Friday, 6 March 2020

இது தற்கொலைச் சமூகம்.

 

 

 

வணக்கம்.

இது தற்கொலைச் சமூகம்.

 

கற்சுறா



 

 

 

இங்கே நான் வாசிக்க இருக்கும் கட்டுரை புதிதாக எழுதியதல்ல. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நான் எழுதிவந்த அதிகமான கட்டுரைகளின் சில உட்குறிப்புக்களே இவை.
 
தற்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக அரசு அறிவித்து அவர்களனைவருக்கும் மரணச்சான்றிதழ் கொடுப்பதற்கு அரசு முனைந்துள்ளது.    நம்மால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது இருக்கிறது. ஏன் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது? மிகக் கூர்மையான உண்மையாக அது  இருக்கும் பொழுதும் கூட நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது.
 
நமது தேசத்தின்  ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் இந்தக் கருத்தினைச் சொன்ன காரணத்தால் மட்டும் இது அதிக கவனம் பெறப்படவில்லை. இன்றைய ஜனாதிபதி அப்போதைய யுத்தகாலத்தின்  பாதுகாப்பு மந்திரியாக இருந்தவர் என்பதால் அந்த வார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
 
நமது தேசத்தில் நடந்து முடிந்த இறுதியுத்தம். அது  ஒரு அழுகிய யுத்தம். விடுதலைப் போராட்டமாக நம்மவர்களால் கட்டியழைக்கப்பட்ட போர் முள்ளிவாய்க்காலில் அழுகிய யுத்தமாக மாறியிருந்ததை நாம் அனைவரும் கண்டிருந்தோம்.
நமக்கு வெறும் கதைகளாக அவை இருந்ததில்லை. நேரடிக்காட்சிகளாகவும் நேரடிச்சாட்சிகளாகவும் அந்த யுத்தம் நமது ஒவ்வொருவருக்கும் அருகில் இருந்தது. ஆனால் நமக்கு அருகில் இருந்தவர்கள் பலர்  அந்த அழுகிய கோர யுத்தத்தைக் கூட  வியாபாரமாக்கிக் கொண்டிருந்தார்கள் என்பதனையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
யுத்தம் முடிவுறும் தறுவாயில் இந்த வியாபாரிகளே மிக அதிகமாகக் கையறு நிலைக்கு வந்தார்கள். அதற்குள் இருந்த மக்களோ  மன்னாரில் இருந்து ஓடத்தொடங்கிய போதே வாழ்வின் கையறு நிலைக்கு வந்து விட்டிருந்தார்கள். அவர்களது கையறு நிலையை அனைத்து வியாபாரிகளும் கடைசிவரை தமக்குச் சாதகமாக்கியபடியே இருந்தார்கள் என்பதனை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன்.
இறுதியில் அந்த அழுகிய யுத்தம் முடிந்தபின் இந்த வியாபாரிகளால் கண்டு பிடித்த வார்த்தைதான் இன்றைய “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற வார்த்தை. இன அழிப்பு என்ற வார்த்தை அதையும் தாண்டி இப்போது மரபுத் தமிழ் - தமிழர் தொன்மம் என்ற வார்த்தைகள் எல்லாம்.
 
இந்தக்  “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற சொல்லுக்கும் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற சொல்லுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் என்ன எனக்  கேட்டுச் சில காலம் முன்பும் எழுதியிருந்தேன்.  இதனை வெறும் கேள்வியாகவே மட்டும் பார்த்தனர் பலர்.
நமது தேசத்தில்  தனியே தமிழர்கள் மட்டும் காணாமல் ஆக்கப்படவில்லை. பல சந்தர்ப்பங்களில் சிங்கள இளைஞர்களும் காணாமல் ஆக்கப்பட்டேயிருக்கிறார்கள். தமிழர்களிடத்திலும் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பலர் காணாமல் ஆக்கப்பட்டேயிருக்கிறார்கள். அவர்கள் யாருமே ஒருபோதும் மென்மையான முறையில் பவ்வியமாகக் கடத்தப்படவுமில்லை. காணாமல் ஆக்கப்படவுமில்லை.
இப்படியிருக்க முள்ளிவாய்க்காலில்  காணாமல் ஆக்கப்பட்டவர்களை மட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்  என்ற அடைமொழிச் சொல் கொண்டு அழைப்பதில் இருக்கும் தந்திரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 ஆம் இது தந்திரச் சொல்லே.
ஏனெனில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எமது தேசத்தின் தெருக்கள் எங்கிலும் கடந்தகாலம் முழுவதும் பரவியிருந்தபோதும் தனியே முள்ளிவாய்க்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை மட்டும் அடையாளம் காட்ட உருவாக்கிய சொல்லே இது என்பதால் இதனை நான் “தந்திரச் சொல்” என்கிறேன். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று மட்டும் அடையாளம் இட்டால் அந்த வார்தைக்குள் தாங்களும் தங்கள் குற்றங்களும் மாட்டிக் கொள்ள நேர்ந்துவிடும் என நினைத்துக் கண்டுபிடித்த வார்த்தை தான் இந்த “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்பது என்றே நான் கருதுகிறேன்.
 
ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட  காலத்திலிருந்து இயக்கங்களாலும் இலங்கை இராணுவத்தாலும் இந்திய இராணுவ காலத்திலும்  பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான காலங்களில் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து  இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசுவோர் அதீத அக்கறை கொள்வோர்  யாருமே  கரிசனை கொண்டதில்லை.
 
அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து மனிதவுரிமை அமைப்புக்கள் உலகப் பெண்கள் அமைப்புக்கள் என எத்தனை அமைப்புக்கள் கேள்விகளாய்க் கேட்டும் கடத்தப்பட்ட நபர்களை காட்டச் சொல்லிக்   கேட்டும் இன்றுவரை அவற்றிற்குப் பதில்களற்றே இருக்கிறது.  கடத்தப்பட்டு உயிரோடு வைத்திருக்கும் பொழுதே அவர்கள் வீடுகளிற்குச் சென்று சடங்கைச் செய்யுங்கள் எனச் சொல்லி உயிரோடு சடங்கு செய்வித்துச் சந்தோசப்பட்ட மனநோயாளிகளைக் கொண்ட சமூகம் நம்முடையது. இப்பொழுது புதிதாகக்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்துக் கவலை கொள்கிறது. இந்த அக்கறை போலியானது. அது ஒருபொழுதும்   பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார்ந்ததல்ல என்பதே எனது கருத்து.
 
உண்மையில் தேசவிடுதலை என்ற பெயரில் இயக்கமுரண்பாடுகளாலும் துரோகம் என்ற சொற்பதம் கொண்டும் சமூகவிரோதம் என்ற சொற்பதம் கொண்டும் கடந்த நாலு தசாப்தங்களாக நாம் எவ்வளவு எண்ணிக்கையுள்ளோரைக் காணாமல் ஆக்கியுள்ளோம்? அல்லது காணாமல் ஆக்கப்பட்டதிற்குத் துணை போயிருக்கிறோம்? அல்லது அதனைப் பார்த்தும் கோபம் கொள்ளாது  மவுனமாக இருந்திருக்கிறோம்? அவர்களுக்கு என்ன கணக்கை இன்றுவரை நாம் இட்டுள்ளோம்? இப்போது மட்டும் எங்கிருந்து இந்தக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த அக்கறை நமக்கு வருகிறது? உண்மையில் இது பொய்மையான அக்கறையல்லவா? இதில் நேர்மை இல்லாதிருக்கிறதல்லவா? இங்கே சார்பு நிலை இருக்கிறதல்லவா? நீங்கள் பேசுகின்ற அரசியலுக்காகவும் நீங்கள் காப்பாற்றி நின்ற தேசியத்திற்காகவும் முண்டு கொடுக்கும் தடியாக இன்று பாவிக்கப்படுவது ஏமாற்றுத்தனமல்லாது வேறு என்ன?
 
இன்று ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் என  முன்னெடுக்கப்பட்டதின் பின்னால்  பிற்போக்குத் தனம் கொண்ட தமிழ் அரசியல் வாதிகளது ஈடுபாடு இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதனால் தான் 100 நாட்கள் 1000 நாட்கள் என்று பின்னணி அடையாளப்படுத்தல்களுடன் இளம் விதவைகளும் தாய்மாரும் தமது வாழ்வைக் காணாமல் ஆக்கியபடி தெருவில் நிற்க வைக்கப்படுகிறார்கள். வீடியோ எடுக்கப்படுகிறது. அது அரசியலாக்கப்படுகிறது. ஆனால் இன்றுவரை அவர்களுக்குரிய குறைந்தளவு தேவை கூட நிறைவேற்றப்படவில்லை.
 
பிள்ளைகளை- மனைவிமாரை- கணவன் மாரைப் பறி கொடுத்தவர்கள் தமது சொந்தம் எங்கேயாவது இருந்து விடமாட்டார்களா என்று காத்திருக்கும் ஏக்கத்தை தமது அரசியலுக்குச் சாதகமாக்குகிறது இந்தச் சகதி கொண்டலையும் சமூகம். அவர்களது எஞ்சியிருக்கும் வாழ்வையும் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இது இன்றைய இன்னுமொரு கேவலமான செயற்பாடு.
 
நமது சமூகத்தில் உறவுகளைத் தொலைத்த ஒரு மக்களிற்கு ஒருநேசக்கரமாகக் கூட எவ்வளவோ ஆதரவை வழங்கியிருக்க வேண்டியவர்கள் எந்த முகாந்தரமும் இல்லாது திரும்பவும் அவர்களது வாழ்வைத் தொலைப்பது கேவலமானது.
 
நீங்கள் இன்று வரை பேசி வருகின்ற தேசிய அக்கறையின்படி கூட இதனை நியாயப்படுத்திவிடமுடியாது.
ஒரு கொடிய அரசுக்கெதிராக அரச இராணுவத்திற்கெதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு சமூகத்தை தமது குறுகிய சிந்தனையின் வழி நின்று தானே உள்ளார அசிங்கமான வகையில் அழித்து இல்லாதொழித்த வரலாற்றை நீங்கள் தேசியம் என அடையாளப்படுத்துகிறீர்கள். அந்த அசிங்கமான தேசியத்திற்காகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரது நினைவுகளிலும் தேடல்களிலும் நெஞ்சு நிறைந்து இருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அவர்கள் நினைவுகளைக் காணாமல் ஆக்கி உங்கள் வாழ்விற்காக வலிந்து காணாமல் அக்கப்பட்டவர்கள் என்ற புதுச் சொல்லோடு புறப்பட்டிருக்கிறீர்கள். இது ஒருபொழுதும் அர்த்தமுள்ள நியாயமான ஒரு வழிகாட்டலை உங்களுக்குத் தந்துவிடாது.
 உண்மையில் காணாமல்ஆக்கப்பட்டவர்கள் குறித்த நேர்மையான அக்கறை உங்களுக்குக்கு இருக்குமேயானால் நமது போராட்ட காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து வகைப்பட்டோரின் அக்கறையின் மீது அது இருக்க வேண்டும். ஆனால் இன்று நீங்கள் கோரி நிற்பது அதுவல்ல . எப்படி உங்களுக்கு எதிரானவர்களை துரோகிகளாக வடிவமைத்தீர்களோ அதன் எதிர்புறத்தில் தியாகிகளை வடிவமைத்தீர்களோ அது மாதிரியான வெறும் அர்ர்த்தமற்ற சொல்லாக அது காலத்தில் கரைந்து போய்விடும்.
 
