Thursday, 28 March 2019

அதற்கு வேறு பெயர் கொண்டு அழையுங்கள்...


2 இரண்டு:

கற்சுறா
 


 

கடந்த இரண்டு மாதங்களாக ஜெயமோகன் அவர்களின் ஒரு வீடியோ உரையிலிருந்து ஈழத்துக் கவிதைகள் ஈழ இலக்கிய வழித்தடங்கள் குறித்த பதிவுகளுக்காக அதிகம் கோபப்பட்டு எதிர்ப்பினைத் தொடர்ந்து தெரிவித்தபடி இருக்கிறோம். அந்த வகையில் நமது கருத்துக்கள் மற்றும் அவை குறித்து வந்த மறுவினைகள் பற்றி தொடர்ந்து உரையாடியபடி இருக்கிறோம். அப்படியான தொடரில் இடையில் எழுதப்படும் ஒரு குறிப்பே இது. இதனை நீங்கள் ஜெயமோகன் அவர்களுக்காக கோடு ஏறி நிற்கும் கருணாகரனுக்கும் அனோஜன் பாலகிருஸ்ணனுக்குமான ஒரு பதில் என நினைத்தாலும் பரவாயில்லை.

 

பல்லவி


நமக்கு மத்தியில் தற்போது தோன்றியிருக்கும் குட்டி ஜெயமோகன்கள் தமது பிதா உதிர்த்த வார்த்தைகளுக்கான ஞானம் தேடி நாலாறுபுறமும் அலைந்தபடி இருக்கிறார்கள். அவர்களும் அதற்காக தமது பிதா உதிர்த்த வார்த்தைகளையே  தொடர்ந்தும் உதிர்த்துக் கொண்டு திரிகிறார்கள். நமக்கோ அவை அயர்ச்சி ஏற்படுத்துகின்றன. ஒரு சங்கிலித் தொடர் போல பிதாவின் கைபிடித்து அவுஸ்ரேலியா பாரீஸ் லண்டன் கனடா என்று குட்டி மோகன்கள் சூழ்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மவுனமாகவும் பெரிய அலப்பறையாகவும் கேட்கும் அந்தத் தொடர் இரைச்சல் எங்களைத் தொந்தரவு பண்ணியபடிதான்  இருக்கிறது. அந்தத் தொந்தரவில் இருந்து  விடுபட நாமும் மறுத்தான் எழுதித்தான் ஆக வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம்.

 

 

அனுபல்லவி


குட்டி மோகன்களது இறுதிவாதமாக  ஈழ இலக்கியத்தின் அழகியல் – அரசியல் பார்வையை முன் கொண்டு வந்தாலும் தமது பிதாவைப் போல் எழுதத் தெரியாதவர்கள். ஆகக் குறைந்தது வருடத்திற்கு ஒரு கதை கூட எழுத முடியாதவர்கள். தமது பிதாவைப் போல் பட்டியல் போட முடியாதவர்கள். தமது எழுத்தாளர்களில் தரமானவர்களை அடையாளம் காணத் தெரியாதவர்கள். தமது பிதா அடையாளம் இட்ட பின்புதான் அவர்கள் கொண்டு திரிகிறார்கள் என்றவாறான வார்த்தைகளையே முன்வைக்கும் ஒருபுறம், தவறைச் சுட்டிக்காட்ட பண்பான எழுத்து வேண்டும். தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் காலாகாலமாக உறவிருக்கிறது. ஈழத்திலிருந்து போன அனைத்து வகையினரையும் தக்கபடி மதித்து வரவேற்றார்கள் அவர்கள். அவர்களை மானங்கெடப் பேசக்கூடாது என்பதாக இன்னொருபுறம் கட்டளையிடுகிறார்கள். அது குறித்து நாம் ஏற்கனவே எழுதிவிட்டதாயினும்  திரும்பவும் ஒருமுறை சரணம் பாடிச் சொல்ல வேண்டியேயுள்ளது.

 

சரணம்


இது குறித்து எழுதும் போது எனது வாழ்வு முறைக் காலங்களில் இருந்தே எழுதுகிறேன்.  ஈழம் என்பது தேசமல்ல. அது கதைகளால் கட்டப்ட்டது எனச் சொல்லிவருகிறேன். அது கடந்த நாற்பது வருடங்களாக ஒரு பின்னிய யுத்தத்திற்குள் கிடந்தது.  வாழ்வியலை எழுதுதல் என்பது ஈழத்தில் யுத்தத்தை எழுதுதலாகவே இருந்தது.  யுத்தத்தைப் போராட்டம் என்று நம்பியிருந்த காலங்களில் எழுந்த இலக்கியப் பிரதிகளில் ஆயுதங்களும் ஆயுதத்தின் நுனியில் பூக்களும் பூத்திருந்ததை நான் வாசித்திருக்கிறேன். அப்போது தோன்றிய பிரதிகள் அதிகமாகப் பல்கலைக் கழகத்திலிருந்து தோன்றியிருந்தன. அவையே அந்தக்காலத்தின் இலக்கியப் பிரதிகளது அந்தஸ்தைப் பெற்றன. இன்னொருபக்கம் சாதிய அடக்குமுறைக்குள் இருந்து வெளித் தோன்றிய பிரதிகள் போராட்டத்தில் தோன்றி முன்துருத்தி நின்ற ஆயுதத்திற்குள் மெல்ல மறைக்கப்பட்டன. இலக்கியச் சூழல் என்பதும் போருக்குள்தான் இருந்தது.

அந்தப் போருக்குள் இருந்தும்  பலர் எழுதத் தொடங்கினார்கள்.  “ எனது ஜப்பானியத் தோழி ஆரி மக்ஸமோட்டோவை அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தபோதுதான் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகக் குண்டு வெடித்தது.” என்று வ.ஐ. ச. ஜெயபாலன் எழுதியிருந்த வார்த்தைகளைக் கடந்துதான் போரின் காலத்தை நீங்கள் அறிய முடியும். அதற்குள் இருந்துதான் செல்வி, சிவரமணி, போன்றவர்கள் எழுதத் தொடங்குகிறார்கள். இங்கே செல்விக்கும் சிவரமணிக்குமே எழுத்தின் தார்ப்பரியத்தில் வேறுபாடு உண்டு. செல்வி நாடகத்துறையைத் தன்னுடைய வாழ்வாக்குகிறார். சிவரமணி கவிதையில் வாழ்கிறார். ஆனால் எழுதிய கவிதை ஒன்றுக்காக புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்படுகிறார் செல்வி. தன்னுடைய கவிதைகளைக் கொழுத்திவிட்டு தானும் கொழுத்தி மரணித்துப்  போகிறார் சிவரமணி. இந்தக் கதைக்குள்ளாக  நுழைந்துதான் நீங்கள் அந்தக் காலத்தின் கவிதைகளை விளங்கிக் கொள்ளமுடியும். கவிதைகளின் அரசியலை விளங்கிக் கொள்ள முடியும்.

ஏறத்தாழ 20 வருடங்களின் முன்பு இளவாலை விஜேந்திரனது  “நிறமற்றுப்போன கனவுகள்” கவிதைத் தொகுப்பினை விமர்சித்து நான் பேசிய போது. இளவாலை விஜேந்திரனை ஒரு கவிஞராக என்னால் அடையாளப்படுத்தமுடியாது எனவும் அவருடைய கவிதைகள் சேரனுடைய கவிதைகளைப்  போல் எழுதப்பட்டவை. சேரனது கவிதைகளைப் போலப் பார்த்து  எழுதப்பட்ட மாதிரியானது. ஒரு போலிக் கவிதை என்று குறிப்பிட்டேன்.

