Sunday, 4 November 2018

படம் போடமுடியாத கவிதைகள்... கற்சுறா

1.        1.கேள்விச்சாவி


நிபந்தனைகள் நீங்கலாக இருக்க வேண்டிய கேள்விகள் குறித்து மட்டுமே நிரப்பப் படவேண்டிய இடைவெளிகளைக் கொண்டிருக்கும் படிவத்தில் நினைத்ததை எழுதமுடியாதிருக்கிறது.

கோர்வையாய் காலில் மாட்டியிருக்கும் நிபந்தனைகளை அறுத்துவிடாது ஒற்றைக் கேள்வியைத்தன்னும் நகர்ந்து ஓட முடியவில்லை.

உன்னுடைய அறைச் சாவியையும் என்னிடம் ஒழிக்காதே.

எனது கேள்வியல்ல அது.

பொருந்தியிருந்த கதவினையும் திறக்க முடியாச் சாவி எங்கே  இருந்தென்ன?

முன் நுழையும் துவாரத்தினூடு விரியும் வெளியினை சாவியிடம் கேள்.

விரித்து வெளியைத் திறந்து நுழையும் காட்சிகளை
ஓரமாய் இருந்துதான்  கண்கொள்ள வேண்டும்.

இன்னொரு வழியில்  சொல்லக்  காத்திருக்கும் கேள்வியில்  எழுந்த
 துவாரத்தை மறைத்து நிற்கும் உன் விரல்களை எடுத்து என் பிடரியில் செருகு.

மறுகையால் என்னையும் இழுத்து உள்ளே விடு.

இடைவெளிகளை நிரப்ப உனக்கு சாவியே போதும்.

நிபந்தனைகளாலான கேள்விகளை துவாரத்துள் செருகாதே.

வெளியேறமுடியாத் துவாரத்தை

படிவத்தின் இடைவெளிகளில் நினைத்ததை

இன்னொரு அறையில் சாவியை

சாவியின் சாயலில் இருக்கும் கேள்வியை

எழுத முடியாது போனதை
நீ அறிந்தே இருக்க வேண்டும்.










2.        2. சமகாலம்

பிரேதப் பரிசோதனையில் தெளிவற்றிருந்த தகவலை
ஊர்ஜிதப்படுத்த வேண்டியிருந்தது.

மான் கொம்புகளின் வளைவுகளை
தலைகீழாகச் செருகியிருந்த பாவனையில்
ஆடைகள் கீழே வழுவிய வண்ணம் இருந்தன.

பிணத்தின் ஆடைகளில் இன்னமும் இரத்தம் கசிந்தபடியே இருந்ததில்
தெளிவற்ற சோதனை.

காயம் பட்ட இடமென்று அடையாளம் சொல்லமுடியாத நிலையில்
உடலை மேலும் கீழுமாக மாறி மாறி அறுக்க வேண்டியிருந்தது.

உட்காயத் தேடல்.

நிகழ்ந்த சாவிலிருந்து தேடிய காயம் இன்னமும் பிடிபடாத வெளிக்காயமாயிருந்தது.

வேண்டியிருந்த காலத்தின் பரிசோதனை நாற்பதா? அறுபதா?

அதற்குள் ஆட்டம் தொடங்கியிருந்தது.

நெளிவும் வளைவும் உடலை விடவும்
மூச்செறிந்து முனகிச் செல்லும் வார்த்தைகளுக்குள்
பிணம் கைவிட்டுத் தொலைந்தது.

பரிசோதனையைத் தொடங்க மீண்டும் வரிசையில் பிணங்கள்.

பிணங்களைக் கைவிட்டு தெளிவுறும் சமகாலம்.

குறி சொல்லி, குணம் சொல்லி
தலைகீழாய்த் தொங்கவிட்டு அவிழ்த்துவிடும் நிர்வாணம்.











3.        3. “மூனா”

வேலிக்குள் நுழையா மாட்டின் குறி
எதேச்சையானதல்ல.

உடலில் பச்சை குத்துவதைப் போல்
குத்துவதல்ல மாட்டுக் குறி.

காலை குறுக்கிட்டுக் கிடத்தி காய்ச்சிய சூட்டுக் கோலால் சுடும் குறியில்
மயிர் மணம்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

அடையாளத்தை அழித்து இன்னொரு மாடாய்
நிகழ்த்திக் காட்ட
கள்ள மாட்டுக்கு எத்தனை சூடாம்?

