- கற்சுறா-
உங்கள் கேள்விகள் என்னவென்று சொன்னால்தானே பதிலோ விளக்கமோ சொல்லமுடியும்? என அருண்மொழிவர்மன் அவர்கள் மீண்டும் என்னிடம் கேட்ட மேன்முறையீட்டிற்கான விளக்கம்.
அருண்மொழிவர்மன் அவர்கள் மீது நான் கவனம் கொள்ளும் அவசியம் ஏன் என்பதனை நான் ஏற்கனவே சொல்லியிருந்தாலும், மீண்டும் ஒருதடவை விரிவாகச் இங்கே சொல்லிப் போகிறேன்.
ஒரு புத்திசாதுரியமான உரையாடல்களை முன்வைப்பதாகக் காட்டிக்கொளும் அருண்மொழிவர்மன் அவர்களது சொற்கள், இந்த சமூகத்தில் ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் பொய்யான கருத்தியல்களுக்கு காரியமுலாம் பூசமுனைகின்றன என நான் அவதானிக்கும் விடயங்களில் அவரை நான் இடையூறு செய்யவும் தயங்குவதில்லை. அவ்வாறான இடங்களில் நான் மற்றவர்களைப்போல் பாரா முகமாகவும் இருப்பதில்லை. என்னால் முடிந்தவரை நான் அவற்றைக் கோடிடுகிறேன்.
ஒரு கொடிய யுத்தத்தின் பின்னால் எழும் அத்தனை செயற்பாடுகளும் நமது சமூகத்தை ஏதோ ஒரு வழியில் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என நம்புகிறேன். அது ஒரு சமூகச் செயற்பாடாக இருந்தாலும், ஒரு உரையாடற் களமாக இருந்தாலும் இனியாவது எம்மிடம் ஒரு கறாரான நேர்மை இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவ்வாறு இல்லாமற்போகும் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டி உரையாடுதலும் அவ்வாறு முடியாது போகுமிடத்து அதனைச் சுட்டிக்காட்டியபின் விலகிப்போவதுமே சரியானதாக இருக்கும்.
எவர் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் பாராமுகமாக இருந்து என்னுடைய கருத்தையும் என்னுடைய இலக்கியத்தையும் என்னுடைய சமூகச் செயற்பாட்டையும் மற்றவர்கள் புகழ்ந்தோதவேண்டுமென நினைத்து வாழும் ஒரு தற்குறி மனநிலை என்னிடம் ஒருபோதும் இருந்ததில்லை. அதற்கு நான் தலை வணங்கியதுமில்லை. என்னுடைய கருத்துத் தளத்தில் என்னுடைய அறிவின் தரத்தில் என்முன்னால் தவறு என நான் காணும் இடங்களை நோக்கி நான் கேள்வி கேட்டுத்தான் போகிறேன். குறைந்த பட்சம் அதற்குரியவர்கள் பதில் சொல்லாது கடந்து போனாலும் நான் அதனை அடையாளம் காட்டிச் செல்லவேண்டும் என நினைப்பது ஏனென்றால், “நானும் அம்மாதிரியான செயற்பாடுகளிற்கு உடந்தையானவன் இல்லை” என்பதற்காகவே அன்றி உங்களது அடையாளத்தை அழிப்பதற்காகவோ அல்லது சமூகத்தில் உங்கள் பாத்திரத்தைக் கொலை செய்வதற்காவோ இல்லை என்பதனை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.
நீங்களும் உங்களைப் போன்றவர்களும் செய்யும் செயல்களால், உங்கள் எழுத்துக்களால், எமது சமூகம் கடந்தகாலத்தில் எவ்வாறான அழிவுகளைச் சந்தித்தது என்று எழுதியதுபோல், அடையாளம் காட்டியது போல், இப்போதும் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டுகிறேன். ஆதலினால் நான் எனது கருத்தை வெளிப்படையாக முன்வைத்துவிடுகிறேன். அதனைப் பொறுத்துக் கொள்வது உங்களுக்குக் கொஞ்சம் சிரமமான காரியந்தான்.
அந்தவகையில் என் அறிவுக்கெட்டிய தளத்தில் ஈழத் தமிழ்த் தேசியத்தை முன்வைத்து உரையாடல் நடக்கும் தளங்களில் எனது கவனம் கொஞ்சம் அதிகமாகவே இருந்துவிடுகிறது. கற்பனைகளில் உதிர்த்த புராணக் கதைகளைப் போலவோ, அல்லது எங்கேயோ ஒரு தூரதேசத்தில் நடந்த ரஷ்யப் புரட்சிக் கதைகள் போலவோ, கீயூபப் புரட்சிக் கதைகள் போலவோ, நம்மால் உணரவே முடியாத சாண்டினிஸ்டாப் புதல்விகளின் கதைகள் போல் இருந்ததில்லை எமது ஈழக் கதைகள். உங்களைப் போல் நானும் கண்ணெதிரே பட்டுணர்ந்த “பாவக் கதைகள்” அவை.
தமிழீழம் என்பதோ அல்லது ஈழத்தமிழ்த் தேசியம் என்பதோ ஒரு “பொய்யான கட்டுக்கதை” என்பதனை நான் இப்பொழுதும் பரிபூரணமாக நம்புபவன். கிடைத்த நாற்பது வருடகாலத்தில் அது தன்னை தர்க்க ரீதியாகவோ அல்லது மனிதாபிமான ரீதியாகவோ வளர்த்துக் கொள்ளவேயில்லை. மானிட முன்னேற்றத்தை அழித்து அது என்னவகையான அட்டூழியம் செய்தும் தன்னை ஒரு முக்கிய பொருளாக அடையாளம் காட்டும் பணியையே தொடர்ந்தும் செய்தது. இன்றும் செய்ய முனைகிறது. இன்றும் கூட கடந்த கால அனுபவத்தை வைத்து தன்னை மாற்றத்திற்குள்ளாக்கவில்லை. ஏற்கனவே அவ்வாறு செய்யப்பட்ட அந்தப் பணிக்கு “பங்கம்” விளைந்து விடாதபடியான ஆய்வுகள் செய்யப் பல புதுப்புது ஆய்வாளர்கள் யுத்தத்தின் புதல்வர்களால் தோற்றுவிக்கப்பட்டார்கள். அந்த வகையின் தொடர்ச்சியாக இன்று அருண்மொழிவர்மன் அவர்களும் எனக்குத் தெரிவதால் மட்டுமே நான் அவரை இடையூறு செய்கிறேன். மற்றப்படி அவரைக் கரித்துக் கொட்டுவதற்கு எனக்கும் அவருக்கும் என்ன உறவுப்பகையா? கொடுக்கல்வாங்கல் பகையா? எதுவுமேயில்லை.