ஈழத்துச் சூழலில் கவிதை எழுதுவதும் கவிதைத் தொகுதிகள் வெளிவருவதும் மிக வேகமாக நடந்து வரும் செயற்பாடாக போய்விட்டது என்றும் இங்கே கவிதை எழுதுவது என்பது மிக இலகுவான முயற்சியாக இனங்காணப்பட்டுள்ளது. ஏனெனில் எல்லோரும் தமக்கு பிடித்தமான தமக்கு முன்னிருக்கிறவர்களைப் பார்த்து எழுதிவிடும் நிலைதான் அதற்குக் காரணம் என்று சொல்லியிருந்தேன். அந்தத் தொகுப்பில் இருக்கிற 55 கவிதைகளில் தேசத்தை இழந்து விட்டு, இருக்கிற இடத்தையும் ஏற்றுக் கொள்ளாது தத்தளிக்கிற கவிதைகளாகவே அநேகமானவை இருக்கின்றன. இத்தன்மை ஒரு எல்லைக்கு அப்புறம் வாசிப்பில் அலுப்பை உண்டு பண்ணுகிறது. என்று சொல்லியிருந்தேன்.. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரை என்ற படியால் இன்று எடுத்து அந்த உரையைப் பார்க்க எனக்கே அலுப்பை உண்டு பண்ணுகிறது. ஆனாலும் உங்கள் பிதா  இன்று வந்து புதிதாகச் சொல்வது போல் அல்ல அது. நாம் எமக்குள்ளேயே நிரகரிப்புக்களையும் உடன்பாடுகளையும் உருவாக்கியிருக்கிறோம். உங்கள் பிதா சொல்வது போலான அரசியல் கூச்சல்கள் என்பவற்றை நாங்களே ஒருபோதும் அருகில் வைத்து வாழ்ந்ததில்லை. அவற்றைத் தேடித் தேடி தமிழகத்தில் பலர் பதிப்பித்தபோதும் அந்தப் பதிப்புக்களையும் நாம் நிராகரித்து நகைத்திருக்கிறோம்.

இளவாலை விஜேந்திரனைப் போல்தான் கனடாவில் வாழ்ந்த திருமாவளவன் அவர்களையும்  ஒரு கவிஞராக என்னால் அடையாளப்படுத்த முடிவதில்லை. பல நிகழ்வுகளில் இதனைத் தெரிவித்திருக்கிறேன். அவர் கட்டுக்கட்டாக எழுதி மூன்று தொகுப்புக்களை வெளியிட்டபோதும் அவை பிரியோசனமற்றவை. காலத்தால் நிலைக்காதவை எனச் சொல்லியிருக்கிறேன். திருமாவளவன் அவர்களுக்கும் நேரடியாக அதனைச் சொல்லியுள்ளேன். திருமாவளவன் தொடர்ந்து பனியையும் தனது வேலைத் தளத்தையும் விட்டுப் பிரிந்திருக்கிற வீட்டையும் பற்றி எழுதிக் கொண்டிருந்தார். புலம்பெயர் கவிதை என்று தமிழ்நாட்டுக்காரர் தன்னைக் கொண்டாட எதை எழுத வேண்டுமோ அதனை எழுதிக் கொண்டிருந்தவர் அவர். திருமாவளவனைப் போல் பலர் எழுதினார்கள். இன்றையசூழலில் எழுதப்படும் கவிதைகளில் எழுதியவரது பெயரை நீக்கிவிட்டால் யார் எழுதியது எனச் சொல்ல முடியாது போய்விடும் சூழல்தானே இருக்கிறது எனச் சொல்லியுள்ளேன். ஆனால் திருமாவளவனோ  அந்த எழுத்து முறையையும் தாண்டி  கவிஞர் சேரனைப் போல் குறுந்தாடி வைத்து கன்னத்தில் கைவைத்து புகைப்படம் எடுத்து பிரசுரித்த ஒரு இலக்கியப்  போலி என்று கிடைத்த இடமெல்லாம் எள்ளி நகையாடியிருக்கிறேன்.

இன்று அவர் மரணித்துவிட்டார். மரணத்தின் பின் ஒருவரைக் கடவுளாக்குவதுமாதிரியான சனாதன வேலையை நான் செய்ய மாட்டேன். அவர் உயிருடன் இருக்கும் போது எவ்வாறான கருத்தை முன்வைத்தேனோ அதனைத்தான் இப்போதும் முன்வைக்கிறேன். அவர் நிகழ்த்தியிருந்த ஒரு கவிதா நிகழ்வினை ஒரே மாதிரியான ஆடை அணிந்து ஒரே மாதிரியான முக பாவனையுடன் ஒரேமாதிரியான ஒலி நயத்துடன் கவிதா நிகழ்வை நிகழ்த்தியிருந்தார்கள். அது சரவணபவான் ஹோட்டல் தொழிலாளர்கள் போல் இருப்பதனை எனக்கு ஞாபகப்படுத்துகிறது என எழுதியிருந்தேன்.  அப்படித்தான் நமது தமிழ்க் கவிதைச் சூழலின் நிகழ்வுகள் பொதுவாக அரங்கேறுகின்றன.

 கவிதையின் வரிகளை இரண்டுதடவை வாசிக்கும் நிலையினை யார்தான் வாசித்துக் காட்டினார்களோ தெரியாது . ஏதாவது சில வார்த்தைகளை  ஒருவித ஒலி நயத்துடன் வாசித்து விடுவதால் அது கவிதை என  நம்பிவிடும் சூழல் ஈழத்தில் மட்டுமல்ல தமிழ் நாட்டிலும் அதிகமாக இருக்கிறது. அதிலும் அந்த வார்த்தைகளை  இழுத்து இழுத்து இரண்டு தடவை வாசிப்பதால்  தானோ என்னவோ அந்த ஓசையை தூரத்தில் இருந்து வருகின்ற ஒரு இராணுவ வண்டியின் தொடர் இரைச்சலை ஒத்திருக்கிறது என நான் பதிவு செய்திருக்கிறேன்.  இந்த வகை நோய் ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் முற்றிவிட்டுள்ள நோய்தான். இதற்கு மருந்தற்றுத்தான் போய்விட்டது.

அடுத்து “மிஞ்சும் ஒரு கவிதை” என்று பசுவய்யா எனும் சுந்தரராமசாமி அவர்கள் தனது  “107 கவிதைகள்” என்ற தொகுப்பின் பின் அட்டையில் ஒரு கவிதை செய்து காட்டியிருப்பார். கண்மூடித்தனமாகப் பசுவய்யா என வாயைப் பிளந்து திரிபவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இருக்காது. ஆனால் கவிதைத் தேடல் உள்ளவனுக்கு உடனடியாக அந்த  “மந்திர” வித்தை புரிந்து கொண்டு விடும்.  கவிஞன் (தான்)என்பவன் ஒரு புதிர் என்பதாக போலியாக கவிதை ஒன்றைச் செய்து காட்டியிருந்தார். அது ஒரு முட்டாள்தனமான  விளங்கப்படுத்தல்.  அதிலும் அந்தப்   பசுவய்யா அவர்கள்  தொகுப்பின் முன்னுரையாக எழுதிய உரையினை வாசிக்கும் ஒருவர் அதில் கவிதைக்கு செய்யப்பட்ட பட்டுக் குஞ்சம் குறித்து கோபப்படாமல் இருக்கமுடியாது. தனது கவிதைகளுக்கு எப்படி குறிகளை அகற்றினேன். ஆச்சரியக்குறியை மட்டும் அகற்றமுடியாது போனது என்றபடி அந்த உரை போகும். இந்தமாதிரியான கவிதைப் பித்தலாட்டங்கள் குறித்து 20வருடங்களுக்கு முன்பே  எழுதியவர்கள் நாங்கள்.( பார்க்க :எக்ஸில்- 7, May 1999)
 
 
 

 
 
இன்னொன்று, 2004 இல் “மற்றது” இதழின் தலையங்கத்தில்

“வன்முறை அரசியலைக் காவி நிற்கிறது ஈழத்து இலக்கியம்.

இந்தியப் பார்ப்பனீய அரசியலுடன் மெல்ல மெல்லக் கைகோர்க்கிறது புலம்பெயர் இலக்கியம்.

எழுதப்படும் வரலாறுகளோ எழுதப்படுவோரது வாரலாறுகளாக மட்டும் நிரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

வார்த்தைகள் எங்கிலும் மிக நுணுக்கமாய்ப் புதைந்து கிடக்கிறது யாழ்ப்பாண மையவாதம்.

அதன் தொடரோட்டமாய் புகலிடத்திலும் கொண்டோடப்படுகிறது சமயமும் சாதியமும்.

என்று எழுதியிருந்தோம்.