வேலிக்குள் நுழையா மாட்டின் குறி
எதேச்சையானதல்ல.

காட்டெருமையின் சாயலில் உருமாறும்
கள்ளமாட்டின் குறி ஊரெங்கும் தெரியும்

நல்ல மாட்டிற்கு ?

வேலிக்குள் நுழையா மாட்டின் குறி
எதேச்சையானதல்ல.

நுழையும் வேலியும் எதேச்சையானதல்ல.

காலை குறுக்கிட்டுக் கிடத்தி காய்ச்சிய சூட்டுக் கோலால்
கள்ள மாட்டின் பானாவை மறைக்க
கோடிழுத்து மடக்கி மேலிழுத்து வளைத்து
மூனா எழுதும் போது எழுப்பிய மாட்டின் அலறலில்
முழுப்பெயரும் வாழுவதில்லை.

வேலிக்குள் நுழையா மாட்டின் குறி

எதேச்சையானதல்ல.

Saturday, 4 August 2018

இன்னுமொரு விளக்கமளிப்பு.



13வது ரொரன்டோ  சர்வதேச தமிழ்க் குறும்படவிழா குறித்து…

கற்சுறா







13வது ரொரன்டோ  சர்வதேச தமிழ்க் குறும்படவிழா குறித்தும் அதில் திரையிடப்பட்ட இப்படிக்குக் காதல்எனும் குறந் திரைப்படம் குறித்த அதிருப்தியையும் நான் எனது முகநூலில் பதிவாக இட்டபோது இப்படித்தான் எழுதியிருந்தேன்.

நடந்தது என்ன?

ரொரன்டோ 13வது குறுந்திரைப்படவிழா வின் திரைப்படத் தெரிவுக்குழுவினர் திருவாய் மலந்தருள வேண்டும்." இப்படிக்குக் காதல்" உங்கள் தொிவில் இருந்ததா? இல்லையா? நிகழ்வு அமைப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவருடனும் தெரிவுக்குழு உறுப்பினர்களுடனும் நிகழ்வு நிறைவு பெற்று முடிந்ததன் பின் உரையாடினேன். இன்னமும் நீங்கள் பொது வெளியில் பதில் சொல்லவில்லை. இப்படியொரு கருத்துள்ள திரையிடலை எப்படி வெளியிட முன்வந்தீர்கள்? நீங்கள் பேசுகின்ற அரசியலில் எங்கே வழுக்கியது? இந்தத் திரையிடலை சமூக க்கறையாளர்கள் எனத் தம்மைச் சொல்பவர்கள். பல பெண்ணியவாதிகள் எனத் தம்மைச் சொல்பவர்கள் எழுத்தாளர்கள் எனத் தம்மைச் சொல்பவர்கள் என்று ஆயிரம் அர்த்தமுடையோர் இருந்து பார்த்த அரங்கு அது. இன்று 5வது நாள். யாராவது தமதுகருத்தினைத் தெரிவிப்பார்கள் என்று காத்திருந்தேன். இந்த 5வது நாள் கேட்கிறேன் உண்மையில் நடந்தது என்ன? pride week முடிந்து ஒருமாதமும் முடியாத நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது ஏன்? தெரிவுக்குழுவின் மூலகர்த்தாக்கள் பதில் சொல்லத்தானே வேண்டும்.”

என்னுடைய  இந்தக் கேள்வி யாரைநோக்கியதோ அதில் முக்கியமானவர்களில் ஒருவராக இருந்த எனது நண்பர் கிருத்திகனை நோக்கியதாகவும் அது இருந்தது.  அதனால் நான் இந்தக் குறிப்பினை எழுதிய 5வது நாள் 

கற்சுறா.. விமர்சகர் விருது வழங்கும் குழுவில் இருந்த என்னிடமும் இதே கேள்வியைக் கேட்டிருந்தீர்கள். நானும், பொதுவெளியில் எழுதுவதாய்ச் சொன்னேன். ஆக, மேலுள்ள கேள்வியை எனக்கானதாயும் கருதிக் கொள்கிறேன்.