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து கட்டாய ஆட்சேர்ப்பில் இழுத்துச்செல்லப்பட்ட குழந்தைகளையும் முள்ளிவாய்க்காலுக்குள் இருந்து தப்பியோடுபவர்களையும் அடுத்தடுத்த மணிநேரத்தில் பிணங்களாகத் திருப்பியெடுத்த கதைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. இந்தக் கதைகளைத் தெரிந்த அரசு அந்தக் கதைகளுக்குள் தனது கணக்கையும் முடிக்க நினைக்கிறது. அந்த நினைப்பிற்கு நீங்கள் துணை நிற்கிறீர்கள். உங்களது பொறுப்பற்ற பார்வை அரச அதிகாரத்தின் அத்தனை விசமத்தனங்களுக்கும் உரம் ஊட்டுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற சொல் மிக நீண்டு திரட்டிச் செல்லப்பட வேண்டியது. அதனை நீங்கள் முள்ளிவாய்க்காலிற்குள் மட்டும் குறுக்குகிறீர்கள். நீண்டு திரட்டும் போது அதற்குள் குற்றவாளிகளாக தனியே சிங்கள அரசும் அரசின் இராணுவமும் மட்டும் இருக்கப் போவதில்லை என்கின்ற அச்சம் அனைத்தையும் விடப் பயங்கரமானது.
உலகின் அதி மோசமான அதி பயங்கரமான வதை முகாம்களையும் கொலை முகாம்களையும் வைத்திருந்தவர்கள் நமது ஈழவிடுதலைப் போராளிகள். நாம் அங்கிருந்துதான்  கணக்கைத் தொடங்க வேண்டும். அங்கே காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின்  தாய்மாரை கொஞ்சம் அழவாவது விட வேண்டும். கடந்து போன எந்தக் காலத்திலும் அவர்களை கணக்கில் கூட எடுத்ததில்லை இந்தத் தமிழ்ச் சமூகம். சமூகத்தில் ஒரு தாய்க்கு இருக்கின்ற எந்தத் தகுதியையும் இழந்து காணாமல் ஆக்கப்பட்ட அந்தத் தாய்மாரை இந்த நேரத்திலாவது கணக்கில் கொள்ளுங்கள். அவர்கள் பிள்ளைகளைக் கணக்கில் வையுங்கள். அவர்கள் யாருமே மென்மையான முறையில் காணாமலாக்கப்படவில்லை. மிகவும் திட்டமிட்டு அவர்கள் ஒவ்வொருவரும் சித்திரவதை செய்யப்பட்டே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
எந்தத் தடயமும் இல்லாதபடி அந்தக் கொலை மறைக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து இந்த நேரத்திலாவது  கணக்கிலெடுக்கத் தொடங்குங்கள். அதனைத் தொடங்காது நீங்கள் உங்களுக்கு வசதியான வார்த்தைகளைக் கொண்டு வாதிடுவதால் நீங்கள் எதிர்பார்க்கும் எந்தப்பலனும் வந்து சேரப்போவதில்லை.
நாங்கள் இனவாதிகளாக இருக்கிறோம் நாங்கள் சாதிய வாதிகளாக இருக்கிறோம். நாங்கள் மதவாதிகளாக இருக்கிறோம். நாங்கள் கொலையாளர்களாக இருக்கிறோம். நாங்களே வதையாளர்களாக இருக்கிறோம். ஆனால் அத்தனையையும் செய்யும் இன்னுமொருவர் மீது மறுபுறம் கோபமாயும் இருக்கிறோம். இது ஒருபோதும் நியாமாய் இருக்க முடியாதது.
முள்ளிவாய்க்காலுக்குள்ளிருந்து  விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களையும் அவர்கள் கூட்டியிழுத்து வைத்திருந்த மக்களையும் இராணுவத்தினர் உயிரோடு பிடித்துச் செல்லப்பட்டதும் பின் இல்லாதொழிக்கப்பட்டதற்குமான ஆதாரங்கள் வெளிப்படையாக புகைப்படங்களாகவும் வீடியோக் காட்சிகளாகவும் இருந்த பின்னாலும் நமக்கு அதற்கெதிராக அறுதியான வாதங்களைத் தொடரமுடியாதிருக்கிறது என்பது ஏன் என்பதை இனியாவது நாம் யோசிக்க  வேண்டும்.
 
பிடித்துச் செல்லப்பட்டவர்களில் அதிகமானோர் உயிருடன் இல்லை என்பதுவே நிதர்சனமானது. அது எப்படி நிகழ்ந்தது? அதனை நிகழ்த்தியவர் யார்? அதற்கு யார் பொறுப்பு? என்பதனைக் கூறாது ஒரு ஜனாதிபதியாக இருப்பவர் இப்படி அதிரடி அறிவிப்பினைச் சொல்லுவது ஏற்கமுடியாதது. ஆனாலும் அந்த நிதர்சனமான உண்மையைத்   தெரிந்தும்  நாம் அதற்குரிய வகையில் நிலமையை அணுகாது நூறு நாள் ஆயிரம் நாள் என காணாமற் போனோரின் பெற்றோரை தெருவில் நிற்பாட்ட வைப்பதற்கும் அதனைப்படம் பிடித்துக்காட்டுவதற்கும் பின்னால் ஒரு வகை அரசியல் பித்தலாட்டம் இருக்கிறது என்பது எனது கணிப்பு.  உண்மையில் இவர்களுக்கு சமூகம் மீதான சரியான கவனம் இருக்குமானால்  தொடர் யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது மொத்தப் பெயரையும் அதன் காரணத்தையும் காணாமல் ஆக்கப்பட்ட இடத்தையும் மிக இலகுவாகத் திரட்டிவிடமுடியும். அதனைத் திரட்டுவதன் தொடர்ச்சியாக இறுதியுத்த விபரத்தையும் சேர்த்து அந்த மக்களுக்குரிய இழப்பீடுகளைப் பெற்றுக் கொடுக்க இவர்களால் முடியும். அது மடியாத காரியமல்ல. அதனைச் செய்வதற்கு இன்றைய தேசியவாதிகள் விருப்பமற்றேயிருக்கிறார்கள். அது தேவையற்றதாகவே யோசிக்கிறார்கள். மீளவும் மீளவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய் என்ற மாயக் கதைகளால்  உறவினர்களது வாழ்வைக் காணாமல் ஆக்குகிறார்கள்.
ஆனால் இந்த அரசுக்கு எங்களைப்பற்றி அதிகம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆரம்ப காலம் தொடக்கம் தேச விடுதலை என்ற பெயரில் முள்ளிவாய்கால் வரை தமது மக்களையே அழித்தொழித்த சமூகம் இது என்பதனை அவர்களும் நன்கு அறிவார்கள். அதனால் தான் இந்த வகையான திமிர்க் கருத்துக்களை அவர்கள் தொடர்ந்தும் சொல்லிக் கொண்டிருக்க முடிகிறது. ‘ஏய் சமூகமே நீ  இப்படியே இருந்தால்  சுட்டுக்கொலை செய்து தூக்கி கம்பத்தில் கட்டிவிட்டு எதிரி தற்கொலை என எழுதி வைப்பான்’ என  செல்வம் அருளானந்தம்  அவர்கள் 30 வருடங்களுக்கு முன் எழுதிய கவிதையை இந்த இடத்தில் ஞாபகம் சொல்லி
இந்தத் தற்கொலைச் சமூகத்தை திருத்தவதற்கு மருந்தும் இல்லை  மாத்திரையும் இல்லை என்பதனையும் சொல்லி  முடிக்கிறேன்.
 
சமவுரிமை இயக்கம் 01 மார்ச்2020 அன்று ரொரன்டோவில்  நிகழ்த்திய காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருக்கும் மரணச்சான்றிதழ் வழங்க முனையும் அரச செயற்பாட்டிற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரை.
 

Sunday, 9 February 2020

“சின்னக் கதைகளைத் தகர்த்தல்”


சாதியற்ற சமூகம் நோக்கி…

கற்சுறா






ஈழச் சாதியமைப்பும் அதன் பரவலாக்கம் குறித்தும் அது கட்டிக்
கொண்டு, வடிவமைத்துள்ள பின்னல் குறித்தும் பலர் எழுதியும்
பேசியும் வந்தாயிற்று.  இங்கே  நான் புதிதாகப் பேச ஒன்றுமில்லை.
மீள அதனைப் புதிய அனுபவங்களுடன்  ஞாபகம் ஊட்ட எழுதும்
ஒரு கட்டுரையே இது.


புலம்பெயர்ந்த பரப்பில்   கடந்த 40 வருடங்களுக்கு மேலாக
இயங்கிவரும் சமூக அக்கறை சார்ந்த அமைப்புக்கள் பல இருக்கின்றன.
அவற்றில் சிலவேனும் நமது சமூகத்தின் சாதிய நச்சுப் பரவலாக்கத்திற்
கெதிராகக் கரிசனையுடன் தங்களது செயற்பாடுகளை மிகக் குறைந்தளவிலேனும்
சீர்பெறச் செய்திருப்பார்களேயானால் இந்தக் கட்டுரை எழுத வேண்டிய ஒரு
தேவையும் எனக்கு வந்திருக்க முடியாது.


மிக நீண்ட காலமாக ஈழத்தின் வடபுலத்திலிருந்து வறுத்த மிளகாய்த்
தூளை மட்டுமல்ல  தமது கடவுள்களையும்  காவிக் கொண்டுவந்த
சமூகம் கூடவே தனது சாதியையும் கையோடு காவிக்கொண்டே
ஐரோப்பாவிற்குள்ளும்  கனடாவுக்குள்ளும் நுழைந்தது எனச்
சொல்லிப்  பதிவுசெய்தவர்கள் பலர். ஆனால் அவர்களும் அந்தக்
காவிவந்த சாதிய அடையாளம் நாற்பது வருடத்திற்கு மேலாக
இங்குள்ள சூழலிலும் எவ்வாறு நீண்டு வளரும் தன்மையைக்
கொண்டுள்ளது என்றும் எவ்வாறு அது கவனமாகப்
பாதுகாக்கப்படுகிறது என்றும்  தெளிவான ஒரு பார்வையைத்
தொடர்ந்து  முன் வைத்துத் தேடப் பின்தங்கிப் போயினர்.


ஈழவிடுதலைப் போராட்டம் விடுதலைப் புலிகளின் கையில்
முனைப்புடன் இருந்த காலத்தில் மேன்மை கொள் தமிழர்களாய்
பெருமை கொள் தமிழாய்த் தமிழ்ப் பெருமிதத்தில் திளைத்திருந்த
பலர் அதன் கையறு நிலையில் தமிழர்களின் தொன்மம் தேடுதல்
தமிழர்களின் மரபு தேடுதல் என்றவாறாக இப்போது பல்வேறு
திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள்
தேடுகின்ற தொன்மங்களும் அவர்கள் தேடுகின்ற தமிழர் மரபுகளும்
தமிழர்களது  சாதிப் பெருமிதங்களில் தான் வந்து இறுதியில்
முடிகிறது என்பதனை ஏன் அவர்களால் அவதானித்துக் கொள்ள
முடியாதிருக்கிறது என்பது எனக்கு தொடர் கேள்வியாகவே இருந்து
வருகிறது. சாதியிலிருந்த தமது மரபுகளையும் தமது
தொன்மங்களையும் “முகிழ்ந்ததாக” அடையாளம் காட்டிக்
கொண்டாடுபவர்கள் இன்னொரு புறம் சாதியற்றதாகவும்
மதமற்றதாகவும் வாழ்ந்திருந்த கீழடி வாழ்வியலை தமது
வாழ்வியலின் தொன்மமாக அடையாளம் காட்டுகிறார்கள்
என்பதுதான் வேடிக்கையானது. விநோதமானது. கூடவே
குழறுபடியானது.