இவை எல்லாம் நான் சார்ந்து இயங்கிய செயற்பாடுகளின் தரவுகள். இதைத் தாண்டி ஈழத்திலிருந்தும் மற்றய புலம்பெயர் சூழலில் இருந்தும் எழுதப்பட்ட குரல்களை நாம் திரட்டி எடுத்தால் இன்னும் எத்தனை மடங்கு வரும்.

இப்படி ஈழத்திலிருந்து அல்லது புலம்பெயர் சூழலிலிருந்து எழுதப்பட்ட எதையும்  வாசிக்காது. ஈழம் பற்றிய தேடல் இல்லாது, தன்னைத் தொழுது இருப்பவர்கள் யாரைத் தனக்கு ஜாடை காட்டுகிறார்களோ அதை மட்டும் வாசித்து அவர்களை மட்டுமே தரமானது என அடையாளப்படுத்துவதற்கு எதற்கு  உங்கள் பிதா? அதனை நீங்களே செய்யலாமே.

உதாரணமாக நீங்களே  விதந்தோதுகிற உங்கள் பிதாவால் எழுதப்பட்ட “மறுபக்கத்தின் குரல்” என்ற கட்டுரை காலம் இதழில் பிரசுரமாகியிருந்தது. அதில்

“அனார், ஆழியாள், பஹீமா ஜகான் ஆகியோரை ஈழக்கவிதையின் முக்கியமான குரல்களாக  நான் அடையாளம் காண்கிறேன் என்கிறார்.  இச்சொற்களின் கவித்துவம் அளிக்கும் புத்துணர்ச்சியும் ஒளிவிடும் துயரமும் கவிதை என்ற வடிவத்தின் சாத்தியங்களை என்னுள் மீண்டும் புதிப்பித்தன” என்கிறார். இந்த மூன்று பெண் கவிஞர்களின் பொதுக் கூறுகளாக போரையும் இடம் பெயர்தலையும் கூறுகிறார்.

அந்தக் கூறு கெட்ட உங்கள் பிதாவிற்கு நீங்கள் சொல்ல வேண்டியது  கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போரும் இடம் பெயர்தலும் தான் ஈழத்தின் அதிக கவிதைகளில் அதுவும் ஆண்கவிஞர்கள் பெண் கவிஞர்கள் என்ற பேதமின்றி இடம் பிடித்தன. ஆனாலும் போருக்குள் பேசிய கதைகளும் இடம்பெயர்தலுக்குள் மாறிய கதைகளும் சிலரை வேறு திசையில் கொண்டு போய் வைத்தது. பலரை ஒரு திசையில் தள்ளியது.

அரசியல் கூச்சல்கள் ஒலிக்கும் ஈழத்தின் திண்ணைகளுக்கப்பாலிருந்து மவுனம் கனத்த விம்மல்கள் போல வீணையதிர்வுகள் போல அனாரினதும் ஆழியாழினதும் பஹீமாஜகானினதும்  கவிதைகளைக் குறிப்பிடுகிறார். பாருங்கள், கவிதைகளை அடையாளப்படுத்தும் திறனாய்வை. இது உங்கள் பிதவாவுக்குத் தேவையான ஆய்வா? இதனை ஒரு கட்டுரையாக ஒரு ஆய்வாக நீங்கள் கொண்டு அலையலாமா? நீங்கள் அதனை எங்களுக்கும் முன்மொழியலாமா?நீங்கள்  கொஞ்சம் யோசிக்க வேண்டும் சகோதரங்களே!. உங்கள் பிதா என்பதற்காக எம்மையும் அவருக்குத் தொண்டூழியம் செய்யவேண்டும் என நீங்கள் நிர்ப்பந்திப்பதனை இனியாவது கைவிட வேண்டும்.

இன்னுமொரு "காலம்" இதழில் சேரனது கவிதைகள் குறித்து உங்கள் பிதாவால் வழங்கப்பட்ட உரை இது.

“சேரனின் கவிதைகளை தமிழில் எழுதப்பட்ட புரட்சிக் கவிதைகளாக நான் காண்கிறேன். இன்னும் குறிப்பான வார்த்தைகளில் சொல்வதானால் பாரதிக்குப் பின் தமிழில் தீவிரமான புரட்சிக் கவிதைகளை எழுதியவராக சேரனை அடையாளப்படுத்த விரும்புகிறேன்-அவரது அனைத்துப் பலவீனங்களுடனும்.(ஜெயமோகன் , காலம்-31)

இங்கே எழுதப்பட்ட அனைத்துப்பக்கங்களிலும் அவர் புரட்சி என அடையாளப்படுத்துவது இனவிடுதலை குறித்தது மட்டுமாயிருக்கிறது. இவர் ஈழத்தில் பரவியிருந்த சாதீயப் புரட்சி குறித்தும் வர்க்கப்பபுரட்சி குறித்தும் எழுதிய கவிதைகளையோ கவிஞர்களையோ யாரும் அவருக்கு அடையாளம் காட்டவில்லை. சுபத்திரன் பற்றியோ அல்லது சாருமதி பற்றியோ அவர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. குட்டி மோகன்களுக்கும் அதனைத் தெரிவிக்கும் வக்கும் இல்லை.வழியும் இல்லை. உண்மையில்  எப்படி மறுபக்கத்தின் குரல் என்ற கட்டுரையில் அந்த மூவரை விடவும் வேறு யாரையும் அறிந்திராத போக்கில் எழுதினாரோ அப்படித்தான் எழுந்தமானமாக கருத்தைச் சொல்லிவிடுகிறார் இங்கும். அவர் எதை எழுதினாலும் பிரசுரிக்கவும் அதனை வாழ்வாகவும் வரலாறாகவும் கொண்டாடிவிடும் நிலையில் கருணாகரன்கள் உலகெங்கும் இருப்பதாக அவர் நினைக்கிறார். அந்த நினைப்புத்தான்  அவருக்கு அண்மையில் அந்த மேடைப்பேச்சையும் பேச வைத்தது.

இதில் ஜெயமோகனுக்கான வழக்கில்  அவருக்காக கருத்துச் சொல்ல முன்வந்தவர்களில் அதிகம் இரக்கம் கொள்ள கீழிறங்கி சேவகம் செய்யும் மனநிலையில் மன்றாடுபவர் கருணாகரன் ஒருவரே. ஈழ இலக்கியத்தின் அரியண்டம் அவர். அவ்வாறான நிலையை கருணாகரன் அனைத்துத் தளங்களிலும்  தொடர்ந்தும் எடுக்கிறார். அதனையே தனது முன்வரைபாக வரைபவர். அவர் ஜெயமோகனுக்காக எழுதிய பக்கம் பக்கமான மன்றாட்டத்தின் ஒரு இடத்தில்

ஜெயமோகன் தெரிவித்த கருத்துகளிலும் வார்த்தைப் பிரயோகங்களிலும்  தவறுண்டு என்பதை அவரே பின்னர் உணர்ந்திருக்கக்கூடும். அல்லது அதை நாம் அவருக்கு சொல்லும் முறையினால் உணர்த்தியிருக்கலாம். இலக்கியத்தினதும் விமர்சனத்தினதும் பண்பும் பணியும் அதுதான். அது கூச்சலிட்டு எதையும் நிறுவ முயற்சிப்பதில்லை. பகைமை கொண்டு எதிர்ப்பதல்ல. அப்படிக் கூச்சலை அது பலமான ஆயுதம் என்று நம்பினால் அது பலவீனத்தின் வெளிப்பாடேயாகும். முட்டாள்தனத்தின் அடையாளமே.”
என்கிறார்.

ஒரு அயோக்கியத்தனமான  கருத்தினை மறுதலிக்க இன்னொரு முட்டாள்தனத்தை பயன்படுத்துகிறோம் என்று கடந்து போங்கள் கருணாகரன். இவ்வளவு ஆழத்திற்கு இறங்கி நீங்கள் கை அலசத் தேவையேயில்லை. ஜெயமோகன் அவர்கள் பேசிய மேடைப் பேச்சின் அசிங்கத்தை விட பண்பும் இல்லாத பணியையும் தெரியாத அந்தப் பேச்சை விட நாம் பேசுவது ஒன்றும் தரக்குறைவானது அல்ல. ஜெயமோகன் உதிர்த்தால் தேவவாக்கு நாம் பேசினால் பண்பற்றது என நினைக்கும் உங்களது மனோபாவம் கெடுதியானது கருணாகரன்.