மேற்படி படம் குறித்து முகநூலில் சிறு குறிப்புகள் எழுதிச சண்டை பிடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. விரிவாக எழுதவேண்டும் என்பது என் அவா. ஆகையினால் ஒரு நீண்ட கட்டுரையாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அதன் தலைப்பு இப்படியாக இருக்கிறதுதமிழில் தற்பாலீர்ப்புடையோர் பற்றிய குறும்படங்களைத் தடை செய்யவேண்டும்”.

உரையாடுவோம்

என்றவாறாக பதில் குறிப்பு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
உண்மையில் நான் முகநூலில் சிறுகுறிப்பு எழுதிச் சண்டையிடுவதாக அவர் நினைத்திருக்கும் எண்ணத்தினை விளங்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனாலும் அவர் எழுதத் தொடங்கிய கட்டுரையினை வழிமறித்துவிடக் கூடாது என்பதற்காக நான் இத்தனை நாள் காத்துக்கிடக்க வேண்டியிருந்தது. தற்போது அவர் தான் எழுதியிருக்கும் கட்டுரையினைப் பதிந்திருக்கிறார்.
அதனை நீங்கள் இந்த இணைப்பில் வாசித்துக் கொள்ள முடியும்.
https://kiruthikan.com/2018/08/04/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-gay-lesbian-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A/
ஆக, இது எனது பதிலுக்கான நேரம்.

முதலில் நான் எழுதிச் செல்லும் கருத்து நிலை முகநூலில் சிறுகுறிப்பெழுதிச் சண்டைபிடிப்பதாக இருப்பதாக இருக்கும்  எண்ணப்பாடு குறித்து விளக்கம் சொல்லியே ஆக வேண்டும்.
பொதுவாக நான் எழுதும் எழுத்துக்களில் எனது நண்பர்கள் எழுதக் கூடிய எழுத்துக்களை வார்த்தைகளை அல்லது அர்த்தங்களை என்னால் பயன்படுத்த முடிவதில்லை. அவர்களால் எழுதமுடிந்த அந்த எழுத்துக்களை  அந்த வார்த்தைகளை அந்த அர்த்தங்களை நான் தவிர்த்துக் கொள்வதால் தானோ என்னமோ எனது எழுத்து அதிகமான தருணங்களில் கரடுமுரடான கடுமையான வார்த்தைப் பிரையோகங்களை மட்டும் கொண்டதாக மற்றவர்களது மனதினைப் புண்படுத்திவிடக் கூடியதாக பலருக்கு உவப்பற்றதாக  உடனடி வாசிப்பில்  தோன்றிவிடுகிறது.

ஒரு கருத்தைத் தெரிவிக்கும் போது வழமையான மங்கிய எழுத்துப் பாணி  எனக்குக் கைகூடுவதில்லை. எனக்கு முக நூல்  தளம் ஒரு கதையாடலை  அல்லது எதிர்க்தையாடலை அதன் தகமைக்குள்ளாக நிகழ்த்தக் கூடியதான தளமாக எனக்கு விட்டுத்தந்திருக்கிறது. நீங்கள் பார்த்தீர்களானால் பெரும்பாலும் எனது முகநூல் தளம் எனது கருத்துக் களமாகவே இருக்கும். அதில் என்னால் முடிந்தளவு கதையாடலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறேன்.  அது சிலருக்கு இடையூறாக மனதைப் புண்படுத்தும் படியாக அல்லது கிருத்திகன் சொல்வதுபோல் சண்டையாக நோக்கப்பட்டு விடுகிறது. இதற்கு நான் எந்தப் பிராயச் சித்தமும் செய்யமுடியாதவனாக இருக்கிறேன். வலிந்து முயற்சித்தும் எனக்கு அந்த எழுத்துமுறை கைகூடிவருகிறதேயில்லை.

சரி இனி விடையத்திற்கு வருகிறேன்.