விடுதலைப்புலிகளது ஈழத்தேசியம் குறித்த கதையாடல் நமது தமிழ்
சமூகத்தினிடையே பேரெழுச்சி பெற்றிருந்த காலத்தில் அங்கே அது
சாதியற்ற சமூகமாகவே இருந்தது என்பதாக நெஞ்சு நிறையப் பொய்
சொல்பவர்கள் இன்னமும் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவ்வாறு
பொய் சொல்பவர்கள் சாதி சார்ந்த வலிகளை உணராதபடி வாழ்ந்த
ஆதிக்க சாதியாகவும்  தமது வாழ்காலம் பூராவும் ஆதிக்க சாதி
மனோபாவம் கொண்டலைபவர்களாகவும் விடுதலைப்புலிகளின்
தேசிய நிழலில் சீவியம் நடத்தியவர்களாகவும் இருப்பதனை
அனைவருமே இலகுவில் அடையாளம் கண்டுவிட முடியும். அவர்கள்
சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடுகளையும் தமிழ்த் தேசியம்
என்ற ஒற்றை வளவுக்குள் சுற்றி அடைத்துவிடும் மனநிலையில்
இருப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

அண்மையில் கனடா வந்து தமிழ்த் தேசியத்திற்கான வழிவரைபடம்
குறித்து உரை நிகழ்த்திய தோழர் ஜோதிலிங்கம் அவர்களை அந்த
வகையில் தான் என்னால் அடையாளம் காணமுடிகிறது. “தமிழர்
மேம்பாட்டுப் பேரவை என்ற அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட
கூட்டம் அது. தோழர் யோதிலிங்கம் அவர்கள் தமிழ்மக்களின்
அரசியல் இலக்கும் வழிவரைபடமும் எனும் தலைப்பில்
உரையாற்றினார். அங்கே அந்த உரையினைச் செவிமடுத்த
பலருக்கு அவரை ஒரு  தமிழ்த் தேசிய கொள்கலன் கொண்ட நபராக
உணர வைத்திருப்பது பெருத்த அபாயமானது.





யோதிலிங்கம் அவர்களது அந்த உரை எவ்வித புதிய
சிந்தனையையும் எனக்குத் தோற்றுவித்துவிடவில்லை. தன்னை ஒரு
தீவிரத் தமிழ்த் தேசியவாதியாக முன்நிறுத்துகிறார் அவர். ஏற்கனவே
கட்டப்பட்டு இருக்கின்ற தமிழ்த் தேசியம் என்கின்ற ஒரு
கட்டுக்கதைமீது வழி மறித்து நின்ற எந்தக் கதவினையும்
தமிழ்மக்களின் அரசியல் இலக்கும் வழிவரைபடமும் என்ற அவரது
தியறி புதிதாகத் திறந்துவிடவில்லை. இன்று “காணாமல்
ஆக்கப்பட்டோர்” அல்லது இன்று முள்ளிவாய்க்காலின்
முடிவுக்குப்பின் உச்சரிக்கத் தொடங்கியிருக்கும் “வலிந்து
காணாமால் ஆக்கப்பட்டோர்”, “இன அழிப்பு”, மற்றும் கிழக்கு
மாகாணம் குறித்த புரிதல் மற்றும் முஸ்லீம் மக்கள் குறித்த புரிதல்
போன்ற எவை குறித்தும் வெளிப்படையாகவே அந்த உரையில்
தெளிவற்று இருந்தது. அது ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த்தேசியம்
கட்டமைத்திருந்த மனநிலைக்கு பெரிதாக எந்த மாற்றுக் கருத்து
நிலையையும் கொண்டிருக்கவில்லை. இதுவரை அவர்கள்
பேசியிருந்த தமிழ்த் தேசியத்தைத் திருத்தி கொஞ்சம் மெருகூட்டி
சமாளித்து "தாங்கள் குறிப்பிடும் தமிழர்களுக்கு" ஏற்றாற்போல்
பொருத்திவிடக் கூடியதான மனநிலையையே அது கொண்டிருந்தது.
இன்று இருக்கின்ற தேவை அதுவாக நான் உணரவேயில்லை. (அவரது கட்டுரையின் வடிவத்தை என்னால் பெறமுடியவில்லை முடிந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்)


அந்த உரை நமது ஈழச் சமூகம் கடந்து வந்த சாதிய வடுக்களை
எள்ளளவும் கணக்கில் எடுக்கவில்லை.  இன்னமும் சமபந்தி, சம
போசனம், சம ஆசனம் குறித்த போராட்டத்தை உள்ளுக்குள்ளேயே
நடத்திக்கொண்டிருக்க வேண்டிய தேவை கொண்ட ஒரு சமூகம்,
தன்னை ஒற்றைத்திரளாக தமிழ்த் தேசிய அடையாளத்திற்குள் மூடி
மறைத்து ஒதுங்கிக் கொள்ள நினைக்கும் அந்த மனம் ஏற்றுக்
கொள்ள முடியாதது. அதுகுறித்த அறிவுப்புலம் அவருக்கே
விளங்கவில்லை என்பதே வெளிப்படையானது. திரும்பத் திரும்ப
வெற்றியீட்டப்படும் தமிழ்த் தேசிய விடுதலை என்பதே சாதிய
விடுதலைக்கும் வழிகொடுக்கும் என்கிற ரீதியில் இன்னமும் அறிவு
கெட்டத்தனமாக ஈழச் சாதியமைப்பினை விளங்கி வைத்திருப்பது
அவர்கள் கொண்டு நகர்த்த முனையும் தமிழ்த்தேசியத்திற்கான
விடுதலையையும் நம்பகமற்ற தன்மைக்குக் கொண்டு போய்ச்
சேர்க்கும் என்பதனைக் கூட ஜோதிலிங்கம் அவர்கள் விளங்கிக்
கொள்ளவில்லை. ஒரு சட்ட வல்லுனராக இருக்கும்  அவரைப்
போன்ற பலருக்கே சூனியத்தனமாகத்தான் புரிந்து
கொள்ளப்பட்டிருக்கிறது நமது சூழல் என்றால் மற்றவர்கள் குறித்து
நீங்கள் யோசியுங்கள்.


 ஈழத்தின் யுத்தகாலத்திலும் சரி பின் யுத்தகாலத்திலும் சரி
தமிழ்ச்சமூகத்திற்குள் அப்பட்டமாக வெளித்தெரிந்து வந்த சாதிய
முரண்பாடுகளையும் அதன் கோர முகங்களையும் தனித்துப் பார்க்க
மறுத்து தாம் பேசுகின்ற தமிழ்த் தேசிய விடுதலை என்பது சாதியற்ற
சமூகத்தை உருவாக்கிக் கொள்ளும் என கதை சொல்வது என்பது
இன்னுமொருமாதிரியான சாதிய அதிகாரச் செயற்பாடுதான்
என்பதனை அவர்கள் இன்னமும் ஏன் உணர்ந்து கொள்ள
மறுக்கிறார்கள் என ஆய்வு செய்வது இன்றுள்ள சூழலில் மிக
முக்கியமானது என நினைக்கிறேன். அந்த ஆய்வின் முடிவில்
ஆணித்தரமாக இவ்வாறு தமிழ்த்தேச விடுதலை எனப் பேசுவோரது
புரிதல்களும் தமிழ்ச் சமூகத்திற்குள் ஊடோடிக் கொண்டிருக்கும் சாதி
வெறிப் பின்புலமும் அப்பட்டமாக வெளிப்பட்டுத் தெரியும் என நான்
நம்புகிறேன்.


நமது ஈழவிடுதலை என்பதும் தமிழீழத்திற்கான போராட்டம்
என்பதும் ஆழ ஊடுருவிய சாதியப் படையணிகளால்
உருவாக்கப்பட்டது என்பதற்கு நமது வாழ் நாளில் பல
உதாரணங்களோடு விளங்கப்படுத்திவிட முடியும். மிக அண்மையில்
அமரத்துவம் எய்திய தோழர் றிச்சாட் அருட்பிராகசம் எனும் அருளர்
ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு முன்னோடி என
அடையாளப்படுத்தப்படுபவர். அத்துடன் ஈழப்புரட்சி அமைப்பின்
ஸ்தாபகர்களில் ஒருவர் என்பதையும் அறிந்திருந்தோம். ஆனால்
அவர் ஈழச்சாதியமைப்பினையும் ஈழத்திற்குள் சககோதர இனங்களது
வாழ்வியலையும் எப்படி விளங்கி வைத்திருந்தார்? என்று அவரது
முகநூற் பதிவுகள் ஊடாகத் தற்போது எமக்குப் பார்க்க
முடிந்திருக்கிறது. சாதியம் குறித்தும் சக இனங்கள் குறித்தும் மிகவும்
பிற்போக்குத்தனமான கருத்தியல்களைக் கடைசிவரையும்
கொண்டிருந்த ஒருவரை நாம் முன்னோடி என அழைப்பது வெட்கக்
கேடு.





மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை
நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல.
என்றும்

கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா?
என்றும்

மொத்தத் தமிழர்களுக்கான பாடல்களோடு தமிழீழ
உணர்ச்சிக் கவிதை எழுதிய காசி ஆனந்தன் இன்று வந்து நிற்கும்
இடம் இந்துக்களுக்கான தமிழீழம்.இந்துத் தமிழீழம் என்பதுதான்.



"வடகிழக்கில் மிகுந்த பாதிப்பிற்குள்ளானதும் தொடர் துன்பங்களை
அனுபவிப்பவர்களும் இந்துக்களே!" என்றும்  "யுத்தத்தால் நாட்டை
விட்டு லட்சக்கணக்கில் இந்துக்கள் வெளியேறினார்கள்.
இந்துக் கோயில்களை அழித்தார்கள். தமிழீழம்
இந்துக்களுக்கான நாடு. தமிழீழம் என்பது இந்துத் தமிழீழம்" என்றும்
பேசிய உரை பற்றி நமது முற்போக்குத் தமிழ்த் தேசியவாதிகள்
மவுனம் காப்பது குறித்து நாம் விழிப்புடன் கவனம் கொள்ள
வேண்டும். ஈழத்தின் அத்தனை பகுதிகளிலும் இந்தியப் பார்ப்பனீய
ஏஜெண்டான மறவன்புலவு சச்சிதானந்தத்தின் வழி இந்துராஷ்டிரம்
உருவாகத் தொடங்கியிருப்பதன் இன்னொரு வழிதான்
காசியானந்தனது உரை என்பதனை இந்தச் சமூகம் விளங்கிக்
கொள்ள வேண்டும்.


ஈழத் தமிழச் சமூகம் , ஈழ விடுதலை என்று இதுவரை பாடி எழுதி
வந்தவர்கள் இன்று இந்துத் தமிழர்கள். இந்துத் தமிழீழம் என்று வந்து
சொல்வது ஆபத்தான வேடிக்கை. இதுவரை இவர்கள் குறிப்பிட்டுப்
பேசிய தமிழீழத்திற்குள் அதன் எல்லைக்குள் மனசார தமிழ் பேசும்
முஸ்லீம் மக்களையோ கிறிஸ்தவ மக்களையோ சாதி ரீதியாக
ஒடுக்கப்பட்ட மக்களையோ அங்கீகரித்திருக்கவில்லை. ஆக
இவர்கள் பேசிய தமிழீழம் என்பது ஆதிக்க சாதி இந்துத் தமிழீழமே.
இந்த ஒன்றுக்காகவே மற்றவர்களது கழுத்திலே அவர்கள் நஞ்சுக்
குப்பியினைக் கட்டிவிட்டார்கள்.
இப்படித்தான் நமது தமிழீழம் என்பது தேசமல்லாது
வெறுங்கதையாகியது.


இது ஒருபுறம் இருக்க,

நாம் பழக்கப்பட்ட சிறுவர்களுக்கான நீதிக் கதைகளிலிருந்தும்
நமக்கிடையே உலாவரும் திரைப்படங்களிலிருந்தும் அதன்
இசைப்பாடல்களிலிருந்தும் துருவி நிற்கும் சாதியப் பெருமைகளும்
சாதிவெறிகளும் எந்தக் கணக்கும் தீர்க்கப்படாது மிகச் சாதாரணமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டு புகழ்ந்து பேசப்படுகிற சூழலை நாம் தினமும்
கடந்தே வருகிறோம். நமது சமூகத்தில் இருக்கின்ற ஒன்றுதானே
என்கின்ற மனப்போக்கிலிருந்து சமூகமாற்றம் குறித்து முற்போக்கு
பேசும் அதிகமான சமூக அக்கறையாளர்களாலும்
அமைப்புக்களாலும் அது கவனமின்றி கடந்து போகப்பட்டிருக்கிறது
என்பது மிகுந்த கவலைக்குரியது.