அவர் ஈழ அரசியலையோ, அல்லது கடந்தகால விடுதலைப் போராட்டம் என்றழைக்கப்பட்ட கதையாடலையோ அவர் ஒரு பகுத்தறிவுச்சிந்தனையுடன் அணுகவில்லை. தனியே ஒரு தேசிய மனநிலை கொண்டலையும் ஒரு அசல் யாழ்ப்பாணியின் சிந்தனையோடே ஒன்றியதுதான் அவரது நிலைப்பாடும் என்பதால் மட்டுமே அவரை இடைமறிக்க வேண்டியிருக்கிறது.அவரின் நிலைப்பாட்டை இந்த சமூகத்தின் முன் வெளிக்காட்டவேண்டியிருக்கிறது.
ஆனால் அவரோ தனது பாத்திரத்தை நான் கொலை செய்கிறேன் என்பதாகவும் தன்னை நடத்தைப் படுகொலை செய்வதாகவும் நான் ஒரு ஆய்வு இல்லாத கதை சொல்லும் ஒருவர் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அருண்மொழிவர்மன் அவர்களைப் பார்த்து நான் பரிகசிக்கத்தான் முடியும். அல்லது “செய்வதையும் செய்துவிட்டுத் திருட்டுமுளி முளிக்கிறாய்” என்று கவுண்டமணி பாணியில் திட்டிப் பேசத்தான் முடியும்.
பலதடவைகள் அவரை நோக்கி நான் கேள்வி எழுப்பும் தருணங்களைப் பார்த்தும் பார்க்காது போகமுனையும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்துதான் இருக்கின்றது. ஆனாலும் சமூக ஊடக வலையமைப்பின் தாக்கம் ஒரு இடத்தில் அவரைப் பேச வைக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் என்னை நோக்கி…
“உங்கள் கேள்விகள் என்னவென்று சொன்னால்தானே பதிலோ விளக்கமோ சொல்லமுடியும்?” என்பார்.
அவரை நோக்கி நான் எழுப்பும் கேள்விகளைப் பற்றித் தெரியாதைப் போல் எப்போதும் புதிதாகக் கேட்பார். இதனை அவர் ஒரு தந்திரம் என்று நினைக்கிறார். தான் இவ்வாறு புதிதாகக் கேட்பதால் அந்தக் கேள்விகள் செயலிழந்து விடும் என நம்புகிறார். அதனாலேயே அவரை நோக்கித் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டிய ஒரு நிலை தோன்றுகிறது.
அவரின் இந்த வகையான அணுகுமுறையை “புதியசொல்” செயற்பாடுகளிலும் “விதைக் குழுமச்” செயற்பாடுகளிலும் மற்றும் “நூலகம்” செயற்பாட்டு நிலைகளிலும் தாங்களும் அனுபவப்பட்டதாகப் பலர் சொல்லியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதையெல்லாம் எக்காலத்திலும் நான் பொருட்படுத்தவேயில்லை. அவற்றை அவர்கள்தான் பொதுவெளியில் முன்வைக்க வேண்டும். “புதிய சொல்” குழுமத்திற்குள் நடைபெற்ற பல்வேறு குழறுபடிகளை இறுதிக்காலத்திலாவது அருண்மொழிவர்மன் அவர்கள் பொது வெளியில் முன்வைத்திருந்ததை நான் வரவேற்றேன். அவரின் கருத்து நிலைக்கு நானும் அதரவளித்தேன். ஆனாலும் அவை வெளிப்படையாக இன்னும் உரையாடப்படவேயில்லை. (நட்சத்திரன் செவ்விந்தியன் என அறியப்பட்ட அருண் அம்பலவாணர் அவர்கள் தான் இதனைப் பொதுவெளியில் வெளியிட்ட பின்னரேதான் உசாராகி புதியசொல் குழுமத்தின் உள்ளரசியலைப்ற்றி அருண்மொழிவர்மன் அவர்கள் வாய்திறந்தார் என்கிறார். இந்தக் கருத்து நிலை குறித்தும் அருண்மொழவர்மன் அவர்கள் எங்காவது பதில் சொல்லுவார் என நினைக்கிறேன்)
இவையெல்லாம் போக இங்கே அவருடன் உரையாடவேண்டிய நிலை உருவானதன் தேவை என்னவென்றால்,
“இதேநேரம், இலங்கையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய இனப்பிரச்சனையை முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதவில்லை என்பதுவும் அது குறித்த விவாதங்களை முன்னெடுக்கவில்லை என்பதும் கவனிக்கவேண்டியது. இலங்கையைப் பொருத்தவரை பெரும்பான்மையான பொதுமக்கள் இடதுசாரிக் கட்சிகளில் நம்பிக்கை இழக்க இது ஒரு காரணமாயிற்று.”
என்று அவர் சொல்லியிருக்கும் கூற்றுப் பற்றியதானதுதாகத்தான் இருந்தது எனினும் அவரின் மற்றய எழுத்துக்களின் அணுகுமுறை பற்றிய மதிப்பீடும் இந்த உரையாடலுக்கு ஒரு காரணந்தான் என்பதனையும் மறுக்கவே முடியாது. அந்த மதிப்பீட்டின் வழி நின்றுதான் இதனை ஒரு “புலிச்சொல்” என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்கிறேன். அது புலிச் சொல்லேதான்.
இங்கே “பெரும்பான்மையான பொதுமக்கள்” என இவர் குறிப்பிடும் பொதுமக்கள் யார்? என்பதும் அவர்களிடம் நம்பிக்கை இழந்தது என அவர் அடையாளம் காட்டும் இடம் எது என்பதுவுந்தான் எனது கேள்வி. இலங்கையில் அப்படி இடதுசாரிக் கட்சிகளிலோ அல்லது இடதுசாரிகளிலோ மக்கள்ஒருபொழுதிலும் நம்பிக்கை இழக்கவில்லை. மக்களுக்காக பல்வேறு சமூகக் கரிசனையுள்ள போராட்டங்களை அவர்கள் நிகழ்த்தி மக்களின் ஆதரவைப் பெற்றுத்தனிருந்தார்கள். மக்கள் நம்பிக்கையுடன்தான் இருந்தார்கள். அதில் சிங்கள - தமிழ் இடதுசாரிகள் இணைந்து செயற்பட்ட காலங்கள் எல்லாம் உண்டு. ஆனால் அருண்மொழிவர்மனுக்குள் உள்ளேயுள்ள தமிழ்த் தேசிய மனம் அதிலும் புலித் தேசியமனம் எதையும் எல்லை தாண்டிப் பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை. எவ்வாறு அவர் ஒரவர் அனைத்து உரையாடலுக்குள்ளும் தமிழ்த் தேசிய மனநிலையை ஒழித்து வைத்திருந்து கதை சொல்ல முனைகிறாரோ அதே போன்றுதான் ஆரம்பகால விடுதலைப் போராட்ட சிந்தனைகளில் அனைத்து மக்களினதும் சமூகநீதிக்கான போராட்டம் என்ற கதையை மறைத்து சிங்களத்திற்கெதிரான, சிங்கள அரசியல் அதிகாரத்திற்கெதிரான போராட்டமாக மட்டும் குறுக்கப்பட்டது. அதன் வெறிதான் சிங்களக் குழந்தைகளையும் சிங்களப் பொதுமக்களையும் ஈவிரக்கமின்றிக் கொன்றுவிடத் தமிழ் மனம் விரும்பியது. அல்லது விரும்ப வைக்கப்பட்டது. கென்பார்ம் டொடர் பார்ம் கொலைகள் நடந்தேறியபோது மக்கள் என்ன மனநிலையிலிருநடதார்கள் என்பது அருண்மொழிவர்மன் போன்றவர்களால் அறியவே முடியாது. அதற்குள் இடதுசாரி மனநிலையை எப்படித்தான் விளங்குவார்கள்?