சோபாசக்தி, குணா கவியழகன், தமிழ்நதி எனப் பலரையும் அதிகமாக அறிந்திருப்பதும் ஈழத்தையும் விட தமிழ்நாட்டில்தான். இவர்களுடைய எழுத்துகளுக்குக் கூடுதலான மதிப்பளித்திருப்பதும் தமிழ்நாட்டில்தான். அண்மையில் கூட தமிழ்நதிக்கு விகடன் விருது கிடைத்திருந்தது. விகடன் விருது ஒன்றும் பெரிய புக்கர் விருது இல்லைத்தான். ஆனால் பொதுக்கவனிப்பை உண்டாக்கவல்லது. இப்பொழுது புதிதாக எழுத வந்திருக்கும் சாதனாவை இனங்கண்டு சாரு நிவேதிதா சாதனாவின் கதைகளுக்கு முன்னுரை எழுதுகிறார்.”

என்கிறார். கருணாகரன்.

இதில் கருணாகரன் குறிப்பிட்டவர்கள் யாரையும்  அவர்கள் தாமாக அறியவில்லை. இவர்கள்தான் தாமாக அங்கு சென்றவர்கள். அல்லது செல்ல வைக்கப்பட்டவர்கள். வருடாவருடம் தமிழ்நாட்டின் புத்தகச் சந்தைக்காக எழுதிக் கொண்டு போய்ப் பதிப்பிக்கும் ஒரு இலக்கிய அரசியலைத் தான் நீங்கள் குறிப்பிடுபவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது இலக்கிய எழுத்துக்களை இன்றுள்ள தமிழகத்துச் சூழலில் நன்றாக விற்று விட முடியும் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இதையெல்லாம் ஒரு அந்தஸ்து என்று கொண்டு வந்து முன்வைக்கும் உங்களை என்னத்தால் நாம் அடித்துத் துரத்துவது?

ஒரு கதை எழுதிவிட்டால் தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் வெளிவந்தால் அதனை அந்தஸ்து என்று நினைப்பது ஒருவித மனநோய். 10கவிதை எழுதிவிட்டால் அதனைத் தமிழ் நாட்டில் ஒரு பதிப்பகம் புத்தகமாக்கிவிடத் தயாராய் இருக்கிறது.அடுத்த புத்தகச் சந்தையில் அதனை விற்றுவிடலாம் என்று நினைப்பதற்கு நீங்கள் வேறு பெயர் சொல்லி அழைக்க வேண்டும். உங்களுக்குத் தெரியும் அண்மைக் காலமாக காலச்சுவடு எத்தனை புலம்பெயர்ந்தவர்களது புத்தகத்தை வெளியிட்டது? ஈழத்திலிருந்து எத்தனை பேரது புத்தகங்களை வெளியிட்டது? என கணக்குப்பாருங்கள். அவற்றின் தரங்களைக் கணக்குப் பாருங்கள். எழுதியவனுக்கும் தெரியாது தான் என்ன எழுதினேன் என்று பதிப்பித்தவனுக்கும் தெரியாது என்ன பதிப்பித்தேன் என்று. இப்படியான ஒரு நோயிற்கு மீண்டும் சொல்கிறேன் நீங்கள் வேறு பெயர் கொண்டு அழையுங்கள்.

இந்த மனநிலை தவறானது என “பெயல் மணக்கும் பொழுது” கவிதைத் தொகுதியைக் வெளியிட்ட அ.மங்கைக்கும் அப்போதே பதில் எழுதி “புலம்பெயர்ந்தோர் கவிதைகள்” தொகுத்து வெளியிட்ட ப. திருநாவுக்கரசு அவர்களுக்கும் நமது எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறோம். இது குறித்து  ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

அதனை விடவும் காலாகாலமாக தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்க்கும் அரசியல் குறித்து நான் பேசிவருகிறேன். அண்மையில் “THEN THERE WERE NO WITNESSES” என்ற  பெயரில் பா. அகிலனின் கவிதைகள் கீதா சுகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்டு ரொரன்டோவில் வெளியிடப்பட்டது. அதேநாளில் வெளியிடப்பட்ட அவரது இன்னொரு  நூலான   “அம்மை” எனும் கவிதைத் தொகுதியில் இருக்கும் 50 கவிதைகளுக்கு 34 பக்கத்தில் கீதா சுகுமாரனால் விளக்கம் எழுதப்பட்டிருக்கிறது. உண்மையில் அகிலனுக்கு நிகழ்ந்த மிகப்பெரிய பலவீனம் இது. ஆனாலும் இதற்குள் இருக்கும் அரசியல் பெரிது. இது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட இலக்கிய அரசியற் செயற்பாடு. இதுதான் பொதுவாக மொழிபெயர்ப்பின் அரசியலாக மாறுகிறது. இந்த வகைமுறையை நிராகரிப்பது  தேவையான ஒன்று. அதற்காகத்தான் பெயர்கப்படமுடியாத மொழி என நாம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதனை ஒரு படைப்பாக எழுதினேன்.(மற்றது இதழ்- 2004) .
இன்று சோபாசக்தியின் படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட சோபாசக்தியே கொண்டலைவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். இது ஒரு நிறுவனம் சார்ந்த இலக்கியச் செயற்பாடு. இதற்குள் சமூகம் சார்ந்த கலைஞனுக்கு வேலை இருக்காது.

 
மேலும்  ஜெயமோகனைக் கேள்வி கேட்பவர்கள் வருடத்திற்கு ஒரு கதை கூட எழுத முடியாதவர்கள் என்று சொல்கிறார் நண்பர் அனோஜன். உண்மையில் வருடத்திற்கு ஒரு கதை எழுதும் விசாவில் வந்தவர்களல்ல நாங்கள். நம்மில் பலர் இலக்கியத் தொழிலாளர்களல்ல கும்பம் கும்பமாய் எழுதுவதற்கு!  அல்லது நோய் குணமாவதற்கு எழுத்தை மருந்தாகப் பாவித்து வருபவர்களுமல்ல என்பதனை அனோஜனுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

இறுதியாக,

உங்கள் பிதாவினது வாசற்பக்கம் நாம் தலை வைத்துப் படுத்ததில்லை. அந்த மேடைப் பேச்சில் அவர் காறி உமிழ்ந்த வார்த்தைகள் அநாகரிகமானவை என்று சொல்கிறோம்.  கிருமி நாசினி அடித்துக் கொல்ல வேண்டும் எனச் சொன்ன அவரது அதி உன்னத நகைச் சுவை குறித்தது அல்ல அது. அதன் முன்னரும் அதன் பின்னரும் அவர் பேசிய வார்த்தைகளை  குட்டி மோகன்களான நீங்கள் திரும்பவும் செவி மடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அறிவற்ற திமிர்தனம் கொண்ட அந்த வார்த்தைகளுக்கான பதில் வார்த்தைகளை நாமும் தொடர்ந்து எழுதுகிறோம். இதற்குமேலும் உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது போகும் என நாம் நினைக்கவில்லை. ஆகக் குறைந்தது இனிவருங்காலங்களிலாவது உங்கள் பிதா ஈழம் குறித்து எதையாவது எழுதினால்  வாங்கி வாசித்துத் திருத்திக் கொடுங்கள். உங்களுக்கும் நேரம் மிச்சம் எங்களுக்கும் நேரம் மிச்சம். பிதாவின் எழுத்தில் நீங்கள் கைவைப்பது ஒன்றும் தப்பான செயல் இல்லை. தோளுக்கு மிஞ்சினால் தோழன் தானே.

Sunday, 3 March 2019

கருணா - அனுபவம்:1


 

"...ஆனால் கைவிடப்பட்ட காலத்தில் ஒரு சிற்றிலக்கியச் சூழலுக்கு அனைத்துமாக இருந்தவர்களில் ஒருவர் கருணா."

கற்சுறா

 

நேற்று 2மார்ச்2019 அன்று  தெருவைப் பனி மறைத்த நாளில் உன்னைக் கைவிட்டு விட்டு வந்தோம்.  பெட்டிக்குள் கிடத்தி உன்னை அடைத்து வைத்த கோலம் நேற்று மட்டுமானதல்ல.  யார் வீட்டு வேலிக்குள்ளும் புகுந்து விடாதபடி அடைத்து வைத்த மட்டையை நீ கழற்றி எறிந்திருக்க வேண்டுமல்லவா?