சாதிவெறி கொண்ட விளம்பரங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும்
கதைகளையும் பாடல்களையும் பிரித்துணராது பிரசுரித்து வந்த
பத்திரிகைகளோடு நாமும் சேர்ந்து வாழ்ந்து முடிப்பது எவ்விதத்திலும்
ஆரோக்கியானதாக இருக்கமுடியாது.
எவ்வளவு உன்னத இசை நயத்துடன் இளையராஜாவால் மெட்டுப்
போட்டிருந்தாலும் “போற்றிப்பாடடி பெண்ணே… தேவர் காலடி
மண்ணே” என்ற வரிகளுக்குள் இருக்கும் சாதிய அச்சுறுத்தலை
யாரும் கண்டு கொள்ளவே இல்லை. தமிழகத்தில் சிம்புவின் “பீப்”
பாடலுக்கு எழுந்த  போர்க்குரலில் ஒரு வீதம் கூட  தமிழகத்தில்
இந்தச் சாதி வெறிப்பாடலுக்கு எதிர்ப்பு எழவில்லை என்பது சுய
மதிப்பீடற்று  நாம் எவ்வாறு சாதிய சமூகமாக வாழப்
பழகிவிட்டிருக்கிறோம் எனப்புரிந்து கொள்ள உதவிசெய்யும் என
நம்புகிறேன்.
 “முக்குலத்துச் சிங்கங்கள் நாங்கதான் நாங்கதான் தேவர் இனத்
தங்கங்கள் நாங்கதான் நாங்கதான்” என்று மேலும் மேலும்
சாதிப்பெருமை எழுதிவிடும் சமூகமாக அது சீரழிந்து போய்க்
கொண்டிருக்கிறது என்பதனை யார் கண்டுணர்ந்தார்கள்?
“மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும்
வேலய்யா” என்று கண்ணதாசனே கடவுள் பாட்டை சாதிக்குள்
கொண்டு வந்து இழுத்து வைத்ததை உணராது தயாரிப்பாளருக்கு
மெருகூட்டியதாகப் பெருமை பேசுபவர்கள்  இன்னமும்
தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்.


நமது சூழலிலோ “ ஆதியிலும் பறையனல்ல. சாதியிலும்
பறையனல்ல. பாதியிலே பறையனாயினேன்.” என அரிச்சந்திர
மயான காண்டத்தின் சாதிவெறி பேசும் காட்சியினை கனடாவில்
கூட கொண்டு வந்து மேடையேற்றிவிடும் நிலைதான் இன்றும்
இருக்கிறது. அந்தச் சுடலைப்பாடலின் அழுகுரல் உணர்ச்சிக்குள்
சாதி வெறி ஒழிந்திருப்பதனை ஏன் யாராலும் உணர்ந்து கொள்ள
முடியாதிருக்கிறது.
அதனைத் தமிழர்களது மரபில் முகிழ்ந்த கலை என்பதாக அந்தச்
சாதிய வசையாடலை அடையாளப்படுத்தியிருப்பது புரிந்துணர்வு
சம்பந்தப்பட்ட விடயமல்ல. இங்கேதான் நான் மேலே குறிப்பிட்ட
நமது மரபு, நமது தொன்மம் என்பதன்  முழுமையான அபாயம்
வெளிப்படையாகிறது என்பதுதான்.

மரபு என்பது யாருடைய மரபு? தொன்மம்
என்பது யாருடைய தொன்மம்? இந்த மரபுகளும் தொன்மங்களும்
யாருடைய கைகளில் இருந்து முகிழ்ந்தவை? இதில் இருக்கும்
அவர்களது தெளிவற்ற நிலை நமது எஞ்சியிருக்கும்
எதிர்காலத்தையும் இருள் சூழ் உலகுக்குள் மீளவும் மீளவும்
தள்ளிவிடக் கூடியது.
ஒரு நாள் தோழர் பேராசிரியர் கே. ஏ. குணசேகரன் அவர்கள்
உரையாடிக்கொண்டிருந்தார். ஒரு இடத்தில் ஆதியிலும்
பறையனல்ல. சாதியிலும் பறையனல்ல பாதியிலே
பறையனாயினேன்" என்று பாடுகிறாங்களே. பாதியில்
பறையனாகியதற்கு இவ்வளவு வேதனை இவனுக்கு இருக்கும்
என்றால் சாதியிலே பறையனாயிருப்பவனுக்கு என்ன வலியிருக்கும்
என்று கேட்பார். அந்த வலியின் அடையாளத்தை இவர்கள்
எங்கிருந்து உணருவார்கள்? தங்களுடைய நிகழ்வினைப் பார்க்க
வந்திருக்கும் பார்வையாளர்களையே தமது சாதிப்பின்புலத்திலிருந்து
மட்டும் அடையாளம் காண்பதின் வெளிப்பாடுதான் இது.
இதுகுறித்து இனிவரும் காலங்களில் இவர்கள் பொறுப்புடன்
செயற்படவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.


இவற்றை விட மரபு , தொன்மம் குறித்துச் செயற்படும் இன்னொரு
பகுதியினர் ஈழத்திலுள்ள நமது பாடசாலைகள் உள்ளிட்ட கட்டடக்
கலைகள் அழியாது பாதுகாக்கப்பட வேண்டும் கோயில்களின்
வடிவம் அழியாது பாதுகாக்கப்பட வேண்டும் என மீண்டும்
இப்பொழுது கோசமிடத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் புதிய
தலைமுறையாக இருப்பதுதான் மிகுந்த கவலையானது.
“போருக்குப் பிந்திய ஈழத்தில் மீள் கட்டுமாணம் என்ற பெயரிலும்
 அபிவிருத்தி என்ற பெயரிலும் பாடசாலைகள், கோயில்கள்
போன்றவற்றை இடித்துப் புதிதாகக் கட்டுகின்ற போக்கு
அதிகரித்துவருகின்றது.  பெரும்பாலும் இவற்றுக்கான நிதி
புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற பழைய மாணவர் சங்கங்கள்,
ஊர்ச்சங்கங்கள் என்பவற்றின் ஊடாகவே அனுப்பப்படுகின்றது.
இவ்வாறாகக் கட்டடங்கள் இடிக்கப்படும்போது மரபுரிமைகள்
அழிக்கப்படுகின்றன என்கிற பிரக்ஞை இருக்கவேண்டியது மிக
அவசியமானது.  யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழமைவாய்ந்த
சில கட்டடங்கள் கூட இப்படியாக அபிவிருத்தி என்ற பெயரில்
இடிக்கப்பட்டன என்பதை நாம் இங்கே நினைவுகூரவேண்டும்.
அபிவிருத்தி என்ற பெயரில் மரபுரிமைகளை அழிப்பது ஒரு இனத்தின்
அழிப்பிற்கான அடிப்படைகளில் ஒன்று என்பதை புரிந்துகொண்டு,
மரபுரிமைகளையும் பேணுவதோடு அபிவிருத்தி நடவடிக்கைகளில்
ஈடுபடல் வேண்டும்.  அதுபோல ஊர்ச்சங்களின் உதவியுடன்
கோயில்கள் இடித்துக் கட்டப்படும்போதும் அந்தக் கோயில்களின்
நிர்மாணத்தில் பின்பற்றப்பட்டிருந்த பாணி, சிறப்பம்சம் போன்றன
பற்றிய கவலையில்லாமல் அவை வெறும் கட்டடடங்களாகக்
கட்டப்பட்டு வருகின்றன.  இதுவும் ஒருவிதமான மரபுரிமை அழிப்பு
என்றே சொல்லவேண்டும்.  எனவே பெரும்பாலும் நிதியுதவி
வழங்குகின்ற புலம்பெயர் அமைப்புகள் மரபுரிமைகளைக் காப்பது
என்ற அக்கறையுடன் மீள் கட்டுமாணம் போன்றவற்றைத் திட்டமிட
வேண்டும்.”(அருண்மொழிவர்மன் கலையரசி-யாழ்
இந்துக்கல்லூரி,கனடா2017) என்கிறார்.


மறுபுறம் “அதேநேரம் ஒரு சமூகத்தின் மரபுரிமையையும்
பண்பாட்டையும் காக்கவேண்டும் என்பதைத் தமது அக்கறையாகக்
காட்டிக்கொள்கின்ற புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற
அமைப்புகளும் சங்கங்களும் பிற்போக்குத்தனத்தையும்
ஒடுக்குமுறையையும் சடங்குகள் ஊடாகவும் நடைமுறைகள்
ஊடாகவும் அடுத்த தலைமுறைக்கும் கடத்துகின்ற கருவிகளாக
இருந்துவிடக்கூடாது என்பதிலும் அக்கறையாக
இருக்கவேண்டும்.” என்கிறார்.


நீங்கள் அனைவரும் அவரது கட்டுரையை முழுமையாக வாசிக்க
வேண்டும். (பார்க்க: https://www.facebook.com/amvarman25) 
அது இந்த சமூகத்தை எப்படி விளங்கிக் கொண்டுள்ளது
எனவும் அந்த விளக்கம் அவரது கவனக்குவிப்பு எதை நோக்கி
நகர்கிறது எனவும் எப்படி நம்மை மயக்கத்தில் விழுத்தி இந்த
சமூகத்தை மீள ஒடுக்குமுறைச் சகதிக்குள் அப்படியே கொண்டு
நகர்த்த முனைகிறது எனவும் நாம் கண்டுணரமுடியும்.
அப்போதுதான் முலாம் பூசிய சொற்களைக் கொண்டு தாம்
விரும்பிய தமிழ்த் தேசியத்தை முன்நகர்த்த நமக்கு முன்னால் ஒரு
தோழர் ஜோதிலிங்கம் மட்டும் இல்லை என்பதனை நீங்கள்
இலகுவாக உணர்ந்து கொள்வீர்கள்.


புலம் பெயர் சமூகத்தால் ஈழத்தில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு
வரும் கோயில்களினது எண்ணிக்கையும் அந்தக் கோயில்களில்
குடியமரும் கடவுள்களது எண்ணிக்கையும் இந்த சமூகத்தை
ஒருபோதும் நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை. ஏற்கனவே
இருந்த கோயில்களில் கூட இன்னமும் குறிக்கப்பட்ட மக்களுக்கு
வழிபடும் உரிமையில்லை. இந்த வகைக் கோயில்களது
நிர்மாணத்தில் எந்தப் பாணி பின்பற்றப்பட்டால் என்ன. எந்தச்
சிறப்பம்சம் இருந்தாலென்ன. மரபுரிமை என்ற பெயரில் அதனைக்
காக்க வேண்டும் என்பதற்குள் இருப்பது இன்று தமிழ்த் தேசியம்
என்ற பெயரில் மறைத்து விடத் துடிக்கும் மெதுசாதிய மனோபவமே.

நமது சமூகம் சாதி காப்பாற்றும் சமூகமாக இருக்கும் போது அந்த
சாதி வடிவம் காத்த பாடசாலைக் கட்டடக் கலைகளானாலும் சரி
கோயிற் கட்டடக் கலைகளானாலும் சரி அடையாளம் காட்டும்
தெருவானாலும் சரி அழிந்துபோவதில் என்னதான் நிகழ்ந்து விடப்
போகிறது? எப்படி ஒரு புலம் பெயர்ந்த சாதித் தமிழன் நல்லூர்க்
கந்தனையும் தெல்லிப்பழை அம்மனையும் புலம் பெயர்ந்த தேசத்தில்
முளைக்கவைத்தானோ, அதே போல் புலம் பெயர்ந்த தேசத்திலிருந்து
தன் கைக்ககுக் கிட்டிய ஹரே கிருஷ்ணாவையும் சீரடி
சாய்பாபாவையும் அனுமானையும் தன்னுடைய தேசத்திற்குத்
திரும்பிக் கொண்டு போவான்தானே.