இந்தமனநிலை வெளிப்பாடு குறித்ததுதான்’ எனக்கும் அவருக்குமான முரண்பாடு.
இதுகுறித்துக் கேள்வி எழுப்பியதும் இது ஒரு முழுமையான கட்டுரை அல்ல இது ஒருவருக்கான பதிலில் சொல்லப்பட்ட விடயம் என்று அந்தக் கருத்தின் மீதான கவனத்தைக் மதிப்புக் குறைத்துச் சொல்வதால் இந்தக் கருத்தின் அர்த்தம் மாறுபடப் போவதில்லை.
ஈழத்தில் இடதுசாரிச் சிந்தனையுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த அத்தனை செயற்பாடுகளும் எவ்வாறு துப்பாக்கி முனையில் செயலிழக்கப்பண்ணப்பட்டது என்பதனை அனைவரும் நன்கு அறிவார்கள். அதுதான் வரலாறு.
ஆனால் தேசிய இனப்பிரச்சனை பூதாகாரமாக்கப்பட்ட காலங்களில் தொடங்கப்பட்ட அதுகுறித்த விவாதங்களை அவர்கள் முன்னெடுக்கவில்லை என்பது எவ்கையில் சரியானது? தேசிய இனப்பிரச்சனையின் சிக்கல்கள் குறித்த விவாதங்கள் அவர்கள் தமது கட்சிக்குள் செய்துதான் இருந்தார்கள் என அறிந்திருக்கிறேன். அதன் பின் தோன்றிய ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி அவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள்.
அதே இடதுசாரிகளில் சிலர் பின்நாட்களில் உங்களைப் போலவே ஆயுதப் போராட்டத்தையும் தமிழ்த் தேசியத்தையும் ஏன் புலித் தேசியத்தையும் கூட ஆதரித்து நின்றார்கள் என்ற கருத்துக்களை இந்த உரையாடல்களின் போது பல நண்பர்கள் ஆதாரத்துடன் நினைவூட்டிச் சென்றிருக்கிறார்கள். அதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.
மேலும், அருண்மொழிவர்மன் அவர்கள் இப்படியான கருத்துக்களை முன்வைக்கும் பொழுது அவரை நோக்கி நான் கேள்விகளை எழுப்புவதன் காரணம், நமது சூழலில் ஏற்கனவே ஆய்வுகள் ஆராட்சிகள் மற்றும் புலனாய்வுகள் என எழுதியவர்களது கருத்தினதும் இருப்பினதும் கேள்வி எனக்குள் இருக்கிறது. அதனை அடையாளம் காட்டி நின்ற எழுத்துத் துறையின் போலித்தனம் குறித்த கவனம் எனக்குள் இருக்கிறது. அது இந்த சமூகத்திற்கு ஏற்படுத்திய தாக்கம் பற்றிய புரிதல் எனக்குள்ளது. அதனாலேயே இன்று அவரை நோக்கி நான் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறேன். ஒருபக்கம் சுயமரியாதை சமூகநீதி பற்றிப் பேசமுனையும் அவர் இன்னொருபக்கம் அதற்கெதிராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் இவரது சிந்தனையை ஒரு பகுத்தறிவுச் சிந்தனையில்லை என்கிறேன்.
அதனடிப்படையிலேயேதான்
கடந்த காலத்தில் அவர் தொடர்ந்தும் அடையாளம் காட்டும் இரண்டு பூக்கள் கவிதை குறித்து அம்பலப்படுத்தினேன். இந்த மோசமான ஒரு கவிதையையும் புதுவை இரத்தினதுரையின் இன்னொரு கவிதையையும் மே 18 க்கு ஒருதடவையும் நவம்பர் 27இல் ஒருதடவையுமாக கடந்த சிலகாலமாகத் தொடர்ந்தும் பதிவிட்டுக் கொண்டே வந்திருக்கிறார். இன்றும் வருகிறார். அவரால் இந்த சமூகத்திற்குள் அதன் தாக்கத்தைப் பரிந்து கொள்ள முடியாதே இருக்கிறது. அதனால்த்தான் அவரைப் பகுத்தறிவற்றவர் என்கிறேன்.
முக்கியமாக சமூகநீதி பற்றியோ அல்லது ஒரு அதன் தேடலில், பகுத்தறிவுடன் ஈழப் போராட்டம் குறித்து அக்கறை கொள்ளும் ஒருவரால் இந்தவகைக் குறிப்பிட்ட காலத்தை மட்டும் ஒருபொழுதிலும் அடையாளமிடவே முடியாது என்பது என்னுடைய கணிப்பு. ஆனால் அருண்மொழிவர்மன் அவர்கள் திட்டமிட்டே அதனைத் தொடர்ந்து செய்து வருகிறார். இதுகுறித்து அபத்தம் இதழிலும் எனது முகநூலிலும் நீண்ட காலத்தின் முன்பே வெளிப்படுத்தியிருக்கிறேன். அப்போது இந்தமாதிரியான அவரது மனநிலையைக் “கார்த்திகைப் பூ மனநிலை” என அடையாளம் காட்டியிருக்கிறேன். ஆனால் அதுகுறித்துக் கருத்துச் சொல்லாதிருப்பதற்கான காரணமாக இவையெல்லாம் “அவதூறு” என்ற ஒற்றைச் சொல்லோடு மிக இலகுவாகக் கடந்து விடுகிறார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டும். இன்றைய மட்டை கட்டிய புத்திசாலிகளுக்கு “அவதூறு” என்ற அந்தச் சொல் மிக வசதியானதும் இலாபகரமானதும்.
இங்கே குறிப்பிட்டுக் காட்டிய அவரின் சொல்லாடல்களின் விம்பத்தை நான் எழுதிய போதும் வழமைபோன்று அவதூறு எனத்தான் அவர் கடந்து சென்றிருப்பார். அந்த முகநூல் பதிவின் கீழே வெளியிடப்பட்ட தொடர் பின்னூட்டங்களே அவரைப் பதில் எழுதத் தூண்டியது. ஆனாலும் அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சந்தேகங்களுக்கான பதிலை அவர் சொல்லவேயில்லை. அங்கே அவர் எழுதியிருந்த சிலவற்றை நான் இங்கே கோடிடுகிறேன்.