“இப்படிக்குக் காதல்” என்ற குறுந்திரைப்படம் திரையிடப்பட்டதின் விளக்கப்பாடு அதன் ஏற்பாட்டாளர்களால் சரிவரப் புரிந்து கொள்ளப்படாமல் இருப்பது மட்டுமல்ல அந்தத் தெரிவுக்குழுவினரது விளக்கத்தின் போதாமை குறித்துமானது என்பதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

“தற்பாலுறவு” குறித்தான நமது  புரிந்துணர்வும் அவர்களது உரிமை குறித்தான செயற்பாடுகளும் மதிப்பீடுகளும்  நமது பொதுச் சூழலுக்குள் எவ்வகையான விளங்கிக் கொள்ளலுக்குள் அகப்பட்டிருக்கிறது என்பதனையும் சிற்றிலக்கியச் சூழலில் மிகத் தீவிரமாக நாம் பேசிவருபவை. அந்தத் தீவிரத்தின் தொடர்ச்சியாகவே இந்தத் திரையிடல் குறித்தும் பேசுகிறேன். இங்கே சண்டையொன்றுமில்லை என்பதனை கிருத்திகன் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

2011ம் ஆண்டு என்று நினைக்கிறேன்   ரொரண்டோ தமிழ் வானொலியான “சிரிபிசி” வானொலியில் ரொரண்டோ மாநகரத் தேர்தல் குறித்து வந்த விளம்பரம் ஒன்று தற்பாலுறவினைக் கொச்சைப்படுத்தி சிமிதர்மானுக்கெதிராக செய்யப்பட்டிருந்ததினை எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் நாங்கள். கடந்த இரண்டு பன்முக வெளி நிகழ்வுகளில் சினேகிதன் அமைப்பு நண்பர்களது உரையாடல் இடம்பெறச் செய்து தற்பாலுறவு குறித்த புரிதலை முடிந்தளவுக்கு உள்வாங்கி உரையாடலை நிகழ்த்தியவர்கள். மறதிக்கெதிரான நினைவின் போராட்டத்திலும் அவர்கள் பங்குபற்றி தற்பாலுறவு குறித்த உரையாடலை அதன் வெளியை நமது பொதுச் சூழலுக்குள்ளும் விளங்கிக் கொள்ள முன்னெடுத்தவர்கள் நாங்கள். 

இப்படியிருக்க  13வது குறும்படவிழாவிலே அதற்கெதிரான ஒரு கருத்து நிலை கொண்ட குறுந்திரைப்படத்தைத் திரையிடும் நிலை ஏன் தோன்றியது என்பதுவே எனது கேள்வியாக இருந்தது.

அந்தத் திரையிடலின் தெரிவுக்குழுவில் இருந்த எனது நண்பர்களான அருண்மொழிவர்மனும் கிருத்திகனும் இந்தத் திரைப்படம் குறித்த கருத்து நிலையை அதன் விளக்கவுரையை ஏன் ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கமுடியாமல் இருந்தது என்பதே எனது கேள்வியாக இருக்கிறது. 

அதனையும் தாண்டி உங்கள் இருவருக்கும் திரையிடலின் பின் அங்கு உரையாற்ற போதியளவு நேரம் -இடம் கிடைத்தது. இப்படிக்குக் காதல் திரைப்படம் திரையிட்டு முடிந்தவுடன் அந்தத் திரையிடலுக்குக் கிடைத்த கரகோசம் ஏன் உங்களுக்கு அங்கே கோபத்தையோ எரிச்சலையோ ஊட்டவில்லை  என்பதுவே எனது கேள்வியாக இருக்கிறது. 

அந்த கரகோசத்தைக்  கேட்டவுடனாவது அந்த அரங்கில் இருந்தவர்களுக்காவது பதில் சொல்ல வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை என்பதுவே எனது கேள்வியாக இருக்கிறது.

சிமிதர்மானுக்கு எதிராகவும் தற்பாலுறவுக்கு எதிராகவும் தமிழர் கலாசாரம் பண்பாடு என்று அடையாளமிட்டு கொச்சையான விளம்பரத்தைப் பிரசுரித்த சிரிபிசி வானொலியின் நிர்வாகியும் அந்த அரங்கத்தில் இருந்தார். அங்கே நீங்கள் ஏன் மவுனமாக இருந்தீர்கள் என்பதே எனது கேள்வியாக இருக்கிறது.