 


 எமக்கு ஒரு ஓவியனாகவும் வடிவமைப்பாளனாகவும் கருணா 1999ம் ஆண்டில் அறிமுகமானார். “எக்ஸில்” என்ற சஞ்சிகையை பாரீசில் நடத்திக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது அதன் வடிவமைப்பாளராக லண்டனில் வசிக்கும் ஓவியர் கிருஷ்ணராசா இருந்ததார். நான்காவது இதழுடன் நமது ஆசிரியர் குழுவுக்குள் ஏற்பட்ட கசப்பான முரண்பாடுகளால் குழுவிலிருந்த மற்றய சில நண்பர்களை வெளியேற்றிவிட்டு ஜெபா, விஜி, எம். ஆர். ஸ்ராலின், நான் ஆகிய நான்கு பேரும்  சேர்ந்து தனித்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட்டது.  ஒரு இதழ் வடிவமைப்புக் குறித்த ஒருவித புரிதலுமற்று ஒரு இக்கட்டான சூழலில் இருந்த எங்களுக்கு  சக்கரவர்த்தி மூலம் கருணா அறிமுகமாகினார். எங்களுக்கு “எக்ஸில்”என்ற எழுத்து வடிவமைப்பையும் எழுத்தாளர்களது பெயர்களையும் முன்னட்டை ஓவியங்களையும் வெளிவரும் படைப்புக்களுக்கான ஓவியங்களையும் வரைந்து தந்தார். கருணாவின் அறிமுகம் கிடைத்த பின்னர் எக்ஸிலின் வடிவமைப்பில்  மாற்றம் வந்தது.  இன்னமும் பார்த்து ரசித்துக் கொள்ளக் கூடிய வகையில்  “எக்ஸில்” என்ற அந்த எழுத்தமைப்பு தனித்துவமாக இருக்கிறது.ஏற்கனவேயிருந்த “எக்ஸில்”  என்ற வடிவத்தினை நாம் மிகுந்த சிரமப்பட்டுப் பயன்படுத்திக் கொண்டிருந்ததை கொண்டிருந்ததை 4,5,6 வது இதழ்களில் கண்டு கொள்ள முடியும்.
 
 
 
 
 
 
 
 




7வது எக்ஸில் இதழிலிருந்து எமக்கு அந்தச் சிரமம் இல்லாது போனது. அதன் பின்னர் இதழின் இறுதிவரை அவரது அட்டை வடிவமைப்பின் செயற்பாடு இருந்தது.


 

பின்னர் கனடாவில்  கருணாவை நான் சந்தித்த பின் அவருக்கும் எனக்குமாக அடிக்கடி நிகழும் உறவும் பிரிவும் எழுதி முடிக்கப்பட வேண்டியது. (அதனை நான் தொடர் பகுதிகளில் எழுதுகிறேன்.) ரொரண்டோவில் இருந்து நானும் ஜெபாவும் சேர்ந்து “மற்றது”என்றொரு சிற்றிதழைத் தொடங்கினோம். அதனது  முன்- பின் அட்டைகளுக்கான ஓவியங்களை வரைந்து தந்தவர் கருணா. நாங்கள் ஒரு சஞ்சிகை தொடங்க இருக்கிறோம் அதற்கு பெயர்  “தகர்த்தல்”  எனச் சொல்லியிருந்தோம். அதற்கான ஒரு வடிவமைப்பை அழகாகச் செய்து அனுப்பிருந்தார். அது எக்ஸிலை ஞாபகப்படுத்துவது போலிருந்தது.
 
அதன்பின் “மற்றது” என அதற்குப்  பெயர் மாற்றினோம். (அது ஏன் எனப் பின்னர் எழுதுகிறேன்.) ஒரு மூன்றாவது நான்காவது எட்டாவது பார்வை கொண்டஒரு மறுபார்வையின் அர்த்தம் இது என நமது எண்ணத்தைத் தெரிவித்த போது  அதற்கான ஓவியம் வரைந்து தந்தார்.  முன் அட்டையினதை “அச்சம்” என்றும் பின்னட்டையினதைக் “ கோடுகளில் இருத்தல்” எனவும் அவற்றிற்குத் தலைப்பிட்டார். இவை இரண்டும் அவரது ஓவியங்களில் மிக முக்கிய இடத்தை வகிப்பதாக இருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
 

அண்மையில் “ழகரம்” இதழில் வந்த எனது “chemical இம் Balance சிறுகதைக்கு  வரைந்த ஓவியம் தான் கீழே உள்ளது. இதற்கு "Russian Roulette"என்று பெயரிட்டிருந்தார். நமது போர்ச் சூழல் என்பதில்  C.T.B. இற்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பஸ்ஸிலிருந்து கடத்தப்பட்டவர்களும் பஸ்ஸிற்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டவர்களும்  பஸ்ஸிற்குள் பயணம் செய்த பலவகைப்பட்ட துப்பாக்கிகளும் என்று நமது போர்ச் சூழலில் பஸ்ஸிற்கு முக்கிய இடமிருக்கிறது. பஸ் நிறுத்தத்திலிருந்து தொடங்கும் கதை அது. அதற்கு வரைந்த ஓவியம் இதுதான்.
 
 

சிற்றிலக்கிச் சூழலில் மிக அதிகமான சஞ்சிகைகளுக்கும் நூல்களிற்கும் அவர் உருவாக்கிய அட்டைப்பட  ஓவியங்கள் அதிக கவனம் பெறுவன. அவருக்குள்ளும் அது மானசீகமான ஒரு விருப்பை ஏற்படுத்தியிருக்கும் அளவுக்கு முக்கிய தாக்கத்தைச் செலுத்துவன. புலம்பெயர் சூழலில் அது கனடாவானாலும் சரி ஐரோப்பா ஆனாலும் சரி பல சிறுசஞ்சிகைகளுடன் மிகுந்த ஈடுபாட்டோடு செயலாற்றிய காலங்கள்  உண்டு அவை தனித்துப் பேசப்பட வேண்டியவை. ஒரு வடிவமைப்பாளனாக எத்தனையோ வணிகச் செயற்பாடுகளுக்கு  அவர்  வடிவமைப்புக்களைச் செய்த போதும் சிற்றிலக்கியச் சூழலில்தான்  கருணாவால் மிகச் சுதந்திரமாகச் செயற்பட முடிந்தது. தன்னுடைய ஆழ்மனதின் சீண்டல்களை சிற்றிதழ்களின் மூலம் பொது வெளிக்குள் சொல்ல முடிந்தது. யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மிகத்தீவிரமாக வடிவமைப்புக்களைச் செய்து கொண்டிருந்தவர் என எமக்குத் தெரியும். அதையும் தாண்டி அந்த யுத்த சூழலை எதிர்த்து விடுதலைப்புலிகளது  ஆதிக்கத்தை மறுத்து எழுதிக் கொண்டிருந்த எனக்கும் சக்கரவர்த்தி போன்றவர்களுக்கும் அவர் மானசீகமாக வடிவமைப்பைச் செய்து கொண்டிருந்தார். இது எப்படி நடந்தது? கருணாவின்  இறுதி வணக்க நிகழ்வில் “ முழக்கம்” பத்திரிகை  ஆசிரியர் திரு  உரையாற்றியது  உண்மையாய் இருந்தது. அந்த உண்மையைக் கண்டு கொள்ள அதிக அவகாசம் தேவைப்பட்டது. கருணாவை நன்கு அறிந்தவர்களுக்கு இது தெரிந்திருக்கிறது.
கருணா “ஆசீர்வாதம்” என்ற மதம் சார்ந்த  பத்திரிகையை வடிவமைத்த காலத்தில் அவருடன் சண்டையிட்டு 2வருடங்கள் அவருடன் எவ்விதத் தொடர்புமற்று இருந்திருக்கிறேன். இந்தப் பொதுச் சூழலிலிருந்து சிற்றிதழ்கள் வேறுபட்டவை. அதற்குள்தான் கருணாவால் அதிக சுதந்திரத்துடன் நடமாட முடிந்தது. (அதற்குள் இருந்த கருணாவின் வேறுபட்ட பலவீனங்கள் குறித்தும் நாம் பேசமுடியும். பேசவும் வேண்டும்.)