“முன் முடிவுகளோ அல்லது திரிவுபடுத்தல்களோ இல்லாமல் புரிந்துகொள்வதும், குறைந்த பட்சம் அதற்கு முயற்சி செய்வதும் பின்னர் எதிர்வினையாற்றுவதும் முக்கியமானது. அவப்பேறாக நண்பர் கற்சுறாவுக்கு இந்த நடைமுறை சாத்தியமாவதில்லை.”
என்று என்னுடனான கடைசி உரையாடலில் சொல்கிறார் அருண்மொழிவர்மன்.
அவருடை இந்தமாதிரியான எழுத்துக்களில் மட்டுமல்ல மொழித்தேசியம், இனத் தேசியம். ஈழவிடுதலை, இன அழிப்பு, தமிழ்மரபு, மரபுத்திங்கள், மே 18, யூலை 23, கார்த்திகை 27 என மட்டும் இன்றுவரை அடையாளம் காட்டிக் கொண்டிருப்போர் மீது நான் முன்முடிவுகளுடனேயே அவதானம் கொள்கிறேன். இந்தமாதிரியான அடையாளங்களில் என்னுடைய முடிவுகள் முன்முடிவுகள்தான். அதில் மாற்றமேயில்லை. ஆனால் அந்த முன்முடிவு எழுத்துக்கள் உங்களுக்குத் திரிவு படுத்தல்கள் எனத்தான் விளங்கிக் கொள்ள முடியுமாயின் நான் என்னுடைய பழைய கட்டுரைகளை எடுத்து வாசியுங்கள் என்றுதான் சொல்லடியும்.அதனைத்தாண்டி என்ன சொல்லமுடியும்?
மரபுத்திங்கள் என்று அடையாளம் காட்டி ரொரண்டோவில் மறை 40 டிகிரிக் குளிரில் வெள்ளை வேட்டியுடனும் வெறுங்காலுடனும் பொங்கல் பானையுடன் இன்று ஸ்னோவிற்குள் நிற்பவர்கள் எல்லாம் 2009க்கு முன் எங்கு நின்றார்கள்? புலிகளின் பொங்கு தமிழில் சிவப்பு- மஞ்சள் ஆடையுடன் பொங்கிக் கொண்டிருந்தார்கள். அதே அவர்கள் வந்து, இன்று தமிழரின் மரபு. தைமாசம் உழவரின் மாதம் என்றும் உழவர் என்றால் தமிழர்கள் என்றும் சொன்னால் அதனை நம்பி நாமும் பின்னால் போக வேண்டுமா? இது இன்னொரு நாசத்திற்குக் கொண்டுபோய்விடாதா?
மண்டையிலுள்ள கொண்டையை மறைக்க வேண்டாமா நீங்கள்?
அதனால்த்தான் அருண்மொழிவர்மனுடைய சொற்களை “புலிச் சொல்” என்று நான் சொன்னேன். இப்பொழுதும் அப்படியேதான் நான் சொல்கிறேன். அவருடைய சொற்கள் அதிகமானவை புலிச் சொற்கள். அதனால்த்தான் அவரை அதிகம் நான் உற்று நோக்குகிறேன்.
நான் ஒன்றை இங்கே மிகக் கவனமாகப் பதிவு செய்கிறேன். ஈழவிடுதலையின் கதைகளில் விடுதலை உணர்வோடு ஆரம்பிக்கப்பட்ட காலங்கள் தொடக்கம் கொலைக்கலாச்சாரம் தொடங்கிவிட்டது. மக்களின் விடுதலையென நம்பிச் சென்ற எத்தனையோ பிள்ளைகள் வீட்டிற்குத் திரும்பவேயில்லை. ஏன் திரும்பவில்லை என்பதற்குள் பல்லாயிரம் சம்பவங்கள் இருக்கின்றன. பல்லாயிரம் கதைகள் இருக்கின்றன. பல்லாயிரம் அடையாளங்கள் இருக்கின்றன. ஆனால் அந்தப் பிள்ளைகளைப் பெற்றதாய்களுக்கு கண்ணீர் விடவும் அழுவதற்கும் ஒரு காரணம் மட்டுந்தான் உள்ளது. பெற்றதாயாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் நீங்களோ பல பிள்ளைகளை இழந்த தாய்மாரின் கண்ணீருக்கு அர்த்தம் இல்லாமல் செய்து கொண்டு வருகிறீர்கள். அவர்களை அழுவதற்குக் கூட இடமற்றதாக்குகிறீர்கள். ஆனால் நீங்களோ இரண்டு பூக்களுடன் வந்து அவர்களுக்கும் இடம் கொடுக்கிறோம் என்கிறீர்கள். இது உன்னதமான ஒரு அயோக்கியத்தனம்.
புலிமனதின் வரையறை என்னவாக இருக்குமென்று அனைவருக்கும் தொியும். அவர்கள் தங்களை மட்டும் மாவீரர்கள் என்றும் தங்களால் கொல்லப்பட்டவர்களைத் துரோகிகள் என்றுந்தான் சொல்வார்கள். ஆனால் சமூகநீதி பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு அதே புலிமனதோடு கிறீஸ்பூதங்களாய் இருப்பவர்கள் இதனைச் செய்யமுனையும் போது நான் கோபடைகிறேன். அதனால் உங்களை எனக்குக் கிடைத்த கெட்ட வார்த்தைகளால் திட்டுவதைத் தவிர எனக்கு வேறு போக்கிடமில்லை.
நான் உங்களை நோக்கி முட்டாள் என்கிறேன். அயோக்கியர்கள் என்கிறேன். உண்மைதான். கல்வியறிவோடும் படிப்பறிவோடும் “முட்டாள்” என்பதனை அடையாளம் கண்டீர்கள் என்றால் அர்த்தம் கொண்டீர்கள் என்றால் உங்களை விடவும் நானே முட்டாள். எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் முட்டாள்கள் எனப் பேசுவது கல்வியறிவு பற்றியதல்ல. பகுத்தறிவு பற்றியது.