திரும்பவும் சொல்கிறேன் அந்த அரங்கத்தில் பெண்ணியவாதிகள் எனத் தம்மைச் சொல்பவர்கள் எழுத்தாளர்கள் எனத் தம்மைச் சொல்பவர்கள்  பத்திரிகையாளர்கள் எனத் தம்மைச் சொல்பவர்கள் பதிப்பகத்தார் எனத் தம்மைச் சொல்பவர்கள் என்று ஆயிரம் அர்த்தமுடையோர் இருந்த  அரங்கு அது. அந்த அரங்கு இப்படியான ஒரு திரைப்படத்திற்கு பலத்த கரகோசம் வழங்கிவிட்டு மவுனமாகக் கடந்து போனது ஆபத்து நிறைந்ததாக ஏன் அப்போது உங்களுக்குத் தோன்றவில்லை என்பதே எனது கேள்வியாக இருக்கிறது.

திரையிடல் முடிந்த பின்னர் இதுகுறித்து ஒருபதிவினையும் அல்லது ஒரு கருத்துக் குறிப்பினையும் கூட நீங்கள் எழுதிவிடாதபோது உங்களைப் போல் ஓர் பரந்த வாசிப்பறிவற்ற நான் அது குறித்து எழுத வேண்டி ஏற்பட்டது எனக்குப் பெரு வருத்தந்தான்.

தற்போது கிருத்திகன் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் பெயர் குறிப்பிடப்படாத நபர் சொன்னதாக சொல்லப்படும் இரண்டு கருத்துக்களையும் நானே அவருக்குச் சொன்னேன். அவர் ஏனோ எனது பெயரை மறந்துவிட்டார்.

“‘Gay & Lesbian உறவென்பது பேரன்பிலிருந்து வருவதல்லவா?’ என்றார் ஒரு நண்பர். எல்லா உறவுகளுமே பேரன்பிலிருந்துதான் வரவேண்டும் என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ‘Pride Toronto இப்பத்தான் முடிஞ்சது. அதுக்கிடேல இந்தப் படத்தைப் போடுகிறான்கள். இவங்கள் என்னத்தை வாசிச்சு, என்னத்தை எழுதிஎன்றார் இன்னுமொருவர். Pride Parade என்னவிதமான அரசியலிலிருந்து எங்கு வந்து நிற்கிறது என்பதை யாராவது கவனத்திற் கொண்டோமாவென்றால், இல்லை என்பதே பதில்” என கிருத்திகன் தனது கட்டுரையில் குறீப்பிட்டிருக்கிறார்..

தற்பாலுறவாளர்களுக்கிடையில் இருப்பது அன்பல்ல அது பேரன்பு என்பது எனது கருத்து. அன்பிலிருந்து பிரித்துக் காட்ட எனக்கு அந்தச் சொல் தேவையானதாக இருந்தது. ஆம் அது பேரன்புதான். எனக்குச் சந்தேகமேயில்லை. அன்பு அளவில் சிறியதல்ல. ஆனால்  அன்பிலிருந்து பிறிதானதே பேரன்பு. தற்பாலுறவு பேரன்புக்குரியதானதாகவே நான் அடையாளமிடுவேன். அது பிரிந்து தான் நிற்கிறது. இது குறித்து வேண்டுமெனில் நாம் இன்னமும் உரையாடுவோம்.

அடுத்து   Pride Parade  குறித்த பதிவு.
இதனை நான் எனது முகநூலிலும் எழுதியிருக்கிறேன் (மேலே இருக்கும் பதிவினை வாசிக்க) ஏன் நான்தான் சொன்னேன்  என்பதனைத் தவிர்த்தார் என்று தெரியவில்லை அது அவரது சுதந்திரம். பெயரைத் தவிர்த்தலின் அரசியலில் எனக்கு ஏற்கனவே பல அனுபவம் இருப்பதினால் இதனை இங்கு சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. மற்றப்படி ஏதுமில்லை. 

ஆனால் அவர் சொல்லும் அரசியல் அல்லது ஆயிரம் அரசியல் அந்தப் Pride Parade இல்  இருக்கட்டும். அது ஒரு கொண்டாட்டமாக இருக்கட்டும். நமது சினேகிதர்கள் சொல்வது போல் அது ஒரு கொடியேற்றமாகவே இருக்கட்டும். கருத்தளவில் அதன் அண்மையில் கூட நமது சூழலில் இயங்குபவர்களால் செல்லமுடியாதிருப்பதை என்னவென்பது? 