சிற்றிதழ்கள் என்னவகையான கருத்துருவாக்கத்தைக் கொண்டலைபவை. அவை பொதுச் சூழலில் இருந்து எவ்வாறு வேறுபட்டவை என்ற  அறிதலுடன் அவர் இணைந்து தனது செயற்பாட்டை நிகழ்த்தியிருந்த காலங்கள் உண்டு. அவை குறித்து எல்லாம் சிற்றிதழாளர்கள் விரிவாக எழுத வேண்டும் என நினைக்கிறேன். அப்போது சமூகம் குறித்திருந்த கருணாவின் அக்கறைபற்றி நாம் பல்வேறு வழிகளில் அறிந்து கொள்ள முடியும். அண்மையில் அவர் உரையாடல் சஞ்சிகைக்கு வரைந்த ஓவியமும் அதன் அட்டை வடிவமைப்பும் மிக முக்கியமானது.
 

நாம் கருணாவுடன் தொடர்பு கொண்டிருந்த  ஆரம்ப காலங்கள் தனித்த யுத்த காலங்கள்  யுத்தம் ஈழத்தில் மட்டுமல்ல  புலம்பெயர் தேசங்களிலும் அதே ரவுடித்தனத்துடன் அரங்கேறிக் கொண்டிருந்த காலங்கள். யாரும் யாருடனும் நம்பிக்கை கொண்டு நெருங்கமுடியாதிருந்த சூழல் அது. ஈழத்திலிருந்தவர்களுடன் தொடர்பில்லை. இந்தியாவில் ஏற்படுத்தியிருந்த தொடர்புகளும் அப்போதிருந்த தொலைபேசி அழைப்புக்கள் போல் அறுந்தறுந்து கேட்பவை. அந்தச் சூழலில் நமக்கருகில் சிறந்த வடிவமைப்பாளர்களாக இருந்தவர்கள் கருணாவும் கிருஷ்ணராசாவும் தான்.  இவர்கள் ஒருபுறம் ஓவியர்களாக இருந்தார்கள். அதே நேரம் மார்க் மாஸ்டரின் மாணவர்களாக இருந்தார்கள். அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். இலக்கியத்திற்கு மிக நெருங்கியிருந்தார்கள். ஒரு சிறுகதையை அல்லது ஒரு கவிதையை வாசித்து அதற்கு எதிர்வினையை ஆற்றிவிடும் ஒரு அக்கறை அவர்களிடம் இருந்தது. அது நமக்கு இலகுவாக இருந்தது.இப்போது நம்மிடத்தில் ஆயிரம் ஓவியர்கள் தோன்றியிருக்கலாம்  வடிவமைப்பாளர்கள்  தோன்றியிருக்கலாம் ஆனால் கைவிடப்பட்ட காலத்தில் ஒரு சிற்றிலக்கியச் சூழலுக்கு அனைத்துமாக இருந்தவர்களில் ஒருவர் கருணா.
ஆனால் நாம் அவர்கள் மீது ஒரு எதிர்வினை ஆற்றிவிட்டால் நம்மைக் கெட்டவார்த்தையால் திட்டிவிட கிருஷ்ணராசாவல் முடிந்தது. ஆனால் கருணாவுக்கு உடனடியாக நம்முடன் அனைத்துத் தொடர்பையும் துண்டித்து  விட முடிந்தது. அதற்குப்பின் நாம் தொடர்பைக் கொண்டு வர சில வருடங்கள் காத்திருக்க வேண்டும். இப்படியொரு நிலையில் தான் கருணாவுக்கும் எனக்குமான இறுதிக்காலம் இருந்தது.

என்னை மன்னித்துக் கொள் கருணா….
படங்கள் "ஸ்கேன்" செய்து கொள்ள முடியாததால் புகைப்படமாக எடுத்துப் பாவிக்கப்பட்டிருக்கிறது.

Wednesday, 20 February 2019

பல்லவி- அனுபல்லவி- சரணம்- கற்சுறா


 

 

பல்லவி


கடந்த சிலதினங்களாக தமிழகத்து எழுத்தாளரான ஜெயமோகன் அவர்கள் நிகழ்த்திய உரை ஒன்றில் ஈழ இலக்கியங்கள் குறித்து சொல்லப்பட்ட கருத்து பரவலாக பலரது கவனத்தைப் பெற்று வினை எதிர் வினை மறு எதிர் வினை என பலர் கருத்துக்களைத் தெரிவித்தபடி இருக்கிறார்கள் என்பதனை நீங்கள் அறிவீர்கள். இதில் ஒரு வினையை நான் உட்பட சில நண்பர்கள்  நிகழ்த்தியிருந்தோம். அந்த வினையை சில இடங்களில் நையாண்டித்தனத்துடனும் சில இடங்களில் அத்து மீறிய சொற்பிரயோகத்துடனும் நிகழ்த்தியிருந்தோம். அந்த நிகழ்த்துதலின் இன்னொரு தொடர்ச்சியாக  இந்தப் பதிவினை எழுதுகிறேன்.

இங்கே இந்தப் பதிவினை எழுத எனக்கு முன்னுதவியாக இருப்பதில் முதன்மையானது நோயல் நடேசன் அவர்களது மறுவினையே. அவர் தனது வலைத்தளத்தில் எழுதிய பதிவினை வாசித்த போது நாம் இதுவரை எழுதி வந்த  உள்ளீடை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதனை உணர்ந்து கொண்டேன். வேறு சிலரோ கற்சுறா எழுதும் எழுத்துக்கள் விளக்கமாக இருப்பதில்லை. கடுமையான சொற்பிரயோகங்களுடன் வெறும் கோபத்தை மூட்டிவிடக்கூடியவை என்பதாக இருக்கின்றன என சொல்லி வருகிறார்கள்.

உண்மையில் என்னால் ஒரு விடையத்தை எழுதும் போது நீங்கள் எல்லோரும் எழுதிவிடக் கூடிய வார்த்தைகளை –  கருத்துக்களை நான் எழுத முனைவதில்லை. அதற்கு  உங்களில் பலர் இருக்கும் போது அதனையே நான் திரும்பச் செய்யத் தேவையில்லை என  எண்ணுபவன். அதனால் ஒரு கட்டுரைக்கு நீங்கள் எழுதும் பல்லவி அனுபல்லவிகளை நான் எழுதுவதில்லை.

ஆனாலும் இந்தக்கட்டுரையில் நான் என்னால் முடிந்தளவு உங்களைப் போன்று எழுத முனைகிறேன். இப்படியான வருத்தக்கார எழுத்தை என்னால் எழுத முடிவதில்லை என்பதனையும் சொல்லிக் கொள்கிறேன்.

அனுபல்லவி


தமிழகத்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது உரை குறித்து அதிருப்தி கொண்டு ஈழத்தில் மு.பொன்னம்பலம், அ. யேசுராசா, சோ. பத்மநாதன், மு.நித்தியானந்தன் போன்ற எழுத்தாளர்கள் தொடங்கி அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களான தமயந்தி, அருண்மொழிவர்மன்,கோ.நாதன், நான் உட்படப்  பலர் எதிர்கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இதில் அதனை ஒரு நகைச்சுவைப் பேச்சு என சோபாசக்தி தொடங்கி கருணாகரன் தற்போது நோயல் நடேசன் வரைக்கும் மறு கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கருத்துக்களுக்கு அவ்வப்போது நாம் எதிர்வினையும் எதிர்வினைக்கு மறு வினையும் ஆற்றியிருந்த போதிலும் தற்போது நோயல் நடேசன் அவர்கள் எழுதியிருக்கும் பதிவிற்கான விளக்கத்தை தெரிவிக்க வேண்டியவனாக இருக்கிறேன். இதனையும் வழமையக ஒற்றைப்பட விளக்கத்தைப் போட்டுவிட்டோ அல்லது ஒரு ஐநயாண்டித்தன உரையாடலை நிகழ்திவிட்டோ கடந்து போய்விடலாம். ஆனால் அவர் எனது பெயரைச் சொல்லி சில விளக்கமும் கேட்டிருக்கிறார். அதனை விடவும் அவர் ஒரு குழந்தையைப் போல கடந்த காலச் செயற்பாடுகள் குறித்து எதனையும் அறியாதபடி அப்பாவித்தனமாகச் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். உண்மையில் நோயல் நடேசன் அவர்களது இந்த நேர்மை எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. .