ஒரு சமூகம் தன்னைத் தற்காத்துக் கொள்ள தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காடும் மேடும் அலையும் போதும்- போரிலிருந்து காப்பாற்ற தன்னுடைய குழந்தைகளை மாதக் கணக்கில் காட்டில் ஒழித்துவைத்துப் பரன் கட்டிப் படுக்கவைத்த கதைகளைக் கேட்ட பிறகும்- அதையும் மீறி அவர்களை நித்திரைப் பாயில் பிடித்துக் கொண்டு போய்க் கொல்லக் கொடுத்தபின்னும் “யுத்தம் என்றால் இழப்பு வரத்தான் செய்யும்” என்று கருத்தியல் கதை சொல்பவனை முட்டாள் என்று சொல்லாது வேறு என்ன கெட்டவார்த்தை சொல்லித் திட்டமுடியும் என்று சொல்லுங்கள். நான் அவ்வாறே சொல்கிறேன். தன்னுடைய உறவுகளையெல்லாம் தற்காத்துக் கொண்டு அடுத்தவனின் பிள்ளைகளைப் பலிகொடுத்து ஈழம் எடுக்க நினைத்தவனை எந்த வசைச் சொல்லைக் கொண்டு திட்டுவது?
அதனையும் விடக் கேவலமானது, முள்ளிவாய்க்காலில் மட்டுந்தான் மக்கள் கொல்லப்பட்டார்கள் எனச் சொல்லி புலிகளின் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுக்கு ஒரு தடவையும் புலிகளால் அடையாளம் காட்டிய மாவீரர் தினத்திற்கு ஒரு தடவையும் அஞ்சலிக் கவிதை செய்பவர்களை நாம் எப்படித்தான் முட்டாள்கள் என்று திட்டாதிருப்பது?
கீழேயுள்ளது அரண்மொழிவர்மன் அவர்கள் குறித்து நான் அபத்தம் இதழில் எழுதியது.
—-
இந்தப் பதகழிப்பில் எல்லோருக்கும் நல்லவனாக நடிக்க அடுத்த ஒரு அயோக்கிய இலக்கியக் கூட்டம் வெளிக்கிட்டிருக்கிறது. துரோகிக்கும் ஒரு பூ. தியாகிக்கும் ஒரு பூ என்று இரண்டு பூக்களை ஏந்தியவாறு வருடத்திற்கு இரண்டு முறை அலைகிறது. ஒன்று புலிகளின் மாவீரர் தினத்திற்கும் மற்றது புலிகள் மக்களை அழித்து தாங்களும் அழிந்த மே மாதத்திற்கும்.
இந்தக் கவிதையை எழுதியவர், ஈழ இலக்கிச் சூழலில் பலரும் “கவிஞர்” என அடையாளம் சொல்லும் சித்தாந்தன். ஆனால் இந்தக் கவிதையை அவருக்கும் மேலால் காலாகாலமும் தொடர்ந்து காவுபவர் எழுத்தாளர் அருண்மொழிவர்மன். இவர்கள் தாங்கள் கடந்து வந்த அழுகிய புலித் தேசியக் காய்ச்சலில் இருந்து இன்னும் அறுபட முடியாது தொங்குபவர்கள்.அசோக் அண்ணனின் பாசையில் சொன்னால் புலிகளின் தொங்கு தசைகள். அதற்கும் வாலாட்ட வேண்டும் மற்றப்பக்கமும் தலையாட்ட வேண்டும் என்ற வில்லங்கத்தில் கொண்டலையத் துடிக்கும் விலாங்குக் கவிதை இது. இந்தக் கவிதை சொல்ல வரும் விடயம், அதனைத் திரும்பத் திரும்பப் பதிவிட்டு அதற்கான நிலை நிறுத்தலைக் கோர நினைக்கும் மனப்பான்மை இந்த சமூகத்தை இன்னும் குழிதோண்டிப் புதைக்கச் செய்பவை. இதற்கும் நிலாந்தன் தினமும் கொட்டிக் கொண்டிருக்கும் நஞ்சிற்கும் எள்ளளவும் வித்தியாசமில்லை. அன்று காசி ஆனந்தன் எழுதிய “களை” எடுக்கும் கவிதைக்கும் இதற்கும் இயல்பில் மாற்றம் இல்லை. இது நவீனமடைந்த நச்சுச் செயல். NEO காசியின் வளர்ச்சி.
என்று வெளிப்படையாக எழுதியிருக்கிறேன்.
“காலமும் மொழியும் ஆட்களுந்தான் வேறு. ஆனால் கதை ஒன்றுதான். ஒரே சிந்தனைதான். நவீனமடைந்த நச்சு. இந்தச் சிந்தனையைத்தான் அறுந்தழிய வேண்டும் என்கிறேன் நான்”.
என்று கடந்தவருடம் அபத்தம் இதழில் எழுதியிருந்தேன். இவ்வாறு எழுதிக் காட்டிய பிறகும் நான் எங்கே முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு மட்டும் அஞ்சலி செய்கிறேன். நான் எங்கே அப்படிச் சொன்னேன் என்று புதிதாகக் கேட்பதைப் போல் ஒரு கேள்வி கேட்பார். அதுதான் அவருடைய தந்திரமே. மற்றவர்களைக் களைப்படைய வைப்பது.
இந்தக் கவிதையை நீங்கள் அனைவரும் கொஞ்சம் வாசியுங்கள். இதன் வரிகளில் இருக்கும் அயோக்கியத்தன வார்த்தைகளை உற்று நோக்கங்கள்.
அது என்ன நினைவு கூர முடியாதவர்கள்? அவர்கள் இந்த சமூகத்தில் யார்? அவ்வாறு யார் அடையாளம் கொள்வது? அது என்ன மனநிலை? சரி அப்படித்தானென்றாலும், உங்களுக்கு ஏன் இரண்டு பூ? ஒரு பூவை நீங்கள் ஏன் இரண்டு பேருக்கும் பொதுவாக வைக்க முடியவில்லை? அப்போ நீங்கள் யார்? சூத்திரனுக்கு கடமை செய்யவோ மணம் முடிக்கவோ உரிமையில்லை என்கிறான் பார்ப்பான். உங்களுடைய சிந்தனைக்கும் பார்ப்பானுடைய சிந்தனைக்கும் என்ன வித்தியாசம்?
தமிழ்ச் சூழலில் துரோகி எனக் கட்டமைக்கப்பட்ட விம்பத்தைக் கட்டுடைத்து எதிர் கொள்ளத் தயங்குபவன் எவ்வாறு பகுத்தறிவாளனாக இருக்க முடியும். இவ்வாறு உள்ளே வைத்திருக்கும் புலியின் நஞ்சிற்கும் பெரியாருக்கும் என்ன தொடர்பு?
என்றுதான் கேட்கிறேன்.