புலம் பெயர்ந்த சூழலிற் கூட புதிய புதிய கோயில்களை உருவாக்கி
வருமானம் ஈட்டியவர்கள்  உங்களது தமிழ்தேசிய அமைப்புக்கள்தானே. இன்று
ஊரில் இருக்கின்ற கோயில்களைத் திருத்தி வடிவமைத்து அதே
தமிழ்த் தேசியவாதிகள் தங்களுடைய வருமானத்தை மீளத்
தீர்மானிப்பதில் என்ன வேறுபாடு இருந்து விடப் போகிறது? இன்று
விடுதலைப் புலிகள் இருந்து, அவர்கள் இதே வேலையைச்
செய்திருந்தால் நண்பர் அருண்மொழிவர்மனுக்குக் இந்தக் கேள்வி
இருந்திருக்காது. ஒருபோதும் இருந்திருக்கப் போவதேயில்லை என்பதே எனது
கணிப்பு. அவரும் அவரைப் போன்ற பலரும் தமிழ் என்ற ஒற்றை
அடையாளம் குலைபட்டுப் போகாதிருக்க எவற்றைக்
காணாதிருத்தல் எவை மீது தமது கண்டனங்களைப் பதிவு செய்தல்
என்று அவர்கள் கணக்குப் பிடிக்கும் அளவீடுகளை நாம் தொடர்ந்து
கவனித்து வருவோமானால்  இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.


இந்தச் சாதி காப்பாற்றிய சமூகத்தின் அடையாளங்களை
தமிழினத்தின் மரபாக, மரபில் முகிழ்ந்த கலையாகப் பண்பாடாக
அதுவே ஒட்டு மொத்த அடையாளமாகப் பதிவிடுவதனை
நண்பர்களான நீங்கள் இனியாவது நிறுத்த வேண்டும் என நான்
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


அடுத்த முக்கியமான விடயம்,
புலம் பெயர்ந்த சூழலில் அதுவும் கனடா போன்ற நாடுகளில்
ஊர்ச்சங்கங்கள் மற்றும் பாடசாலைப் பழையமாணவர்கள்
ஒன்றியங்கள் எவ்வாறு இயங்கி வருகின்றன என ஆய்வு
செய்தீர்களானால் மிக விபரமான முறையில் அதற்குள் நிலவும்
சாதிய நச்சுச் சூழலை அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும்.
ஈழத்தில் பொதுவாக அனைத்து ஊர்களும் பல்வேறு சாதியச்
சமூகங்களால் நிரவியிருப்பன. அந்த ஊர்களின் பெயரில்
ஒன்றியங்களையும் சங்கங்களையும் இங்கே வைத்திருப்போர் அதில்
அனைத்துச் சாதியினரையும் பெரும்பாலும்
உள்வாங்கியிருப்பதில்லை. அதிலும் ஒன்றியத்தின் அல்லது
சங்கத்தின் நிர்வாக சபையில் ஒருபோதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்த ஒருவர் நானறிந்தவரையில் ஒருபோதும் தெரிவு
செய்யப்படுவதில்லை. எப்போதும் இந்தச் சங்கங்கள் எனக்குத்
தெரிந்து வெள்ளாளர்களது மேட்டுக் குடிச் சிந்தனைக்கு உட்பட்டே
இருந்து வந்து கொண்டிருக்கிறது.  ரொரண்டோவில்  கரவெட்டி ஊர்
ஒன்று கூடல் இரண்டாக நடைபெற்று வருவதை என்னைப் போல்
நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதே நிலைதான் ரொரண்டோவில்
இருக்கின்ற அதிகமாக அத்தனை ஊர்ச் சங்கங்களுக்கும் என்றே
நினைக்கிறேன்.


தனியே வெள்ளாளர்களது ஆதிக்கத்தில் சங்கங்களையும்
ஒன்றியங்களையும் நடத்திக் கொண்டு அதுவே நமது சமூகத்தின்
மரபுகளையும் அதன் பண்பாடுகளையும் புலம் பெயர் சமூகத்திலும்
காக்கும் என்பதாக மக்களை நம்பவைப்பதும் அதற்கு ஒரு முழு
ஊரின் பெயரையே அடையாளப்படுத்தும் போக்கும் உடனடியாக
நிறுத்தப்பட வேண்டும்.இல்லையேல் இந்த வகைச் சங்கங்களது
ஒன்றியத்தினது செயற்பாட்டை நாம் சேர்ந்தே செயலிழக்கச் செய்ய
வேண்டும்.


ஈழத் தமிழ்ச்சமூகம் ஒரு சாதியற்ற சமூகமாக மாற்றம் பெற
சின்னக்கதைகளைத் தகர்க்கத் தொடங்கியே நாம் பெருங்கதையைத்
தகர்க்க முடியும். நம்மைச் சுற்றி நடக்கும் சின்னச்சின்னக் கதைகளை
நாம் தகர்க்கத் தொடங்குவோம். முடிந்தவரை செய்வோம்.

Thursday, 11 July 2019

நெருப்பில் அமிழ்ந்து கொண்டு நீரை நெருங்குவது…


கற்சுறா



1. நீர்த்துப் போன அர்த்தங்களை கொண்டுழலும் வார்த்தைகளை விளங்கிக் கொள்ளல்.











“பார்வைகள் ஆயிரம். நோக்கம் ஒன்றே” என்று தமிழ்ப்பார்வை முதலாவது இதழின் ஆசிரியர் கருத்துப் பகுதியில் குறிப்பிட்டிருந்தார்கள். மற்றவர்களுடைய கருத்தைக்
செவிமடுக்கும்  மனநிலையை இழந்த சமூகமாக நமது சமூகம் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. இதற்கு உதாரணங்களைச் சொல்லி யாருக்கும் விளங்கப்படுத்தத் தேவையில்லை. 

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நமது சூழலில் வெளிவந்த
பெருவாரியான ஊடகங்களை எடுத்து ஆராய்ந்தால் அதனை எல்லோராலும் இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்..

ஆனால் இன்றைய காலத்தில் இந்த இழிநிலை மெல்ல மாறிவருவதை உணரமுடிகிறது. இன்று இருக்கின்ற அளவுக்கு மீறிய ஊடக நிறுவனங்களது போட்டி மனப்பான்மை இதற்குரிய வாசலை ஓரளவுக்குத் திறந்துவிட்டிருக்கின்றது என்றாலும் “லாடன் கட்டிய குதிரைகள்” ஆக ரேஸில் ஓடுவதைப் பெரும்பாலான ஊடகங்கள் இன்றும் கூட கைவிடவில்லை..

ஒரு வெகுசனப்பத்திரிகையாக இருந்தாலும் வியாபார நோக்கம் குறித்ததாக இருந்தாலும் எதிர்க் கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் பக்குவம் உள்ளதாகவும் விமர்சனங்களையும் எதிர் விமர்சனங்களையும் உள்வாங்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் தமிழ்ப்பார்வையினர் வரும் காலங்களில் இருப்பார்களா அல்லது இன்றிருக்கின்ற லாடன் கட்டிய குதிரைகளாக இருக்கும் அத்தனை ஊடகங்களைப் போலவும் சுரணைகெட்டுப் போய்விடுவார்களா என நாம் நோக்க வேண்டும்.

எனது இந்த எழுத்து வழமையான ஒரு தமிழ்ப் பார்வையாக இருக்காது என்பதனை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

இங்கே “நீர்த்துப்போன அர்த்தங்களைக் கொண்டுழலும் வார்த்தைகள்” என்று நான் குறிப்பிட்டுச் சொல்லும் வார்த்தைகளை அதிகமாக நாம் மேற்சொன்ன ஊடகங்கள் வாயிலாகவும் அவை சொல்லிக் கொடுத்ததை அப்படியே சிந்திக்கும் மனநிலையில் நாமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறோம். அல்லது அந்தவகை ஊடகங்களால் நம்மை உச்சரிக்கச் “சொல்லி வைக்கப்படுகிறது”.


மிக நீண்டகாலமாக வலுவிழந்த வார்த்தைகளை அளவுக்கு
அதிகமாக, அதற்குரிய மதிப்பீடுகளை அளவிடமுடியாதபடி நாம் பாவித்து வருகிறோம். இப்படி வலுவிழந்த வார்த்தைகளில், அண்மையில் நாம் அதிகமாகப் பாவிக்கும்
வார்த்தைதான் “காணாமல் போனோர்” என்பது.

நமது ஈழயுத்தகாலத்தில் திட்டமிட்டுத் தொடங்கிய இந்தக் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” ஐப் பற்றிக் குழப்பமான உரையாடல்களை நாம் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக் கிறோம். நாம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் உரையாடல்கள் எவருக்கும் எந்தத் தெளிவையும் இதுவரை ஏற்படுத்திவிடவில்லை. இந்தத் தெளிவற்ற உரையாடல்களால் நாம் ஒருபோதும் அதற்குரிய
முடிவைக் கண்டடையப் போவதில்லை.


மிக நீண்ட காலமாக “ காணாமற்போனோர்” என்ற அடையாளச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டே தமது உரையாடல்களைத் தொடர்ந்து வந்தவைதான் நமது தமிழ் ஊடகங்கள். அதனை மறுத்து “ இங்கே யாரும் தாமாகப் போய் எங்கும் ஒளித்திருக்கவில்லை. அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவரால்
திட்டமிடப்பட்டே காணாமல் ஆக்கப்பட்டார்கள் “ என நாம் எழுதிக்காட்ட வேண்டியிருந்தது.

ஆனால் நமது சூழலில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீதான கரிசனை என்பது நமது ஊடகங்களுக்கு 2009 ம் ஆண்டின் பின்னரே வருகிறது. இந்தக் கடைசிக் கரிசனை என்பதுதான் போலியானது. அது கடந்தகாலத்தில் தேசியஇனம் அல்லது தேசவிடுதலை
தேச மொழி மீதாக இருந்த போலியான விபரமற்ற பற்றுப் போன்றதே. விட்டுப் போக இருக்கும் ஒரு முதலீட்டின் பற்றிப்பிடிப்பாகச் செய்யப்படும் கடைசித் துருப்புக்களில்
ஒன்றாக இன்று இதனை அவர்கள் கையில் எடுக்கிறார்கள்.


அதன் தொடர்ச்சியாகத்தான் “ காணாமல் போனோர்” என்பதிலிருந்து “ காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்று மாறியது போல் “ காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற சொல்லிருந்து கொஞ்சம் மாறி “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற
சொல்லிற்கு இப்போது வந்திருக்கிறார்கள். உண்மையில் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” – “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் இடையில்
இவர்கள் கண்டு பிடிக்கும் அர்த்தம் அல்லது சொல்ல நினைக்கும் வித்தியாசம் அல்லது இரண்டு சொல்லுக்குமிடையிலான அழுத்தம் எதுவாக இருக்கும்?

 வெறுமனே ஆங்கில வார்த்தையிலிருந்து மொழிபெயர்ப்பதனால் வரும் வினை இது எனக் கடந்துபோய்விடமுடியாது. இது அப்பட்டமான சிந்தனைச் பிசிறல். கடந்த காலத்தில் “போரியல் அமைதி” என்றும் “களையெடுப்பு” என்றும் “தந்திரோபாயம்”
என்றும் பாவனைக்குக் கொண்டு வந்த தந்திர வார்த்தை போல்தான் இந்த “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்” என்பதுவும்.
இங்கே யாரும் யாரையும் மென்மையான முறையில் காணமால் ஆக்கவில்லை. அனைவரும் திட்டமிடப்பட்டு கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிக் கொலை செய்யப் பட்டவர்களில் பலர் பலத்த சித்திரவதைக்குள்ளாகிக் கொலை செய்யப்பட்டார்கள். செய்யப்பட்ட சித்திரவதைகளும் சித்திரவதைக்குள்ளான உடல்களும் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன. இங்கே அரசு, அரச இராணுவம், அதனை
எதிர்த்துப் போராடிய போராட்டக்குழுக்கள் போராட்டக் குழுக்ளை எதிர்த்த போராட்டக் குழுக்கள் என்று யாருக்கும் வித்தியாசங்கள் இருக்கவில்லை.