முடிந்து ஒருமாதம் கூட செல்லவில்லை அதற்குள் இப்படியொரு நிகழ்வா என்று நான்தான் சொன்னேன். இதில் என்ன தவறு இருக்கிறது? Pride Parade இற்குள் இருக்கும் அரசியல் அது உள்வாங்கும் கருத்தியல் அல்லது முன்நிறுத்தும் சிந்தனைகள் நாம் பேசவேண்டியதுதான். அதற்கு நாம் மட்டும் பேசினால்போதாது. அதுகுறித்த உரையாடல் மிகுந்த விரிவான தளத்தில் பேசப்பட வேண்டியது.

ஆனால் இங்கு நான் முன் வைத்த பிரச்சனை அதுவல்ல. அந்தத் திரையிடல் குறிதிருந்த உங்களது மவுனம் குறித்ததே என்பதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். சிற்றிலக்கியச் சூழலில் இயங்கும் உங்கள் அக்கறையின் பாற்பட்டதே என்பதனையும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எனக் கூறிக் கொண்டு இந்த விளக்கவுரையை நிறுத்துகிறேன்.
நன்றி.


Thursday, 5 July 2018

“ஒரு பொம்மையின் வீடு”

கற்சுறா


ஒரு பொம்மையின் வீடு நாடகம் மனவெளி கலையாற்றுக் குழுவினரால் யூன் 30ம் திகதி இரு நிகழ்வுகளாக மேடையேற்றப்பட்டது. 150      வருடங்களுக்கு முன் டெனிஸ் மொழியில் ஹென்றி ஹிப்சன் அவர்களால் எழுதப்பட்ட நாடகத்தை ஆங்கிலம் வழியாக மொழிபெயர்த்து பி. விக்னேஸ்வரன் அவர்களால் நெறியாள்கை செய்யப்பட்டிருந்தது.

இந்த நாடகம் தொடர்பான  சிறிய சலசலப்பை ஒருவருடத்திற்கு முன்னரே அறிந்து கொண்டிருந்தேன் எனினும் கடந்த ஒரு மாதமாக இது சம்பந்தமான பலரது உரைகள் வீடியோ வடிவில் முக நூல் வழிவே வழமைபோல் வேகமடைந்து கொண்டது. நான் இங்கே வழமை போல் எனச் சொல்வதனை நீங்கள் கவனம் கொள்ள வேண்டும். உண்மையில் இன்று இருக்கின்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு நிகழ்வின் முழு விபரத்தையும் வெளித் தெரியப்படுத்திக் கொள்வது மிக முக்கியமானதே. அது செலவீனமற்ற  பெறுமதியான ஒரு விளம்பரப்படுத்தும் வித்தையும் ரசிக்கக் கூடியதும் கூட.

ஆனால் பெறுமதியற்ற ஒரு நிகழ்வைக் கூட இந்த வகை விளம்பர வித்தை பலரை ஏமாற்றிவிட்ட சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். இந்த வகைச் செயற்பாட்டில் ஏமாந்து போன கடந்த காலங்களை நான் அப்போதைய காலங்களிலே பதிவும் செய்திருக்கிறேன்.


இந்த “ ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தையும் அப்படியொரு மனநிலையில் இருந்து தான்  தொடர்ந்து அவதானித்தபடி இருந்தேன். எனக்குத் தெரியும் மிக அதிகமான பொருட்செலவில் பணச் செலவில் மனித உழைப்புச் செலவில்  நிகழ்த்தப்படுகின்ற நாடகங்களை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல என்பது.

சீரிய நாடகத்திற்காக இயங்கும் ஒரு நாடக அமைப்பு மார்க்கம் தியேட்டரில் மட்டுமே நாடகம் போடுவோம் எனத் தொடர்ந்து அடம் பிடித்து நிற்பதனையிட்டு எனக்கு அதிருப்தியே இருந்து கொண்டிருக்கிறது. அது மிகவும் ஏமாற்றமாகத் தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும்  அத்தகைய அடம் பிடிப்பில்  கர்வத்துடன் இருக்கும்  மனவெளி அமைப்பினர் கடந்த காலங்களில்  அந்தத் தியேட்டரினை பயன்படுத்தாமலேயே போடப்பட்ட சில நாடகங்கள் குறித்து நான் அதிகம் விசனமுற்றிருக்கிறேன். அந்த விசனம் அவர்களுக்கும் எனக்கும் இடையில் உரையாடல் விரிசலையே பல தடவை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மாதிரியான நாடகங்களை மனவெளியின் மேடையில் பார்ப்பதற்கு நம்மில்  பலர் அங்கு வந்திருக்கவில்லை என்பதனை உடனேயே தெரியப்படுத்த வேண்டியிருந்தது. என்னளவில் அந்த அதிருப்தியை அவ்வப்போது தெரிவித்தபடியே இருந்தேன்.