‘ நான் நம்பியிருந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்கள், நான் நம்பியிருந்த கருத்துகள் ஏமாற்றிவிட்டன, அதனால் அருண்மொழிவர்மனுடன் உரையாடுகின்றேன் என்று சொல்லி அவருடன் நான் உரையாடவரவில்லை. மாறாக கடந்தகாலத்தில் அழுகிய தமிழ்த் தேசியமனநிலையில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர்களைப் போல் எழுதவரும் இன்னொரு தலைமுறை என்றுணர்வதால் மட்டுமே அருண்மொழிவர்மனை நோக்கிக் கேள்வி கேட்கிறேன். இதனைப் போன்ற மாயக் கதைக் கண்ணன்கள் பலரை இந்த சமூகத்திற்குள் அடையாளம் கண்டிருக்கிறேன். அடையாளம் காட்டியிருக்கிறேன். அதேபோன்றதொரு மாயக்கண்ணன்கள் இனியும் நமக்கு வேண்டாம் என்பதால் மட்டுந்தான் அவரை அடையாளம் காட்டிச் செல்கிறேன். மற்றப்படி எனக்கும் அவருக்கும் எந்தக் கரைச்சலும் இல்லை.
இந்த வகையான முறைப்பாடுகள் தாண்டி அவர் ஒரு நல்ல யாழ்ப்பாணத்துத் தமிழ்த் தேசிய மனநிலையிலிருந்து எழுதிய கட்டுரை ஒன்றையும் நீங்கள் வாசியுங்கள்.
அதுதான் அவரின் “பண்பாட்டுப் படையெடுப்பு” என்ற கட்டுரை. அந்தக் கட்டுரையில் வரும் சில வார்த்தைகளை இங்கே உதாரணமாகக் காட்டுகிறேன்.
“தொடர்ச்சியாக பண்பாடு சார்ந்த அம்சங்கள் மாறிச் செல்லும்போது உணவுப் பழக்கவழக்கம் மாறாது நீண்டகாலம் இருக்கக்கூடியது என்பதாக ஒரு கருத்து இருக்கின்றது. ஆனால் நாளாந்த வாழ்வின் உதாரணங்களின் அடிப்படையில் குறுகியகாலத்தில் ஈழத்தவர்களின் உணவுப்பழக்கங்களில் இடம்பெற்ற மாற்றங்களைப் பார்ப்போம். ஈழத்திலும் சரி, கனடாவிலும் சரி திருமண விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் பரிமாறப்படும் உணவுகள், சிற்றுண்டிகள் என்பவற்றில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எடுத்துக்கொண்டால், வழமையாக இருந்த உணவுகள் மாறி சடுதியாக பனீர் மசாலா, பட்டர் சிக்கன், நாண் உள்ளிட்ட உணவுப்பொருட்களும் சிற்றுண்டிகளுமே பிரதானமாகப் பரிமாறப்படுகின்றன. உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகள், சிற்றுண்டிகளிலும் அவற்றின் தயாரிப்பு முறையிலும் தென்னிந்திய வட இந்திய முறைகளே திடீரென்று பரவலடைந்துள்ளன. கனடாவில் இந்தப் போக்கினை தெளிவாக இனங்காணக் கூடியதாக இருக்கின்றது. நீண்டகாலமாக மக்கள் மத்தியில் நிலைத்த பெயரைக் கொண்ட கனடிய உணவகம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய சமையல் கலைஞர் ஒருவரிடம் பயிற்சிபெற்ற சமையல் கலைஞர்களை வைத்து அந்தத் தென்னிந்திய சமையல் கலைஞர் வழங்கிய உணவு தயாரிப்பு முறைகளின்படி (Recipe) தமது உணவுகள் தயாரிக்கப்படுவதாக விளம்பரம் செய்தது நல்லதோர் உதாரணம்.
அந்தப் பிரபலத்தை வைத்துத் தமக்கு விளம்பரமாக்க குறித்த உணவகம் நினைக்கின்றது. இந்தச் செயற்பாடுகளினூடக சமகாலத்தில் உணவுப் பண்பாடு மாற்றமடைகின்றது.
புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை குழந்தைகளும் சிறுவர்களும் தென்னிந்தியத் தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்பவற்றின் ஊடாகவே தமிழ்மொழியுடன் பரிச்சயம் அடைகின்றார்கள் என்றபோதும் அவற்றிலிருந்து பெற்றுக்கொள்வதையே தமது பண்பாட்டு வாழ்வியல் அம்சங்களாகக் கருதிக்கொள்கின்றார்கள் என்பது கசப்பான உண்மையே.”
என்கிறார்
பார்க்க:https://arunmozhivarman.com/2021/10/19/20211019/#more-3046
முதலில் இவர் குறிப்பிடும் ரொரண்டோவிலிருக்கும் அந்தப் பிரபலமான கடையின் பெயர்ப்பலகையில், மிக அண்மைக்காலம் வரை என்ன வகையான வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதனை இங்குள்ள பலரும் அறிவார்கள்.(2009 இன் பின் அது நீக்கப்பட்டிருக்கிறது) அருண்மொழிவர்மனும் நிச்சயம் அறிந்திருப்பார்.
“மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்” என்பதுதான் அந்த வார்த்தைகள்.
ஏன் இந்த வார்த்தைகள் அந்தப் பெயர்ப்பலகையில் பொறிக்கப்பட்டிருந்தன என்பதனை எந்த ஆய்வாளர்களும் ஆராயவில்லை. இவருக்கும் அதில் எந்தச் சிக்கலும் இருப்பதில்லை.
ஏனெனில் புலம்பெயர் நாடுகளில் மிக அதிகமாக பத்திரிகை நடத்தியவர்கள், வானொலி தொலைக்காட்சி நடத்தியவர்கள் தொடக்கம் வீடுகள் விற்பவர்கள், சாப்பாட்டுக் கடைகள் வைத்திருப்பவர்கள் வரை ஈழயுத்தத்தின் புதல்வர்கள்தான். இதில் யாருக்கும் எந்த வெட்கமும் இல்லை. அதனை வழி நடத்தியவர்களும் அவர்களே! இன்றும் அதனைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
“ தேசியக் கொத்து” என்பதை மட்டுமல்ல ஒரு உணவுப் பொருளுக்கு “மிதி வெடி” எனப் பெயர் வைக்கும் அளவில் நாங்கள் யுத்தத்திற்குள் அனைத்தையும் உள்வாங்கியிருந்தோம். தமிழ்த் தேசிய வெறித்தனத்தோடு மாண்டவீரர் கனவு பலிக்கும் என எழுதிக் கொண்டு மிதிவெடியும் தேசியக் கொத்துரொட்டியும் விற்பதில் நண்பன் அருண்மொழிவர்மனுக்கச் சிக்கல் இல்லை. கொத்து ரொட்டி விற்கும் இடத்தில் பட்டர்ச் சிக்கன் விற்பதுதான் படையெடுப்பாகிறது. கொத்து ரொட்டி என்ன தமிழர்களின் உணவா?