 

சரணம் -1


நான் கடந்த சில தினங்களுக்கு முன் எனது முகநூலில் ஈழத்திலிருந்து எழுத்தாளர் கருணாகரன் அவர்கள் என்னுடன் பேசியிருந்தார் என்பதனைத் தெரிவித்திருந்தேன். மிக நீண்ட நேரம் பேசியிருந்த எழுத்தாளர் கருணாகரன் அவர்கள் என்னுடன் என்ன பேசியிருந்தாரோ அதில் அதிகமான விடயங்களைத் தாங்கியிருக்கிறது நோயல் நடேசன் அவர்களது இந்தக் கட்டுரை.  தனக்கான பதிலை எழுத இருப்பதாகச் சொன்ன எழுத்தாளர் கருணாகரன் அவர்கள் இதுவரை எதையும் எழுதிவிடாத போதும் நோயல் நடேசன் அவர்கள் இதனை எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம். ஆகையினால் நோயல் நடேசன் அவர்கள் எழுதியிருக்கும்  “அறச்சீற்றமா- ஆற்றமையா” என்ற கட்டுரைக்கு தகுந்த பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இனி அவரது கட்டுரைக்கான  பதிலுக்கு வருகிறேன்.

 

சரணம் -2


“இரவு மெயில் வண்டியில் நித்திரைபோல் பாசாங்கு செய்தபடி முன்சீட்டில் கால் போட்டபடி இருக்கும் தமிழர்களை தட்டிநகப்பாங்என அநூராதபுரத்தில் எழுப்புவது சிங்களவர்கள்தான். அதுபோல் ஜெயமோகன் தனது வார்த்தையால் தட்டி எழுப்பிவிட்டார் .

என்று சொல்லும் நோயல் நடேசன் அவர்கள் ஈழத்தில் கவிஞர்களை ஆழிப்பேரலையெனத் தட்டி எழுப்பிவிட்டதாகவும், அநுராதபுரத்துச் சிங்களவர்கள் எழும்புங்கடா என்று தட்டி எழுப்பியதாகவும் அதன் பின் ஈழக் கவிஞர்கள் பொங்கி எழுகிறார்கள் என்றும் சொல்லி தமிழகத்து எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களது அறிவீனக்கருத்துக்கு அறிவு முலாம் பூச முனைகிறார்.  அதனால் தான்

“முக்கியமாக 200 கவிஞர்கள் இலங்கைக்கு அதிகம். அதைவிட நகரத்திற்கு அதிக தொகை என்றிருக்கிறார் . கவிஞர்கள் அதிகமானால் மகளிர் கற்புக்கு பாதிப்பு என்றும் கூறிவிட்டார்.எந்தக் கவிஞரை நினைத்து கூறினாலும் வார்த்தைகள் சிக்கலாகிவிட்டது- உண்மைதான் .எல்லோரும் பொங்கிவிட்டார்கள் .”

எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள்போல் அல்ல. மேடைக்குப் புதியவர்கள். சுவைக்காக சில வார்த்தைகளை சேர்ப்பார்கள்.

என அந்த வார்த்தைக்கு முன்னால் உள்ளதையும் பின்னால் உள்ளதையும் கண்டு கொள்ள மறுக்கிறார். எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்கள் மட்டுமல்ல அவருடன் சேர்த்து  எங்களால் அடையாளப்படுத்தப்பட்ட அனைவருமே இப்படித்தான் சொல்கிறார்கள். அதனை ஒரு நகைச் சுவை மேடைப்  பேச்சு என்கிற அளவில் தான் அதனை மடை மாற்ற முனைகிறார்கள்.  இங்கே மு. பொன்னம்பலம் என்கின்ற ஒரு ஈழத்து எழுத்தாளரது பெயர் பாவிக்கப்பட்டுஅவர் எழுதியிராத ஒரு தகவலைச் சொல்லி அதுதான் ஈழ இலக்கியத்தின் இன்றைய நிலை என்பதாக ஒரு வியாக்கியானம் சொல்லிவிட்டு இப்போது அது நகைச் சுவைக்காகச் சொன்னது என்றால் உண்மையில் நீங்கள் எல்லோரும் யார்?

2009 இல் 400000 மக்களை ஆட்டு மந்தையை வளைப்பதுபோல வளைத்துக்கொண்டு யுத்த பூமிக்கு கொண்டு சென்றபோதுநாம் அறம் பாடவில்லை. எதிர்ப்புக்குரல் எழுப்பவில்லை.

பல நூறு வருடங்களாக வடக்கில் இருந்த இஸ்லாமியரை இருப்பிடத்தை விட்டு துரத்தியபோது வராத அறச்சீற்றம் இப்போது மட்டும் எப்படிவந்தது?

இலங்கை அரசின்மீது எத்தனை கவிஞர்கள் அறம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்?”

என்கிறார் எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்கள். இவர் அதிக வாசிப்பு அனுபவம் இல்லாதவர் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது இவர் ஈழத்து எழுத்துகளை வாசிப்பதேயில்லை என எடுத்துக் கொள்வதா?
அதற்காக நாம் முதலில் இருந்து அவருக்கு பாடத்தைத் தொடங்க முடியாது. அவர் தான் தேடி வாசிக்க வேண்டும்.

இதன் பின் அவர் சொல்லும் வார்த்தைகள் மிகுந்த வேடிக்கையானது.

 

 

“ஆனால் ஜெயமோகன் மீது, அதுவும் சாதாரணமாக எழுதுகோலை மட்டும் நம்பியிருக்கும் இந்தியாவின் ஒரு கோடியில் இருக்கும் ஒரு தனிமனிதன் மேல் ஏன் இந்தச் சீற்றமெல்லாம் வந்தது?”
 

என்கிறார் நமது எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்கள்.

பாருங்கள் எவ்வளவு அறிவீனம் என்று. ஈழத்தில் யாரும் எழுதுகோலை நம்பியிருப்பதில்லை. தமிழகத்து வியாபார எழுத்தாளர்களைப் போல் ஈழத்தில் யாருக்கும் எழுத்து வியாபாரம் ஆனதில்லை.  இந்தியாவின் ஒரு கோடியில் இருக்கும் ஒரு முட்டாள் வியாபார எழுத்தாளன் வந்து சொன்ன பொய்யிற்குத் தான் இந்த சீற்றம் வந்தது என்பதைக் கூட வாசித்து அறிந்து கொள்ள முடியாத படி எழுத்தாளர் நோயல் நடேசன் அவர்களுக்கு எது கண்ணை மறைக்கிறது எனத்தான் நான் திரும்பக் கேட்கிறேன். தமிழகத்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது அகமலத்தைத் துடைக்காது அவரது புறமலத்தைத் துடைக்கும் கருவியாக நோயல் நடேசன் அவர்கள் மாறியிருப்பதனை என்னவென்பது?

கிராமங்களில் முதலிரவின் பின்பு மாப்பிள்ளையின் அக்கா படுக்கைத் துணி தோய்க்கும்போது இரவு தம்பதிகளிடையே நடந்ததை, நடக்காததை கண்டுகொள்வார் என்பது போல் ஈழ இலக்கிய சமூகத்தில் நடக்காத விடயத்தை ஜெயமோகன் சுட்டுகிறார்.

என அந்த முட்டாள்தனமான உரைக்கு விளக்கவுரை செய்ய முனைகிறார் நோயல் நடேசன்.  ஆனால்  அன்டன் பாலசிங்கங்களைப் பார்த்து வந்த சமூகம் தான்  நமது சமூகம் என்பது போல் தனது முட்டாள் ஆய்வுக்கு எதிர் நிலையில் அன்டன் பாலசிங்கத்தை முன்வைக்கிறார். உண்மையில் இவர் விளங்கிச் செய்கிறாரா? விளக்கமில்லாது செய்கிறாரா எனத் தெரியவில்லை. என்ன பிதற்றலையாவது செய்து தமிழகத்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களைக் காப்பாற்றிவிடவேண்டும் என நினைத்து வெறுமையாக தன்னை நிறுத்துகிறார். தமிழகத்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது உரையில் “பாய்விரித்தல்” என்றார். இவரோ “ படுக்கைத் துணி தோய்க்கும் மாப்பிள்ளையின் அக்காவாக உருவகிக் கிறார். உண்மையில் இந்த மானங்கெட்ட சிந்தனையின் அடி மூலம் எது எனத்தான் கண்டு பிடிக்க முடியவில்லை. இவ்வளவு கேவலமாகவா ஒருத்தனின் புரிதல் இருக்கும்?