இவ்வாறானதொரு எண்ணப்பாட்டில்த் தான் இந்த 19வது  அரங்காடல் நிகழ்வையும் அவதானித்தபடி இருந்தேன். கடந்த சில வருடங்களாக ரொரன்டோ நாடகச் சூழல் குறித்து இருந்த அயர்ச்சியே  இந்த 19வது அரங்காடல் நிகழ்வைப் பகிர்ந்து கொள்ள இருந்த  ஐயம் ஆக இருந்தது.

கடந்த 18வது அரங்காடலின் ஒத்திகைகளைப் பார்த்து விட்டு தரமான நாடக அளிக்கைகள் நடைபெற இருப்பதாயும் அதனை அனைவரும் பார்க்க வாருங்கள் என்ற தமது கருத்துரைப்பினை வீடியோ வடிவில் முன்கூட்டியே  பதிவு செய்தவர்களது கருத்தின் மீதான ஐயமே அது.
நாடக அளிக்கையின் எந்தத் தார்ப்பரியங்களையும் விளங்கிக் கொள்ள முடியாத, நாடகத்தின் விளங்கப்படுத்தல்களை  உள்ளார அறிந்து கொள்ளமுடியாத நாடகங்களை நிகழ்த்தி எம்மை ஏறுமாறாக்கிய பல நெறியாளர்களை இந்த ரொரண்டோ நாடக உலகு இன்னமும் தாங்கிக் கொண்டே இருக்கிறது.


இந்தச் செல் நெறியைக் குழப்பி நாடக அளிக்கையில் பன்முக வாசல்களை ஒருமித்துத் திறந்திவிட்டிருக்கும் ஒரு பொம்மையின் வீடு என்ற அளிக்கை குறித்து நாம் விலாவரியாகப் பேசவேண்டும்.


ஒரு நாடக அளிக்கைக்குத் தேவையான வாசல்களை மட்டும் திறந்து விடக் கூடிய அரங்க அமைப்பைத் தெரிவு செய்வதில் இருந்து அந்த அமைப்பை நகர்த்தும் சிறிய உத்திகளைக் கையாளும் விதம் என்று கச்சிதமான அசைவுகளுடன் நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்த உடல் பொருள் ஒளி இசை என்று அனைத்தையும் நீங்கள் கண்ணிமைக்கும் கணத்தில் தவறவிட்டுவிடக்கூடியபடி எம்மைக் கட்டி வைத்திருந்த கணங்களை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். கண்ணிமைத்திருந்தால் தவற நீங்கள் விட்டிருக்க வேண்டும். இப்படித் தவற விடக்கூடிய கணங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நெறியாள்கையினை  முக்கியமாக நீங்கள் அனைவரும் கவனம் கொள்ளவே வேண்டும்.

எமக்குத் தெரியும் “துன்முகி” என்றும் “கங்கு” என்றும் “யார் இட்ட தீ” என்றும் நம்மை உருக்குலைத்த நாடக அளிக்கைகளைக் கண்டு உண்மையில் வெதும்பித்தானே போயிருந்தோம். ஒரு தரம் மிக்க அளிக்கை அரங்கினைப் பயன்படுத்தி இவ்வாறான நாடகங்களையும் அமைக்கமுடியும் என்று காட்டிய துன்பியல் நிகழ்வுகளைக் கடந்த காலங்களில் கண்டு வெதும்பியிருந்தவர்களில் நானும் ஒருவன். அந்த வகையில் இந்த முறை “ஒரு பொம்மையின் வீடு” அளிக்கையை அரங்கில் பார்த்து விட்டு  அடைந்த நிம்மதி என்னவென்றால் இனிவரும் காலங்கிளில் கங்குவையோ துன்முகியையோ யார் இட்ட தீ போன்ற எதனையும் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என்பதுவே அந்த நிம்மதி. மனவெளி அரங்காடல் அமைப்பிற்கு இருக்கின்ற தெரிவு கூட இனிவரும் காலங்களில் இந்த “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தைத்  தாண்டிய தெரிவாகவே இருக்கவேண்டும் என்பது மிப்பெரிய நிம்மதி.