ஈழவிடுதலை என்று ஆரம்பித்த அத்தனை இயக்கங்களும் தமிழ் இளைஞர்களையும்பொதுமக்களையும் காணாமல் ஆக்கியது. செய்யப்பட்ட அளவுகளில் தான் இவர்களிடையே வித்தியாசம் இருக்கும். மற்றப்படி அனைவரது கரங்களும் கொலைக்கரங்களே. இன்று பலர் சொல்வது போல் வெறுமனே “காணாமல்
ஆக்கப்பட்டவர்கள்” என்ற கதை 2009 யுத்த காலத்தில் மட்டும் நிகழ்ந்ததல்ல. தனியே முள்ளிவாய்க்காலில் மட்டும் வலிந்து இழுத்துக் கொண்டு போய்க் காணாமல்
ஆக்கவில்லை.

“ ஈழம் என்பது தேசம் அல்ல கதை” . கடந்த 40 வருடங்களாக அதற்குள் பல கதைகளிருக்கின்றன. அந்தக் கதைகளிற்குள் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பொறுப்பானவர்கள்
வெவ்வேறு தரப்பானவர்கள். அந்த ஒவ்வொரு தரப்பானவர்களைப் பார்த்து ஒற்றைச் சொல்லைத்தன்னும் தனது பிள்ளைக்காகக் கேட்கமுடியாத தாய்மார்களின் மவுனக் கண்ணீரைக் கடந்து வந்தவர்கள் தான் நாங்கள். பேசமுடியாதிருந்த அந்தத தாய்மார்கள் குறித்து கரிசனையற்றிருந்த நாங்கள் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற ஒரு மந்திரச் சொல்லோடு இன்று நமது சமூகத்தில் நுழைவது போலித்தனமானது. இவ்வாறான எங்களுடைய போலி வார்த்தைகளால் உண்மையில் முள்ளிவாய்க்காலில் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்களுக்கும் ஒரு பதில் வார்த்தை கிடைக்கப் போவதில்லை. “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” குறித்து நாம் பேச முற்படும் போது எமக்கு ஒரு விரிந்த மனது தேவை. இது தன்னுடைய பிள்ளையை
எங்கே என்று கேட்க முடியாது இன்றுவரை மவுனமாயிருந்த தாய்மார்களது மவுனத்தையும் அது உடைக்க வேண்டும். அந்தத் தாய்மார்கள் வடக்கிலிருந்து தெற்குவரை இன்னமும்
பரவித்தான் இருக்கிறார்கள். அவர்களை இன்னமும் தவிக்க விட்டு
அட்டவணைப்படுத்தப்பட்ட “காணாமல் ஆக்கப்பட்டோர்” குறித்து பேசுவதனால் ஒரு பிரியோசனமும் வரப்போவதில்லை. நாங்கள் பாதிப்பக்கத்தைத் தவிர்த்து விட்டுத்தான்
கோசம் போடுகிறோம். இதற்குப் பதிலே சொல்லத்தேவையில்லை என்று அரசும் இராணுவமும் நினைக்குபடி நாம் தொடர்ந்து செயற்படுவதில் அர்த்தமில்லை.


2009 இறுதியுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது தொகை விபரம் பெயர் விபரம் உட்பட அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டிய அவசியம் அந்த யுத்தத்தை நடத்திய அரச
நிர்வாகத்தின் முன்னுள்ள கட்டாயமான கடமை. அதற்கான முழுத்தகவல்களையும் அரச நிர்வாகத்தால் மிக இலகுவாகத் திரட்டிவிடமுடியும். ஆனால் இலங்கை அரச நிர்வாகத்திற்கு
அதனைச் செய்யத் தேவையற்றதாக இருக்கும் காரணம் எது என நாம் தான் சிந்திக்க வேண்டும்.

மாதக்கணக்காக பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார் கணவனைப் பறிகொடுத்த மனைவிமார்
வீதியில் இறங்கி இத்தனை போராட்டம் செய்தும் ஏன் பலனற்றுப் போய்க்கிடக்கிறது?

எப்படிஇந்த அரசு இத்தனை போராட்டங்களையும் தட்டிக் கழிக்கிறது?  சர்வதேச சமூகம் என்ன கவனத்தை எடுத்தது? ஏன் கவனமற்று இருக்கிறது? என்று எல்லாம் நாம் பேசியாக வேண்டும்.

இந்த “ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற சொல்லிற்குள் இருக்கும் அரசியல் எது? அந்தச் சொல்லை இவ்வளவு காலமும் நாம் ஏன் பாவனையில் கொள்ளாது தவிர்த்தோம்?


யாருடைய நலனுக்காக, யாரைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சொல் பாவனைக்கு வந்தது? என்று அதனைப் பாவிக்கும் எந்த ஊடகங்களும் இன்றுவரை கேள்வி எழுப்பியது இல்லை என்பது
இன்னொருவகை அதிகார ஒத்து ஊதுதலே. எவ்வாறு துரோகி- தியாகி என்ற மனநிலையில் எவ்வித விமர்சனப் பார்வையுமற்று சொன்ன சொல் பிள்ளைகளாக இருந்த நமது ஊடகங்கள்,
போர்த் தந்திரோபாபயம் , போரியல் அமைதி, தந்ரோபாயப் பின் வாங்கல், காட்டிக் கொடுப்பு,கூட்டிக் கொடுப்பு, என்று சொல்லிவந்த செய்து வந்த அத்தனை முட்டாள் தனத்திற்கும் விளக்கம்
அளித்துக் கொண்டிருந்த நமது ஊடகங்களின் புதிய தொடர் கண்டு பிடிப்புத் தான் இந்த “வலிந்து காணாமல் போனோர்” என்பது. இந்தச் சொல்லைக் கொண்டு இந்த ஊடகங்களினால் எந்த ஒரு
புதிய அத்தியாயத்தையும் தொடங்க முடியாது இருப்பதுதான் மிக முக்கியமான விடையம்.


ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பது நமது போராட்ட சூழலிலும் நமது யுத்த சூழலிலும் மிக நீண்ட கால வரலாற்றுக் கதையுடையது. அது அத்தனை இயக்கங்களதும்
சமூகவிரோதி ஒழிப்பிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுஅனைத்து இயக்கங்களினதும் உட்கட்சிப் புரட்சி, இயக்க மோதல், அதன் நீட்சியான சகோதரப்படுகொலை, அனைத்து இயக்கங்களது வதை
முகாம்களது வரலாறு, இலங்கை இராணுவமுகாமினது வரலாறு, அரச புலனாய்வு வரலாறு என்று நீண்டு இறுதி யுத்தம் வரை செல்ல வேண்டும். இந்தக் கணக்கெடுப்பில் நாம் முழுமையாக
ஈடுபட்டால் மட்டுமே இது குறித்துப் பேசத் தகுதியானவர்களாவோம்.

நமது சமூகத்திற்குள் இந்தவகைக் கணக்கெடுப்பை நிகழ்த்துவது இயலாத காரியமல்ல. காணாமல் ஆக்கப்ட்டோர் குறித்த தகவலை ஒட்டு மொத்தமாகத் திரட்டுவதற்கு நாம் ஒருபோதும் முன்றின்றதில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் மீதான கரிசனை நம்மில் பலருக்கு 2009இன் பின்னரே உருவாகிறது. இது அடிப்படையில் மிகத் தவறானது. இந்தத் தவறு அரசை ஒரு பொழுதும் நிர்ப்பந்திக்கப்
போதுமானதாக இருக்கப் போவதில்லை. அரசின் மிலேச்சதிகாரமான இன்னுமொரு செயற்பாட்டிற்கே அது வழி வகுக்கும். மற்றயபடி இது தற்காலத்தில் யாருடையதோ  அதிகார – வியாபாரத் தேவைக்காகப்
பேசப்படும் ஒரு சொல்லாக அந்தச் சொல் அர்த்தம் இழந்து போகும்.அதனால் ஒரு வித பிரியோசனமும் எவருக்கும் இருக்கப் போவதில்லை.

 எந்தவொரு சொல்லையும் நாம் பாவிக்கத் தொடங்குமுன் அதன் ஆழ்மன அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் ஏற்கனவே மதிப்பிழந்து போன சொற்களை பாவித்து நாம்  நமது சமூகத்தின் சீவியத் திறனை அழித்தது போல் நிகழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதில் நாம் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

அதனால் தான் சொல்கிறேன் வக்கிர எண்ணத்துடன் நமது மனதை நெருப்பிற்குள் புதைத்து வைத்துக் கொண்டு நீர் பற்றிக் கருத்துரைப்பதில் என்ன நன்மை நிகழ்ந்து விடப்
போகிறது? தொடர்ந்து பேசுவோம்.


நன்றி
தமிழ்ப் பார்வை (கனடா)

Sunday, 16 June 2019

சாதியால் சுட்ட வடு- கற்சுறா

 
 

“நினைவழியா வடுக்கள்”

சிவா சின்னப்பொடி அவர்களது நூல்  குறித்து…
வெளியீடு: விடியல் பதிப்பகம்
 
 
 
 
தீயினால் சுட்ட வடு ஆறும்
நாவினால் சுட்ட வடு ஆறும்
நடுத்தெருவில் இழுத்து வந்து
நாய் போல சுட்ட வடுஆறும்
ஆறாது
சாதியால் சுட்ட வடு.
 