“ஆனால் நாம் என்ன செய்கிறோம்? பிணத்துடன் குடும்பம் நடத்தும் நமது அரசியல்போல் இலக்கியத்திலும் செய்ய விளைகிறோம். யாராவது புதிதாகச் செய்பவர்களைத் தாக்குகிறோம். கனடாவில் இலக்கியத்தோட்டம் சரியோ பிழையோ ஏதோ செய்கிறார்கள். அது சரியில்லையென்றால் அதைவிடத் திறமாக செய்யுங்கள். அதை விடச் சரியாகச் செய்து காட்டுங்கள். இங்கே உள்ள போலி முகங்கள், பாவனைகள் நல்லதல்ல. குறை சொல்வதற்கு ஆயிரம் பேர் வரலாம். நிறைவாகச் செய்வதற்கே ஆட்கள் தேவை.

என்கிறார் நோயல் நடேசன் அவர்கள்.

ஆம். “சரியோ பிழையோ ஏதோ செய்கிறார்கள்” என விட்டுவிட முடியுமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கடந்த யுத்தக காலத்தில் புலிகளும் இதைத் தான் சொன்னார்கள். புலிகளைப் பற்றிச் சொன்னவர்களும் இதைத் தான் சொன்னார்கள். "சரியோ பிழையோ அவர்கள் ஏதோ செய்கிறார்கள்" என்று.
"எங்களைத் தவறு என்று சொன்னால் நீங்கள் இயக்கம் தொடங்கிப் போராடுங்கோ பார்ப்பம்" என்றார்கள். இதனை புலிகளோடு மட்டும் வைத்து நோக்கத் தேவையில்லை. இந்த "ஏதோ செய்கிறார்கள்" என்ற மனநிலையில்  எல்லோரும் இருந்து விடலாம் எனில் இந்த உலகில் யாருக்கு என்ன சிந்தனைஇருந்தால் என்ன? யாருக்கு என்ன பிரச்சனை இருந்தால் என்ன?
 அது என்னவென்று உன்னால் புரிந்து கொள்ள முடியாது என்றால் நாங்கள் என்னதான் செய்யமுடியும்? சமூக அசைவியக்கத்தின் அத்தனை விழுமியங்களையும் கண்டு கொள்ள முனையாத ஒரு "கோமா நிலையே" அது. அதற்குள்  நாம் இருந்தால் என்ன? செத்தால் என்ன?
 
 

சரணம்- 3


“முன்பு கவிதையைப் பற்றி அவ்வளவாகத் தெரியாமலிருந்த நான் கடந்த வருடங்களில் மூன்று கவிஞர்களதுகவிதைகளைப் பற்றி எழுதியும் ஒரு கவிஞருக்கு முன்னுரையும் எழுதியிருக்கிறேன். அதேபோல் முகமே தெரியாதவர்களது சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் என்பவற்றுக்கும் மதிப்புரைகள், விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன்.பெருமையாக இதைச்சொல்லவில்லை.”

என்கிறீர்கள். திரு நோயல் அவர்களே! இது பெருமையல்ல. அசிங்கம். கவிதை பற்றிய அறிவற்று கவிதைகளுக்கு முன்னுரை எழுதுவதும் கவிஞர்கள் குறித்து எழுதுவதும் நமது சாபக்கேடு.

“கிழக்கு மாகாண பெண் கவிஞர்களான ஆழியாள், அனார் போன்றவர்களை பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அவர் மூலமாகவே நான் இவர்களைத் தெரிந்து கொண்டேன்.” 
 என்கிறீர்கள். ஆழியாளையும் ஆனாரையும்  தெரியாது இருக்கும் ஒருத்தனுக்கு தமிழகத்து எழுத்தாளாரன ஜெயமோகன் எழுதித்த தெரிந்து கொண்ட ஒருத்தன் கவிதைத் தொகுப்புக்களுக்கு முன்னுரை எழுதும் நிலை இருப்பது அவல நிலை.

இந்த மாதிரியான போக்குத் தான் ஈழக் கவிதைச் சூழலுக்குள் நடந்து கொண்டிருக்கும் அதி கேவலமான விடையம் என நான் தொடர்ந்து சொல்லிவருகிறேன். அதனை நீங்கள் தான் தேடி வாசிக்க வேண்டும்.

“இரண்டு வருடத்தில் உங்களது சக இலக்கியவாதி ஒருவரது கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை நூல்களை நீங்கள் விமர்சித்திருக்கிறீர்களா? யாராவது ஒரு படைப்பாளுமையைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்திருக்கிறீர்களா? இலக்கிய இயக்கமொன்றை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்துச் செயற்படுத்தியிருக்கிறீர்களா? இல்லை குறைந்த பட்சம் முகநூலில் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக எழுதிப் பதிர்ந்திருக்கிறீர்களா? சக எழுத்தாளரது உயர்வில், வளர்ச்சியில் உங்கள் பங்கென்ன?

என்று எனது பெயரைக் குறிப்பிட்டுகேட்டு எழுதியிருக்கிறீர்கள். அதனை நீங்கள் தான் தேடி வாசிக்க வேண்டும். தமிழகத்து எழுத்தாளர்கள் கழிக்கும் தொடர் மலத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் மனநிலையில் இருப்பவர்களுக்கு அது சாத்தியம் குறைவான செயல். அதனைக் கடந்து நீங்கள் விரைவில் வெளியில் வரவேண்டும் என விரும்புகிறேன்.

நோயல் நடேசன் அவர்கள் எழுதிய இந்த மொக்கைத் தனமான பதிவிற்கு உண்மையில் நமது நையாண்டித்தனப் பாணியில் இப்படியொரு படத்தைப் போட்டு விட்டு நகர்ந்து சென்றிருக்க முடியும். ஆனால் அவரது மடமைத் தனத்தை அப்படியே பதிந்து செல்லும் போக்கை மறுத்துச் செல்ல முடியாது விளக்கம் சொல்ல வேண்டி வந்துவிட்டது.

 
படம் - தமயந்தி
 
 
 
" ஈழத்தேசியவாதிகள் – ஏற்கனவே இந்தியாவோடு கோபத்தில் இருந்தவர்கள் அறம் பாடினார்கள் . தலித் ஆதரவினர் மீசை துடித்தனர் . இஸ்லாமிய கவிஞர்கள் நல்ல வேளை அறம் பாடியதோடு நிறுத்திவிட்டார்கள்"
எனச் சொல்லிவரும் நோயல் இதில் யார் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற விளக்கம் எமக்கு குறைவாக இருக்கிறது. இதற்கான விபரத்தை அவர் விரிவாக எழுத வேண்டும். அப்போது இதற்கான இன்னொரு பதிலையும் நாம் எழுதிவிட முடியும்.

 

மிக முக்கியமாக அனாரையும் ஆழியாளையும் அறிந்திராத நீங்கள் தயவு செய்து கவிதைத் தொகுப்புக்களுக்கு முன்னுரை எழுதித் தாருங்கள் என இனி உங்களிடம் பிரதியைக் கொண்டு வருபவர்களின் முகத்தில் காறி உமிழுங்கள். அது ஈழக்கவிதையின் போக்கை மாற்ற சிறு உதவி செய்யும் எனக் கூறிக் கொண்டு
இறுதியில் இந்தக் கட்டுரை உங்களை எதிர்த்து எழுதவில்ல; ஈழ இலக்கியத்திற்காகவே எழுதினேன். என்பதனை நீங்களும் மனதிற் கொள்ளுங்கள்
 

 

 

Editing & Ghostwriting சோபாசக்தியின் பித்தலாட்டம்- கற்சுறா

  அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்? கற்சுறா சோபாசகத்தியின் இலக்கியச் செ...