இதற்கு முன்னர் பி. விக்னேஸ்வரன் அவர்களது நாடகங்கள் எதனையும்  நான் பார்த்தது இல்லை. நான் கனடா வந்த காலங்களில் அவரது நாடகங்கள் மேடை ஏறவில்லை. அவர் ஊடகம் ஊடகம் என படு பழுவுடன் இருந்த காலங்களாக இருந்தன அவை. அந்தக்காலங்கள் மிக அநியாயமானவை என அவரே தனது முக நூலில் இப்போது பதிவு செய்திருந்தார். அந்தக் காலங்கள் அவருக்கு இருண்ட காலமாகவே இருந்திருக்கிறது. பி. விக்னேஸ்வரன் அவர்கள் இனிவரும் காலங்களைத்  தக்கன பயன்படுத்துவார் என்றே நினைக்கிறேன். அதுவே எமது விருப்பமும்.

இந்த “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தை குழந்தை ம. சண்முகலிங்கம் “ஒரு பாவையின் வீடு” என்று மேடையேற்றியிருக்கிறார் எனவும் சீனாவில் கூட பலதடவை பரவலாக மேடையேற்றப்பட்டது எனவும் திரையில் அது காட்சியாக இருக்கிறது எனவும் இங்கே விக்னேஸ்வரனின் நெறியாள்கைக்கு ஒரு வேலையும் இல்லை எனவும் இருக்கின்ற கருத்துக்களையும் நான் கேட்கின்றேன்.

இப்படித்தான் இங்கே “கருஞ்சுழி”யும் மேடையேற்றப்பட்டது.  வ. ஆறுமுகத்தினது “கருஞ்சுழி” நாடகத்தினை இந்தியாவிலும் பாரீசிலும் ஆறுமுகம் அவர்கள் மேடையேற்றினார். நான் கனடா வந்திருந்த காலங்களில் அவரது கருஞ்சுழி அளிக்கையைப் பார்த்திருக்கிறேன்.  எமது சூழலுக்கு பலதடவை மேடையேற்றப்பட்ட நாடக அளிக்கைகள் தான் இன்னமும் தேவைப்படுகின்றன. மிகக் காத்திரமாக பாரிய உழைப்பில் 2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கருஞ்சுழியினை மேடையேற்றிய ஞானம் லம்பேட் அவர்களை தற்போது இந்த நாடகச் சூழலுக்குள் நாம் காண்பதேயில்லை. இன்னொரு தளத்தில் ஞானம் லம்பேட் அவர்களும் பி.விக்னேஸ்வரன் போலவே இருக்கிறார். நாடகத்தினை தம் மனவளத்தில் கொண்டலைபவர்கள் இப்படி ஊடகம் என்று சொல்லி இருண்ட காலத்திற்குள் உழன்று போவதில் எனக்கு உவப்பில்லை.

பி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்த "ஒருபொம்மையின் வீடு"நாடகத்தை நமக்குத் தந்திருப்பதுபோல் ஞானம் லம்பேட் அவர்களிடம் இருந்தும் ஒரு காத்திரமான படைப்பு ஒன்று  வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டு “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தில் பங்காற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும் மனவெளி நாடக அமைப்பிற்கும் மிகுந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  


இங்கு கடந்த காலங்களில் இருந்த அளிக்கைகளில் சிதிலமடைந்த மனதை உருக்கிவிட்டிருக்கிறது. ஒரு அரங்க அளிக்கை குறித்ததொரு படிப்பினையாகவும் நம்மவர்கள் இந்த “ஒரு பொம்மையின் ஒரு வீடு” நாடகத்தினைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள வேண்டியுமிருக்கிறது.

Editing & Ghostwriting சோபாசக்தியின் பித்தலாட்டம்- கற்சுறா

  அண்மைக் காலமாக, மிகக் கடுமையாக சோபாசக்தியின் இலக்கியச் செயற்பாட்டுமுறையை நான் ஏன் எதிர்த்து வருகிறேன்? கற்சுறா சோபாசகத்தியின் இலக்கியச் செ...