என்று சாதியின் வடுக் குறித்து எழுதியும் பேசியும் வருகிறோம். இப்போது சிவா சின்னப்பொடி அவர்களது “நினைவழியா வடுக்கள்” என்ற நூலின் அத்தனை பக்கங்களிலும் அது துல்லியமாகத் தெரிந்து விடுகிறது.
 ஈழத்தில் சாதியால் தீண்டிய வடுக்கள் ஒவ்வொரு தெருவிலும் ஆறாது ஆழமாய்ப் பதிந்து போய்க் கிடக்கிறன. பிரதானமாக தமிழர்களது கலாசாரப் பூமி என்றவாறாக ஆதிக்கசாதிகளால் அடையாளம் இடப்படும் யாழ்ப்பாண மண்ணில் அதன் வடுக்கள் அதிகமாகத்தான் இருக்கின்றன.
சாதி வெறி என்பதனை எந்தத் தருணத்திலும் ஆதிக்க சாதிகளால் விட்டுக் கொடுக்க முடியாது என்பதற்கு உதாரணமாக  இறுதி யுத்தத்தின் பின் “மெனிக் பார்ம்” முகாமில் தாழ்த்தப்பட்டவர்களோடு சேர்ந்து இருக்கமுடியாது, சேர்ந்து சமையல் செய்ய முடியாது  என்று தனிப்பிரிவு கேட்டு சண்டையிட்ட சாதிவெறி கொண்டவர்களது ஆக்கினையைக் குறிப்பிட்டுச் செல்லிவிடமுடியும்.
மரணத்திற்குள் வாழ்ந்து மரணத்திற்குள்ளே வாழ்வைத் தொலைத்தாலும் சாதி காப்பாற்றும் சமூகம் நம்முடைய சமூகம் என்பதற்கு இதைவிட வேறு என்ன வியாக்கியானத்தைச் சொல்லிவிடமுடியும்.
இந்த நூலில் சிவா சின்னப்பொடி அவர்கள் தன்னுடைய வாழ்தலில் தான் நேரடியாக அனுபவித்த கொடுமைகளையும் தன்னுடைய முன்னோர்கள் அனுபவித்த கொடுமைகளையும்  தனது பாட்டனுக்கூடாகவும் தனது தாய் தந்தையருக்கூடாகவும் கேட்டு அறிந்து இந்த ஈழத்தமிழ்ச் சமூகத்திற்குமுன் பதிவு செய்திருக்கிறார். இற்றைக்கு 70, 80 வருடங்களுக்கு முன்னர் எப்படியான சாதியக் கொடுமைகள் இருந்தன. தனது முன்னோர்கள் எப்படியான துன்பங்களையெல்லாம் அனுபவித்தார்கள் என்று சொல்வதுடன்  கொடுமைகளில் இருந்து மூர்க்கத்துடன்  மீண்டுவர என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது என எழுதிச் செல்கிறார்.
தாழ்த்தப்பட்டவர்கள் என அடையாளம் இடப்பட்டவர்கள் கோவில்களில் உள் நுழையக் கூடாது  கிணற்றில் தண்ணீர் அள்ளக் கூடாது பாடசாலைகளில் ஒன்றாக இருக்ககூடாது என்றும் தேனீர்சாலைகளில்  தனிக்குவளை வைத்தும் தமது வீடுகளில் அழுக்குகளைச் சுத்தம் செய்ய வைத்தும் தமது பிணங்களைக் காவ வைத்தும் யாழ்ப்பாணத் தேச வழமைச் சட்டம் வைத்திருந்த  இந்தக் ஆதிக்க சாதிக்கூட்டம், தாம் புலம்பெயர்ந்த போது இம்மியும் பிசகாது தம்முடன் சாதியையும்  காவிக் கொண்டு போனவர்கள்.  இப்போது ஈழத்தில் தமது காணிக்குள்ளும் தமது ஊருக்குள்ளும் புதுப் புதுக் கோவில்களைக் கட்டியபடி அதே ஆதிக்க மனநிலையோடு  ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு கோவில்களைக் கொண்டு எப்படி தமது அதிகாரத்தை முன்னிறுத்தியிருந்தனரோ அதனை மறந்து விடாது முன்நிறுத்த  இன்னொரு வியூகம் அமைக்கின்றனர்.
ஈழயுத்தகாலத்தில் கூட சிதிலமடையாது சாதி மனோபாவத்தை உள்ளாரப் பாதுகாத்திருந்த அதிகார வர்க்கம் மீளத் தன்னுடைய அதிகாரத்தை மெல்ல மெல்ல ஆலயங்களுக்குள்ளால் தக்கபடி வடிவமைத்துவிடத் தயார் செய்து கொண்டிருக்கிறது.
சில மாதங்களின் முன்னர் ஈழத்தின் கோயில்களின் தேரினை ஒடுக்கப்பட்டவர்கள் தொட்டு இழுத்துவிடக் விடக் கூடாது என்ற சண்டையில் இராணுவத்தைக் கொண்டு இழுத்த கதையையும் இயந்திரத்தைக் கொண்டு இழுத்த கதையையும் நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
 
 
- நினைவழியா வடுக்கள் எனும் இந்த நூலில் தான் கல்விகற்ற ஆரம்பப் பாடசாலையில் சாதிவெறிபிடித்த ஆசிரியர்களால் தான்பட்ட துன்பங்களை விபரித்திருக்கும் சிவா சின்னப்பொடி அவர்கள் அதிலிருந்து தப்புவதற்காக கந்த முருகேசனிடம் கல்விகற்கப் போகிறார். அதனால் சாதிவெறியர்களிடமிருந்து கந்த முருகேசனார் வாங்கும் வசவுகள் துன்பங்கள் பற்றி விபரிக்கிறார். கந்த முருகேசனரின் தெளிவும் சமூக அக்கறையும் சாதிய விடுதலைக்கான முன்முனைப்பும் தனக்குள் விதை விடும் அளவிற்கான அறிவுரைகளும் தனது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததில் முக்கியமான தருணம் என்று சொல்கிறார்.
 - கந்த முருகேசனாரின் திண்ணைப்பள்ளிக்குச் சென்ற சிறுவனான சிவா சின்னப் பொடி பின்னர் அரச பாடசாலையில் சேர்கிறார். அங்கே  சாதிய வெறிக்குள் தினமும் முகம் கொடுக்க ஏற்படுகிறது. தந்தைக்கிருந்த சாதிய விடுதலைக்கான கருத்துத் தெளிவு மற்றும் அவர் சார்ந்து இயங்கிய நண்பர்கள் தோழர்களது சிந்தனைகளால் இயல்பாக அவருக்குள் ஏற்படும் எதிர்ப்புணர்வு அவரைப் பள்ளியில் இருந்து கலைக்க வைக்கிறது. படிப்பதற்காக ஏங்கும் ஒரு சிறுவனாக இருக்கும் அவர் சாதியவெறிகொண்ட ஆசிரியர்களால் மக்கோனாவுக்கு( சிறுவர் சீர்திருத்தப்பள்ளி இருக்கும் இடம்) அனுப்ப பொலீசில் பிடித்துக் கொடுக்கப்படுகிறார்.  பின் விடுதலையாகிய போதும் படிப்பதற்குப் பாடசாலைகள்  மறுக்கப்படுகின்றன.
- ஒருமுறை தனது தங்கை பிறக்க இருந்த காலத்தில் தந்தையுடன் இணுவில் ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார். இணுவிலில்  ஒரு சாப்பாட்டுக்கடையில் சாப்பிட்டு கைகழுவப்  போன இடத்தில் தந்தையின் கையிலிருந்த மரமேறிய தழும்பைப் பார்த்து விட்டு  ஒரு ஆதிக்க சாதி வெறியன் “நீ என்ன கீழ்சாதியா?” எனக் கூச்சலிட்டு முதலாளியுடன் சேர்ந்து அடித்து வதை செய்த பின் தந்தைக்கும் மகனுக்குமான தண்டனையாக  மிகப்பெரிய தொகை விறகைக் கொத்தி அடுக்கும்படி செய்கிறார்கள். அந்த வதையினை அவர் எழுதியிருக்கும் வரிகள் ஈழத்தின் சாதிவெறிநிலம் எரிந்து சாம்பலாகவே வேண்டும் அது எக்காலத்திலும் மீளவே கூடாது என எண்ணத் தோன்றும். நீங்கள் அனைவரும்( உங்களில் யாராவது சாதி வெறியராக இருந்தால் கூட) கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் இது எனச் சொல்லிக் கொள்கிறேன்.
 - இயல்பிலேயே கலை ஆர்வம் கொண்ட தமது சமூகத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி சகோதரச் சண்டைகளை சகோதரக் கொலைகளை திட்டமிட்டு  உருவாக்கிவிட்ட ஆதிக்கசாதிகளின் வஞ்சனையைத் துல்லியமாகக் குறிப்பிடுகிறார். 
-தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் வாழும் வீடுகள் ஆதிக்க சாதிகளின் தரத்துக்கு இருக்கக் கூடாது என்ற யாழ் தேச வழமைச் சட்டத்தை மீறி தனது சமூகம் எப்படியான போராட்டங்களை நடத்தியது. மேற்சட்டை போடுவதற்கான உரிமையை எப்படித் தனது சமூகம் போராடிப் பெற்றது எனக்  “கல்வீட்டுப் போராட்டம்” “மேற்சட்டைப்  போராட்டம்” என்பவற்றை விளக்கிச் செல்கிறார்.
 - சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக ஆதிக்கசாதிகள் எவ்வகையான நூதனமான வேலைகளை பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பதியப்படும் வேளைகளில் செய்தார்கள் என்பதனை விளக்கிச் செல்லும் சிவா. சாதி என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் இலங்கை  நாடாளுமன்றத்தில் சமூகக் குறைபாட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்பு தேசிய இனம் என்று மாற்றப்பட்டது.  இந்த மாற்றம் வந்த பின்பு அதில் இலங்கைத் தமிழர் என்று எழுதப்பட்டிருந்தால் மேல் சாதியினர் என்றும் இலங்கைத் தமிழ் என்று எழுதப்பட்டிருந்தால்  அது இடை நிலைச் சாதி என்றும்இலங்கைத் தமிழன் என எழுதப்பட்டிருந்தால்  அது சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கும் என்றும் அப்போது இருந்த ஆதிக்க வெறியின்  தந்திர விளங்கப்படுத்தலை அவர் தெளிவுறச் சொல்கிறார். இது ஒரு மிக முக்கியமான பதிவு என நான் கருதுகிறேன். ஆதிக்க சாதித் திமிர் என்பது எப்படி ஒவ்வொரு நுண்ணிய தளங்களிலும் சட்டங்களையும் சமூக விழுமியங்களையும் கேலிக் கூத்தாக்கி மேவி நின்று வெறியாடியது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
- அதனை விடவும் வெள்ளாள நிலக்கிழார் வீட்டுப் பெண்களுக்கு அவர்களது தாய்வீட்டில் அடிமை வேலைசெய்து வந்த ( நான் சேவகம் என்ற சொல்லைத் தவிர்க்கிறேன்) நளவர் சமூகத்துப் பெண் ஒருவரையும் பள்ளர் சமூகத்துப் பெண் ஒருவரையும் கோவியர் சாதிப் பெண் ஒருவரையும் சீதன வரிசையில் சேர்த்துவிடும் நிலைதான் இருந்தது என்பதைச் சொல்வதோடு சாதிய சமூகத்தில் ஒரு ஆதிக்க சாதியினது  மரண ஊர்வலம் என்பதும் அப்பட்டமான அடிமை முறையின் வெளிப்பாடாக இருப்பதனையும் சுட்டிக்காட்டுகிறார்.
இன்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் எச்சம்,விட்டுவிலகிவிட முடியாதபடி சொச்சமாக, மரணவீடுகளில் சாதியை ஒரு அடையாளமாகவேனும் நிகழ்த்திவிட வேண்டியிருப்பதனை நாம் கண்டு வருகிறோம் தானே.
-யாழ்ப்பாணத்து பாடசாலைகளிலும் ரியூசன் சென்டர்களிலும் நடைபெறும் உரையாடல்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களினைப் பிரித்துச் சொல்லும் குறியீடாக சோடியம்(Na) என்றும் பொஸ்பரஸ்(P) என்றும் இருக்கும் கேவலமான நடைமுறையை அவர் குறிப்பிடுகிறார். நளவன் என்றோ பள்ளன் என்றோ வெளிப்படையாகச் சொல்ல முடியாத சூழலில் இந்தக் குறியீட்டுச் சொல்லைக் கொண்டு அடையாளம் இட்டுவிடும் நிலையினை அந்த யாழ்ப்பாண இளையசமூகம் கைக்கொண்ட தந்திரம் அசிங்கமானது.
 