இலங்கையில் கொத்து ரொட்டி அறிமுகமாகிய காலங்களில் அது மாட்டுக் கொத்தாகத்தான் இருந்தது. இன்றும் இலங்கையில் அதிகமான ஊர்களில் மாட்டுக் கொத்துத்தான் முக்கியமானது. அது எப்படி மட்டன் கொத்தாகிப் பிரபலமானது? அந்த மாற்றத்திற்குள் ஒழிந்திருப்பது என்ன? என்ற தேடல் அவரிடம் இல்லாமல் இல்லை. அவருக்கு அது நன்றாகத் தெரியும். ஆனாலும் அந்தத் தேடலை முந்தி நிற்பது அவரின் தமிழ்த் தேசிய வெறி.
யாழ்ப்பாணத்தில் என்றால் தனித்தமிழ்ச் சமூகம் மட்டுந்தான்(அதற்குள் இருக்கும் எத்தனையோ பிரிவுகளிலும் ஊர் வித்தியாசங்களிலும் எத்தனையோ வகையான உணவுப்பழக்கங்கள் இருக்கின்றன) இலங்கையில் என்றால் பிரதேசங்களுக்கும் இனங்களுக்குமிடையில் உணவுகளும் சமைக்கும் முறைகளும் வித்தியாசப்பட்டுத்தானிருக்கின்றன. அவற்றுக்கிடையில் கலப்புகள் நடந்து கொண்டுதானிருக்கிறது. அவர் சொல்வதனைப் போல் அது நீண்டகால மாற்றத்தில் நிகழலாம். ஆனால் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேசிய உணவுகள் மரபுவழி உணவுகள் அல்லது பாரம்பரிய உணவுகள் என்ற படிமம் செல்லவே செல்லாது. உணவுகளில் தேசியம் பேசிக் கொண்டிருக்கவும் முடியாது. இது பல சமூகங்கள் இணைந்து வாழும் பிரதேசங்கள்.
இங்கே வாழும் தமிழர்களின் வீட்டைச் சுற்றித் தமிழர்கள் மட்டும் இருக்கமாட்டார்கள். பல்வேறு நாட்டவர்கள் பல்வேறு மொழியினைப் பேசுபவர்கள் பல்வேறு கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் சேர்ந்து வாழும் பிரதேசங்கள் இவை. கிடுகு வேலிச் சமூகமல்ல இங்கேயிருப்பது. இங்கேயொரு கொண்டாட்டம் நிகழ்ந்தால் அதில் பல்வேறு சமூகத்தினர் பங்குபற்றும் நிகழ்வாக இருக்கும். அதிலும் தமிழர்களின் பிள்ளைகள் எத்தனையோ வேற்று சமூகத்தவரைத் திருமணம் செய்து வாழத்தொடங்கி இரண்டு தலைமுறைகளுக்கு மேல் கடந்து விட்டது. இங்கே ஒவ்வொரு கொண்டாட்டங்களிலும் கட்டாயம் மாட்டிறச்சி இருக்க வேண்டும் என்ற நிலை தோன்றியிருக்கிறது. மாட்டிறச்சியே வாழ்காலத்தில் உண்டிராத குடும்பங்களில் அவற்றை விரும்பியுண்ணும் தலைமுறை தோன்றியிருக்கிறது. அவர்களில் யாருக்கேனும் நம்முடைய பண்பாட்டிலும் பழக்கவழக்கத்திலும் மாடு சாப்பிடுவதில்லை என்றும், சாதிக்கும் மாட்டிறச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறதென்றால் “ FUCK YOU” என்று சொல்லிவிட்டுக் கடந்து செல்லுகிறார்கள். அதன் சாத்தியத்தை நாம் முன்நிறுத்த வேண்டும். தலைமுறையின் மாற்றத்தை ஆதரித்துச் செல்ல வேண்டும். ஆனால் வாழ்நாளில் மாமிசமே உண்ணாத ஒருவருக்கு எங்கள் கொண்டாட்டங்களில் உணவே இல்லை என்று சொல்லும்படியாக நாம் உணவைப் பரிமாற முடியுமா? அவர்களையும் அனுசரித்துத் தான் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும்.
அதனையும் விட நம்முடைய சமூகம் இந்தியா, இத்தாலி, கிறீக் ரெஸ்ரோரண்டுகளை வழிநடத்திக் கொண்டிருப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்களால் நடத்தப்படும் கொண்டாட்டங்களின் உணவுப்பரிமாற்றத்தில் பெரும் மிகப்பெரிய அதிர்வே உண்டாகும். உடனேயே நமது பண்பாடு அழிந்து விட்டது. இன்னொரு நாட்டிலிலருந்து எங்களுக்குள் பண்பாட்டுப் படையெடுப்பு நடக்கிறது என்று முனகினால். கிடுகு வேலியைச் சுற்றிக் கட்டிவிட்டு நடுவில் படுத்துத் தூங்கு என்றுதான் சொல்ல வேண்டும். ஆய்வு செய்ய வேண்டுமென்பதற்காக இப்படி முறைகேடாக தலைகீழ் மாறி மூளையை விடக் கூடாது. மற்றவர்களை மடையர்கள் என நினைக்கக் கூடாது. ரொரண்டோவில் இருந்து கொண்டு மரபுரிமை, தேசவழமை, பாரம்பரியம், பண்பாடு என்று பேசிக் கொள்பவனை எப்படிப் பகுத்தறிவுடன் பேசுகிறான் என்று விளங்குவது. மிகப் பெரிய மூடத்தனமின்றி இது வேறென்ன?
மக்டொனால்ட் என்ன எங்கள் முப்பாட்டன் பண்படுத்திய உணவா? எங்கள் கொண்டாட்டங்களில் கிறீக் உணவு வைக்கிறோம். பிரெஞ்ச் சலாட் வைக்கிறோம் என்றால் இதிலென்னபண்பாட்டுப் படையெடுப்பு?கனடாவில் நடக்கும் கொண்டாட்டங்களில் என்னுடைய மூதாதையாின் உணவு என்று நான் பினாட்டும் புளுக்கொடியலுமா வைக்க முடியும்?
இப்படியே சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள் என்றால் நீங்கள் கட்டிக் காத்த உங்கள் பிள்ளைகளும் ஒருநாள் உங்களைக் கைவிட்டுப் போகும். அதனை எண்ணியாவது கொஞசம் மாறுங்கள். தரித்திரத்தைக் கைவிடுங்கள்.
தமிழரின் பாரம்பரியம். தமிழரின் அடையாளம். தமிழரின் பண்பாடு.
இதெல்லாம் பித்தலாட்டக்காரன் சொல்லும் வார்த்தைகள்.
ஈழத்தில் அல்லது தமிழ் நாட்டில் இருப்பவர் இந்தக் கதையைச் சொன்னால்கூட கொஞ்சம் பரவாயில்லை. பல்வேறு இனக்குழுமங்கள் வாழும் நாட்டில் வந்திருந்து கொண்டு தனித்தமிழ்த் துவேசம் கொள்ளும் அருண்மொழிவர்மன் போன்றவர்கள் சிந்திக்கும் திறன் மிக மிக மோசமானது.
மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சிக் கடலில் மாவீரம் குளிக்கும் என்று சொல்லி இடியப்பமும் கொத்து ரொட்டியும் விற்கமுடியுமா? அதற்கும் இதற்கும் என்னடா சம்பந்தம். ஆனால் சம்பந்தமேயில்லாது பேசும் அருண்மொழிவர்மன் அவர்கள் செவ் தாமுவின் பிரியாணி செய்முறையை கனடிய உணவகம் ஒன்று பின்பற்றுவதும் அதனைத் தனது உணவுச் செய்முறையாக அறிவிப்புச் செய்வதும் அடையாளம் காட்டப்பட்ட உணவுத் திறனின் வெளிப்பாடு. ஆனால் மாண்ட வீரர் கனவு பலிக்கும் கழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும் என்பதற்கும் உணவுப்பழக்கத்திற்கும் என்னடா ஒற்றுமை? இதனைக் கேட்க அவரால் முடியாது ஏனெனில் அவர் புலிமனம் கொண்டவர்.. அது மட்டும். அது மட்டும். அது மட்டுமேதான். அது தாண்டி அவரிடம் வேறு இல்லை.
இலங்கை இந்தியா போன்று கனடாவில் வாழும் சமூகத்திற்குள் மெல்ல மெல்ல உணவுப்பழக்கம் மாறாது. இங்கேயுள்ள பல்வேறு சமூகத்துடன் உறவும் நெருக்கமும் கூடுதலும் உள்ள சமூகமாகத் தமிழர்கள் இருக்கிறார்கள். இதில் பட்டர்சிக்கனும் பன்னீர் மசாலாவும் உணவப்பழக்கங்களில் எப்படிச் சேர்ந்து விடுகிறது என்று கணக்கிடுவதல்ல பகுத்தறிவு. இந்த உணவுச் சேர்மதியில் பண்டியின் கால்களும் பண்டியின் கொட்டைகளும் பண்டியின் நாக்குகளும் கோழியின்விரல்களும்,கோழியின் நகங்களும் ஏன் இன்னும் சேர்க்கப்படாமல் இருக்கிறது என்று யோசிக்க வேண்டும். இதற்குள் ஒரு சமூகநீதியின் தர்க்கம் ஒழிந்திருக்கிறது. அதனைத் தேடுவதுதான் பகுத்தறிவு. ஏன் ஒரு சில இன உணவுகள் சேர்க்கப்பட்டு மற்றயவை தவிர்க்கப்படுகிறது என்பது மிகப்பெரிய கேள்வி. கனடாவில் வந்திருந்து சுத்தத் தமிழ் இன அடையாளம் தேடுபவனை எதைக் கொண்டு துரத்துவது? இதுவரைகாலமும் தூய்மை பார்த்தது போதாதா? இன்னும் இன்னுமா?
முட்டாள்கள்.
”திருமண விழாவிற்கு முன்னர் பஜன் பாடல், மெஹந்தி அணிதல் ஆகியன இப்போது புலம்பெயர் நாடுகளில் ”புதிய தமிழ்ப் பண்பாடுகள்” ஆகிவிட்டன.”
இவை தமிழ்ப்பண்பாடுகள் என்று எங்கேனும் அதனைச் செய்பவர்கள் சொல்வதில்லை. திருமணத்தின் முன்னர் நடக்கும் மணமகன் நடத்தும் பச்சலர் பார்ட்டி என்ன தமிழர் பண்பாடா? அதன் மற்றயபக்கம் மணமகளுடன் இணைந்து நண்பர்கள் நடத்தும் “ ப்பிறைடில் பார்ட்டி” பற்றி அறிந்தால் உங்களைப் போனடறவர்கள் ஏங்கிச் சாகத்தான் முடியும். தமிழர் பண்பாட்டில் இதுவெல்லாம் ஒருபொழுதிலும் வரவே வராது. சமூகக் கலப்பில்த்தான் இவை சாத்தியமானது. சமூகக் கலப்பினை எனதறிவில் இன்று உயிருடன் பெரியார் இருந்திருந்தால் ஆதரித்துத்தான் நின்றிருப்பார்ர் . உங்களைப் போல சமூகநீதி ஒரு புறமும் சாதி நீதி இனநீதி ஒருபுறமுமாக யோசித்திருக்கவேமாட்டார்.
சரி கலியாணம் முடிஞ்சுது. அதன்பின் பிறக்கும் பிள்ளை என்ன பிள்ளை என்று கண்டுபிடிக்கும் “GENDER REVEAL” என்ற பார்ட்டிஒன்றிருக்கிறது தெரியுமா? அது என்ன தமிழர் பண்பாடா? என்ன மயித்திற்கு இதெல்லாம் தமிழர் பண்பாடாக இருக்க வேண்டும்? இங்கே தமிழர்கள் என்ன தமிழர்களையே திருமணம் பண்ணுகிறார்களா? அல்லது தமிழர்களொடு மட்டும் சேர்ந்து வாழ்கிறார்களா? அப்படிச் செய்ய வேண்டும் என்பது எனன கட்டாய உங்கள் வழமைச்சட்டமா? தமிழர்களுக்குத் தமிழர்கள்தான் நண்பர்களாகத் தோழமைகளாக இருக்க வேண்டுமா? ஒரு பல்காலாச்சார நாட்டில் நீண்டகாலமாக சில உணவுப்பழக்கங்கள் மட்டும் ஏன் எம்மத்தியில் அறிமுகம் செய்யப்படவில்லை என்ற கேள்வியே நீதியானது. ஏனெனில் நண்பர்களாக இருப்பதற்கும் அவர்களை கடும்ப நண்பர்கள் என ஒத்துக் கொள்வதற்கும் நமது சமூகத்தில் இன்னும் இடமில்லை. அதனால் ஆபிரிக்க உணவுகள் போன்ற பல நமது சமூகத்திற்குள் உள்நுழையவில்லை. விரைவில அது மாறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
ஆனால் இவ்வாறு கலப்பு சமூகமாக மாறும் முதல் நிலையைக் கூட கலாச்சாரப் பண்பாட்டுப் படைபெயடுப்பு தமிழர் பண்பாடு என்றெல்லாம் அதி புத்திசாலித்தனமாகப் பிதற்றக் கூடாது. அது முட்டாள்த்தனமாகவே கருதப்படும்.
அப்படி தமிழர் பண்பாடு அது அனைத்திலும் புதுமையானது என்று கருதுவதை நிறுத்திக் காவோலையைச் சுற்றிக் கட்டி நடுவில் குந்தியிருபதே மேல்.
பகுத்தறிவு பேசமுனையக் கூடாது.
இரண்டில் ஒன்றைத்தானே பேசவேண்டும். இரண்டையும் தற்குறித்னமாகப் பேசுவது புத்திசாலித்தனமுமாகாது.
மேற்கொண்டு பேசுவோம்.