் நிலை இருப்பது அவல நிலை.

இந்த மாதிரியான போக்குத் தான் ஈழக் கவிதைச் சூழலுக்குள் நடந்து கொண்டிருக்கும் அதி கேவலமான விடையம் என நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன். அதனை நீங்கள் தான் தேடி வாசிக்க வேண்டும்.

“இரண்டு வருடத்தில் உங்களது சக இலக்கியவாதி ஒருவரது கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை நூல்களை நீங்கள் விமர்சித்திருக்கிறீர்களா? யாராவது ஒரு படைப்பாளுமையைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்திருக்கிறீர்களா? இலக்கிய இயக்கமொன்றை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்துச் செயற்படுத்தியிருக்கிறீர்களா? இல்லை குறைந்த பட்சம் முகநூலில் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக எழுதிப் பதிர்ந்திருக்கிறீர்களா? சக எழுத்தாளரது உயர்வில், வளர்ச்சியில் உங்கள் பங்கென்ன?

என்று எனது பெயரைக் குறிப்பிட்டுகேட்டு எழுதியிருக்கிறீர்கள். அதனை நீங்கள் தான் தேடி வாசிக்க வேண்டும். தமிழகத்து எழுத்தாளர்கள் கழிக்கும் தொடர் மலத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருப்பவர்களுக்கு அது சாத்தியம் குறைவான செயல். அதனைக் கடந்து நீங்கள் விரைவில் வெளியில் வரவேண்டும் என விரும்புகிறேன்.

நோயல் நடேசன் அவர்கள் எழுதிய இந்த மொக்கைத் தனமான பதிவிற்கு உண்மையில் நமது நையாண்டித்தனப் பாணியில் இப்படியொரு படத்தைப் போட்டு விட்டு நகர்ந்து சென்றிருக்க முடியும். ஆனால் அவரது மடமைத் தனத்தை அப்படியே பதிந்து செல்லும் போக்கை மறுத்துச் செல்ல முடியாது விளக்கம் சொல்ல வேண்டி வந்துவிட்டது.

 
படம் - தமயந்தி
 
 
 
" ஈழத்தேசியவாதிகள் – ஏற்கனவே இந்தியாவோடு கோபத்தில் இருந்தவர்கள் அறம் பாடினார்கள் . தலித் ஆதரவினர் மீசை துடித்தனர் . இஸ்லாமிய கவிஞர்கள் நல்ல வேளை அறம் பாடியதோடு நிறுத்திவிட்டார்கள்"
எனச் சொல்லிவரும் நோயல் இதில் யார் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற விளக்கம் எமக்கு குறைவாக இருக்கிறது. இதற்கான விபரத்தை அவர் விரிவாக எழுத வேண்டும். அப்போது இதற்கான இன்னொரு பதிலையும் நாம் எழுதிவிட முடியும்.

 

மிக முக்கியமாக அனாரையும் ஆழியாளையும் அறிந்திராத நீங்கள் தயவு செய்து கவிதைத் தொகுப்புக்களுக்கு முன்னுரை எழுதித் தாருங்கள் என இனி உங்களிடம் பிரதியைக் கொண்டு வருபவர்களின் முகத்தில் காறி உமிழுங்கள். அது ஈழக்கவிதையின் போக்கை மாற்ற சிறு உதவி செய்யும் எனக் கூறிக் கொண்டு
இறுதியில் இந்தக் கட்டுரை உங்களை எதிர்த்து எழுதவில்ல; ஈழ இலக்கியத்திற்காகவே எழுதினேன். என்பதனை நீங்களும் மனதிற் கொள்ளுங்கள்
 

 

 

No comments:

Post a Comment