-சாதிய சமூகமான ஈழத்தமிழ்ச் சமூகம், அதிலும் இறுக்கமான சாதிய வெறியுடன்  காலந்தள்ளிய யாழ்ப்பாண சமூகத்தின் அரசியல் கட்சிகளாக இருந்த தமிழரசுக்கட்சியும் தமிழ்க் காங்கிரசும் எப்படி தமது வாக்குகளுக்காக  இரண்டு பிரிவாகவே தமிழ் சமூகத்தை கண்கொண்டு பார்த்தார்கள் என்பதனை அனைத்து விளங்கப்படுத்தல்களுடனும் சொல்லிவரும் சிவா சின்னப்பொடி இடது சாரிச் கொள்கைகளுடன் இயங்கிய பலரது செயற்பாடுகளாலும் சிந்தனை முறையாலும் பல மாற்றங்களை முன்நகர்த்த முடிந்தது எனச் சொல்கிறார். அதில் பொன். கந்தையா அவர்களது பல செயற்பாடுகளை முன்நிறுத்தும் அவர் கல்வியில் முன்னேறுவதன் மூலமே ஆதிக்க சாதித் திமிரை அடித்து நொருக்க முடியும் என  அறை கூவி நின்றவர்களாக கந்தமுருகேசனாரையும் பொன். கந்தையா அவர்களையும் அடையாளமிடுகிறார்.
-பொன். கந்தையா அவர்களது மேடைப் பேச்சு ஒன்றைப்பற்றிக் குறிப்பிடும் இடம் முக்கியமானது. 
“ உங்களுடைய பூட்டன் மாரிடம் ஒரே ஒரு நாலுமுழ வேட்டி இருந்தது. அதன்  ஒரு பகுதியைக் கிழித்து கோவணமாகக் கட்டிவிட்டு மீதியை உடுத்திக் கொண்டார்கள். உங்கள் பூட்டிமாரிடம் ஒரேயொரு புடவை இருந்தது. மற்றப் பெண்கள் அணியும் உள்டபாவாடையோ மற்ற எதுவுமே அவர்களிடம்  இருக்கவில்லை. அந்தச் சேலையை அவர்கள் தமது மானத்தை மறைக்க உடம்பில் சுற்றிக் கொண்டார்கள். மாதக் கணக்காக வருடக்கணக்காக அந்த ஒற்றைத் துணியைத்தான் அவர்கள் கட்டிக்கொண்டு திரிந்தார்கள். அவர்கள் தொட்டால் தண்ணீர் அழுக்காகிவிடும் என்று கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணிர் அள்ளத் தடை விதித்தார்கள். அதனால் அவர்கள் அழுக்காக இருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஊத்தையர்கள் என்றார்கள். மழை வந்தால் தான் அவர்களது உடம்பில் தண்ணீர் படும் என்ற நிலை அவர்கள் காலத்தில் இருந்தது.
உங்களுடைய தாத்தாமாரிடம் 2 வேட்டிகள் இருந்தன. தனியான கோவணங்கள் கூட இருந்தன. உங்கள் பாட்டிமாரிடம் 2 சேலைகள் இருந்தன. ஆனால் அவர்களிடம் சால்வைகளோ ரவிக்கைகளோ இருக்கவில்லை. ஏனென்றால் அவற்றை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கும் கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணீர் அள்ளவும் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தங்களுக்கென்று தண்ணீர் அள்ள துரவுகளைத் தோண்டினார்கள். இந்த நிலைமை உங்களுடைய அப்பாக்களின் காலத்திலும் இருந்தது.
இன்று உங்களிடம் பல வேட்டிகளும் சேலைகளும் சால்வைகளும் ரவிக்கைகளும் பாவாடைகளும்கூட இருக்கின்றன. கிணறுகள் நீங்கள் கட்டியிருக்கிறீர்கள். இவையெல்லாம் உங்களுக்குக் கிடைத்த சலுகைகளோ வரப்பிரசாதங்களோ அல்ல. இவையெல்லாம்  உங்களுடைய நீண்ட போராட்டத்தால் உழைப்பால் உங்களுக்குக் கிடைத்தவை.”
என்ற  அறிவுறுத்தல் பொன். கந்தையா அவர்களுடையதுஎனச் சொல்லும் சிவா, ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதாரமும் கல்வியும் பெற்றுவிடவேண்டும். அப்போதுதான் சரிநிகர் சமானமாக சமூகத்தில் நிலைகொள்ளக் கைகொடுக்கும் என்பதனைத் தெளிவுபடுத்தியவர் அவர் என்கிறார்.
 
-புலம்பெயர்ந்த சூழலில் எவ்வாறு சாதிய ரீதியாக பிள்ளைகள் பெற்றோர்களால் அடையாளப்படுத்தப்பட்டு பிளவினை வளர்க்கிறார்கள். அதனை எதிர்த்த பிள்ளைகளைத் துன்புறுத்தியபோது சிறைவாசம் அனுபவித்த பெற்றோர்கள் என்று பிரான்சில் பலகதைள் இருப்பதாகச் சொல்லுகிறார். நமது கனடாவில் கூட  இதுக்கு ஒன்றும் குறைச்சலே இல்லை.
“மாதிரி யாழ்ப்பாணம்” என்று அடையாளம் இடப்பட்ட கனடாவில் எப்படியிருக்கும் என்பதனை உதாரணங்களுடன் நான் சொல்லத் தேவையில்லை. அழுக்கூறிய சாதியின் சகல சிறகுகளும் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு மனத்திலும் ஆழப்பரவித்தான் இருக்கிறது.
நீண்ட காலத்தின் பின் தீண்டாமை குறித்து எழுதி வெளியான ஒரு நூல் இது. மிக அதிகமான தகவல்களையும் வலிகளையும் கூறும் நூலாக இருக்கிறது. அனைவராலும் கட்டாயம் கவனத்துக்குட்படுத்தப்பட வேண்டிய நூலாகவும் இருக்கிறது. இந்த நூல் குறித்து நாம் அதிகம் பேசவேண்டும். முதலில் அனைவரும் வாசிக்க வேண்டும். கனடாவில் இதற்கான ஒரு கலந்துரையாடலை யாராவது நிகழ்த்த வேண்டும். அங்கே நாம் இதுகுறித்து இன்னமும் அதிகமாகப் பேசமுடியும் என்று நினைக்கிறேன்.
இறுதியாக, நான் நினைக்கும் இன்னொரு தகவலையும் இந்த இடத்தில் பின் செருகலாகச் சொல்லிவிட வேண்டும்.
 
 
 
 
நான் சிவா சின்னப் பொடி அவர்களை மிக நீண்டகாலமாக அறிந்து வைத்திருக்கிறேன். ஐரோப்பாவில் அவரது செயற்பாடுகள் குறித்து அறிந்த போது அவர்தான் ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் திவாகரன் என்றழைக்கப்பட்டவர் என அறிந்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.அப்போது அவர் பாரிசின் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவர் இருந்த இடம் எமக்குத் தோதான இடமாக  ஒருபொழுதும் இருந்ததில்லை. அது நமக்கு நேரெதிர்ப் புள்ளியில் இருந்தது.
இந்த நூலின் “என்னுரை” யில் அவர் “காக்கை வன்னியன் முதல் கதிர் காமர் வரை என்ற தொடர்களை மிகக் குறுகிய காலத்தில் எழுதிய நான் இந்த நூலை எழுதுவதற்கு 13 வருடங்கள் பிடித்திருக்கிறது” எனக்குறிப்பிடுகிறார்.
அவர் கை பற்றிக் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடும் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்த எழுத்துச் சூழலும் சிந்தித்து எழுத வேண்டியதும் பொறுப்புடன் எழுத வேண்டியதுமானதாக இருந்ததில்லை. எழுதப்பட்டதும் இல்லை என்பது எனது கருத்து. அப்போது பலர் “லலித் முதல் சந்திரிகா வரை”  , “அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” , “இமயமலை முதல் ஈழம் வரை”“அவர் முதல் இவர் வரை” என்று தமக்குரிய அரசியலுடன்  எழுதிக் கொண்டுதான் இருந்தார்கள். இப்போது “மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால்” வரை என்று கதை  எழுதத் தொடங்கவில்லையா? அப்படித்தான்.
இந்த மாதிரியான எழுத்து முறைகளுக்கு  நாம் தகவல் திரட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எமக்கு என்ன சொல்ல வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடலுடன் தெரிகிறது. அதனை வாசிக்கும் கூட்டமும் யார் என்பது கண்முன்னால் தெரிகிறது.அவர்களது அறிவின் அல்லது சிந்தனையின் எல்லை தெரிகிறது. இங்கே யாரும் நேரம் செலவிடத் தேவையில்லை. தகவல் தேடத் தேவையில்லை. ஒரு இரவில் பத்திரிகை அச்சிற்குப் போகமுதல்  எழுதிவிடக் கூடியவை இவை. அவற்றை எழுதுவதால் பணமும் கிடைக்கிறது என்றால் என்ன கவலை இருந்து விடப் போகிறது.
“ காக்கை வன்னியன் முதல் கதிர்காமர் வரை” என்ற தகவலை ஈழமுரசு வாசகர்களுக்கு நீங்கள்  எழுதித்தான் ஆக வேண்டுமா? அத்தனை வாசகர்களும் அந்தக் கதையைத்தானே தினமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டிய எழுத்துத் தான் அப்போது தேவைப்பட்டது. அதனை ஈழமுரசுப் பத்திரிகையில் இருந்து நீங்கள் ஒருபொழுதும் எழுதிவிட முடியாது.அப்போது நீங்களும் எழுதும் சிந்தனையில் இருக்கவில்லை. நீங்கள் குறிப்பிட்டுக் கொண்டிருந்த  தமிழத் தேசியம் என்பது அல்லது தமிழர்கள் என்பது அல்லது தமிழினம் என்பது ஒன்று அல்ல அது சாதியாகவும் பிரதேசமாகவும் ஊர்களாகவும் வெறியூட்டப்பட்டுப் பிளவுண்டு  நீண்டகாலமாகக் கிடக்கிறது. அந்தப் பிளவினை  நீங்கள் பேசிக்கொண்டிருந்த தமிழ்த் தேசியம் என்பது கருத்தியல் ரீதியாக ஒருபோதும் உடைத்துவிடவில்லை. புரிதலை உருவாக்கவில்லை.
தீண்டாமைக்கெதிராக “கந்தன் கருணை”  என்ற நாடகத்தை எழுதிய என்.கே. ரகுநாதன் அவர்கள்  அப்போது “துப்பாக்கி நிழலில் சாதி மறைந்து கிடக்கிறது” என்று சொன்னார். நீங்கள் யாருமே அப்போது அதனை விளங்கிக் கொள்ளவில்லை. அதனை யாழ்ப்பாணத்தில் வட்டுக் கோட்டை சங்கரத்தையில் 1998ம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற சாதிக்கலவரம் மீள விளங்கப்படுத்தியது.ஆனால் நீங்கள் யாருமே அதுகுறித்துப் பேச முனையவில்லை. நீங்கள் பேசிவந்த தமிழ்த் தேசியத்திற்குப் பங்கம் வந்து விடும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.
நமது சமூகத்தில் உள்ளார ஊறிக்கிடக்கும் சாதிய அசிங்கம் குறித்துப் பேசினால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பங்கம் விளைந்து விடும் என்று நீங்கள் நினைத்துக் காத்திருந்த மவுனங்கள் எவ்விதத்திலும் பிரியோசனமற்றவை. அவை சாதிவெறியின் அத்துமீறலை இன்னொரு தளத்தில்  நிகழ்த்திக் காட்டியே தீரும். அதற்கான செயற்பாடுகள் எவை என்பது மிக முக்கியமான கேள்வி.
நீங்கள் பேசிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியத்தை உங்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களே உங்களை சாதிரீதியாக அவமதித்த கதைகள் அனுபவமாக உங்களுக்கிருக்கின்றன. அவற்றை இப்போது நூலில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் அப்போதே அம்பலப்படுத்தியிருக்க வேண்டும்.
பெரியார் சொல்வது போல்
நமது மொழி சாதிகாப்பாற்றும் மொழி
நமது காலாசாரம் சாதிகாப்பாற்றும் கலாசாரம்
நமது பண்பாடு சாதி காப்பாற்றும் பண்பாடு.
என்றிருக்கும் போது நமது தேசியம் மட்டும் என்ன
அதுவும் சாதி காப்பாற்றும் தேசியம்தானே.
ஈழம் என்றால் என்ன தமிழீழம் என்றால் என்ன. சாதிரீதியாக இருக்கும் பிரிவுகள் அந்தப் பிரிவுகளுடன் அரங்கேறும் வெறிகளைத் துடையாது நாம் அனைவரும் ஒன்றான இனம் என்று அடையாளப்படுத்துவதை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் நூலை முன்வைத்து நாம் இதனைப் பேசத்தான் வேண்டும் தோழர்.
இத்தனை தகவலை இப்போதாவது எழுதியதற்கு மிக்க நன்றி.
கற்சுறா
நன்றி- தமிழ்ப்பார்வை கனடா( யூன் 2019)

Editing & Ghostwriting சோபாசக்தியின் பித்தலாட்டம்- கற்சுறா

  அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்? கற்சுறா சோபாசகத்தியின் இலக்கியச் செ...